Kattangal 2
Kattangal 2
கட்டங்கள் – 2
ஞாயிறு இரவு 11:30
பிரமாண்டமான ஹால்.. மினி சினிமா தியேட்டர் போல் ஒரு தொலைக்காட்சி.. அலங்காரம் நிறைந்த விலை மதிப்பு கூடிய மின்விளக்கு…. வேலைப்பாடு நிறைந்த தேக்கு சோபா. விலை உயர்ந்த கார்பெட்… ஆனால் எல்லாம் இருந்தும் அந்த வீடு.., இல்லையில்லை பங்களாவில் அழகு இல்லை.. ஏதோ எல்லாம் அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இருப்பது போல் தோற்றம்..
மயான அமைதி……
ஹாலில் விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஒரு பெரியவர். அவரிடம் ஏதோ மெலிதான குரலில் பேசிக் கொண்டிருந்தார் அவர் மனைவி… இருவர் முகத்திலும் கவலையின் ரேகைகைகள்.
கார் நுழையும் சத்தம் கேட்டது. இருவர் கண்களிலும் ஒரு மலர்ச்சி.
நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டு.. கம்பிரமான நிதானமான நடை… அனைவரையும் பார்வையால் அடக்கி விடும் ஆளுமை நிறைந்த கண்கள். வேகமான நடையோடு உள்ளே நுழைந்தான் இருபத்து எட்டு வயது மதிக்க தக்க ஓர் இளைஞன்.
“என்ன மது…. இன்னக்கி ஞாயிறு தானே… இன்னைக்குமா வேலை…?” , என்று வினவினார் அந்த பெரியவர்.
” என்னப்பா உங்களுக்கு தெரியாததா ? கோவிந்தன் … புஷ்பா… இந்த ரெண்டு பெயரையும் சொன்னால்…, அத்தனை பிசினெஸ் மக்னேட்ஸும் இன்னைக்கும் மரியாதையோட பேசுறாங்க.. அப்படி பட்ட நீங்களே சனி.., ஞாயிறுனு பேசலாமா..? “, என்று கேட்டான் மது என்றழைக்கப்பட்ட மதுசூதனன்.
” வீட்லயும் எங்களோட கொஞ்ச நேரம் இருக்கலாமே… ?” , என்று மது சூதனின் தாய் வினவ., “முதல்ல பிசினெஸ்… அது தான் நம்ம குடும்பத்தோட ஆணி வேர்.. இதை தானம்மா நீங்க சொல்லிருக்கீங்க.. உங்களுக்கு என்ன குறைன்னு சொல்லுங்க… ? சமையல் செய்றதுக்கும் அதை எடுத்து பரிமாறுவதற்கும் வேலைக்காரம்மா.. போர் அடிச்சா டீ.வி….
எதாவது பிரச்சனைனா கால் பண்றதுக்கு மொபைல்… இருபத்து நாலு மணி நேரமும் Internet connection.. whatsapp Facebook ன்னு சகல வசதியும் இருக்கு.. வாரத்துல ஒரு நாள் டாக்டர் செக் அப்.. வேற என்ன வேணுமுன்னு சொல்லுங்க .. உடனே பண்ணிரலாம்… நீங்களும்.., அப்பாவும் இப்படி தானே பிசினெஸ் பிசினெஸ்னு சனி ஞாயிறு வித்யாசம் இல்லாமல் சுறுசுறுப்பா இருப்பீங்க… நானும் உங்களை போலத்தான் ….. “, என்று கூறி முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்தான் மதுசூதனன்.
மணி 11:45
மீண்டும் கார் சத்தம் கேட்க அனைவரும் வாசலை பார்த்தனர்.
” முகிலன் இப்ப தான் வீட்டுக்கு வரானா..? ” , என்று மதுசூதனன் கேட்க அமைதியாக தலை அசைத்தனர் தாயும் தந்தையும்.
காரிலிருந்து தள்ளாடியபடியே இறங்கினான் முகிலன். அவன் உதடுகள் பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தது.
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன்……
கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா – அதில்
கட்டில் அமைந்ததடா – கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை
– இன்பச் சக்கரம் சுற்றுதடா
அதில் நான் சக்கரவர்த்தியடா
அதில் நான் சக்கரவர்த்தியடா……..
பாடிக்கொண்டே முகிலன் படி ஏற…. “எந்த ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தி ஆவதாக திட்டம் …? ” , என்று கடினமாக கேட்டான் மதுசூதனன்.
சற்று போதை இறங்கியவனாக , யோசித்தவாறே கண்களை சுருக்கி கொண்டு அவனை பார்த்தான் முகிலன். மதுசூதனனை விட சற்று உயரம் கம்மி… நல்ல உடற்கட்டு… குறும்பு விளையாடும் முகம்.. ” எந்த சாம்ராஜ்ஜியம் ?” , என்று முகிலன் யோசிக்க.., “இப்படி பார்ட்டி… நண்பர்கள்னு சுத்தினா என்ன அர்த்தம்…? ” , என்று கோபமாக கோவிந்தன் தந்தையாக வினவினார்.
“என்ன பிரச்சனை ஆகுமோ…?”, என்று புஷ்பா பதட்டம் அடைந்தார்.
“உஷ்… ” , என்று அவன் உதட்டில் கை வைத்தான் முகிலன்.
“உங்க ரெண்டு பேருக்கும் No Rights.. ரெண்டு பேரும் பிசினெஸ் பிசினெஸ்ன்னு பணத்துக்கு பின்னாடியே ஓடுனீங்க… எங்களோட சிரிச்சி பேசி ஒரு டின்னெர்… ஒரு டூர் .Nothing… No one is eligible to question me…. நீங்க யாரும் பேச கூடாது…. உஷ்.. ” , என்று கூறிவிட்டு படி ஏறினான்.. படியில் பின் பக்கமாக இறங்கி.. “ப்ரோ.. நீயாவது வாழக்கையை அனுபவி.. ” , என்று முகிலன் கூற,
“எப்படி உன்னை மாதிரியா?” , என்று கடுப்பாக வினவினான் மதுசூதனன்.. ” நோ.. நோ.. இது மட்டும் தான் வாழ்க்கையை அனுபவிக்கிற முறைன்னு இல்லை… You are a teetotaler…. எனக்கும் அப்படி இருக்கனுமுனு தான் ஆசை.. But this became my policy.. ” என்று உச்சு கொட்டியவாறே.., “ குடுமபத்தோட அன்பா , அக்கறையா அப்படி சொன்னேன்..” , என்று ஒற்றை புருவம் உயர்த்தி முகிலன் நிதானமாக கூற, “ஊருக்கெல்லாம் உபதேசம் நல்ல தான் இருக்கு.. நீ இந்த பழக்கத்தை எப்ப விடுவ…? ” , என்று அழுத்தமாக கேட்டார் அவர்களின் தந்தை.
” இந்த கேள்வியை கேட்க.., இந்த வீட்டில் ஒருத்தருக்கு கூட யோக்கியதை இல்லை.. தகுதியான ஆள் கேட்டா பதில் சொல்றேன்.. ” , என்று கூறிவிட்டு படியேறி தன் அறைக்கு சென்றான் முகிலன்.
“நீங்க ஏன் இன்னும் முழிச்சி இருக்கீங்க..? தூங்குங்க…” , என்று மதுசூதனன் படி ஏற , “உன்கிட்ட பேச தான் முழிச்சிட்டு இருக்கோம்..”, என்று தயக்கமாக மதுசூதனின் தாய் கூற, “என்னம்மா விஷயம் ?” , என்று மணியை பார்த்துக் கொண்டே கேட்டான் மதுசூதனன்.
“பொண்ணு போட்டோ பார்த்தியா…? நீ எந்த பதிலும் சொல்லலியே.. ” , என்று அவன் தந்தை வினவ , ” இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது.. ” , என்று மனதிற்குள் நினைத்தவனாக “நம்ம ஸ்டெடஸ்ல ஒரு பொண்ணு பாத்திருக்கலாமே?”, என்று கூறினான் மதுசூதனன்.
” அன்பா.. அக்கரையான பொண்ணு தான் வேணும்.. ஸ்டேடஸ் முக்கியம் இல்லை.”, என்று கோவிந்தன் தந்தையாக அறிவுறுத்த… . ” நீங்களும் அம்மாவும் பணமும் பிஸினஸும் சேரணுமுன்னு உங்க கல்யாணத்துல யோசனை பண்ணீங்க… அதை நான் என் கல்யாணத்துல யோசிக்க கூடாதா..? ” , என்று மதுசூதனன் எதிர் கேள்வி கேட்க.., ” நான் வாக்கு குடுத்திட்டேன் நீ மீற மாட்டேன்னு நம்புறேன்.. ” , என்று அவன் தாய் அழுத்தமாக கூற, “எனக்கு என்னவோ இந்த கல்யாண விஷயம் மட்டும் தான் இவர்கள் பண்ற உருப்படியான விஷயம் மாதிரி தெரியுது ” , என்று மாடியில் இருந்து குரல் கொடுத்தான் முகிலன்.
” இவன் இன்னும் அவன் அறைக்கு போகவில்லையா?” , என்று மதுசூதனன் சிந்திக்க, ” எங்களுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை …. “, என்று அவன் தந்தை கூற, “இந்த திருமணத்தை அந்த கல்யாணப் பெண்ணே நிறுத்துவாள்…” , என்று எண்ணி கொண்டு ” சம்மதம் ” என்று முணுமுணுத்து விட்டு படி ஏறினான் மதுசூதனன் .
“நம்ம கிட்ட நிறைய பணம் இருக்கு.. ஆனால் நல்ல மனம் தான் இல்லை.. நல்ல மனம் உள்ள ஒரு அண்ணி வரட்டுமே … ஆனால் நீ ஏதோ கிரிமினலா யோசிக்கிற மாதிரி இருக்கு… ” , என்று முகிலன் நக்கலாக படி அருகே சாய்ந்து கொண்டு வினவினான்..
குடிச்சாலும் இதெல்லாம் நல்ல யோசிப்பான் என்று மனதில் எண்ணிய படியே, ” இந்த பெண்ணுக்கு மட்டும் நல்ல மனசு இருக்குமுன்னு என்ன நிச்சயம்?” , என்று வினவினான் மதுசூதனன்.
முகிலன் யோசனையோடு தன் சகோதரனை பார்த்தான். ” Life is not a business to crosscheck..… “, என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான் முகிலன் .
” Life is a business deal”, என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான் மதுசூதனன்.
“நான் நினைத்த படி என் திட்டம் நிறைவேறுமா? காலையில் நான் பேசியதை அந்த பெண் சரியாக புரிந்து கொண்டிருப்பாளா?” , என்று யோசனையோடு மதுசூதனன் படுத்திருக்க, நித்யா மதுசூதனனை பற்றி சிந்தித்து கொண்டிருந்தாள். ” மதுசூதனன் கூறியதை அம்மாவிடம் சொல்லலாமா ? ” , என்று சிந்தித்து மணியை பார்த்தாள்.
மணி இரவு 12:15
” அம்மா.. ” , என்றழைத்தாள் நித்யா.. “ம்… சொல்லு… ” , என்று பத்மா கூற, “தூங்கலியா?” , என்று நித்யா கேட்டாள்.
“இல்ல நித்யா.. சந்தோஷத்துல தூக்கமே வரலை…. எவ்வளவு பெரிய இடம்…. மாப்பிளை சூப்பரா இருக்காரு… நீ கொடுத்து வச்சவ… கல்யாணம் எந்த தடங்கலும் இல்லாமல் நல்ல படியே முடியனும்.. அதை தான் அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்குறேன்..” என்று சந்தோஷமாக புரண்டு படுத்த படியே கூறினார் பத்மா…
“நீ தூங்கலியா ? எதுக்கு என்னை கூப்பிட்ட? ” , என்று வினவ, ” தாயின் சந்தோஷத்தை கலைக்க விரும்பாதவளாக … ஒண்ணுமில்லை அம்மா.. தூங்கறேன்…. குட் நைட்… ” , என்று கூறிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் நித்யா. எங்கும் இருட்டாய் காட்சி அளித்தது.
” என் வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது ?” , என்ற கேள்வி நித்யாவின் மனதில் பூதகரமாய் எழுந்ததது.
கட்டங்கள் நீளும்….
அகிலா கண்ணன்