Jeevan 29(2)

Jeevan 29(2)

நாட்கள் வேகமாய் கடக்க, காயத்ரி தனது ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாய் முடித்து, அடுத்த செமஸ்டரில் நுழைய.. கௌதம், ஆரன் இருவருக்கும் வேலை நேரம் ஆக்கரமித்து கொண்டது..

காயத்ரியை படுத்த நினைத்த ஸ்வேதாவிற்கு தடையாக கௌதம், சதாசிவத்திடம் பெற்ற தகவல் கொண்டு, தனது ட்ரஸ்ட் மூலமா படித்த, இப்போது படித்துக்கொண்டிருப்பவரை, தனது பர்ஷனல் மெயிலில் தொடர்பு கொண்டு, காயத்ரிக்கு உதவ கேட்க.. தங்கள் பிறந்தநாள், தங்களின் வெற்றிக்கான வாழ்த்து என மட்டுமே, தங்களுக்கு உதவி செய்த நல்லுள்ளத்திடமிருந்து வந்த, முதல் வேண்டுகோளை நிறைவேற்றிட எதையும் செய்ய தயாரானது அந்த குழு…

அதில் சில ப்ரஃபஷர்களும் இருக்க, ஸ்வேதா குழு எளிதில், காயத்ரியை நெருங்கவிடாமல் செய்வது பெரிய விசயமாய் இல்லை கௌதமிற்கு… அவனுக்கு தெரியும், நிச்சயம் தான் அருகே இல்லாது இருந்தால், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அவளின் இப்போதைய நிலையை சொல்லி அவளை வருத்த அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பது…

காயத்ரியை காக்க செய்த, இந்த செயல் அவர்களின் ஈகோவை மேலும் கூட்டி கொண்டிருப்பதை அறியாமல், நாட்கள் சாதாரணமாக கடப்பதாய் நினைத்திருந்தவர்களின் நிலை…????

****

செமஸ்டர் ஆரம்பித்தது முதல், எல்லா பாடத்திலும் எழும் சந்தோகத்தை, தனது போனின் மூலமாக செய்தி அனுப்பும் காயத்ரிக்கு, இரவு வேலை முடித்து களைத்து வந்தாலும், தன்னாலான விளக்கத்தை சொல்லி, அவளின் சந்தேகத்தை தீர்த்து வைத்து, அவளின் புன்னகை முகத்தை பார்த்துவிட்டு படுப்பது தான், கௌதமின் வாடிக்கையாகி போனது.

சில நேரம், அவனின் ஓய்ந்த தோற்றம் கண்டு, காயத்ரி சந்தேகத்தை கேட்க தயங்கினாலும், அவனும் அதே பிரிவில் தான் இளங்கலை படித்திருந்ததால், கௌதம் அன்று நடத்திய பாடத்தினை கேட்டு, அதில் இருப்பதில் முக்கியமான பகுதி பற்றி சொல்லி முடித்தே விடுவதால், அனைத்தையும் சொல்வதற்கு பதிலாக, சில சந்தேகத்தை மட்டும் கேட்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள் அவனின் செல்லம்மா.

இதற்கிடையில், காயத்ரி சொன்னதை கொண்டு, ஸ்ரீரங்கத்தில் நடப்பதை அறிந்து கொள்ளவென, வைக்கப்பட்ட நபரின் மூலம், இந்த விடுமுறையில் வரும் காயத்ரிக்கு திருமணத்தை நடத்திவிட முடிவு செய்யப்பட்டது தெரிய, தான் செய்ய வேண்டிய செயலை, அழகாய் யாரும் அறியாமல் செய்து விட்டே ஓய்ந்தான். இதில் முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டிய, காயத்ரியே அதை அறியாமல் போனதால் வரும் விளைவு….!!!

*****

யாருக்கும் காத்திருக்காமல், கடந்து போகும் காலச்சக்கரத்தின் சுழற்சியில், நாட்கள் வேகமாய் நகர.. நேரில் சந்திப்பது என்பதே கேள்விக்குறியாகி போனது மூவருக்கும்… இதில் கௌதமின் தொழில் விசயமாய், அவன் ஜெர்மன் நாட்டோடு போட உள்ள ஒப்பந்தம் தொடர்பாய் அவர்கள் இங்கே வர, அவர்களை தங்கள் நிறுவனத்துடன் இணைப்பது தொடர்பான, அனைத்தையும் செயலையும், கௌதமே முன்னின்று நடத்த வேண்டியதாகிட, எப்போதும் போல போனில் கூட பேச இயலாது போனது மூவருக்கும்….

இடையில், வந்த ஆரன் பிறந்தநாளுக்காக, மிகப்பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டிக்காக, ஆரனின் வற்புறுத்தலில் கௌதம் காயத்ரியோடு வர, விருப்பம் இல்லாத போதும், தன் மகனின் சந்தோஷம் முக்கியமென கருதி அமைதியாகி இருந்தாலும், காயத்ரியை பார்க்கும் போது வெளிப்படும் வெறுப்பான பார்வையை மட்டும்  மாற்றி கொள்ளவே இல்லை ஜெனி.

அன்று போல இன்றும், சிறிது நேரம் வரை இருந்த காயத்ரி, போக நினைக்கும் போது சரியாக, அவளை அழைத்த கௌதமின் புரிதலில், மலர்ந்தவள், சந்தோஷத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

அவளை அழைத்து வரும் வழியில், “செல்லம்மா, நா எது செஞ்சாலும் அது உன்னோட.. சாரி, நம்மோட நல்லதுக்காக தான் இருக்குமின்னு நம்புற தானே..?!” என கேட்க…

காயத்ரி தனது போனில், “நா என்னை நம்பறத விட, உங்கள தான் அதிகமா நம்பறேன். இந்த நம்பிக்கை, இப்ப இல்ல, இந்த ஜென்மம் முடியும் போதும் மாறாது..!” என டைப் செய்து கொடுக்க,

அதை படிப்பதற்காக வாகனத்தை ஓரம் கட்டியவன், அவளின் பதிலில், மனம் நிறைய, அவளை அணைத்தவன், அவளின் நெற்றியில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் செல்லம்மா…! இந்த ஒரு பதில் போதும். உன்னோட இந்த நம்பிக்கை தான் என்னோட பலம்..” என்று சொல்லி விலக….

“இப்ப எதுக்கு இப்படி கேட்டீங்க..?!” என ஜாடையில் கேட்க… அவளிடம் விளையாட நினைத்தவன், “அது ஒன்னுமில்ல செல்லம்மா…! இப்படி யாராச்சும் நம்மள நம்புனா, அவங்கள ஸ்வாகா பண்ணறது ரொம்ப சுலபம். அதான்… நீ என்மேல வச்சிருக்கற நம்பிக்கைய வச்சு உன்கூட..” என சொல்லி, கை இரண்டையும் இணைத்து, கண்சிமிட்டி வளைந்து, நெளிந்து கௌதம் செய்த பாவனையில், அதற்கான அர்த்தம் புரிய…

வெக்கம் வந்தாலும், “நீங்க தானே..! ஸ்வாகா…! அதுவும் என்னை…! போய்யா… போ… நீயெல்லாம் அதுக்கு செட்டே ஆக மாட்ட..!” என டைப் செய்து கொடுக்க… படித்த கௌதமின் முகம் போன போக்கை பார்த்து, காயத்ரியால் சிரிப்பை அடக்க முடியாது போனது.

“அடிங்க… ஏன்டீ! என்ன பார்த்தா எப்படி தெரியுது… இதுக்கெல்லாம் வட்டியோடு ஒரு நாள் வச்சு செய்யல..” என சொல்லும் போதே, காயத்ரியின் “அத.. அப்ப பார்க்கலாம்!” என்ற மிதப்பான பார்வையில்,

“செல்லம்மா.. இப்ப உண்மை நிலை தெரியாம விளையாண்டுட்டு இருக்க… கடைசில சேதாரம் உனக்கு தான்..!” என சிரிப்போடு சொன்னவனின் குரல் மாறுபாட்டில், ‘நிஜமாகவே அவனை உசுப்பேத்திவிட்டோமோ…!’ என்று தோன்ற…

தனது கை கடிகாரத்தை காட்டியவள், ‘போகலாம்!’ என சொல்ல, “சுதாரிச்சிட்ட இப்ப.. வசமா ஒருநாள் சிக்குவ தானே! அப்ப இருக்கு உனக்கு…!” என சொல்லி அவள் தலையில் லேசாக தட்டியவன், அவளை ஹாஸ்டலில் விட்டு வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக வீடு திரும்பினான்.

*********

இன்னும் இருபது நாளில், அந்த செமஸ்ட்டருக்கான தேர்வுகள் முடிய இருக்க, மறுநாள் காயத்ரியின் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய கௌதம், அதுவும் வார விடுமுறையில் வேறு வருவதால், அவளுக்காக, ஆரனோடு சேர்ந்து, அவனின் வீட்டிலேயே ஏற்பாடு செய்தவன், அவளுக்காக பார்த்து அழகாய், ஒரு பட்டுபுடவையும், நகையும் வாங்கி வைத்திருந்தான்.

அன்றைய விடியல், காயத்ரிக்கு, கௌதமின் அன்பான வாழ்த்தோடும்..  அடுத்து தன்னை அழைத்து, வாழ்த்திய தாயின் ஆசிர்வாதத்தோடும், சுமியின் சர்ப்ரைஸ் கிப்டோடும் நிறைவாய் ஆரம்பித்தது.

தனது அண்ணன் திருமணத்திற்காக, கௌதம் எடுத்து கொடுத்த புடவையை இதுவரை அணியாததால், அதை அணிந்தவள், அதற்கு ஏற்றவாறு தன்னை அலங்கரித்ததை பார்த்த சுமி… “என்ன மேடம்! கல்யாண பொண்ணு மாதிரி ரெடியாகி இருக்கீங்க..? அதுவும் காலைலயே போன்ல வேற அழைப்பு வந்திருக்கு.. பார்த்தும்மா, உன்ன இப்படி பார்த்ததும், உன் பிறந்தநாள கல்யாண நாளா மாத்திட போறார்..!!

உங்க ரொமான்ஸ் க்கு இடையில, இடஞ்சலா, எனக்கும் வேற ட்ரீட் கொடுக்க அழைப்பு.. !” என சொல்ல, வெக்கத்தில் முகம் சிவப்பதை தடுக்க இயலாது தவித்தவளுக்கு, வந்த அழைப்பு காக்க.. அதை எடுத்தவள், தன்னை அழைக்க வாகனம் வந்ததை அறிந்து, சுமியையும் அழைத்து கொண்டு சென்றாள் கௌதமின் இல்லம் நோக்கி…

காயத்ரி அங்கு வந்த போது, தனக்காக செய்யப்பட்டிருந்த வெளி அலங்காரத்திலேயே மகிழ்ந்தவள்,
உள்ளே, அவள் நிறைய முறை கேட்டும் திறக்காத, கௌதமின் பாட்டி காலத்தில் பயன்படுத்திய பூஜை அறை.. இன்று சகல அலங்காரத்தோடு, அவளுக்காய் திறந்திருந்தது கண்டு கண்களில் நீர் நிறைந்தது.

அவளுக்கு, தான்.. முதன் முதலில் வாங்கி கொடுத்த புடவையில், சந்தோஷத்தில் மெல்லிய நீர்படலம், கண்ணில் மேலும் ஒளியை கூட்ட, மங்களத்தின் அடையாளமாய் மல்லிகை பூக்கள் சூடி, புன்னகையை பொன் நகையாய் அணிந்து நின்றவளை, பார்த்தவனுக்கு, அவளை தவிர மற்றது எதுவும் நினைவில் எழவில்லை. பார்த்த விழி, பார்த்தபடி சிலையென நின்றவனை, ஆரனும் சுமியும்… செய்த கிண்டலில் அவனின் முகமும் சிவந்து போனது வெக்கத்தால்….

காயத்ரியை முதலில், அந்த பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல, அதை தொடர்ந்த ஆர்ப்பாட்டமான விருந்தும் குதுகாலமுமாய், நேரம் கடந்தது.

மாரி, காயத்ரியிடம் வந்தவர், அவளின் நலத்தை விசாரித்துவிட்டு, “அப்ப கேட்டத தான், இப்பவும் கேட்க போறேன்..?! நீ, எப்படா இந்த வீட்டுக்கு நிரந்தரமா வருவ..?! வர, வர கௌதம் தம்பி வீட்டுல சாப்பிடறதே இல்ல.. கேட்டா, வேலை வேலைன்னு காலுல சக்கரத்த கட்டிட்டு ஓடுது. ஏதாவது ஒருவேளை சாப்பிட்டாலும், அதுவும் அரைகுரையா தான் சாப்பிடுது..!” என சொல்ல,

அவனின் ஓய்ந்த தோற்றமும், இன்று தங்களோடு அவன் உண்ட உணவின் அளவும், கண்ணில் வந்து போக, ‘அவனை சரி செய்ய வேண்டுமெனில் தான் இங்கே வருவது கட்டாயமானது!’ என முடிவு செய்தவள், ‘இம்முறை.. தன் வீட்டில் கௌதம் பற்றி, என்ன ஆனாலும் சொல்லி விடுவது… மற்றது அந்த பெருமாள் செயல்’ என முடிவு செய்தாள். அவளின் முடிவை செயல்படுத்தும் நேரம் வருமா??  

அன்று மாலை நேரம் நெருங்க, கௌதம் காயத்ரியை அழைத்து, தான் இப்போது எடுத்து வந்த புடவையையும், நகையையும் கொடுத்தவன், அதை அணிந்து வர சொல்ல, அவளுக்காகவே பார்த்து வாங்கிய புடவையிலும், நகையிலும்  பார்க்க அங்கிருந்த அனைவருக்கும் கண் நிறைந்து போனது. மற்றவர் நிலையே இப்படியெனில், கௌதமோ கனவுலகில் அவளோடு கலந்துவிட்டிருந்தான்.

கேக் வெட்டப்பட்ட பின், கௌதம் தனது பரிசாக, சின்ன ஃபைல் போன்ற ஒன்றை கொடுக்க, என்னவென திறக்க போனவளை தடுத்தவன், “இத இப்ப ஓப்பன் செய்யாத செல்லம்மா..! தனியா போய் பாரு..!” என்றிட, சரியென தலையசைத்தவள், அதை பத்திரமாக அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு வந்தவளுக்கு, அடுத்து ஆரன் தனது பரிசை கொடுக்க, முதலில் தயங்கினாலும், பின்பு அதை பெற்றுக்கொண்டாள் நிறைவான மனதோடு…


காலையிலிருந்து, இருந்த உற்சாகம் ஏனோ குறைந்த மாதிரி இருந்த கௌதமிடம், வந்த சுமி, “சார், இந்த இலக்கியத்துல சொல்வாங்க… பசலை நோய் கண்ட தலைவின்னு… இங்க உங்கள பார்த்தா தான், அப்படி தோணுது. காலைல 1000 வாட்ஸ் பல்ப் மாதிரி இருந்த உங்க முகம், இப்ப ஜீரோ வாட்ஸ் பல்ப் மாதிரி இருக்கு.. காயத்ரி எங்கையும் போயிட மாட்டா.. அதே ஹாஸ்டல்ல தான் இருப்பா…” என சொல்லி சிரிக்க..

“கரெக்ட் தான் சுமி, நீங்க சொல்றது.. பட், அவள பார்க்க, நா இங்க இருக்கணுமே..?! ஒரு ஜெர்மன் கம்பெனி கூட, சேர்ந்து புதுசா ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் ஆக போகுது.. அதுக்காக  ஒரு டைம் ஜெர்மன் போகணும். இன்னும் ஒரு நாள்ல…” என கௌதம் சொன்னதும், தன்னிடம் இதுவரை சொல்லவே இல்லையே என்ற ஏக்கத்தோடு பார்த்த காயத்ரியிடம்,

“உன்கிட்ட சொன்னா கண்டிப்பா அப்செட் ஆவேன்னு தெரியும் செல்லம்மா..! அதனால தான், உன் பிறந்தநாள்ல இதை சொல்ல வேணாமேன்னு இருந்தேன். எனக்கே, காலைல தான் கண்பார்ம் ஆச்சுடா.. போறது…” என சொல்லி சமாதானம் செய்தான்.

“கௌதம் கன்கிராட்ஸ் டா.. ரொம்ப நாளா நீ சொல்லிட்டு இருந்த விசயம் இல்ல, இது. போயிட்டு எப்ப ரிட்டன்…?! ஏன்னா.. நம்ம டீம் மேட்ஸ், எல்லாரும் சேர்ந்து இன்னும் இருபது நாள்ல கெட்டூகெதர் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுல யாரும் மிஸ்ஸாக கூடாதுன்னு வேற ட்ரிக்ட்டா சொல்லியிருக்காங்க… நியாபகம் இருக்கா?!” என ஆரன் வாழ்த்தோடு, அவர்களுக்கான கமிட்மெண்ட்டையும் நியாபகப்படுத்த…

“கண்டிப்பா அந்த நாள்ல வந்திடுவேன்டா..  அத மிஸ் பண்ணினா எல்லாரும் சேர்ந்து, டின்னு கட்டிட மாட்டிங்க.. ஒன் மன்த் இருக்க வேண்டி வரலாமின்னு சொன்னாங்க. என்னோட திட்டப்படி 15 நாள்ல முடுச்சிடலாம். அப்படியே எக்ஸ்டன் ஆனாலும், கண்டிப்பா அந்த டேட்ல வந்திடுவேன்” என சொல்லிட, சந்தோஷத்தோடு துவங்கிய தினம், சிறு மனபாரத்தோடு முடிந்தது.

கௌதம் தனது தொழில் விசயமாய் ஜெர்மன் சென்று வந்த அந்த நாள்,
காயத்ரி ஸ்ரீரங்கம் செல்லும் அதே நாள், ஆரன் தன் நண்பர்களுடன் குதுகாலமாய் கொண்டாடி கொண்டிருந்த அந்த அழகான நாள், முடியும் போது அனைவரின் வாழ்க்கையிலும் விளையாடிய கொடுர விளையாட்டில் பழியானது யார்?? பழியிடப்பட்டது யார்??


*****



error: Content is protected !!