Katre-29

Katre-29

கவிகிருஷ்ணாவின் அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்த பின்னரே தேன்மதி தன் கைகள் இருந்த இடத்தை கவனித்தாள்.

அவசரமாக தன் கைகளை விலக்கி கொண்டவள் மற்றைய புறமாக திரும்பி நிற்க அவளின் முன்னால் வந்து நின்றவன் அவள் முகத்தை தன் ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தினான்.

சிறிது நேரத்திற்கு முன்பு அவனை பார்க்கும் போது இருந்த கலக்கம் மறைந்து பதட்டமும், படபடப்புமே அவள் கண்களில் நிறைந்து இருந்தது.

“தேனு!” ஆசையோடும், காதலோடும் ஒலித்த அவன் குரலில் மெல்ல தன் விழி நிமிர்ந்து பார்த்தாள் தேன்மதி.

“எனக்கு தெரியும் தேனு! உன் மனசில் நான் இருக்கேன்னு எனக்கு தெரியும் எப்போதும் உன் மனசில் நான் இருப்பேன் தேனு! நான் இருப்பேன்!” குரல் கம்ம கூறிய கவிகிருஷ்ணாவையே விழி மூடாமல் பார்த்து கொண்டு நின்றவள் தன் மனதை ஒரு நிலை படுத்த முடியாமல் தவித்து கொண்டு நின்றாள்.

“கிருஷ்ணா நான் கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்!” அவன் கையை மெல்ல கீழிறக்கி விட்ட படியே அவள் கூற அவளை கேள்வியாக நோக்கினான் கவிகிருஷ்ணா.

“எனக்கு ஹாஸ்பிடல் வந்த ஆரம்பத்தில் எதுவும் தெரியாது கிருஷ்ணா நானாகவே என் மனதில் ஒரு முடிவெடுத்து அதை நம்பி இருந்தேன் உங்க பேச்சை தான் முழுமையாக ஏற்று நடந்தேன் அது எதனால் எனக்கு தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு மறந்து இருந்த சம்பவம் எல்லாம் நினைவு வரும் போது எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியலை உண்மையா சொல்லப் போனால் என் மனம் உங்க பக்கம் சாய்ந்து போனது நிஜம் ஆனா அந்த நேரம் நீங்க எனக்கு கவியாக தான் இருந்தீங்க நான் கடைசி நிமிடம் வரை அப்படி தான் நினைத்து இருந்தேன் எனக்கு மறுபடியும் அந்த மலையில் இருந்து விழுந்தது ஞாபகம் வர்ற வரைக்கும்!
எனக்கு நீங்க கவி இல்லை என்றது ஒரு அதிர்ச்சியாக இருந்த அதேநேரம் இவ்வளவு நாள் உங்களை கவியாக நினைத்து இருந்தேனேனு ஒரு அதிர்ச்சி அந்த நிமிஷம் என்னை சுற்றி என்ன நடக்குதுனு கூட என்னால புரிஞ்சுக்க முடியல அதற்கு அப்புறமாக தான் டாக்டர் ட்ரீட்மெண்ட் பண்ண ஆரம்பித்தார் எல்லா நிதர்சனமும் எனக்கு புரியவும் ஆரம்பித்தது உங்களை பார்க்கவே எனக்கு அந்த நேரம் ரொம்ப கில்டியாக இருந்துச்சு பட் நானும் ஒரு வகையில் தப்பு செய்து இருக்கேன்னு எனக்கு தோணவும் உங்க கிட்ட பேச வந்தேன் ஆனா நீங்க சட்டுன்னு என்னை விரும்புறதாக சொல்லவும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுனு தெரியல உங்க மனதில் என் மேல ஆசை வந்ததற்கு நீங்க மட்டும் பொறுப்பு இல்லை நானும் தான் எனக்கு தெரியும் ஆனா அந்த நிலையில் எனக்கு கவி இல்லை என்கிற ஒரு எண்ணம் மட்டுமே நிறைந்து இருந்தது அதனால தான் அவசரமாக ஊட்டியில் இருந்து கிளம்பி வந்தேன் உங்க காதல் நிச்சயம் என்னை பலவீனமாக மாற்றிடும்னு எனக்கு தெரியும் ஏன்னா உங்க கண்ணில் அவ்வளவு நம்பிக்கை, உறுதி இருந்துச்சு நான் ஊட்டியில் இருந்து வரும் போது உங்களை பற்றி யோசித்து பார்க்க கூடாதுனு இருந்தேன் ஷோ நான் உங்களை பற்றியோ உங்க காதலை பற்றியோ யோசிக்கவே இல்லை இங்க சென்னை வந்தததுக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் என்னை அறியாமலே உங்க ஞாபகம் எனக்கு வரும் ஆரம்பத்தில் நான் அதை பெரிதாக எடுத்துக்கல நாளாக நாளாக அந்த ஞாபகங்கள் என் மனதில் அதிகமாகிட்டே போனது அதை இல்லாமல் செய்யும் வழி எனக்கு தெரியல அது சரியா? தப்பா? அது கூட எனக்கு தெரியல என்னால எந்த ஒரு விஷயத்தையும் கவனம் எடுத்து செய்ய முடியாமல் போயிடுச்சு ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் உங்களை பார்த்து பேசிடலாமானு கூட நினைத்து ஊட்டி வர ரெடி ஆனேன்”
அதிர்ச்சியாக அவளைப் பார்த்தவனை பார்த்து புன்னகத்து கொண்டவள் மேலும் தன் மனதிற்குள் சேமித்து வைத்த எல்லா விடயங்களையும் கூறத் தொடங்கினாள்.

“பட் என் மனசு ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக் கொள்ளல நான் தானே உங்க மனதில் ஆசையை வளர்த்தேன் அப்படிங்குற ஒரு எண்ணம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது அதோட கவி இருந்த இடத்தில் எப்படி நான் உங்களை வைக்க முடியும்னு கேள்வி கேட்டு கேட்டு என்னை நானே மாத்திக்கிட்டேன் ஒவ்வொரு நாளும் காலையிலும், இரவிலும் ஒரு மணிநேரம் யோகா பண்ணி என் மனதை கட்டுப்படுத்த ட்ரை பண்ணேன் ஏதோ ஒரு அளவுக்கு உங்களை மறந்து இருந்தேன் அப்படி தான் உங்களை மறுபடியும் பார்க்கும் வரை நினைத்து இருந்தேன்” என்று விட்டு தன் கண்களை மூடிக் கொண்டவள் ஆழ்ந்து மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“நான் உங்களை பற்றி எல்லாம் மறந்து இருக்கேன்னு கொஞ்சம் தைரியமாக இருக்கும் போது தான் மறுபடியும் உங்களை கோவிலில் பார்த்தேன் நான் உங்க கையில் இருந்த அந்த ஒரு நிமிஷம் உங்க கண்ணில் தெரிந்த காதலை பார்த்து மொத்தமாக நான் என்னை மறந்து போனேன் ஆனா என் மனம் அதற்கு இடம் கொடுக்கல அதை ஏற்றுக் கொள்ளவும் எனக்கு தைரியம் இல்லை அது தான் அன்னைக்கு கோபமாக அங்கே இருந்து வந்துட்டேன் உங்களை விட்டு விலகி வர முடிந்த என்னால உங்க நினைவுகளை விட்டு வெளிவர முடியல இதை என்னால யார் கிட்டயும் தைரியமாக பகிர்ந்து கொள்ளவும் முடியல வீட்டில் அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லோரும் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு எதிர்பார்த்தாங்களே தவிர என் மனதில் என்ன இருக்குன்னு யோசிக்கல நான் ஒரு சாதாரண பொண்ணு தானே கிருஷ்ணா சின்ன வயதில் இருந்து பழகி கல்யாணமும் நடந்ததுக்கு அப்புறம் திடீர்னு கவி இறந்து போனா உடனே என் மனதை எப்படி என்னால் மாற்ற முடியும்? அதை பற்றி யாரும் யோசிக்கவே இல்லையே! அவங்க கவி இல்லாத நிதர்சனத்தை அந்த இரண்டு மாதத்தில் உணர்ந்து கொண்டாங்க அதற்கு பழகிட்டாங்க ஆனா நான் என்ன நடந்ததுனு கூட தெரியாமல் தானே இருந்தேன் கிருஷ்ணா அன்னைக்கு உண்மையான நிலவரம் எனக்கு தெரிய வரும் போது என் நிலைமை…” கண்கள் கலங்க தன் கைகளில் தேன்மதி முகம் புதைத்து கொள்ள கவிகிருஷ்ணாவோ அவள் பேசி முடிக்கட்டும் என்று நினைத்து கொண்டு தன் கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு நின்றான்.

தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“அன்னைக்கு கோவிலில் வைத்து உங்களை பார்த்ததற்கு அப்புறம் வீட்டுக்கு வந்து என் பலவீனத்தை நினைத்து நான் அவ்வளவு அழுதேன் மறுபடியும் எப்படி இந்த நிலையில் இருந்து வெளியே வர்றதுனு யோசித்து யோசித்து நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் எப்படியாவது மறந்தே ஆகணும்னு ஒரு முடிவெடுத்து நான் கீழே ஹாலுக்கு வந்தால் மறுபடியும் அங்கே நீங்க நான் அந்த நிமிஷம் இது கனவா? நனவா? ன்னு கூட புரியாமல் நின்றேன் அப்போ நீங்க என் கிட்ட வந்து பேசும் போது எனக்குள்ள பல கேள்விகள், பல குழப்பங்கள் ஆனா அதற்கெல்லாம் எனக்கு பதில் தெரியல ஒரு ஒழுங்கான பதில் தெரியாமல் உங்களை பார்க்க கூடாதுனு தான் நான் உங்களை விட்டு விலகி விலகி போனேன் ஆனா நீங்க அதை புரிந்து கொள்ளாமல் என் பின்னாலேயே வந்துட்டு இருந்தீங்க எனக்கு உங்களை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது ஏற்கனவே நான் குழப்பமாக இருக்கும் போது நீங்க மேல மேல பேசி என்னை மொத்தமாக குழப்பி விட்டீங்க  வீட்டில் இருந்த எல்லோரும் உங்களை பற்றி பேசி பேசி என்னை இன்னும் யோசிக்க வைத்தாங்க இப்படி நான் பாதி குழப்பத்தோடு இருக்கும் போது தான் திடீர்னு நீங்க வீட்டை விட்டு போயிட்டீங்க சரி நீங்க போனால் எனக்கு பிரச்சினை இல்லைனு தான் நான் நினைத்து இருந்தேன் ஆனா அந்த இரண்டு, மூன்று நாள் உங்களை பார்த்ததே என்னை நிம்மதி இல்லாமல் ஆக்கிடுச்சு எங்கே பார்த்தாலும், எங்கே திரும்பினாலும் நீங்க தான் தெரிஞ்சீங்க” கடைசி வசனங்களை சொல்லும் போது அவள் கன்னங்கள் செம்மையேறிப் போய் இருந்தது.

“இந்த குழப்பத்தோடு இருந்த போது அத்தை வேற உங்களை மிஸ் பண்ணுற மாதிரி பேசுனாங்க ஷோ அதை பற்றியும் பேசலாம்னு உங்களை பார்க்க ஹாஸ்பிடல் வந்தேன்”

“அதை பற்றி மட்டுமா பேச வந்த?” கிருஷ்ணா கேலியாக கேட்கவும்

வெட்கத்தோடு புன்னகத்து கொண்டவள்
“உங்களை பார்த்து தானே பேசணும் அப்போ உங்களை பார்த்த மாதிரியும் ஆகிடும், பேசுன மாதிரியும் ஆகிடும்னு தான் வந்தேன்” எனவும் அவளை புன்னகையோடு பார்த்து கொண்டு நின்றான் கவிகிருஷ்ணா.

“அங்கே ஹாஸ்பிடல் வந்த இடத்தில் டாக்டர் கிட்ட பேச வேண்டி வந்தது அவர் கிட்ட பேசுன அப்புறம் கொஞ்சம் எனக்கு மனசு தெளிவாக இருந்தது இருந்தாலும் ஒரு தயக்கம் டாக்டர் சொன்ன எல்லாம் சரின்னு தெரிந்தாலும் அதை அப்படியே கடைப்பிடிக்க ஒரு தயக்கம் அவர் கடைசியாக…”

“கிருஷ்ணா, தேன்மதி வெளியே இவ்வளவு நேரமாக என்ன பண்ணுறீங்க? உள்ளே வாங்க சுடச்சுட பலகாரம் பண்ணி இருக்கேன் வந்து சாப்பிடுங்க” என்றவாறே வந்த ஜானகியை பார்த்ததும் சட்டென்று அங்கு இருந்த தன் புத்தகத்தை எடுத்துக் கொண்ட தேன்மதி கவிகிருஷ்ணாவை கடந்து வேகமாக வீட்டினுள் ஓடிச்சென்றாள்.

“என்ன கிருஷ்ணா ஏதாவது பிரச்சினையா?” கவலையுடன் கேட்ட ஜானகியை பார்த்து புன்னகத்து கொண்டவன்

“பிரச்சினையா? நல்லா கேட்டீங்க போங்க! பிரச்சினை எல்லாம் முடியுற ஸ்டேஜ்க்கு வந்தாச்சு கடைசியாக ஒரே ஒரு விடயம் பேச இருக்கும் போது அவ எஸ்கேப் ஆகிட்டா” எனவும்

“அச்சச்சோ! அப்போ நான் தான் வந்து குழப்பிட்டேன்னா?” என்று கேட்டார் ஜானகி.

சிரித்துக்கொண்டே அவர் கன்னத்தை பிடித்து செல்லமாக ஆட்டியவன்
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை ம்மா இத்தனை நாள் காத்திருந்ததற்கு இந்த பலனே ரொம்ப ஸ்பெஷல்” என சந்தோஷமாக கூறவும் ஜானகி அவன் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

அவருடன் பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவன் கண்கள் எதிரில் ஷோபாவில் அமர்ந்து சம்யுக்தாவோடு பேசிய வண்ணம் சாப்பிட்டு கொண்டிருந்த தேன்மதியின் மேல் நிலை குத்தி நின்றது.

அவள் முழுமையாக தன் காதலை அவனிடம் தெரியப் படுத்தாவிட்டாலும் இப்போது சற்று நேரத்திற்கு முன் அவள் கூறிய விடயங்களே அவனுக்கு அவள் மனதை வெளிச்சம் போட்டு காட்டியது.

நீண்ட நேரமாக கவிகிருஷ்ணாவும், தேன்மதியும் சகஜமாக பேசிக் கொண்டு இருந்தது ஒரு புறம் பெரியவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் மறுபுறம் இவர்களது இந்த ஒரு மாற்றமே அவர்களுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும்
அள்ளி வழங்கியது.

இந்த நிலை எப்போதும் தொடர வேண்டும் என்று இரு தாயுள்ளங்களும் மனதார வேண்டிக் கொள்ள இதை பற்றி எதுவும் அறியாமலே கவிகிருஷ்ணா தேன்மதியை பார்வையால் தழுவி கொண்டு இருந்தான்.

இரவுணவையும் முடித்து விட்டு கவிகிருஷ்ணா எல்லோரிடமும் கூறி விட்டு விடைபெற்றுக் கொள்ள தேன்மதியோ அமைதியாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருந்தாள்.

சுரேந்திரன் அருகில் சென்று நின்று கொண்டவன்
“மாமா வித் யுவர் பர்மிஷன் நான் தேன்மதி கிட்ட கொஞ்சம் பேசலாமா?” என கேட்க

ஆச்சரியமாக அவனை பார்த்தவர்
“அந்நியன் படத்தில் வர்ற அம்பி மாதிரி கேட்குறியே கிருஷ்ணா!” என
சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்து சரியென்று தலை அசைத்தார்.

கவிகிருஷ்ணா தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் தேன்மதி ஒரு கணம் தயக்கம் கொள்ள அவனோ அதை எதையும் கவனிக்காமல் அவளருகில் சென்று நின்றான்.

“ஈவ்னிங் தோட்டத்தில் வைத்து கடைசியாக ன்னு ஏதோ சொல்ல வந்தியே என்ன அது? இப்போ சொல்லு தேனு காது குளிர கேட்டுட்டு போறேன் அப்போ ஜானகி ம்மா வந்ததால் தப்பிச்சு ஓடிட்ட இப்போ நீ பதில் சொல்லாமல் எங்கேயும் ஓட முடியாது” சிரித்துக்கொண்டே கூறியவனைப் தயக்கமாக பார்த்தவள் சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டாள்.

“யாரும் உதவிக்கு வர மாட்டாங்க! சொல்லு டாக்டர் என்ன சொன்னாங்க?” கண்களில் குறும்பு மின்ன கேட்டவனை

போலியாக முறைத்து பார்த்தவள்
‘எல்லாம் தெரிஞ்சுகிட்டே கேட்குறியா? இருடா கிருஷ்ணா உன்னை கவனிக்குறேன்’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே

“ஆஹ்! இனி கிருஷ்ணா இருக்கும் பக்கமே போக வேண்டாம் அவனை பார்த்தாலே பிரச்சினை தான் வரும் அதனால கிருஷ்ணாவை விட்டு தூரமாக போயிடுங்கனு டாக்டர் சொன்னார்” எனவும் அதை கேட்ட கவிகிருஷ்ணாவின் முகமோ வாடி போனது.

உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவன்
“சேச்சே! அப்படி எல்லாம் டாக்டர் சொல்ல மாட்டார் நீ சும்மா சொல்லுற” என்று கூறவும்

அவனைப் பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டவள்
“நான் எதற்கு பின்ன இப்படி சொல்லணும் கிருஷ்ணா? நான் ஈவ்னிங் என்ன சொன்னேன் டாக்டர் சொன்ன வழியை பின்பற்ற எனக்கு தயக்கமாக இருக்குன்னு சொன்னேனா இல்லையா?” என்று கேட்க சிறிது நேரம் யோசித்து பார்த்தவன் ஆமென்று தலை அசைத்தான்.

“ஆனால் நீ ஈவ்னிங் வேற மாதிரி தானே பேசுன? டாக்டரும் நல்லா தானே பேசுனார் அப்புறம் எப்படி?” யோசித்து கொண்டு நின்ற கவிகிருஷ்ணாவின் தோளில் தட்டியவள்

“கிருஷ்ணா இப்போ காது குளிர கேட்டாச்சு தானே? சரி சரி டைம் ஆச்சு போங்க போய் நிம்மதியாக தூங்குங்க குட் நைட்” புன்னகையோடு அவனைப் பார்த்து தலை அசைத்து விட்டு சென்று விட அவனோ குழப்பமாக யோசித்து கொண்டே நடந்து சென்றான்.

“டாக்டர் எல்லாம் சரி ஆகும்னு தானே என் கிட்ட சொன்னாங்க ஆனா இப்போ இவ இப்படி சொல்லுறா டாக்டர் இப்படி நெகட்டிவா சொல்லி இருக்க மாட்டாரே? ஏதோ இடிக்குதே! ஒரு சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ஒரு பொண்ணு மனதை புரிந்து கொள்ள முடியாமல் இப்படி அவஸ்தை படுறேனே! கடவுளே! முடியல” புலம்பலோடு யோசித்து கொண்டே தன் காரை நோக்கி நடந்து சென்றவன் தேன்மதி தன்னிடம் தோட்டத்தில் வைத்து கூறிய எல்லா விடயங்களையும் ஒரு முறை மீண்டும் நினைத்து பார்த்தான்.

ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாக எண்ணி பார்த்தவன் அவள் கூற வந்த விடயத்தை புரிந்து கொண்டு புன்னகையோடு
“கேடி தேனு! என் கிட்டயே உன் விளையாட்டை காட்டுறியா? எத்தனை நாள் நீ விளையாடுவ? நீயாகவே என்னை தேடி வந்து கிருஷ்ணா ஐ லவ் யூ ன்னு சொல்லுவ யார் கிட்ட உன் விளையாட்டை காட்டுற?” தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே தன் காரில் ஏறி அமர்ந்தவன் காரை ஸ்டார்ட் செய்ய மெல்லிய காற்று வந்து அவனை தழுவி சென்றது.

ஏதோ ஒரு மன உந்துதலில் மாடியை நோக்கி பார்த்த கவிகிருஷ்ணா அங்கே அத்தனை நேரமாக அவனையே பார்த்து கொண்டு நின்ற தேன்மதி அவன் தன்னை பார்ப்பதை கண்டு கொண்டு வெட்கத்தோடு வேகமாக உள்ளே ஓடிச்செல்ல மனம் நிறைந்த சந்தோஷத்தோடு தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்…..

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!