Konjam vanjam kondenadi – 18

Konjam vanjam kondenadi – 18

சவால்

குரு மீசையை நீவி கொண்டு, “தெரிஞ்சிதுன்னா” என்று கேட்ட தோரணையில் ஷிவானிக்கு கிலி பற்றி கொண்டது.

இருப்பினும் தைரியத்தை வரவழைத்து கொண்டவள், “ஹ்ம்ம்… உங்களை ஒருவழி பண்ணிடுவாரு” என்று சற்று பதட்டமாகவே அவள் சொல்ல,

“ஆமா ஆமா பண்ணிடுவாக… என் மாமன் வேற கறிவேப்பிலை கொத்தாட்டும் ஒண்ணே ஒண்ணு கண்ணே  கண்ணுன்னில்ல பெத்து வைச்சிருக்காக… இந்த விஷயம் மட்டும் அவகளுக்கு தெரிஞ்சிதுன்னா  பிபி எகிறிடும்… மனுஷன் பார்க்க இளமையா இருந்தாலும் வயசு வேற ஆகிடுச்சு பாரு” என்று கேலியாய் நகைத்து கொண்டே கூறவும் அவள் முகம் சுணங்கியது.

“என் டேடுக்கு ஒண்ணும் அவ்வளவு வயசெல்லாம் ஆகல… ஹீ இஸ் ஜஸ்ட் பாஃர்ட்டி டூ 42”  என்றவள் சிறுபிள்ளைத்தனமாய் சொல்லவும் அவனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

சத்தமாய் சிரித்தவன், “ஆமா ஆமா… ஜஸ்ட் பாஃர்ட் டூ” என்க,

“இப்ப சிரிக்கிறளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன்” என்று கேட்டு அவனை முறைத்தாள்.

“நீ குழந்தைத்தனமா இப்படி பேசிறதை கேட்கையில தன்னால சிரிப்பு வருது… நான் என்னல பண்ண?!” என்று கேட்டு பாவம் போல் அவன் முகத்தை வைத்து கொள்ள,

“நான் குழந்தைத்தனமா பேசிறனா?” என்றவள் அவனை பார்வையால் அளவெடுத்தாள்.

“அப்படிதான் பேசிறீக… ஆனா அதுவும் அழகாதாம்ல இருக்கு” என்று சொல்லியவன் குறும்பாய் அவளை பார்த்து புன்னகையிக்க, அவளுக்கு எரிச்சல் மூண்டது.

“நான் எவ்வளவு ஸுர்யஸா பேசிட்டிருக்கேன்… நீங்க என்னடான்னா  காமெடி பன்னிட்டிருக்கீங்களா… உங்ககிட்ட போய் பேசின பாருங்க… என்னை சொல்லனும்” என்று சொல்லிக் கொண்டே அவள் அங்கிருந்து செல்ல பார்க்க,

குரு அவளை வழிமறித்து வாசலில் தன் கரத்தை வைத்து தடுப்பணை போட்டான்.

“வழி விடுங்க… நான் போகனும்” என்று அவள் பதட்டம் கொள்ள,

“இருல… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான்.

“எனக்கு உங்ககிட்ட எதுவும் பேச வேண்டாம்… நான் உங்க மேல எவ்வளவு மரியாதை வைச்சிருந்தேன்… நீங்க எல்லாத்தையும் ஒரே நொடியில கெடுத்துக்கிட்டீங்க” என்று ஆதங்கத்தோடு பொறுமினாள்.

“அப்படி என்னல பண்ணிட்டேன் உன்னை” என்றவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கேட்க,

அவள் முகம் கோபத்தால் சிவந்தது. அவனை எரித்துவிடுவது போல் அவள் பார்த்து கொண்டு நிற்க அவன் துணுக்குற்று,

“ஒரே ஒரு முத்தம்தானேல கொடுத்தேன்…அதுக்கு ஏம்ல இப்படி முறைக்க” என்றவன் பார்வையில் அத்தனை அலட்சியம்.

“ஒரே ஒரு முத்தமா?!… ஏன்?  முன்ன பின்னே நிறைய கொடுத்திருக்கீகளோ?!” சந்தேகத் தொனியோடு கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“இல்லயா பின்ன… என் அக்கா பசங்களுக்கெல்லாம் எம்புட்டு கொடுத்திருப்பேன்…

உன்னையும் சேர்த்ததுதான்” என்றவன் சொன்ன மறுகணம்

அவனை பார்த்து அவள் விழிகளை இரண்டுமடங்காக விரிந்தது.

“எதுக்குடி சும்மா கண்ணை அந்த உருட்டு உருட்டிறவ… குழந்தையல கொடுத்ததை சொன்னேனாக்கும்” என்று தெளிவுப்படுத்தினான்.

“குழந்தையில கொடுக்கிறதும் நீங்க இப்ப கொடுக்கிறதும் ஒண்ணா”

“அதெப்படி ஒண்ணாகும்… அப்போ கொடுத்தது பாசத்தால… இப்போ கொடுத்தது ஆசையில” என்றவன்  குறும்பத்தனமாய் அவளை பார்த்து கண்ணடிக்க, அவள் மனம்  ஊசலாடியது.

சட்டென்று சுதாரித்து கொண்டவள்,

“இந்த வேலையெல்லாம் மத்த அக்கா பொண்ணுங்கிட்ட வைச்சிக்கோங்க… என்கிட்ட வேண்டாம்” என்று எச்சரிக்க,

அவளை பார்த்து கோபமாய் முறைத்தவன், “கூறுக்கெட்டத்தனமா பேசாதீக… உன்கிட்டதாம்ல நான் இப்படியெல்லாம் விளையாட முடியும்… நீதானல என் பெண்ஜாதி ஆகப்போறவ” என்று உரைக்க அவள் சலிப்பு தட்டிய பாவனையில்

“அய்யோ மாம்ஸ்… ஏன் புரிஞ்சிக்க மாட்டிறீங்க… நான்தான் திரும்ப திரும்ப சொல்றேன்ல… நீங்க நினைக்கிறது நடக்கவே நடக்காதுன்னு” என்று கூற அவன் சீற்றமானான்.

“ஏம்ல நடக்காது?”

“ஏன்னா என் டேடை யாரை கை காட்டிறாரோ அவரைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்… அவருக்கு பிடிக்காதவங்க யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றவள் அழுத்தம் திருத்தமாய் தெரிவிக்க

“உங்க அப்பாவுக்கு என்னைய பிடிக்காதுன்னு சூசகமா சொல்லுதீக… அப்படிதானே ல?” என்று முறைப்பாய் கேட்டான்.

“புரிஞ்சா சரி” அவள் அலட்சியமாய் உரைக்க,

“எனக்கு கூடதான் உங்க அப்பாரை பிடிக்கல… எங்க அக்காவை கட்டின நாள்ல இருந்து… பிடிக்கல… அதுக்காக… உன் மேல இருக்கிற உரிமையை விட்டு கொடுத்திற சொல்லுதீகளா? அதெல்லாம் முடியாது…”

“உங்க லிஸ்ட்லதான் நிறைய பேர் இருக்காங்க இல்ல… என்னை ஏன் போட்டு இப்படி டார்ச்சர் பன்றீங்க”

“எனக்கு நீதான்டி வேணும்… உன்னைய கட்டிக்கிடதான் நான் இம்புட்டு நாளா காத்துகிடக்கேன்” அவன் இப்படி சொல்லவும்

“என்ன?” என்று கேட்டு அதிர்ச்சியானாள் ஷிவானி.

“நீ பிறந்ததில இருந்து அப்பத்தா என்கிட்ட ஷிவானி உனக்குதான்னு சொல்லி சொல்லிதான் வளர்த்தாக… சின்ன வயசில இருந்து எனக்குள்ளர ஆழாம பதிஞ்சி போன எண்ணம்ல அது… அதெல்லாம் சட்டுன்னு மாத்திக்கிட முடியாது…

நீ எங்கன இருந்தாலும்  உன் நினைப்பு என்னவோ எனக்குள்ள இருந்துக்கிடுதான் இருந்துச்சு… உன்னைய பார்த்திட மாட்டோம்னு எம்புட்டு நாள் ஏங்கிட்டு கிடந்திருக்கேன் தெரியுமால உனக்கு” என்றவன் சற்று கோபமாகவே சொல்ல  ஆச்சர்ய மேலிட பார்த்திருந்தவளுக்கு இந்த வார்த்தைகளை எங்கனம் நம்புவதென்று புரியவில்லை.

அவனே மேலும் , “அக்கா உன் நிச்சய பத்திரிக்கையை என்கிட்ட நீட்டினதும் என் மனசே அப்படியே சுக்குநூறு உடைஞ்சி போச்சு” என்க, அவள் கேள்வி குறியோடு அவனை ஏறிட்டவள்,

“நீங்க சொல்றதுல லாஜிக்கே இல்லயே மாம்ஸ்… நான் இங்க வராம மலேசியாவிலயே இருந்திருந்தா… இல்ல அங்கயே எனக்கு கல்யாணம் ஆயிருந்தா… அப்போ நீங்க என்ன பண்ணியிருப்பீங்க?”

“ஆனா அப்படி எல்லாம் நடக்கல இல்ல…  நடக்கவும் நடக்காது… எங்க குலசாமி கருங்குளத்து ஐயனார் அப்படி ஒண்ணும் என்னைய கை விட்டுட மாட்டரு…  இல்லன்னா உன் நிச்சயம் தானா நின்னிருக்குமாவே… இல்ல நீதான் இங்கன வந்திருப்பியா?” என்றவன் சொல்ல,

புருவங்களை உயர்த்தியவள், “கருங்குளத்து ஐயனாரா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்” என்றான்.

சற்று முன்பு தாய விளையாட்டில்  நிகழ்வுகளை  எண்ணி அவள் அப்போது சிரித்துவிட அவன் ஆழமான பார்வையோடு,

“ஏம்ல சிரிக்க… நான் சொன்னதில நம்பிக்கையில்லையோ?” என்று கேட்டான்.

“சேச்சே… நானும் பிலீவ் பன்றேன்” என்று சொன்னவள் அவனை ஆழ்ந்து பார்த்து,

“என்னை நீங்க கட்டிக்கிறன்னு சொல்லும் போதெல்லாம் ஏதோ கோபத்தில சொல்றீங்களோன்னு நினைச்சேன்… ஆனா நீங்க இவ்வளவு ஸ்டிராங்கா அந்த எண்ணத்தை மனசில வைச்சிருப்பீங்கன்னு நான் சத்தியமா நினைக்கல மாம்ஸ்… ஆனா இப்பவும் சொல்றேன்… எங்க டேட் யாரை கை காட்டி கட்டிக்க சொல்றாரோ அவங்களதான் நான் கட்டிப்பேன்… அதை மாத்த அந்த கருங்குளத்தூர் ஐயனாரனாலயும் முடியாது” என்றவள் தீர்க்கமாய் சொல்லி முடிக்க அவளை ஆச்சர்யமாய் பார்த்திருந்தான் குரு.

அவன் சற்று நிதானித்து, “சரில… அம்புட்டு நம்பிக்கை இருந்தா நீ இங்கன என் கூட முழுசா ஒரு வாரம் தங்கிட்டு போ” என்றான்.

“தங்கினா” அவள் புருவங்கள் சுருங்க கேட்க,

“உன் மனசை நான் மாத்திக்காட்டுதேன்” என்றான் அழுத்தமாக!

“மாறலன்னா?” அவளும் சற்றும் விட்டு கொடுக்காமல் கேட்க,

“நான் என் மனசை மாத்திகிடுதேன்” என்று முடிவாய் உரைத்தான்.

அவனை யோசனையோடு சில நொடிகள் பார்த்தவள்,

“நிஜமா சொல்றீங்களா… இல்ல இதுல எதாச்சும் உள்குத்து இருக்கா?” என்று அவனை சந்தேகித்து அவள் பார்க்க,

“இந்த குரு சொன்னா சொன்னதுதாம்ல… மாத்தி பேசிற பழக்கமெல்லாம் எனக்கில்ல” என்றான் தீர்க்கமாக!

“அப்படின்னா சரி… நானும் இந்த சேலஞ்சை அக்ஸெப்க்ட் பண்ணிக்கிறேன்… அன் உங்களை நோஸ் கட் பண்ணிட்டுதான் நான் மலேசியாவுக்கு ப்ளையிட் ஏறுவேன்” என்றவள் நிமிர்வாய் சொல்ல, அவளை வியப்பாய் பார்த்தவன்

“முடிஞ்சா செய்யுவே… பார்ப்போம்” என்று இறுக்கமான பார்வையாடு உரைத்துவிட்டு அவளுக்கு வழிவிட்டபடி தன் கரத்தை எடுத்து கொள்ள அவள் அங்கிருந்து அகன்றாள்.

அவள் செல்வதையே பார்த்தவன்,

‘அதானே பார்த்தேன்… என் மாமனோட திமிரு உனக்கு பாதியாச்சும் இருக்க வேணாமா…

ஆனா அதுக்கெல்லாம் இந்த குரு மசிய மாட்டான் ஷிவானி… உன்னைய கட்டி என் மாமனோட திமிரை அடக்குவேன்’ என்றவன் எண்ணிமிட்டு கொண்டே முகப்பறை நோக்கி நடந்து வர,

அதற்கு முன்னமே ஷிவானி அங்கே வந்திருந்தாள்.

“எங்கே போயிருந்த வாணிம்மா?” என்று எல்லோர் முன்னிலையிலும் வேதா கேட்க,

“மாம்ஸ் கூட பேசிட்டிருந்தேன்” என்று வெகுசாதாரணமாய் பதிலளித்தாள்.

அந்த பதில்அங்கிருந்த எல்லோர் மனதிலும் பலவிதமான எண்ணங்களை தோற்றுவித்தது.

ஐஸ்ஸும் ராகினும் தீய்ந்து கருகியிருந்தனர்.

தங்கத்திற்கு மனம் ஏதேதோ இன்பகரமான கற்பனைக்குள் பயணித்தது. அதே நேரம் வேதாவிற்கு தன் கணவனின் வார்த்தைகள் நினைவு வந்து கிலி பற்றி கொள்ள, கனகத்தின் மனம் இதனை ஏற்று கொள்ள முடியாமல் சஞ்சலப்பட்டது.

ராகினியை எப்படியாவது சிவகுருவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அவரின் வெகுநாளைய ஆசைக்கு ஷிவானி தடைக்கல்லாய் மாறிவிடுவாளோ என்ற பயம் எழுந்தது.

அதனை பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றவர் தமக்கை தனிமையில் சிக்கும் வரை காத்திருந்து தன் எண்ணத்தை அவரிடம் வெளியிட்டார்.

“ஷிவானிக்கு குருவை கட்டி வைக்கிற மாதிரி ஏதாச்சும் எண்ணம் இருக்காக்கா உனக்கு?” என்று வேதாவிடம் கனகம் தட்டுத்தடுமாறி கேட்க,

“என்ன பேசிற கனகம்? என் வீட்டுக்காரை பத்தி தெரியாதா உனக்கு… அவரு எப்படி?” என்று பதறினார் வேதா.

“அதானே பார்த்தேன்… மாமாவோடு வீம்பு பத்திதான் இந்த ஊருக்கே தெரியுமே”

“ஆமா… அவர் கண்டிப்பா சம்மதிக்க மாட்டாரு” என்று சொல்லி வேதா ஆதங்கப்பட,

“எப்படி சம்மதிப்பாரு? அவருக்குதான் நம்ம குடும்பத்தை கண்டாலே பிடிக்காதே… ஆனா நம்ம ஷிவானி பொண்ணு தம்பிக்கிட்ட பழகிறதை பார்த்தா” என்றவர் திக்கி திணறியபடி வார்த்தைகளை மென்று விழுங்க,

“என்ன சொல்ல வர்ற இப்போ” என்று பளிச்சென்று தன் தங்கையை பார்த்து கேட்டார் வேதா.

“அவளை கொஞ்சம் பார்த்து பழக சொல்லு… ஏதாச்சும் வம்பு வந்திருச்சுன்னா… அப்புறம் உனக்குதான் கஷ்டம்” என்றதும் வேதாவின் முகம் இருளடர்ந்து போனது.

“ஷிவானி எல்லோர்கிட்டயும் சகஜமா பழகுவா கனகம்… ஆனா அவ அந்த மாதிரியெல்லாம் யோசிக்க கூட மாட்டா… நீ பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்னு வார்த்தையை விடாதே… சொல்லிட்டேன்” என்று வேதா சற்று கண்டிப்பாகவே உரைக்க,

“அய்யோ அக்கா… கோச்சிக்காதீங்க… நான் ஷிவானியை பத்தி தப்பா எல்லாம் எதுவும் சொல்லல… நம்ம தம்பிதான் ஏதோ கோபத்தில ஷிவானியை கட்டிக்கிறன்னு ஒரு வார்த்தை சொல்லுச்சாமே… அதனாலதான்”

“ஆமா சொன்னா… ஆனா அதுக்கும் ஷிவானிக்கும் எந்த சம்பந்தமுமில்ல”

“அது எனக்கும் தெரியும் க்கா… அதனாலதான் சொல்றேன்… தம்பி மனசில அப்படி ஒரு எண்ணம் இருக்கும் போது ஷிவானி கொஞ்சம் எட்டி நின்னு பழகிறதுதான் நல்லது… ஏன் சொல்றேன்னா” என்று இழுத்தவர் மேலும்,

“தம்பிக்கு நான் ராகினியை பேசி முடிக்கலம்னு இருக்கேன்… அவளுக்கும் அடுத்த வருஷம் காலேஜ் முடிஞ்சிரும்” என்று தன் எண்ணத்தை முழுதாய் வெளிப்படுத்த வேதாவால் எதுவும் பேசமுடியவில்லை.

அவர் அமைதியாகிட கனகமோ தான் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்ட திருப்தியில் நிம்மதி பெருமூச்சுவிட்டு கொண்டார்.

ஆனால் வேதாவின் நிம்மதி பறி போனது. கனகத்தின் வார்த்தைகளால் குழம்பியவர் அறைக்குள் அமர்ந்து தனியே யோசித்திருக்க,

ஷிவானி அப்போது உள்ளே நுழைந்தாள்.

அவர் அவளை அருகில் அழைக்க,

“என்ன மீ?” என்று வினவினாள்.

“அப்பாவுக்கு போஃன் பண்ணி நம்ம கிளம்பி வரோம்னு சொன்னியா?”

“இல்லையே”

“ஏன்?”

“வேண்டாம்… நம்ம ஒன்வீக் இங்கேயே இருந்துட்டே போலாம்” என்றவள் இயல்பாய் சொல்ல அதிர்ச்சியாய் பார்த்தவர்,

“காலையில போகலாம்னு சொன்ன… இப்ப என்னாச்சு?” என்று குழப்பமுற கேட்டார் வேதா.

“அது… காலையில கொஞ்சம் அப்ஸெட்டா இருந்தேன்… பட் இப்ப ஓகே”

“சிவா உன்கிட்ட ஏதாவது பேசினானா?!” நேரடியாய் அவர் கேட்க, ஷிவானி தயங்கிய பார்வை பார்த்தாள்.

எதை சொல்வது எப்படி சொல்வது என்றவள் யோசித்தபடி நிற்க, “ஏன் இவ்வளவு யோசிக்கிற ?” என்று மகளை அவர் சந்தேகமாய் பார்க்க,

“நத்திங் மீ… ஜஸ்ட் நார்மலாதான் பேசிக்கிட்டோம்” என்று அந்த பிரச்சனையை அதோடு முடிக்க முற்ப்பட்டாள்.

“நீ நார்மலா பேசியிருக்கலாம்… ஆனா பார்க்கிறவங்க கண்ணுக்கு அப்படி தெரியாமாட்டேங்குதே வாணிம்மா” அவர் கோபம் கலந்த  பார்வையோடு அவளை பார்க்க,

“எனக்கு புரியல மீ… இப்ப என்ன சொல் வர்றீங்க”

“ஞாபகம் இருக்கா… ஒருதடவை நீ அந்த கெவின்கிட்ட பழகினதை பார்த்து மோகன் தப்பா நினைக்கல”

“ப்ச்… அவன் ஒரு இடியட் மீ” என்று  கடுப்படித்தாள்.

“மத்தவங்க மேல குறை சொல்றதை நிறுத்திட்டு உன்கிட்ட இருக்க தப்பென்னன்னு பாரு வாணிம்மா” அவர் இறுக்கமாக சொல்ல,

“என்கிட்ட என்ன தப்பு?”  அவள் புரியாமல் கேட்டாள்.

“நீ கொஞ்சம் வரைமுறை இல்லாம பழகிற வாணிம்மா… அதான் தப்பு… வயசு மட்டும் ஏறிடுச்சு… அந்தளவுக்கு உனக்கு மெச்சுரிட்டி இல்ல”

இந்த வார்த்தைகளை கேட்டு ஷிவானிக்கு அதிர்ந்தது.

“திஸ் இஸ் டூ மச் மீ… நான்  யார்கிட்டயும் வரைமுறை இல்லாம பழகினதில்ல… அன் ஐ நோ மை லிமிட்ஸ்” என்றவள் தாளாமல் குரலை உயர்த்தி கத்திவிட,

“இப்ப எதுக்குடி கத்திற… வெளியே எல்லோருக்கும் கேட்க போகுது” என்று வேதா அவளை அடக்க வெளியே இருப்பவர்களுக்கு அவர்களின் சத்தம் கிட்டத்தட்ட  கேட்டுவிட்டது.

ஷிவானி அப்போதும் அமைதியுறாமல், “கேட்கட்டும்… ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்” என்றாள்.

தங்கம் பதட்டமாக, “என்னல நடக்குது… ஏன் சிவானி கோபமா பேசுதா” என்று குருவை கேட்க,

“ப்ச்… அம்மையும் பொண்ணும் ஏதோ பேசிக்கிடுதாங்க… உனக்கெதுக்கு அதெல்லாம்… போய் உன் ஸோலியை பாரு ம்மா” என்றான்.

ஆனால் அதற்கு பிறகு அவனுக்கே அவர்களின் வாக்குவாதம் ஏதோ நெருடலாய் உணர அவர்கள் அறையை நோக்கி சென்றான்.

அப்போது ஷிவானி கோபத்தில் கையில் கிடைத்த ஹேர் ஸ்ப்ரே பாட்டிலை தூக்கி வீசிவிட அது வேதா நெற்றியில் இடித்து தரையை தொட்டது.

வேதா தலையை பிடித்து கொள்ள ஷிவானியே இதை எதிர்ப்பார்க்கவில்லை.

குரு அந்த காட்சியை பார்த்து பதறியபடி  உள்ளே நுழைந்தவன் வேதாவின் நெற்றியை பிடித்து, “என்னாச்சு க்கா” என்று வினவ,

“ஒண்ணுமில்ல சிவா… லேசாதான்” என்று சொல்லி படுக்கையில் அமர்ந்து கொண்டார்.

“சாரி மீ” என்று ஷிவானி நெருங்க,

குரு உக்கிரமாய், “உன்னை” என்று அவளிடம் கை ஓங்கி கொண்டு போக வேதா பதறியபடி, “ஷிவா வேணா அவ தெரியாமதான்” என்று சொல்ல அவன் சட்டென்று தன் கரத்தை இறக்கினான்.

ஷிவானி மிரண்டு நிற்க,

“தெரியாம கூட இப்படி எல்லாம் பண்ணுவாங்களா? அப்படி என்னல கோபம் உனக்கு… கையில கிடைச்சதை தூக்கி அடிக்கிறளவுக்கு… எங்கேயாச்சும் ஏடா கூடாம பட்டிருந்தா” என்றவன் அவள் மீதும் கோபமாய் பொறிந்து தள்ள,

“இல்ல மாம்ஸ் நான் தெரியாமதான்” என்று கண்கலங்கினாள்.

“பேசாதல… வர கோபத்தில அடிச்சி கிடிச்சிட போறேன்” என்றவன் சொல்ல அவள் முகமெல்லாம் சிவந்து போனது.

அவள் அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறி விட, வேதாவிற்கு மகளை எண்ணி மனம் கலங்கி போனது.

எல்லோருமே குருவின் சத்தத்தால் அறைவாசலில் சூழ்ந்து ஷிவானியை குற்றவாளி போல பார்க்க அவள் அவர்கள் யாரையும் கவனியாமல் விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.

“வாணி பாவம் சிவா… அழுதிட்டே போறா” என்று வேதா சொல்ல குரு அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் தமக்கையின் நெற்றியின் வீக்கத்தை பார்த்துவிட்டு திரும்ப,

கனகமும் அங்கே நின்று என்னவோ ஏதோ என்று பதட்டப்பட்டாள்.

“ஒண்ணுமில்ல க்கா… லேசா வீங்கிடுச்சு” என்றான்.

“உப்பில மஞ்சள் இழைச்சு வைச்சா சரியாயிடும் சிவா… நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று கனகம் விரைவாய் சென்றுவிட,

வேதா குருவின் பதட்டத்தையும் அக்கறையும் பார்த்து நெகிழ்ந்து,

“நீ கொஞ்சங் கூட மாறவே இல்ல சிவா” என்றார்.

அவன் கலங்கிய விழிகளோடு, “ஆனா நீங்க மாறிட்டீக… என்னைய சுத்தமா மறந்திட்டீக” என்று காயப்பட்ட உணர்வோடு சொல்லியவன்,

கனகம் மஞ்சள் கிண்ணத்தோடு நுழையவும் அவன் விடுவிடுவென வெளியேறிவிட்டான்.

தம்பியின் இந்த அளவில்லாத கோபமும் பாசமும் வேதாவின் மனதை வேதனைப்படுத்த அவனை சமாதானம் செய்யவே முடியாதோ என்ற ஒருவித நம்பிக்கையின்மையோடு ஏக்கமாய் பெருமூச்செறிந்தார்.

குரு அறைக்குள் இருந்து வெளியே வந்த மறுகணம் அவன் மனம் ஷிவானியை தேட அவள் அங்கே இல்லை.

உடனடியாய் வீட்டை சுற்றிலும் அவன் அவளை அலைந்து தேடி பார்க்க அவளோ அவன் கண்ணில் அகப்படவேயில்லை.

ராகினியிடமும் ஐஸ்ஸிடமும் அவன் ஷிவானியை பற்றி விசாரிக்க அவர்கள் அசட்டையாய் தெரியாது என்று பதிலளித்தனர்.

பின் அவன் தங்கத்திடம், “ம்மா ஷிவானியை பார்த்தீகளா?” என்று வினவ,

“நான் பார்க்கலயே” என்று சொன்னவர் அவனிடம் என்ன ஏதேன்று விசாரித்து விஷயத்தை அறிந்து கொண்ட பின் குருவிடம் கோபமாக,

“இருந்தாலும் உனக்கு இம்புட்டு கோபம் ஆகாதுவே… ஏதோ அந்த புள்ள தெரியாம செஞ்சிருக்கும்… அதுக்கு போய்” என்றவர் அவனை தொடர்ச்சியாய் திட்ட,

“ம்மோவ்… போதும் நிறுத்திருகீளா… இப்ப நான் அவள தேடவா… இல்ல நீங்க சாடிறதை கேடக்கவா?” என்றான்.

“விரசா தேடுல… உங்க ஐயனுக்கு மட்டும் இந்த விசயம் தெரிஞ்சிது உம்மை முகரையை பேத்திருவாக” என்று விடாமல் அவனை கடிந்து கொண்டிருந்தார்.

குரு அவர் பேசுவதை கவனியாமல் மீண்டும் வீட்டை சுற்றி தேட அப்போது ராகினியின் தங்கை விஷாலினி முன் வந்து,

“மாமா… அக்கா வெளிவாசல் பக்கம்தான் போனாங்க… நான் பார்த்தேன்” என்றாள்.

குரு பதட்டமாகி,

‘வெளியே எங்க போயிருப்பா?’ என்ற கேள்வியோடு வெளிப்புற வாசல் நோக்கி நடந்தான்.

error: Content is protected !!