Naan Aval Illai 14

Naan Aval Illai 14

வக்கிரம்
மீண்டும் அவளை பார்ப்பான் என்று அவன் கனவிலும் எண்ணிக் கொண்டதில்லை. 
அவளை பார்த்த அதிர்ச்சி அவனுக்கு அடங்கவேயில்லை. 
இறந்துவிட்டவள் எப்படி உயரோடு ? இந்த கேள்வி அவன் மூளையை குடைய ஆரம்பித்தது.
தான் பார்த்தவள் அவளாக இருக்காது என்று சமாதனமடைய பார்க்கிறான். ஆனால் அவனால் அது முடியவில்லையே.
ஏதேதோ புரியாத கற்பனைகள்  அவனை அலைகழிக்க, உடலெல்லாம் வியர்த்து கொட்டி நனைந்திருந்தது.
அறைக்குள் வந்த வேகத்தில் பேஃனை கூட போடவில்லை. அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால் புழுக்கம் அந்த அறையில் இல்லை. அவன் மனதில்.
சாக்ஷியின் மீதான வெறுப்பினால் ஏற்பட்ட புழுக்கமா அல்லது அவளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் உண்டான புழுக்கமா ? 
கிட்டதட்ட இரண்டுமேதான் அவனுக்கு.
மீண்டும் பழைய நினைவுகள் எல்லாம் வரிசைகட்டி நின்று அவனை வாட்டிவதைத்தன. 
வேந்தன் தன் மனதளவிலான புழுக்கத்தை போக்கிக் கொள்ள தன் பேகிலிருந்த சிகரெட் பேக்கட்டை எடுத்தான்.
அவள் மேல உண்டான ஈர்ப்பு, அடங்காத தவிப்பும், அதன் காரணத்தால் அவள் மீது மலையென வளர்ந்து நின்ற வெறுப்பும் என எல்லாவற்றையும் அடக்கி கொள்ள வேண்டுமே!
அவரவர்களின் உணர்வுகள் தம் எல்லையை மீறும் போது ஒருவித போதை தேவைப்படுகிறது.
அந்த சிகரெட்டின் புகையை இழுத்தால் அவன் மனம் நிதானமடையும் என்று நம்பினான். 
ஆனால் அறைக்குள் இருந்து கொண்டு புகைத்தால் வெளியே இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமே.
யோசித்தவன் தன் குளியலறைக்குள் சென்று கதவை தாளிட்டு சிகரெட்டை பற்ற வைத்தான். 
அவன் புகையை இழுக்க அதில் கனன்று கொண்டிருந்த தீ போலவே அவன் மனதிலும் எரிந்து கொண்டிருந்தது.
அவனுக்குள் அத்தகைய் தீயை முட்டியவள் அவள்தான்.
சாக்ஷியின் முகத்தை இன்றளவும் அவனால் மறக்க முடியவில்லை. அந்த முகம் முதல் பார்வையிலயே அவனை கவர்ந்துவிட்டது. 
மகிழ் சாக்ஷியை பார்ப்பதற்கு முன்னதாகவே அவன் அவளை பார்த்திராமல் இருந்திருந்தால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
கிட்டத்தட்ட ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பான ஓர் மழைக்காலம்.
தன் நண்பன் காதலித்த பெண்ணை அவர்கள் குடும்பத்தாருக்கு தெரியாமல் அவனோடு திருமணம் செய்விக்க உதவியாய் வேந்தனும் அவன் நண்பர்களும் கோவிலிற்கு வந்திருந்தனர். 
இதிலெல்லாம் வேந்தனுக்கு விருப்பம் இல்லையெனினும் நண்பனுக்காக வந்திருந்தான்.
எல்லா ஏற்பாடுகளும் நடைப்பெற்றிருக்க கோவில் அலுவலகத்தில் பேசி ஏற்பாடுகள் செய்துவிட்டு வேந்தனும் அவன் நண்பர்களும் வெளியே வந்தனர்.
“மச்சான் எல்லாம் ஓகே… கல்யாணம் கன்பாஃர்ம்… இனிமே செம ஜாலிதான்டா” என்று ஒருவன் மாப்பிள்ளை  கோலத்தில் இருப்பவனை பார்த்து கேலியாய் சிரிக்க,
வேந்தன் அலட்சிய பாவனையோடு “ஜாலியா?  ஆயுள் தண்டனை மச்சி” என்றதும் எல்லோரும் அவன் சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினார்.
அப்போது அவர்களின் சிரிப்பின் ஓலியை கடந்துவந்து நுழைந்த வீணை நாதம் எல்லோரின் கவனத்தையும் நொடியில் காந்தமாய் இழுத்தது.
அந்த இசை வந்த திசை நோக்கி முதலில் முன்னேறி சென்றது வேந்தன்தான்.
கோவிலில் நவராத்திரி பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி.
அங்கிருந்த சிறு குழந்தைகளின் பாட்டு கச்சேரி முடிந்த பின் அவள் தன் வீணையை மீட்டத் தொடங்கினாள்.
அவளின் வாசிப்பில் கிறங்கி வேந்தன் உட்பட அங்கிருந்த எல்லோரும்  மெய்மறந்து  நின்றுவிட்டனர்.
அவளின் வீணை நாதம் நாடி நரம்புகளின் வழியே எல்லோரின் உணர்வுகளுக்குள்ளும் ஊடுருவிற்று என்றே சொல்ல வேண்டும். 
ஆனால் வேந்தன் அவள் வீணை நாதத்தில் மட்டும் லயித்திருக்கவில்லை. அவள் மீதே லயித்திருந்தான்.
பதினேழு பதினெட்டு வயதென்று சொன்னது அவளின் இளம் வதனம். ஆனால் அவள் உடலமைப்போ அந்த வயதை கடந்த முதிர்ச்சி. 
பாவடை தவாணிக்கே உரித்தான ஓர் அழுகு. அது அவளின் அழகை இன்னும் மெருகேற்றி இருக்க, அவள் செவியோடு அசைந்தாடும் சிறு தோடும் சீரான புருவத்தின் மத்திய புள்ளியில் முழுசந்திரனாய் ஒளிவீசிய பொட்டும் என பெண்மைக்கே உண்டான தெவிட்டாத அவளின் அழகை பார்வையாலயே அள்ளி பருகி கொண்டிருந்தான்.
அவன் பார்வையும் எண்ணமும் எங்கெங்கோ தம் எல்லையை கடந்து பயணிக்க அவளோ ஏதுமறியாமல்  விழிமூடி அந்த இசையோடு இயைந்திருந்தாள். ஏன் ? வாழ்ந்திருந்தால் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவள் விரல்களால் வீணையை மீட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அது இயற்க்கைக்கும் கூட உயிரூட்டிவிட்டது போலும்.
அப்போது வான்மேகங்கள் திரண்டி மழைமாரி பொழிய தொடங்கியது.
அங்கே நின்றிருந்த கூட்டமெல்லாம் அவசர அவசரமாய் கலைந்து ஓடினர் வேந்தனை தவிர.
ஆனால் அவன் நண்பர்கள் வலுக்கட்டாயமாய் அவனையும் கோவில் மண்டபத்திற்குள் இழுத்துச் செல்ல, உள்ளே சென்றதும் கோபமாய் 
“இப்ப எதுக்குடா என்னை இழுத்துட்டு வந்தீங்க” என்று முறைத்தான்.
“மழை பெஞ்சிட்டிருக்குடா…  நீ பாட்டுக்கு நின்னுட்டிருந்த… அதான்”
அவன் எரிச்சலாய் பார்த்துவிட்டு அவள் வருவாளா என்று பார்வையை திருப்பிக் கொண்டு எதிர்பார்த்திருந்தான். 
மழை நின்றதால் அந்த மண்டபத்தில் குவிந்திருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்த சமயம் மணப்பெண்ணும் தன் இரு தோழிகளோடு வந்துவிட்டிருந்தாள். 
உடனடியாக கல்யாண ஏற்பாடுகள் நிகழ நண்பர்களில் ஒருவன் மாப்பிள்ளை கோலத்தில் நின்றவனை நோக்கி  “டே… ஊற வைச்ச அரசி சாப்பிட்டா கல்யாணத்தின் போது மழை பெய்யுமாமே… நீ சாப்பிட்டியா மச்சான்” என்று கேட்க,
“இப்ப ரொம்ப முக்கியம்…  நானே டென்ஷன்ல இருக்கேன்… இவ வீட்டில இருந்து  யாராவது வந்து தொலைச்சிட்டா”
“எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்” என்று அவன் நண்பர்கள் சிரிக்க, 
“நல்ல ப்ரண்ட்ஸ்…” என்று அலுத்துக் கொண்டான்.
அதற்குள் ஐயர் தாலியை சுவாமி பாதத்தில் பூஜை செய்து எடுத்துவந்து நீட்டவும், மாப்பிள்ளை அவசரம் அவசரமாய் தாலியை கட்டினால் போதுமென மணப்பெண் கழுத்தில் கட்டிவிட்டான்.
அவர்கள் எல்லோரும் திருமணம் நிகழ்ந்த சந்தோஷத்தில் ஆரவாரித்து கொண்டிருந்தனர்.
வேந்தன் மட்டும் இவையெதிலும் கலந்து கொள்ளாமல் தனிமையை பட்டு நின்றான்.
அவர்கள் எல்லோரும் கோவிலை சுற்றுவதற்கு செல்ல வேந்தனும் ஏதோ சிந்தனையில் அவர்கள் பின்னோடு போக, சாக்ஷி அப்போது அந்த கருவறை மண்டபத்திற்குள் நுழைந்தாள்.
வேந்தன் அவளை பார்த்துவிட்ட ஆனந்தத்தில் தன் நண்பர்களோடு செல்லாமல் தூரமாய் நின்று அவளை ரசித்திருந்தான்.
அப்போதுதான் கவனித்தான். அவன் கரத்திலிருந்த ஸ்டிக்கை. 
அது பார்வையற்றவர்கள் உபயோகிப்பது.
அதோடு அவள்  நடந்து வந்த விதத்தை பார்த்து மனம் கலங்கிதான்  போனான். உறுதியான அவன் இதயம் கூட பலவீனப்பட்டது.
அவள் கருவறை மண்டபத்திற்குள் நான்கைந்து சிறுவர்கள் சூழ்ந்திருக்க நுழைந்தாள்.
ஐயர் கருவறையில் இருந்த வந்து அவளுக்கு குங்குமத்தை வழங்கி “நல்லா வாசிச்சம்மா… அப்படியே மெய் சிலிர்த்து போச்சு… உன் வாசிப்புக்கு மழை கூட வந்திருச்சுன்னா பாரேன்” என்றார்.
“சும்மா சொல்லாதீங்க ஐயரே… மழை தானா வந்தது” என்று சொல்லி அவள் சிரித்துவிட்டு மெல்ல இறங்கிவந்து கோவிலை சுற்றப் போக, எல்லாவற்றையும் கேட்டிருந்தவன் அவள் பின்னோடு வந்து  “ஹெலோ ஒரு நிமிஷம்” என்றழைத்தான்.
அவளோ யாரையோ அழைக்கிறார்கள் என்று எண்ணியபடி முன்னேறி நடக்க “ஹெலோ உங்களைதான்” என்று அவள் பின்னோடு நெருக்கமாய் வரவும் அவள் தன் அருகாமையில் நின்று சிறுவர்களிடம் “யாரு” என்று கேட்க, 
அவர்கள் “தெரியல க்கா” என்றனர். 
தனியாக போனால் தெரியாதவர்களிடம் நின்று தேவையில்லாமல் பேசக் கூடாது என்று யாழ்முகை சொன்னது நினைவுக்கு வர அவள் அவன் அழைப்பிற்கு செவி சாய்க்காமல் சென்று கொண்டிருந்தாள்.
அவன் அவளை தொடர்ந்தபடி “நீங்க நல்லா வாசிச்சீங்க” என்றதும் அந்த வார்த்தைக்கு மட்டும் பதிலுரையாய் “தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நிற்காமலே சென்றாள்.
“உங்க பேர் என்ன ? சொல்லிட்டு போங்க”
“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை… நீங்க என் பின்னாடி வராதீங்க”
“நான் கோவிலதான் சுத்தறேன்… உங்க பின்னாடி ஒண்ணும் வரல”
அந்த வார்த்தைகளை கேட்ட நொடி சாக்ஷி நின்றுவிட்டு அந்த சிறுவர்களிடம் “நம்ம கிளம்பலாம்” என்று வாசலை நோக்கி நகர்ந்தாள்.
அவன் இதை எதிர்பார்க்காமல் ஒடிவந்து அவளை வழிமறித்தபடி “இவ்வளவு அழகா இருக்கீங்க…  உங்களுக்கு பார்க்க கண்பார்வையில்லங்கிற நம்பவே முடியல… மனசுக்கு கஷ்டமாயிருக்கு” என்று வேந்தன் பரிதாபம் கொள்ள, அவளுக்கு அவனின் இரக்க வார்த்தைகள் எரிச்சலை கிளப்பியது.
அவளின் அழகு மற்றும் கண்பார்வை இரண்டை பற்றி பேசினாலும் அவளுக்கு அளவுக்கடந்த கோபம் வரும்.
“யார் சார் நீங்க… நான் அழகா இருந்தா உங்களுக்கு என்ன?  இல்ல எனக்கு கண்பார்வையில்லன்னாதான் உங்களுக்கு என்ன… ? போய் உங்க வேலையை பாருங்க” என்று பொறிந்து தள்ளிவிட்டு பதட்டமாய் செல்ல யத்தனித்தவள் ஈரத்தரையில் கால் இடறிவிழப் பார்த்தாள். 
வேந்தன் அந்த கணம் விழாமல் அவள் இடையை பற்றி தாங்கி கொண்டான். விழவில்லை என்பதை விட அவன் கரம் அவள் இடையை தழுவியிருப்பது அவளை அருவருப்பாய் உணர்ச்செய்தது.  
வேந்தன் இயல்பாகவே அவளை தாங்கி கொண்டாலும் அதனை இயல்பான மனப்பான்மையோடு அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 
அதுவும் இல்லாமல் அவளை அப்படி யாராவது தாங்கி பிடிப்பது கூட அவள் குறையை சுட்டிக்காட்டுவது போல அவளுக்கு தோன்றும். 
உடனடியாய் அவள் நிமிர்ந்து நின்று அவன் சட்டையை இறுகபற்றிக் கொண்டு “பொறுக்கி… இதுக்குதான் என் பின்னாடியே வந்தியா” என்று கத்த தொடங்கினாள்.
கோவிலை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் பார்வையை அவள் புறம் திருப்ப வேந்தன் தவிப்போடு “நீ விழக் கூடாதுன்னுதான் பிடிச்சேன்” என்றான்.
“நீ என் பின்னாடி வராம இருந்தா நான் விழ போயிருக்க மாட்டேன்”
அந்த சமயம் கோவிலில் இருந்தவர்கள் அவர்கள் புறம் கவனிப்பதை உணர்ந்தவன் “கையை எடுறி முதல்ல…” என்று பல்லைகடித்து கொண்டு உரைத்தான்.
“மரியாதையா பேசுடா பொறுக்கி… ” என்று அவள் திட்டும் போது அவர்களை சுற்றி கூட்டம் கூட, எல்லோரும் சாக்ஷியின் பக்கம் வந்து நின்று “என்னம்மா ஆச்சு” என்று கேட்க அவள் உடனே அவன் சட்டையை விடுவித்து அமைதியானாள்.
தேவையில்லாம பிரச்சனையை பெரிதுபடுத்திவிட்டோமோ என்று அவள்  யோசித்திருக்க அவளோடு நின்றிருந்த சிறுமி “இந்த அண்ணாதான் அக்காகிட்ட பிரச்சனை பண்ணிட்டு பின்னாடியே வர்றாரு” என்றாள்.
“கண்ணு தெரியாத பொண்ணுக்கிட்ட பொறுக்கிதனம் பன்றியா” என்று சிலர் கோபப்பட்டு அவனிடம் கை ஓங்க, அங்கே நிலைமை மோசமானது.
அவன் அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்திருக்கும் போது அவன் நண்பர்கள் ஓடிவந்து நிலைமையை ஒருவாறு சமாளித்து அவனை கோவிலுக்கு வெளியே அழைத்து சென்றனர்.
இப்படியெல்லாம் நிகழும் என்று சாக்ஷியே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வுதான் அவள் வாழ்க்கையே சிதிலமடைய காரணமாய் அமைந்தது. 
கோவிலுக்கு வெளியே வந்ததும் அவன் நண்பர்கள் “என்னடா மச்சான் ஆச்சு ?” என்று விசாரிக்க
“நான் எதுவும் பண்ணலடா… அவதான் ஓவரா சீன் போட்டுட்டா” என்றான் கொதிப்போடு!
“சரி விடுறா… அரசியலில் இதெல்லாம் சாதாரணம்” என்று சொல்லி சிரித்தவர்கள் வேந்தனை இயல்பு நிலைக்கு மாற்ற முனைந்தனர். 
ஆனால் அது முடியவில்லை.
அவன் கொந்தளிப்பான பார்வையோடு “நான் தப்பே பண்ணலன்னும் போது எப்படிறா விடறது” என்றான். 
“மச்சான் ரிலேக்ஸ்… இன்னும் மூணு நாள்ல நீ கெனடா போகப்போற… இந்த விஷயத்தை எல்லாம் மண்டையில ஏத்திகாதே” என்க, அப்போதைக்கு அந்த பிரச்சனையை வேந்தன் விடுத்தான். 
ஆனால் அந்த அவமானத்தை அத்தனை சீக்கிரத்தில் அவனால் மறந்துவிட முடியவில்லை. ஆறாத வடுவை அவன் நினைவில் ஆழமாய் பதிந்து போனது., 
அதற்கு பிறகாய் இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
அம்முறை வேந்தன் சென்னைக்கு வந்த போது மகிழ்  குடும்பத்தோடு எல்லோரையும் அழைத்து கொண்டு சாக்ஷி வீணை வாசிக்கும் இசை கச்சேரிக்கு அழைத்து சென்றான்.
அவர்கள் அனைவரும் முன்னிருக்கையில் அமர ஏற்பாடும் செய்தான். 
இதை போன்ற  கச்சேரியில் எல்லாம் விருப்பமில்லை என்று வேந்தன் மறுக்க, அவனை வலுக்கட்டாயமாக மகிழ் அழைத்து வந்தான்.
கச்சேரி தொடங்கிவிட சாக்ஷி வீணை வாசித்து  கொண்டிருந்தாள்.
வேந்தன் விழிகள் அவள்தானா என  நம்பாமல் அவளையே பார்த்தன. 
ஒரே ஒரு முறை பார்த்த முகம்தான் என்றாலும் அவளை அவனால் மறக்க முடியுமா? அவள் செய்த அவமானத்தை மறக்க முடியுமா ?
அந்த நொடி வேந்தன் மனதில் 
சாக்ஷியின் மீதான வக்கிரம் விஷமாய் ஏறியது.
அதே நேரம் முன்னே பார்த்ததை போல் அன்றி அவள் வயதோடு அவள் அழகும் அபரிமிதமாய் வளர்ச்சியடைந்திருக்க, புடவையில் கம்பீரமான தீட்சண்யத்தோடு திகழ்ந்த அவள் அழகை அவனால் ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை.
கச்சேரி முடிந்து மகிழின் பெற்றோர்  சாக்ஷியை பாராட்டி புகழ்ந்தனர். ஆனால் வேந்தன் தன் மனவுணர்வுகளை கட்டுபடுத்தியபடி எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.
வேந்தனுக்குள் சாக்ஷியின் மீதான பழிவுணர்வையும் வக்கிரத்தையும் எப்படியாவது தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியிருக்க, அவனுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.
மகிழ் வீட்டிற்கு வந்ததும் தன் பெற்றோரிடம் சாக்ஷியை காதலிக்கும் தகவலை தெரியப்படுத்தினான்.
வள்ளியம்மையும் ஞானசேகரும் அதிர்ச்சியடைய, அவர்களை விடவும் அதிர்ந்தது வேந்தன்தான்.
ஆனால் அந்த உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பது போல் நடித்தான்.
ஞானசேகர் அதிர்ச்சியில் இருந்த மீண்டவராய் “பைத்தியக்காரன் மாதிரி பேசாதே மகிழ்.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னால சந்தோஷமா வாழ முடியாது” என்றார்.
மகிழ் பிடிவாதமாக “சாக்ஷியை கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் நான் சந்தோஷமா வாழ முடியும் பா” என்றான். 
“அவ நல்லா பொண்ணுதான்… ஆனால் ப்ராக்ட்டிக்கலா யோசிச்சா நீ நினைக்கிறது சரியா வராது மகிழ்…” என்று வள்ளியும் மறுதலிக்க மகிழுக்கு அதிர்ச்சியாயிருந்தது.
ஆனால் அவன் யாருக்காகவும் சாக்ஷியை விட்டு கொடுக்க தயாராக இல்லை. அவள்தான் வேண்டும் என்று உறுதியாய் நிற்க அவன் பெற்றோரும் திகைத்து போயினர். 
மகிழ் சாக்ஷிக்காக பேச பேச வேந்தனின் கோபம் எல்லையை கடந்தது.
பொறுமையிழந்து மகிழின் கரத்தை அழுந்த பிடித்து திருப்பியவன் “என்ன மகிழ்… அந்த சாக்ஷி பெரிய இவளா… அவதான் வேணும்னு அடம் பிடிக்கிற … அம்மா அப்பாதான் அவ வேணாம்னு சொல்றாங்க இல்ல… ஒழுங்கா அவங்க சொல்றதை கேளு… தேவையில்லாமல் பேச்சை வளர்க்காதே…” என்று அதிகாரமாய் கத்திவிட்டு அங்கே நிற்காமல் அவன் அறைக்குள் விரைந்துவிட வள்ளியும் ஞானசேகரும் கூட வேந்தனின் கோபத்தை அதிசயத்து பார்த்துவிட்டு மேலே அந்த பேச்சை வளர்க்காமல் சென்றுவிட்டனர்.
மகிழ் எந்தளவுக்கு ஏமாற்றமடைந்தான் என்று யாருமே உணர்ந்திருக்கவில்லை. 
ஆனால் வேந்தனின் இந்த கோபத்தின் பிண்ணனியில் சாக்ஷியின் மீதான வஞ்சம் ஒளிந்திருக்கும் என்று அவன் கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை.
வேந்தனின் சிகரெட் துண்டு அவன் விரலிடுக்குகளை சுட்டு காயப்படுத்த அவசரமாய் அதை தூர எறிந்தான். அத்தோடு பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவன் அந்த குளியலறை புகை மூட்டமாய் மாறியிருப்பதை கவனித்தான்.
அதே நேரத்தில் எழில் கதவை வேகமாய் தட்டும் ஓசை கேட்க “வர்றேன் எழில்… குளிச்சிட்டு இருக்கேன்” என்று உள்ளிருந்தபடியே சத்தமிட்டான்.
அதன் பிறகு தன் களைப்பும் மனஉளைச்சலும் தீருமளவுக்கு குளித்து முடித்த போது ஒருவித தெளிவு பிறந்தது அவனுக்கு.
ஏர்போர்ட்டில் தன் தங்கைக்கு அழைப்பு விடுத்தவன், வந்து சேர்ந்த தகவலை உரைத்தபடி தன் சூட்கேஸை இழுத்து கொண்டு வந்த சமயத்தில் கவனிக்காமல் அருகாமையில் வந்த பெண்ணின் மீது தவறுதலாய் இடித்துவிட்டான்.
அவன் அவள் புறம் திரும்பி சாரி என்று சொல்ல வாயெடுத்தவன் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான். 
இப்போது யோசித்து பார்க்கிறான். ஸ்லீவ்லஸ் டாப் அதோடு த்ரீ பை போஃர்த் பேண்ட், தோளில் விரிந்து சரிந்திருந்த கூந்தல், உயர் தோற்றமளித்த ஹை ஹீல்ஸ் என அல்ட்ரா மார்டன் பெண்மணியாய் அவள் நிற்க, அந்த உடை நடை முகபாவனை, கழுத்தோடு தொங்கியிருந்த சிலுவை டாலர் முதற்கொண்டு எதிலும் சாக்ஷியின் பிரதிபலிப்பில்லை.
முக்கியமான வித்தியாசம் அவள் பார்வையற்றவள் அல்ல என்பதுதான்.
அதுவும் அவள் அவனை பார்த்து எந்தவித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல் முன்னேறி சென்றுவிட்டாள்.
அது சாக்ஷி அல்ல. அவள் சாக்ஷியாக இருக்கவும் முடியாது. இப்படி சொல்லி கொண்டவன் உள்ளூர ஆறுதலடைந்து இயல்பு நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டான். 
***********
வீ பேலஸ். 
பிரமாண்டமான அந்த ஹோட்டலிற்குள் பல விலையுயர்ந்த கார்கள் போவதும் வருவதுமாக இருக்க ஒரு பெரிய நீளமான வெள்ளை ஆடி காரில் வந்திறங்கினாள் ஜென்னியும் அவளின் காரியதரிசி ரூபாவும்.
ஜென்னி அவள் உடலமைப்போடு இறுகிய வொயிட் ஷர்ட்டும் பிளாக் ஷார்ட் ஸ்கர்டும் முழ்ங்கால் தெரிய அணிந்து கொண்டு ஹெ ஹீல்ஸில்  நிமிர்வாய் நடந்துவந்த தோரணையில் அங்கிருந்த எல்லோரின் பார்வையும் அவள் புறம் அனிச்சையாய் திரும்பி பார்த்தன.  
ரூபா அந்த ஆடம்பரமான ஹோட்டல் அமைப்பை பார்த்து வியந்தபடி 
“ஓ எம் ஜி !!! இது ராகவ் சார் ஹோட்டலா ?!” என்றாள்.
“நோ ரூப்ஸ்… மிஸ்டர். வாஸன்ஸ்” என்று அலட்சியமாக உரைக்க
“என்ன ஜென்னி ? அவர் ராகவ் சாரோட பாஃதர்தானே… அப்படின்னா இது ராகவ் சார்து தானே”
“இல்ல ரூப்ஸ்… சில விஷயங்கள் ஒரே மாதிரி தெரியலாம்… ஆனா ஒண்ணு இல்ல” என்று ஜென்னி சொல்ல, ரூபா உள்ளுக்குள் குழம்பினாலும் வெளியே புரிந்தது போல் தலையாட்டிவிட்டாள்.
மேலே கேள்வி கேட்டால் அதற்கும் புரியாமல்தான் ஜென்னியிடம் இருந்து பதில் வரும். 
அதுவும் இல்லாமல் ஜென்னி இப்படி புரியாமல் பேசுவதும் இவள் புரிந்துவிட்டது போல் தலையசைப்பதும் அவளுக்கு வழக்கமாகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!