IV11

IV11

இதய ♥ வேட்கை 11

 

பயணம் துவங்கியதுமுதல், ஒருவர் மாற்றி, மற்றொருவர் தங்களது கடந்து போன காலத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பரிமாறிக் கொண்டவாறே வந்தனர்.

விஷ்வா இதுவரை தான் வளர்ந்த முறைக்கு, பொறுமை காத்து, யாருக்காகவும் எதையும் செய்து பழக்கமில்லாதவன். 

ஆனால், மாலினியின் அறிவுரைகளை ஏற்று தன்னை மாற்றத் துவங்கியிருந்ததால், தனது ஒவ்வொரு செயலையும் ஒரு (assignment) ஒப்படைப்புபோல கண்ணும் கருத்துமாக செய்யத் துவங்கியிருந்தான்.

அதுவும் திலாவின் விசயத்தில் மிகுந்த அக்கறையும், பொறுமையும் விஷ்வாவிற்கு வந்திருந்தது. 

முதலில் தன்னை மாற்றிக்கொள்ள சிரமமாக இருந்தாலும், ஏதோ திலாவின் மீது கொண்டிருந்த வசியம், அவனை அதுபோல மாறச் செய்யத் தூண்டியவாறு இருந்தது.

பெண்களைப் பற்றி ஆழமாக, ஆதி முதல் அந்தம் அறியாதவனாக இருந்தபோதும், பொதுக் கருத்து என்பது இயல்பாக உண்டாகி இருந்தது.

விஷ்வா சிறுவயது முதல், கண்ட, சந்தித்த, பெண்களின் மூலம் கண்டுணர்ந்து, தெளிவுற்ற சில கருத்துகள் அவன் சந்தித்த பெண்களைப் பற்றி இருந்தது. 

சகோதர உணர்வோடு விஷ்வாவும் இதுநாள்வரை யாரையும் நோக்கியதுமில்லை, சந்தித்ததுமில்லை. 

பெண்களும் விஷ்வாவை அந்த எண்ணத்தோடு பெரும்பாலும் அணுகியதில்லை.  அதனால் அந்த சகோதர உணர்வு பற்றியும், பாசம் பந்தம் பற்றியும் விஷ்வா அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதுமில்லை.

இதுவரை அவன் சந்தித்திருந்த பெண்கள், ஆண்களை ஈர்க்க என்னவெல்லாம் செய்வார்கள் என்பது பற்றித் தெரிந்திருந்தான்.

தனக்காக தடையின்றி செலவளிக்க, சுகபோக வாழ்க்கை வாழ, சமூக அந்தஸ்திற்காக என தங்களின் நலமேம்பாடு, சுதந்திரம் என எண்ணும் ஒவ்வொரு காரணத்திற்காகவும், என்ன ஏது என்று கேளாமல், தங்கு தடையின்றி செலவளிக்கவும், பணத்தை வாரியிறைக்கவும் ஒரு ஏமாளியை எதிர்நோக்குவது பற்றி அறிந்து கொண்டிருந்தான்.

அந்த மாதிரியான ஒரு நபரை தனது வாழ்நாளில் மொத்த குத்தகை எடுக்க, எந்த விசயங்களில் எல்லாம், எவ்வளவு தூரம் சில பெண்கள் தரம் தாழ்ந்து போகிறார்கள் என்பது பற்றிய அனுபவ ஞானம் விஷ்வாவிற்கு இருந்தது.

தனது அவசியத்திற்காக பெண்களை நாடிய வேளைகளில், அவர்களின் வாக்குமூலமாக அறிந்து கொண்டிருந்த விசயங்கள்தான் அவையெல்லாம்.

அதனால் தான் சந்தித்திருந்த அத்தகைய பெண்களைப்போல திலா இல்லாததை அவளின் நடவடிக்கைகள் வாயிலாக, கடந்த ஒன்றரை வருடத்தில் அறிந்து கொண்டிருந்தான்.

பணம், சமூக அந்தஸ்து, பாதுகாப்பு அனைத்தும் இருந்த தன்னை, ஏதோ ஒரு முக்கியமான அனுசரித்துப் போக இயலாத காரணத்திற்காக விட்டுச் செல்ல திலா எண்ணியதே, துணிந்ததே அதற்கு முதற்சான்றாக விஷ்வாவிற்கு தோன்றியிருந்தது.

அனைவரும் தன்னை நோக்கி, நாடி, தேடி, ஓடி வரக் காத்திருக்க, ஜீவனாம்சமோ, வேறு எந்த எதிர்பார்ப்போ இல்லாது, தன்னைவிட்டு விலக எண்ணியவளை, அதற்குரிய காரணம் அறியாதபோதும், விட்டுவிடும் எண்ணம் இல்லாமல் இருந்தமைக்கு, திலாவின் நடவடிக்கைகள், பற்றில்லாத தன்மை, நேர்த்தி, இன்னும் அவனால் சரியாக யூகிக்க இயலாத வார்த்தைகள் மட்டுமே காரணமாக இருந்தது.

தான் பிறந்த ஊரில் மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றிலும் சென்று வந்தவனுக்கு, பணத்திற்காக, அந்தஸ்திற்காக வேண்டி எத்தகைய செயலையெல்லாம் பெண்கள் செய்யத் துணிகிறார்கள் என்பதையும், திலா இருந்த தன்மையும் ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு மனைவிமேல் அவனறியாமலேயே இணக்கமும், ஒட்டுதலும் இயல்பாகவே உண்டாகியிருந்தது.

அதற்கான காரணத்தை வார்த்தைகளால் தெளிவாக கூற விஷ்வாவால் இயலாதபோதும், ஆழ்மனதின் காரணங்களாக இவை அனைத்தும் இருந்தது, இருப்பது மட்டுமே உண்மை.

திருமணமாகி வந்த சில நாள்களிலேயே, தனக்காக திலா செய்த மாற்றங்களை கண்டும், காணாததுபோலவே இருந்தான். ஏனெனில் அவை அன்று அவனுக்கு பெரிய விசயமாகத் தோன்றவில்லை.

மதிய உணவை கட்டாயப்படுத்தி வீட்டிலிருந்து முதன் முதலாக திலா அனுப்பி உண்ணக் கூறியபோது, அதனை பெரியதாக எண்ணத் தோன்றவில்லை.

ஆனால், திலா செங்கோட்டை சென்றபின்பு, வழக்கம் மாறியதும், தனக்கு எதிர்பார்ப்பு வந்ததோடு, ஏதோ அசௌகரியத்தையும் உடலும், உள்ளமும் உணர, அதைப்பற்றி விஷ்வாவின் மனம் முதன் முறையாக யோசித்தது.

தன்னால் நியமிக்கப்பட்டு, சம்பளம் வழங்கப்படும் ஊழியர்களிடம் தானாகவே சென்று கூறினால் எல்லாம் சரி செய்துவிட முடியும் என்பது புரிந்தாலும், அதை செயல்படுத்த ஏதோ ஒன்று விஷ்வாவைத் தடுத்தது.

ஆனால் வந்த சில நாள்களில், புதிய இடத்தில் அதை நேர் செய்தவளை அன்று அறிந்துகொள்ளவோ, கண்டுகொள்ளவோ இயலாத தனது நிலையை, இன்று அவளது பிரிவால் உணர முடிந்தது என்பதை எண்ணி திலாவின் வருகை தனது வாழ்வில் எத்தகைய நல்மாற்றங்களை விளைவிக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை உண்டாகியிருந்தது.

ஏறத்தாழ ஏங்கியே வளர்ந்தவன், ஓங்கிய வயதில் குழந்தைபோல திலாவிடம் எதிர்பார்க்கத் துவங்கியிருந்தான்.

எதிர்பார்ப்புகளை சங்கடமில்லாமல் பகிர்ந்து கொள்ள ஏதுவான சூழல் அமைந்ததாக இந்தமுறை செல்லும் செங்கோட்டை பயணத்தை நம்பி கிளம்பியிருந்தான் விஷ்வா.

கடந்த முறை செங்கோட்டை வந்தபோது, இந்தளவு நெருக்கம் இருவரிடமும் இல்லாமல் இருந்தது.

விஷ்வா செங்கோட்டை வந்தபிறகே, திலா உடன் இல்லாததை மாபெரும் குறையாக எண்ணினான்.

அதுபோலவே சென்னையில் இருந்தவளும், அலுவலகம், வீடு இரண்டைத் தவிர வேறு எங்கும் செல்லாமல், விஷ்வாவின் நினைப்போடு நாளை நெட்டித் தள்ளியிருந்தாள்.

நான்கு நாள்கள் வேலை என ஒரு நீண்ட பட்டியலோடு கிளம்பியவன், இரண்டரை நாளில் சென்னை திரும்பியதே அதற்கு சாட்சி.

விஷ்வா சென்னை திரும்பியபோதும், எதையும் மறைக்காது, மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்ல திலாவின் மனம் இடங்கொடவில்லை.

ஆனால், விஷ்வாவைக் கண்டதும், என்றுமில்லாமல் ஓடிவந்து தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டு, விஷ்வாவின் வலக்கையை தனது கரங்களால் மார்போடு பிடித்து தன்னோடு அணைத்தபடியே உரையாடியளின் செயலே சொன்னது, விஷ்வாவை அவள் எந்தளவு தேடினாள் என்பதை.

அதேநிலை விஷ்வாவிற்கும் இருந்தது.  ஆனால் தெளிவாக இதுதான் என்பது புரியாமல், எதனால் இந்த மாற்றங்கள் என்கிற கேள்வியோடு திரும்பியிருந்தான்.

பெண்ணது அருகாமை அனைத்தையும் தெள்ளத் தெளிவாக்கி, சுமந்திராத சுமை குறைந்தாற்போன்ற உணர்வு, விஷ்வாவை லேசாக்கியது.

அதன்பின் வந்த நாள்களில் இருவரது செயலிலும் நிறைய மாற்றங்கள் வந்திருந்தது.

ஒருவரையொருவர் சார்ந்து, பேச, உண்ண, வெளியில் செல்ல என்று முன்பைக் காட்டிலும் நெருக்கம் கூடியிருந்தது.

கடற்கரை மணலில் பேசியவாறு நெடுநேரம் நடந்தபின், “என்னால காலே எடுத்து வைக்க முடியலை விச்சு.  நான் இப்டியே உக்காந்துகரேன்.  நீ போயி காரை இங்க எடுத்துட்டு வருவியாம்”, என்று முகத்தைச் சுருக்கி, கண்களைச் சிறியதாக்கித் தன்னிடம் கெஞ்சியவளைக் கண்ட விஷ்வா

அலேக்காக இருகைகளில் பெண் எதிர்பாரா வேளையில் தூக்கியிருந்தான்.

திலாவும் விஷ்வாவின் செயலில் பதறி, “என்ன பண்றீங்க விச்சு? இறக்கி விடுங்க… பாருங்க எல்லாரும் நம்மையே பாக்குறாங்க.  எனக்கு ஷையா இருக்கு.  ப்ளீஸ் விச்சு இறக்கி விடுங்க”, என்று கெஞ்சலில் இறங்கியவளை கொஞ்சம்கூட சட்டை செய்யாமல், கார் வரை தூக்கி வந்தவனை அதன்பின் இன்னும் நெருக்கமாக உணரத் துவங்கியிருந்தாள் திலா.

விஷ்வாவும் திலாவைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தித்தானில்லை.

ஒருவரையொருவர் பிரிந்திருக்க, பிரியமில்லாத மனநிலைக்கு மாறியிருந்தபோது, அடுத்த செங்கோட்டை பயணம் என்றதும், விஷ்வா மிகுந்த குழப்பத்திற்குள்ளாகியிருந்தான்.

கடந்த முறைபோல தன்னால் அங்கு எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலையை எண்ணி தயக்கமும், ஆனால் கட்டாயம் தான் சென்றாக வேண்டிய நிலையில் என்ன செய்யலாம் என்கிற முடிவிற்கு எளிதாக வர இயலாமல் திலாவிடம் விசயத்தை சோகமாகப் பகிர்ந்து கொண்டிருந்தான்.

பெண் இந்த பயணத்தில் முன்கூட்டியே சுதாரித்து, உடன் கிளம்பியிருந்தாள்.

திலாவின் முடிவில் விஷ்வாவிற்கும் ஏக களிப்பு.

கடந்துபோன நாளின் நெருக்கத்தால், ஒருவருக்கு மற்றொருவரின் முக்கியத்துவம் புரிந்திருந்தது.

இருவரும் கிளம்புவதால் ஓட்டுநரைத் தவிர்த்து கிளம்பியிருந்தனர்.

பயணம் துவங்கியது  முதல், ஒருவர் மற்றொருவரை முன்னிருத்தியே, ஒருவர் மாற்றி மற்றொருவர் பேசியவாறு வந்தனர்.

முக்கியத்துவம் புலப்பட்டதால், யாரும் யாரையும் உயர்வாகவோ, தாழ்வாகவோ எண்ணாது, மனதை திறந்து பேசியபடி வந்ததில், பயணநேரம் மனதில் எந்த நெருக்கடியையும் உண்டாக்கவில்லை.

இணைந்தே பயணித்ததால், பயணித்து வந்த நேரம் குறைந்து விரைவாக வந்ததுபோன்ற மாயை இருவரது மனதிலும் தோன்றியிருந்தது.

“எப்பவும் விட சீக்கிரமா வந்திட்ட ஃபீல்”, என்று திலா கூற, விஷ்வாவின் மனதும் அதையே ஆமோதிக்க, சிரித்தவாறே வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

பயண அலுப்பு தீர குளித்து வந்த இருவரும், பேசியவாறு உண்டனர்.

செங்கோட்டை வீட்டில் இருந்த உயிருள்ள மனிதர்கள் முதல் உயிரற்ற இதர பொருள்கள் அனைத்தும், இருவரின் அளவளாவலை அதிசயமாக, ஆச்சர்யமாக பார்த்து, தெய்வத்தைத் தரிசித்தால் உண்டாகும் நிறைவோடு அன்றைய தினத்தைக் கடந்திருந்தனர்.

சுற்றிலும் இருந்த எதையும் பொருட்படுத்தாது, நேரத்தை ஒருவர் மற்றவருக்காக செலவிட்டதில் நிறைவோடு தம்பதியரும் அவரவர் அறையில் தஞ்சமடைந்திருந்தனர்.

அசதியோடு சென்று படுத்தவளுக்கு அடுத்த அரை மணித்தியாலத்திற்கு முன்பே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள் திலா.

அறைக்குள் வந்துவிடுவானோ என்ற பயந்திருந்த நாள்கள் இருந்ததுபோக, ‘வந்தால் வரட்டும்.  வேற யாரோவா? நம்ம விச்சுதான! பாத்துக்கலாம்’, என்கிற இலகுவான மனநிலைக்கு திலா மாறியிருந்தாள்.

விஷ்வாவும் வண்டியை தனியொருவனாக ஓட்டியதால் உண்டான அசதியில் படுத்ததும், மெத்தையின் இதத்தில் வசதியாக உறங்கியிருந்தான்.

இதமான காலநிலை நிலவியதால் அன்று ஏசி போடாமலேயே உறங்கியிருந்தாள் திலா.

அதிகாலை வேளையில் வீசும் இதமான காற்றுக்கு உண்டான குளிர் அரைத்தூக்கத்தில் இருந்தவளை எழுப்பியிருந்தது.

எழுந்து போர்வையை எடுக்க முயன்றபோது, தன்னோடு படுக்கையில் உறங்கும் விஷ்வாவைக் கண்டு புன்முறுவல் மட்டுமே வந்தது திலாவிற்கு.

‘பூட்டுன ரூமுக்குள்ள கதவைத் திறக்காமலேயே  உள்ள வரதில கெட்டிக்காரனா இருக்கடா நீ’, என்று எண்ண, அதற்குமேல் எதையும் யோசிக்காமல், விஷ்வா போர்த்தியிருந்த தனது போர்வைக்குள் குளிருக்கு இதமாக விஷ்வாவின் உறக்கத்தை கெடுக்காத வண்ணம் நிதானமாக நுழைந்து உறங்கத் துவங்கினாள் பெண்.

ஆழ்மனதின் ஆசையினாலும், எதிர்பார்ப்பினாலும், சந்தேகம் என்கிற உணர்வு தோன்றாத நிலையினாலும், முற்றிலும் களைந்திராத உறக்கத்தினாலும், இதுவரை தான் நேரில் கண்ட அனைத்தும் கனவில் நடப்பதாக எண்ணியவாறே திலா உறக்கத்தைத் தொடர்ந்திருந்தாள்.

அதுவரை பெண்ணை விட்டு விலகிப்படுத்தவாறு பெண்ணின் அருகாமையில் ஆத்ம நிறைவோடு உறங்கியவனுக்கு, போர்வையின் இதத்தோடு, அருகில் நெருங்கிப் படுத்து உறங்கிய திலாவின் உடல் கதகதப்பை சிறிது சிறிதாக உணர்ந்து விழித்திருந்தான்.

தன்னோடு ஒன்றியபடியே ஒரே போர்வைக்குள் சுருண்டிருந்த திலாவை, தன்னோடு இழுத்து அணைத்தவாறு உறக்கத்தைத் தொடர எண்ணி தானாகவே பெண்ணை அணைத்தவாறு உறங்க முயன்றான் விஷ்வா.

உறங்க முயன்றவனை, உறங்கவிடாது, அதிகப்படி இருப்பாகிப்போன சுக்கிலம் சோதிக்கத் துவங்கியிருந்தது.

பெண்ணின் மூச்சுக் காற்றும், அருகாமையும், இளமையும், இன்ன பிற பொக்கிஷத் தேடல்களும், பட்டும்படாமல், தொட்டும் தொடாமலும் விஷ்வாவின் இளமையைச் சோதிக்கத் துவங்கியிருந்த அதிகாலை வேளை.

வதனத்தை மட்டும் மூடாமல் உறங்கிக் கொண்டிருந்தவளை ஏக்கமாக பெருமூச்சோடு நோக்கியவனின் கண்களில் ஸ்ட்ராபெர்ரி உதடுகள் பட, உள்ளம் அவனை உந்தித் தள்ளியது.

தொட்டுவிடும் தூரத்தில் உனக்காக நான்… என்று இதழ்கள் இரண்டும் மௌனமாகவே விஷ்வாவிற்கு தூது சொன்னதோ.

கைவிரல் கொண்டு தொட முயன்றபோது, மனம் சண்டித்தனம் செய்தது.

தான் சந்தித்த செக்சாலஜிஸ்டை மனதார நினைத்து, ‘நீங்க சாதாரண ஆள் இல்ல.  உங்களாலேயே இதல்லாம் இன்னைக்கு சாத்தியமானது. இல்லனா கிளைமேக்ஸ் மட்டுமே எனக்கு விதிச்சதுன்னு தெரியாமலேயே, என் வாழ்க்கை முடிஞ்சிட்டிருந்திருக்கும்’, என்று எண்ணியவாறே

‘டேய். கிடைச்ச ஜாக்பாட்டை விட்றாத, அப்டியே அடிச்சிரு’, என்று மனம் கூறிய உத்வேகத்தில் முன்னேறியவனின் சுவாசம் முன்பைக் காட்டிலும் கூடியிருந்தது.

‘அல்வா மாதிரி முழுங்கலாமா? இல்லை தேன் மாதிரி நாக்கால லிக் பண்ணலாமா?’ என்கிற அவசரகால பட்டிமன்றம் நிகழ்த்தி, அவசரகதி மொபைல் பட்டிமன்றத்தில்

‘அல்வாவுக்கு ஆசப்பட்டு, முழுங்க முயற்சி பண்ணா நம்ம ஆளு முழிச்சிக்குவா, வம்பா போயிரும்! அதனால பட்டும் படாம லிக் பண்ணிட்டு… எஸ்ஸாயிருடா விஷ்வா!’ என்று விஷ்வாவிற்கு ஏற்ற முடிவு வந்திட, அதைச் செயல்படுத்த ஆயத்தமாகினான் விஷ்வா.

ஆர்வமோடு கற்றுக் கொள்ளும் குழந்தைகள் பள்ளி செல்லத் துவங்கிய ஆரம்ப காலத்தில், முதலில் இதைச் செய்வதா அல்லது அதைச் செய்வதா என்று திண்டாடுவது போன்ற நிலையில் விஷ்வா இன்று இருந்தான்.

ஆசையோடு நெருங்கியவனுக்குள் இன்னுமொரு ஆசை தோன்ற, ‘முதலில் முத்தா, அப்புறமா லிக்கா’, என்ற முடிவுக்கு வந்து

‘திலா எழுந்துவிடக்கூடாதே, எழுந்தா என்னாகும்’, என்கிற தயக்கத்தோடு, இதமான இதழொற்றலை கொடுத்துத் தனது இதழ்களுக்கு வேண்டிய, இதம் கொய்தான் அந்த முரடன்.

உள்ளமெங்கும் தித்திப்பாக உணர்ந்து, அதை அனுபவிக்க நேரம் கொடாமல் அடுத்த டாஸ்க்கை நோக்கி முன்னேற எண்ணினான்.

நேரம், பெண்ணின் எதிர்வினை புரியாமல், இதழை மீட்டவன் இளைப்பாறலினால் உடலும் உள்ளமும், சார்ஜ் பெற்ற உணர்வோடு திம்மென்று இருக்க, அடுத்த புரொஜெக்டை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

இயல்பாகவே சிவந்திருந்த உதடுகளில் புன்னகை தேங்கி மிச்சமிருக்க, தனது நாவினால் இதமாக முழுவதும் லிக் செய்து முடித்தான்.

அதுவரை சற்றே வாடிய நிலையில் இருந்த செடியில் நீர் தெளித்ததும், புத்துணர்வோடு பூத்து நிற்கும் ஸ்ட்ராபெர்ரியை போல காட்சியளித்து, விஷ்வாவை நிலைகுலையச் செய்தன திலாவின் இதழ்கள்..

ஏழுலக இன்பங்களையும் ஒருசேர உணர்ந்ததாக மனம் பூரிப்பு கொண்டிருந்தது விஷ்வாவிற்கு.

‘இதுவே இம்புட்டு கிக்கா இருக்குன்னா, நம்ம வாத்தியாரு(செக்சாலஜிஸ்ட்) சொன்னதையெல்லாம் ஃபாலோ பண்ணா இன்னும் எப்டியிருக்கும்’, என்கிற ஏக்கம் வேறு.

உறக்கத்தில் கனவென்று எண்ணி நாணம் கொண்டு சிணுங்கியவளை, தனது சிருங்காரத் தேவைக்கு உடல் உணர்வுகள் எதிர்நோக்க, திலாவின் மனதறியாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாத தவிப்போடு, மீண்டுமொருமுறை இதமாக இதழ் பதித்து அறையைவிட்டு பெருமூச்சோடு கிளம்பி தனதறைக்கு வந்திருந்தான் விஷ்வா.

சோதனை தொடரவே, முன்னேற சொன்ன மனதை கட்டுப்படுத்தி, திலாவின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் இந்த விசயத்தில் என்று தெரியாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தூண்டிய மனதை அதட்டியவன், எழுந்து தனதறைக்கு இடமாறியிருந்தான்.

சோதனையோடு, வேதனையும் சேர்ந்து உறங்காமலேயே அதிகாலைக் கதிரவனை வரவேற்றிருந்தான் விஷ்வா.

நடந்த அனைத்தையும் கனவாக எண்ணித் துயில் கொண்டு எழுந்தவள், இயல்பாக எழுந்து வந்து விஷ்வாவிற்கு காலை வணக்கம் கூறினாள்.

எப்பொழுதும் தன்னை அணைத்து நெற்றியில் இதழ்பதித்து காலை வணக்கத்தை இதமான அணைப்போடு கூறுபவன் இன்று வார்த்தையால் கூறியதோடு, “குளிக்கப் போறேன்”, என்று தன்னிடம் முகம் காட்டாமல் கிளம்பியது பெண்ணிற்கு ஏமாற்றமாகியிருந்தது.

‘என்ன ஆச்சு இந்த விச்சுவுக்கு.  கனவுல நல்லாதான் இருக்குது.  நேருல அப்பப்ப எதாவது கிறுக்கு வந்திரும்போல’, என்று மனதிற்குள் எண்ணியவாறே

“நில்லு விச்சு”, என்று விஷ்வாவை நோக்கி அருகே வந்தவள்,

“எப்பவும் எனக்கு இங்க உம்மா தருவல்ல…”, என்ற தனது நெற்றியைத் தொட்டு காண்பித்தவள்,

“அதைத் தந்திட்டு நீ எங்க வேணா போ”, என்று வழிமறித்து நின்றிருந்தாள் திலா.

உடலின் ஒவ்வொரு செல்லும் பெண்ணை தனதாக்கிக் கொள்ள ஏங்க, இது நெற்றியோடு முடியாது என்கிற உண்மையை திலாவிடம் கூற இயலாதவன், “இப்போ நேரமாச்சு.  நாளைக்கு கண்டிப்பா தரேன்”, என்று நழுவ

“ரொம்ப பண்ணாத விச்சு. நேரமாச்சுனுலாம் சொல்லி என்னை ஏமாத்த நான் என்ன பப்பாவா.  வளந்த பாப்பா. புரிஞ்சுக்கோ”, என்று பேசியவள்

விஷ்வாவிடம் எந்த மாற்றமும் இன்றி நிற்பதைக் கண்டு, “நான் இறங்கினா நீ ரொம்பத்தான் ஏறுற…! யாருக்கு வேணும் உன் உம்மா…”, என்று கொன்ன வழித்து (வாயைத் திறந்தவாறு உதட்டால் சத்தம் செய்து பழிப்பு காட்டுவது) காட்டியவள்,

“உன் உம்மாவ… நீயே வச்சுக்க…! நான் என் கனவுல வரும்போது உடும்பங்கிட்ட கேக்காமலேயே வாங்கிக்கறேன்!”, என்று கோபமாக பேசியவாறே அகன்றிருந்தாள்.

“விச்சு… மரமண்டை.  மரத்தோட இருந்து, இருந்து, எம்பிஞ்சு மனசு புரியாமப் போயிருச்சுல்ல உனக்கு”, என்று சிறுபிள்ளைபோல விஷ்வாவைப் பேசிவிட்டு, வந்த வழியில் தனது அறைக்குத் திரும்பியிருந்தாள் திலா.

உள்ளம், உடலின் வேட்கையை நீரூற்றி அணைத்தவன், மனதையும், உணர்வையும் அடக்க வழியின்றி தடுமாறினான்.

‘அவ ரூம்ல போயி படுக்காம இருந்திருக்கலாம்.  போனதாலதான் இவ்வளவு பிரச்சனை’, என்று தனக்குத்தானே திட்டிக் கொண்டவன்

அறையில் அலறிய அலைபேசியை கவனிக்கவில்லை.

//////////////

கண்ணன் முதலில் விஷ்வாவிற்கு அழைத்தும் எடுக்கவில்லை என்றதும், திலாவிற்கு அழைத்திருந்தான்.

அலைபேசியை எடுத்தவளோ, “என்ன கண்ணாணா”, என்று விஷ்வாவின் மீதிருந்த எரிச்சலோடு வினவ

“நீ எங்கிருக்க?”, கண்ணன்

“செங்கோட்டையில”, திலா

“ஓஹ்.  நீ எப்ப அங்க போன? இல்லை அங்கதான் இருக்கியா?”, என்று திலாவைப் பற்றி அறிந்துகொள்ளும் எண்ணத்தில் கேட்க

“நீ என்ன விசயமா போன் பண்ண அதைச் சொல்லு முதல்ல”, என்று திலா தில்லாகக் கேட்டாள்.

“இல்ல, ஹார்பர்ல வேற ஒரு நம்பர் கொடுத்து பேசச் சொன்னாங்க.  அதச் சொல்ல சாருக்கு கால் பண்ணா சார் எடுக்கலை.  நான் சார் நம்பரை அவருக்கு கொடுத்திருக்கேன்.  அவரு பேசினா புது நம்பருனு ஸ்கிப் பண்ணிர வேணானு சொல்லணும்”, என்று விசயத்தைக் கூறியவன்

“எவ்ளோ நாளாச்சு நீ அங்க போயி”, என்று பழையபடி திலாவின் விசயம் பற்றி அறிய வினவ

“நான் வந்து மாசமாச்சு”, என்று விஷ்வாவின் அறையை நோக்கி வந்தவாறே வாயில் வந்ததைக் கூறியவள்,

“நான் அவங்க வந்தவுடனே விசயத்தைச் சொல்றேன்”, என்று கூறி, கண்ணனது பேச்சைத் துண்டித்திருந்தாள் திலா.

அதே நேரம் மீண்டும் விஷ்வாவின்  அலைபேசி அழைக்கத் துவங்கியது.

“எவ்வளவு நேரமாத்தான் குளிக்குது உடும்பு”, என்று விஷ்வாவின் செயலால் உண்டான கோபம் மாறாமல், விச்சு உடும்பாக மாறியிருக்க, பேசியவாறே அறைக்குள் நுழைந்தாள் திலா.

அதேநேரம் அலைபேசியின் அழைப்பு சத்தம் கேட்டு, குளித்ததோடு அவசரமாக டவலைச் சுற்றியவாறே வெளி வந்திருந்தான் விஷ்வா.

வந்தவன் அலைபேசியை எடுத்து பேசத் துவங்க, தலையில் இருந்து சொட்டிய நீரோடு, மேலாடை எதுவும் இல்லாமல், இடுப்பில் துண்டோடு நின்றவனைக் கண்டாள் திலா.

முன்பானால் விஷ்வாவை இந்த நிலையில் கண்டதும் பதறியடித்து, சிதறி ஓடுபவள், இன்றோ, ‘லூசு அப்டியென்ன அவசரம். தலையத் தோட்டக்கூட நேரமில்லாம, அரைகுறையா வந்து நின்று ஆம்சை காட்டறதே எய்மா வச்சிட்டிருக்குபோல’, என்று எண்ணியவாறே

வார்ட்ரோபில் இருந்து மற்றொரு டவலை எடுத்து, விஷ்வாவின் தலையில் உள்ள நீரை நீக்க எண்ணி முயல, வளர்ந்திருந்தவனின் தலை எட்டாது போகவே, அருகில் கிடந்த நாற்காலியை விஷ்வாவின் அருகே இழுத்துப் போட்டாள்.  அதன்பின் அதில் ஏறி தலையை தனதருகே வாகாக இழுத்து துவட்டத் துவங்கினாள்.

தலையை பெண்ணிடம் கொடுத்தவாறே பேசிக் கொண்டிருந்தான் விஷ்வா. தலையை நன்கு துவட்டி, உடம்பெங்கும் சடா முடி ஈரத்தோடு ஈரம் சொட்டச் சொட்ட நின்றவனின் முதுகுப் புறத்திலும் துவட்டி முடித்து, விஷ்வாவின் முன்னே வந்து நின்றாள். அதுவரை திலாவின் செயலில் கவனம் இல்லாது, அலைபேசியில் நிர்வாகப் பேச்சோடு கவனம் செலுத்தியிருந்தான் விஷ்வா.

அலைபேசியை வைத்தவனுக்கு, ஓரளவிற்கு அனுமானமாக திலாவின் செயல் புரிய வர, டவலோடு தனது உடம்பை நோக்கி வந்து நின்ற திலாவிடமிருந்த டவலைப் பிடுங்கி தூர எறிந்துவிட்டு,

“நான் இன்னும் குளிச்சே முடிக்கலை. அதுக்குள்ள எதுக்குடீ இந்த வேலை பாக்கற?”, என்று சற்றே கடினமாக பேசியவனைக் கண்டவள்

‘டீ’ போட்டு இதுவரை பேசியிறாதவன், இன்று இப்டி பேசுகிறான் என்றதும்,

“உனக்குள்ள சாத்தான் வந்திருச்சு விச்சு.  அதான் காலையில இருந்து என்னைப் பாத்தாலே கத்துற. ஓட ஓட விரட்டற. போ. இனி நீ கூப்டாலும் உங்கூட எங்கயும் வரமாட்டேன்”, என்று வந்த விசயத்தைக் கூறாமல், கரகரத்த குரலில் பேசிவிட்டு அவளது அறையை நோக்கிச் சென்றிருந்தாள் திலா.

விஷ்வாவிற்குள் உண்டான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் திலா இருக்கிறாளா என்று ஊர்ஜிதமில்லாமல் நெருங்கத் தயங்கியே, திலாவைத் தவிர்த்தான் விஷ்வா.

அதை உணராதவளோ, அவனை நோக்கி மிகவும் நெருங்கி நெருங்கி வர, காலையில் அலுவலகம் சார்ந்த பணிகள் வேறு என்கிற பதற்றம் ஒருபுறம், இன்று புதியதொரு இடத்தில் இருந்து வரும் மரங்களை, ஹார்பரின் மாற்றத்திற்குட்பட்ட புதிய நிர்வாக அதிகாரியை அனுசரிக்க வேண்டிய நிலையில், சற்று பதற்றம் கூடியிருந்த வேளையில், திலா நடந்து கொண்ட முறைமையைக் கண்டு, தன்னையறியாது பேசியிருந்தான் விஷ்வா.

அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்தி விஷ்வாவின் மீதான கோபத்தைக் காட்டினாள்.

அதற்குமேல் பெண்ணை சமாதானம் எதுவும் செய்யும் முயற்சியில் இறங்காமல், அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தான் விஷ்வா.

‘நம்ம மோகினிகிட்ட சமாதானத்துக்குப் போனா இப்ப மீள முடியாது.  அப்புறம் வந்த வேலையெல்லாம் பணால்.  சோ ஃபர்ஸ்ட் வர்க். நெக்ஸ்ட் வயிஃப்’, என்று தனக்குள் சமாதானம் கூறி, காலை ஆகாரத்திற்காக காத்திராமல், மீண்டும் சென்று குளித்து முடித்துக் கிளம்பியிருந்தான் விஷ்வா.

//////////////

சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் இருக்கா?

சமாதானம்னு ஒன்னும் அதுக்குப் பின்ன இருக்கே!

ஊடலும், கூடலும் தானே சுவை!

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

error: Content is protected !!