Kanavu 21

Kanavu 21

கனவு – 21

அம்ரிதா வீட்டிற்கு வருவதற்குள்ளாக, தான் போயாகவேண்டும் எனும் அவசரத்தில் மூச்சு வாங்க ஓடி வந்த ஆஷ்ரிதாவின் முயற்சி வீணாகவில்லை. வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஆஷ்ரிதா ஒரு குளியலைப் போட்டுக்கொண்டு தேனீர் கலக்கி எடுத்தவள் பொன்னம்மாவின் அறைக்குள் சென்று அவரது கட்டிலில் அமர்ந்தபடி குடித்துக்கொண்டிருந்தாள். பொன்னம்மா இறந்ததில் இருந்து அவளது மாலை நேரங்கள் தேனீரோடு அப்படித்தான் கழிந்துக்கொண்டிருந்தது. சில வினாடிகளில் அம்ரிதாவும் வந்துவிட, அவளும் ஆஷ்ரிதாவோடு இணைந்துக்கொண்டாள்.

“பெயிண்டிங் வாங்கிட்டியா டி?” – ஆஷ்ரிதா.

“ஆமா அச்சு. அப்படியே ரியலிஸ்ட்க் –ஆ இருக்கு டி பாரு” என்றவாறு ஆர்டிஸ்ட் கிருஷ்ணாவிடம் இருந்து வாங்கி வந்த கலை ஓவியத்தை ஆஷ்ரிதாவிடம் காட்டினாள் அம்ரிதா.

இரட்டை சகோதரிகளின் ஒற்றுமையான முகத்தைக் கொண்ட ஒரு பெண் சிவப்பு நிற பாவாடை தாவணி அணிந்துக்கொண்டு கோவிலில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஓவியத்தை தத்ரூபமாய் தீட்டியிருந்தார் ஆர்டிஸ்ட் கிருஷ்ணா.

“பாரு டி. எவ்வளவு ரியலிஸ்டிக் –ஆ இருக்கு?” ஆச்சரியத்துடன் பேசினாள் அம்ரிதா.

“நான் சொல்லும்போது இங்க இல்லாத ஆர்டிஸ்ட் –ஆ அப்ப்டீன்னு என்கிட்ட கேட்டியே. இப்ப தெரியுதா எதுக்கு தேடி கண்டுப்பிடிச்சு அவர பிடிச்சேன் –னு?” என இல்லாத காலரைத் தூக்கிவிட்டபடி கேட்டாள் ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… என் அக்காவுக்கும் கொஞ்சம் மூளை இருக்கு. அவருக்கு ரொம்பவே இருக்கு டி. நாம ரெண்டுபேரையும் காட்சிப்படுத்துற மாதிரி ஒரே பெயிண்டிங் –ஆ வேணும்னு நான் சொன்னேன். நம்ம ரெண்டு பேருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காதுனு எல்லாம் என்கிட்ட கேட்டிருந்தாரு. எதுக்கு இது எல்லாம் கேட்கிறாருனு அப்ப யோசிச்சேன். இப்ப தான் புரியுது” என்றாள் அம்ரிதா.

“ஆனா எனக்கு இன்னும் புரியல டி” என்றாள் ஆஷ்ரிதா.

“ப்சே… இங்க பாரு டி. இந்த பெயிண்டிங்க் –ல இருக்கறது நம்ம ஃபேஸ் இருக்கற ஒரே ஒரு பொண்ணு தான். நாம ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான முகம். சோ இத அச்சுனும் எடுத்துக்கலாம், அம்முனும் எடுத்துக்கலாம்” – அம்ரிதா.

“அது எனக்கு தெரியாதா? முகத்தை தவிர வேற எதுல இந்த பெயிண்டிங்க் நம்ம ரெண்டிபேரையும் ஒன்னா விஷுவலைஸ் பண்ணுது?” – ஆஷ்ரிதா.

“ஏன் டி அவசரப்படுற. சொல்லிட்டுத்தானே இருக்கேன். இதுல பாரு. அந்த பொண்ணு தாவணி போட்டுருக்கா உன்ன மாதிரி. அப்பறம் கோவில் –ல உட்கார்ந்திருக்கா என்ன மாதிரி. நான் என்னைக்கு தாவணி போட்டேன், நீ என்னைக்கு கோவிலுக்கு வந்திருக்க? நம்ம ரெண்டு பேரையும் ஒரே பிக் –ல கொண்டு வந்துட்டாரு –ல?” என அம்ரிதா சொல்ல,

“அட ஆமா டி… நிஜமா கிருஷ்ணா சார் க்ரேட் தான்” பூரித்தாள் ஆஷ்ரிதா.

புன்னகை மலர்ந்த முகமாய் தன்னுடைய அடுத்த கோரிக்கையையும் அப்பொழுதே வைக்க எண்ணி “ஹேய் அச்சு. இந்த பெயிண்டிங்க் –அ நாம உண்மையாக்கலாமா?” என கேட்டாள் அம்ரிதா.

“என்ன டி சொல்லுற? புரியல” – ஆஷ்ரிதா.

“நாளைக்கு நாம ரெண்டு பேரும் கோவில் போலாமா? ப்ளீஸ் டி. வரமாட்டேன் –னு சொல்லாத. ஒருமுறை வா. உனக்கே பிடிக்கும்” – குழந்தைப்போல் கெஞ்சினாள் அம்ரிதா.

ஏற்கனவே அனேகனுடன் கோவிலுக்கு சென்றுள்ள ஆஷ்ரிதாவுக்கு கோவிலின் சுவாசம் விருப்பப்பட்டதாய் தான் அமைந்திருந்தது. எனவே அவளிடம் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தவள் மறக்காமல் அதே கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமெனவும் தீர்க்கமானாள்.

மறுநாள் காலை பொழுது விடிந்ததும் சகோதரிகள் கிளம்பி கோவிலுக்கு புறப்பட, அம்ரிதாவிடம் ஏதேதோ சொல்லி, அன்று அனேகனுடன் சென்ற கோவிலுக்கு அழைத்து வந்தாள் ஆஷ்ரிதா.

வாசலில் தங்கள் காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே சென்ற சகோதரிகளை முதலில் வரவேற்றது எப்பொழுதும் போல் அந்த பெரிய அரசமரம் தான்.

“ஹேய் அச்சு… ரொம்ப அழகா இருக்கு டி இந்த அட்மாஸ்ஃபியர். கோவிலுக்கே போகதா உனக்கு எப்படி இப்படியொரு கோவில் தெரிஞ்சிது?” பிரம்மிப்புடன் கேட்டாள் அம்ரிதா.

“எப்படியோ தெரிஞ்சுது… வா… சாமி கும்பிடலாம்” என பேச்சைத் தவிர்த்து உள்ளே அழைத்துச் சென்றாள் ஆஷ்ரிதா.

அந்த சிறிய கோவிலின் சிறு கருவறைக்குள் பச்சை பட்டுடுத்தி, அணிந்திருக்கும் மூக்குத்தியை விடவும் பிரகாசமான கண்களுடன் காட்சியளித்தாள் அம்பாள்.

பூசாரி காட்டிய தீப ஆராதணையை தன் கண்களில் நிரப்பி தங்கள் வேண்டுதல்களை அம்பாளிடம் சமர்ப்பித்துவிட்டு மண் தரையில் வந்து அமர்ந்தனர் சகோதரிகள் இருவரும்.

“அச்சு… ரொம்ப அழகா இருக்கு டி இந்த இடம். சின்னதா இருந்தாலும் ஏதோ ஒன்னு இந்த கோவில் –ல என்ன அட்ராக்ட் பண்ணுது. மனசுக்கு ரொம்ப அமைதியா ஃபீல் ஆகுது” என்றாள் அம்ரிதா.

“உனக்கு பிடிச்சிருக்குனா எனக்கு ரொம்ப சந்தோஷம் டி” என ஆஷ்ரிதா பதில் கூறவும் அவள் கையில் வைத்திருந்த அலைபேசி தொடர் அதிர்வுகளை அவளுக்கு உணர்த்தியது.

“ஃபோன் வைப்ரேட் ஆகுது அம்மு. இரு யாருனு பார்க்குறேன்” என்று எடுத்தவளுக்கு அவர்களது பள்ளியில் இருந்து அழைப்பு வந்திருப்பது தெரிந்தது.

“ஸ்கூல் –ல இருந்து கால் டி” என கூறிக்கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்த ஆஷ்ரிதா,

“ஹலோ லதா டீச்சர். சொல்லுங்க” என்றாள்.

அந்த நேரம் அங்கு வந்த பூசாரி ஒருவர்,

“தாயி. கோவிலுக்கு உள்ள போன் பேசக்கூடாது மா. வாசலுக்கு அந்த பக்கம் போய் பேசிட்டு வாங்க” என்றார்.

“சரிங்க அய்யா. மன்னிச்சிருங்க” என அவரிடம் சொல்லிவிட்டு “அம்மு… இரு இதோ வர்றேன்” என வெளியே வீதிக்கு வந்தாள் ஆஷ்ரிதா.

தனியாய் அமர்ந்திருக்க வேசடைப்பட்ட அம்ரிதா கோவிலை ஒரு சுற்று சுற்றி வரலாம் என எண்ணி, எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

அந்த கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டியபடி அமைந்திருக்கும் பூச்செடிகளை கண்டு ரசித்துக்கொண்டே வந்தவள், தன் பார்வையை அதில் இருந்து பிரித்து பாதையில் திருப்பிய சமயம், ஒரு கம்பூன்றிய பாட்டி அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தனக்கு பின் திரும்பி பார்த்துவிட்டு ‘இந்த பாட்டி நம்மள தான் பார்க்குறாங்களா?’ என எண்ணியவள் அவரை பார்த்து ‘என்ன பாட்டி?’ என்று தலையாட்டிக் கேட்டாள்.

அவர் பதில் எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிச் சென்றுவிட “என்ன பதில் எதும் சொல்லாம போறாங்க?” என்று தன்னிடமே கேட்டுக்கொண்டவள் மீண்டும் கோவிலை சுற்றிவரும் வேலையில் ஈடுபட்டாள்.

அம்ரிதாவை கடந்து வந்த அந்த கம்பூன்றிய பாட்டி அடுத்ததாக வாசலில் இருந்து அலைபேசியில் பேசி முடித்துவிட்டு உள்ளே வரும் ஆஷ்ரிதாவை நோட்டமிடலானார்.

அலைபேசியை அணைத்தபடி உள்ளே வந்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, தன் எதிரே மிக அருகில் நின்றிருந்த அந்த பாட்டியைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டு பின் சாந்தமானாள்.

‘இது அனேகன் அன்னைக்கு சொன்ன பாட்டி தானே’ என அவள் மனதினுள் யோசிக்க, அவர் தான் இது என அவள் மனமும் உறுதிசெய்தது.

அவரை நோக்கி “வணக்கம் மா” என்றாள் ஆஷ்ரிதா.

அவளிடமும் எந்த பாவணையும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அந்த பாட்டி.

அவர் வெள்ளிக்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பேச மாட்டார் என அனேகன் முன்பே கூறியிருந்ததாள் அந்த பாட்டி பதிலளிக்காமல் சென்றது ஆஷ்ரிதாவுக்கு வித்தியாசமாய் தோன்றவில்லை. சிரித்துக்கொண்டு அம்ரிதாவுடன் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். அங்கு அவளை காணாது சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவளை சிறிய தொலைவில் இருந்து கை ஆட்டி தன்னை நோக்கச்செய்தாள் அம்ரிதா.

அம்ரிதாவை கண்டுக்கொண்டதும் அவளுடன் இணைந்து தானும் கோவிலைச் சுற்றி வலம் வந்தாள் ஆஷ்ரிதா. பின் இருவரும் தரிசனத்தின் மகிழ்ச்சியை மனபூர்வமாய் அனுபவித்தவாறு வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்ததும்,

“அச்சு… அந்த கோவில் –ல ஒரு பாட்டி என்னையே பார்த்துட்டு இருந்தாங்க டி. நான் என்ன –னு கேட்டதும் ஒன்னும் சொல்லாம போய்ட்டாங்க” என்றாள் அம்ரிதா.

“என்ன உன்னையுமா?” என அதிர்ச்சித்தாள் ஆஷ்ரிதா.

“உன்னையுமாவா? அப்படின்னா உன்னையும் பார்த்தாங்களா?” – அம்ரிதா.

“ஆ…ஆம்… இல்ல டி… உன்னையானு கேட்க வந்தேன். டன்க் ஸ்லிப் ஆகிட்டு” என்று சமாளித்தவளின் மனதில் நல்லதோ கெட்டதோ இல்லை என்று சொல்லி வைப்போம் என்றே தோன்றியது.

“ஓ… சரி சரி… ஆனா நான் ஏற்கனவே இந்த பாட்டியை பார்த்திருக்கேன் –னு தோணுது டி” – அம்ரிதா.

அம்ரிதா கூறியதில் மீண்டும் அதிர்ச்சியடைந்த ஆஷ்ரிதா அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “பார்த்திருக்கியா எங்கே?” என்றாள்.

“எங்கே –னு நியாபகம் இல்ல. ஆனா இதே மாதிரிதான் நான் கோவில் –ல இருக்கறப்பதான் பார்த்திருக்கேன். அப்படிதான் நியாபகம் இருக்கு” – அம்ரிதா.

தான் காணும் கனவுகள் எல்லாவற்றையும் மறந்துவிடும் அம்ரிதா தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் சுயம் அறிந்து வர, அவள் கனவில் பார்த்த இப்பாட்டியின் நினைவு முதன் முதலாக அவள் நினைவை எட்டியது. அவள் காணும் பல கனவுகளில் அடிக்கடி சந்திப்பவரே இந்த பாட்டி. தன் அம்மாவுடன் கோவிலுக்கு செல்வது போலவும், அங்கு இந்த பாட்டி இவளை கண்ணிமைக்காது பார்ப்பது போலவும் பல நாட்கள் அவள் மனது பதித்துவந்த காட்சி இப்பொழுது அம்ரிதாவின் கண்களில் விரிந்தது.

“உனக்கு தேஜாவு –வா இருக்கு டி அம்மு” என்றாள் ஆஷ்ரிதா.

“என்ன தேஜாவு –வா?” – அம்ரிதா.

“ஆமா. தேஜாவு –னா என்னனு உனக்கு தெரியும். ஆனா சைண்டிஃபிக் –ஆ அதோட ரீசன் உனக்கு தெரியுமா?” – ஆஷ்ரிதா.

“என்ன ரீசன்?” – அம்ரிதா.

“அதாவது நாம ஒரு விஷயத்த கண்ணால பார்க்குறப்ப நம்மளோட வலது கண்ணும் இடது கண்ணும் ஒன்னா சிக்னல் –அ மூளைக்கு அனுப்பும். சில நேரம் ரெண்டு கண்ணுல ஏதாவது ஒரு கண்ணு அதிகமா ப்ராசஸ் ஆகிடுச்சுனா இந்த மாதிரி நடக்கும். தேட் மீன்ஸ், இப்ப நீ முதல் முறையா ஒரு பொம்மைய பார்க்குறனு வச்சிக்க, உன் ரெண்டு கண்ணும் ஒன்னா ப்ராசஸ் பண்ணுச்சின்னா உனக்கு அந்த பொம்மை புதுசா தான் தெரியும். சப்போஸ் உன்னோட வலது கண்ணு முதல அந்த பொம்மையோட உருவத்த சிக்னல் ஆக்கி உன் மூளைக்கு கொண்டு போய்டுச்சுனா இரண்டாவதா இடது கண்ணு கொண்டு போகும் பொழுது, ஏற்கனவே உன் வலது கண் கிரகிச்சு வச்சிருக்க அந்த பொம்மையோட உருவத்த பார்த்துட்டு இத ஏற்கனவே பார்த்திருக்கோமே அப்படினு யோசிக்கும். அதனால தான் நமக்கு புதுசா பார்க்குற பல பலவிஷயங்கள் ஏற்கனவே பார்த்த மாதிரியான ஃபீல் கொடுக்குது” என்றாள் ஆஷ்ரிதா.

“அப்போ இது தேஜாவு தானா?” கேள்வியாய் கேட்டாள் அம்ரிதா.

“அப்படிதான் இருக்கும் டி” என மீண்டும் ஆஷ்ரிதா சொல்ல, அம்ரிதாவும் ஏற்றுக்கொண்டாள்.

அப்போதைக்கு அம்ரிதாவை நம்பவைத்துவிட்டாலும் இந்த விஷயத்தை அனேகனிடம் கண்டிப்பாக கூறியாக வேண்டும் என ஆஷ்ரிதாவின் மனம் துடித்துக்கொண்டிருந்தது. உடனடியாக அனேகனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப எண்ணி அலைபேசியை எடுத்தவளுக்கு திரையில் காத்துக்கொண்டிருந்தது திரவியத்தின் குறுஞ்செய்தி.

வழக்கம்போல திரவியத்தின் செய்தியை படிக்காமலேயே அழித்துவிட்டவள் அனேகனுக்கு இன்று நடந்த கோவில் விஷயத்தை குறுஞ்செய்தியாய் தட்டினாள். பதிலுக்கு அவனோ, இன்னும் சற்று நேரத்தில் அவர்களது வீட்டிற்கு வருவதாய் கூறினான் அனேகன்.

அவன் கூறியபடியே சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தான் அனேகன். வந்தவனை வரவேற்ற ஆஷ்ரிதா அவன் காதருகே சென்று “அம்மு வீட்டுல தான் இருக்கா. தெரியாம எதுவும் பேசிடாதீங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அனேகனின் பின்புறத்தில் இருந்து வந்தான் திரவியம். அவனைக் கண்டது சட்டென்று வாயடைத்துப் போன ஆஷ்ரிதா அனேகனை பார்த்து முறைத்தாள்.

தற்பொழுது ஆஷ்ரிதாவின் காதருகே சென்ற அனேகன், அவளை போலவே மென் குரலில், பின்னாடி திருவோட அம்மா வந்துட்டு இருக்காங்க. தெரியாம ஏதாவது பேசிடாத” என்றுவிட்டு சிரித்தான்.

அதில் கூடுதல் கடுப்பான ஆஷ்ரிதா “ப்சே” என்றபடி தன் கையில் இருந்த ரப்பர் பேண்டை தூக்கி எறிந்துவிட்டு அவளது அறைக்குள் சென்று டமார் என கதவை அடைத்துக்கொண்டாள்.

அடுப்பங்கறையில் சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்த அம்ரிதா, கதவு வேகமாக அடைக்கப்படும் சத்தம் கேட்டு “ஏய்… கதவ ஏன் டி இப்படி உடைக்கற?” என்றபடி கரண்டியோடு வெளியே வந்தாள்.

“வாவ்… இன்னைக்கு அம்மு சமையலா?” என்றான் திரவியம்.

“ஹே… நீங்க எப்ப பா வந்தீங்க??” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அம்ரிதா.

“இப்பதான்… ஜஸ்ட் நவ்” என்றான் அனேகன்.

“ஓ… மேடம் அதனாலதான் கதவ ஒடைக்கிறாங்களா?” என கரண்டியை பிடித்திருந்த கைகளைக் கட்டிக்கொண்டே சிரித்தபடி கேட்டாள் அம்ரிதா.

“திருவோட அம்மாவும் வந்துட்டு இருக்காங்க அம்மு பின்னடி” – அனேகன்.

“அட பாவிகளா… அம்மாவ வாசல் –ல இருந்து கைப்பிடிச்சி கூப்பிட்டு வராம உள்ள வந்து நின்னு என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்?” – அம்ரிதா.

“உன் அக்கா எப்படி எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பானு தெரிய வேணாமா? அதான் வேகமா முன்னாடி ஓடி வந்தோம். இரு நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என வாசலுக்கு ஓடினான் திரவியம்.

சிரித்துக்கொண்ட அம்ரிதா அனேகனை பார்த்து “உட்காரலாமே அனேகா” என்றாள்.

“திருவோட அம்மாகிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேசப்போறோம் அம்மு. அதுக்குத்தான் வந்திருக்கோம்” என்று கூறியபடியே அமர்ந்தான் அனேகன்.

அவன் கூறிய ‘நம்ம கல்யாணம்’ எனும் வார்த்தையை தன் மனதினுள் அடிக்கோடிட்டுக்கொண்ட அம்ரிதா, “என்ன நம்ம கல்யாணமா?” என்று வாய்ப்பிளந்துக் கேட்டாள்.

சற்றுநேரம் புரியாமல் முழித்த அனேகன், தான் சொன்ன வாக்கியத்தை தனக்குள் மீண்டும் சொல்லிப்பார்த்துவிட்டு, சிரித்துக்கொண்டே “ஹாஹா… வேகமா சொல்லிட்டேனா?” என்றான்.

“என்ன வேகமா சொன்னீங்க?” – பதட்டம் குறையா குரலில் அம்ரிதா.

“திருவோட அம்மாகிட்ட நாம ரெண்டு பேரும் சேர்ந்து திரு – ஆஷ்ரிதாவோட கல்யாணத்தை பத்தி பேசப்போறோம் –னு சொன்னேன்” – அனேகன்.

அதைக் கேட்டவள் ஒரு பெருமூச்சை வெளியே விட்டவாறு வெட்கம் கலந்து சிரித்தாள். அதை கவனித்தவனாய்,

“ஏன், நம்ம கல்யாணத்த பேசக்கூடாதா அம்மு?” என விஷமப் புன்னகையோடு கேட்டான் அனேகன்.

அதில் கன்னியவளது கன்னம் மேலும் சிவந்துப்போக, தன் கண்கள் வழியே அவனுக்கு காதல் தூது அனுப்பினாள்.

‘எத்தனை நாள் நான் இந்த பார்வைய மட்டும் பார்க்குறது அம்மு? உன் வாய் திறந்து உன்னோட காதல, எனக்கான காதல எப்ப சொல்லுவ?’ என எண்ணினான் அனேகன்.

இருவரும் தனித்து விடப்பட்ட அந்த வரவேற்ப்பு அறையில் காதல் புறாக்களாய் இருவரும் தங்கள் கண்களால் கவிப்பாடிக் கொண்டிருக்க, இருவருள்ளும் ஏதோ ஓர் ரம்மியமான உணர்வு பரவி அவர்களது ஆன்மாவை ஆட்கொண்டது.

சிவ பூஜையில் கரடியாம்; இவர்களது காதல் பூஜையில் கரடியானான் திரவியம்.

“அம்மா வந்துட்டாங்க அம்மு” என்று திடுமென வாசலைத்தாண்டி திரவியம் உள்ளே குதிக்க, மனதிற்குள் தான் பிரயாணப்பட்டுக்கொண்டிருந்த பவித்ரமான நிலையை சட்டென கைவிட்டு பதறியபடி நிஜத்திற்கு வந்தாள் அம்ரிதா.

அனேகன் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பூமிக்குத் திரும்பினான்.

அம்ரிதா திடுக்கிட்டதில் திரவியத்திற்கு ஏதோ அரைகுறையாய் புரிந்துவிட, “நான் எதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ அம்மு?” என்றான் நக்கல் தொனியில்.

அதைக் கேட்டதும் வேகமாய் துடிக்கத் தொடங்கிய அவளது இதயத்தை அடக்கியபடி “ச்சே… ச்சே… அதெல்லாம் ஒன்னுமில்ல திரு” என்று அவனிடம் கூறிவிட்டு “வாங்க அம்மா” என ஓடிச்சென்று அவனது அம்மாவை வரவேற்று அமரவைத்தாள் அம்ரிதா.

எல்லாம் அறிந்த அனேகனும் திரவியமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, “வந்து உட்காரு திரு” என அவனை அழைத்தான் அனேகன்.

அனேகன் அழைப்பிற்கிணங்க அவனது அருகிலேயே சென்று அமர்ந்த திரவியம் அனேகனிடம் “ப்ரோ… அடுத்தது இதே மாதிரி உட்கார்ந்து உங்களுக்கும் அம்முவுக்கும் கல்யாணம் பேசனும் நாங்க. என்ன ஓகே வா?” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

“இதே மாதிரி முடியாதே திரு” – அனேகன்.

“ஏன் ப்ரோ? என்ன மாதிரி இல்லையே உங்க பிரச்சனை. ஆல் சைட் ஓகே தானே?” – திரவியம்.

“அது இல்ல திரு. இப்ப மாதிரி இல்லாம நீங்களும் அச்சுவும் ஜோடியா உட்கார்ந்து எங்க கல்யாணத்த பேசுவீங்கனு சொன்னேன்” என அனேகன் சொல்லியதுதான் தாமதம், திரவியத்தின் முகத்தில் எத்தனை வாட்ஸ் பல்ப் எரிந்தது என சொல்ல முடியாது. அத்தனை பிரகாசம்.

(களவாடுவான்)

error: Content is protected !!