Neela Nayanangalil 1

Neela Nayanangalil 1

நீல நயனங்களில்…

அத்தியாயம் 1

சென்னை மாநகரம் அந்த மாலை பொழுதில் அதற்கே உரிய பரபரப்புடன் ஓடி கொண்டிருந்தது. அந்த நட்சத்திர ஹோட்டலின் பார்க்கிங் லாட்டில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு காயத்ரி லட்சுமி இருவரும் ஹோட்டல் லாபியை நோக்கி நடந்தனர்.

அன்று அங்கு காயத்ரியின் நெருங்கிய தோழி உதயாவின் 19 வது பிறந்தநாள் பார்ட்டிகாக அவர்கள் அங்கு வந்திருந்தனர். அங்கே வைக்க பட்டிருந்த பார்ட்டி ஹால் பட்டியலில் மிஸ் உதயா ஹால் நம்பர் 7 என்று பார்த்து விட்டு அது இருந்த இரண்டாவது தளத்திற்கு செல்ல லிஃட்டில் ஏறினர்.

“ஹேய் லட்சுமி சொன்னா கேளு பா, எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பழக்கம் இல்லை பேசாம வந்ததே தெரியாம ஓடிடலாமா?” என்று தோழியை சற்று தயங்கி பார்த்தாள்.

“சரி வாடி இப்படியே கிளம்பிடலாம் ! எனக்கு ஒன்னும் இல்ல..அப்புறம் நீதான் அவளை காலேஜ்ல சமாளிக்கணும்… என்ன கோர்த்து விட கூடாது சரினா வா ஜூட் !” என்று சற்று நக்கலாகவே பதில் அளித்தாள் லட்சுமி.

“ஹேய் இப்படி சொன்னா எப்படி ? நீ தான் ஏதாவது சாக்கு கண்டுபிடிச்சு ஹெல்ப் பண்ணுவேன்னு பார்த்தா இப்படி எஸ்கேப் ஆகுறே இப்போவே !” என்று காயத்ரி தோழியை முறைத்தாள்.

“அப்போ வாயை மூடிண்டு வா.. வேணும்னா ஒன்னு செய்வோம்.ஒரு அட்டெண்டன்ஸ் போடுவோம், கிபிட் கொடுப்போம், நல்லா சாப்பிடுவோம், தென் படிக்கணும் அசைண்மெண்ட் பண்ணனும்னு எதான சொல்லிட்டு சீக்கிரமா கிளம்பிடலாம் சரியா ?” என்று லட்சுமி சொல்ல காயத்ரியும் சரி என்பது போல் தலை அசைத்தாள்.

காயத்ரி, லட்சுமி, உதயா இவர்கள் கல்லூரியில் Bsc.விஸ்காம் எனப்படும் விசுவல் கம்யூனிகேஷன் மூன்றாம் ஆண்டு படித்துவருகின்றனர். உதயா எவ்வளவு பணக்கார வீட்டு பெண் என்றாலும் பேச்சிலோ செயலிலோ பழகும் விதத்திலோ என்றுமே அவள் அதை வெளிப்படுத்தியது இல்லை. காயத்ரியும் லட்சுமியும் நடுத்தர வீட்டை சேர்ந்த பெண்கள்.

ஆனால் அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமும் இல்லாமல் இணைபிரியா தோழிகளாகவே இருந்துவருகின்றனர்.

பார்ட்டி ஹால் கதவின் அருகே நின்றிருந்த அவர்களது கல்லூரி தோழி ஸ்ருதி, அவர்களை கண்டதும் புன்னகைத்தபடி” ஹை காயு, லட்சுமி அப்பாடி வந்தீங்களா பா.. உள்ள ஹாலுக்குள்ள போற ஒருத்தர் கூட நம்ம கிளாஸ் செட்டு மாதிரி இல்லையே…என்ன பண்ணலாம்னு பயந்துண்டு இருந்தேன்.” என்று பெருமூச்சு விட்டபடி சொல்ல தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்னப்பா சொல்றே ஒருத்தர் கூடவா நம்ம குரூப் பசங்க வரல? அடடா என்னடி பண்லாம் எஸ் ஆயிடலாமா ?” என்று காயத்ரி மூணுன்னுக்கும் அதே சமயம். ஹால் கதவை திறந்துகொண்டு அங்கே வந்தாள் அன்றைய விழாவின் நாயகி உதயா.

“என்னப்பா இது? உள்ள வராம இங்க என்ன பண்றீங்க? வாங்கடி !” என்று கிட்டத்தட்ட அவர்களை இழுத்து கொண்டு உள்ளே சென்றாள். ஹாலினுள் நுழைந்த காயத்ரியும் லட்சுமியும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றனர்.

அந்த ஹால் பிங்க் நிறத்தில் மிக நேர்த்தியாக அலங்கரிக்க பட்டிருந்தது. அங்கங்கே வட்ட வட்ட மேஜைகளும் அதனை சுற்றி தலா நான்கு இருக்கைகளும் இருந்தது. அதை பார்க்கும் பொழுதே எதோ ஒரு ஃபாரி டேலில் உள்ள அரண்மனையில் நுழைந்தது போல இருந்தது. குறுக்கும் நெடுக்கும் கையில் குளிர் பானங்களையும், ஐஸ்கிரீமையும் எடுத்துக்கொண்டு சர்வர்கள் நடந்து கொண்டு இருந்தனர்.

அதுவரை தயக்கத்துடன் வந்துகொண்டிருந்த காயத்ரியோ “ஹை ஐஸ்கிரீம் !!” என்று அலற… “அடியே வாய மூடு ! ஏற்கனவே எதோ கண்ணை கட்டி காட்டிலே விட்ட மாதிரி இருக்கு.நீ வேற இப்படி கத்தி மானத்தை வாங்காதே! கொஞ்சம் அடக்கி வாசி டீ.ப்ளீஸ்” என்றாள் லட்சுமி அவளை முறைத்தபடியே.

“என்னப்பா இப்படியே நிக்கறீங்க ! வாங்க இந்த டேபிள்ல உக்காருங்க..அப்புறம் அங்க பஃபே இருக்கு..கூச்சப்படாம நல்ல வெளுத்துக் கட்டுங்க சரியா ! நான் கொஞ்சநேரத்துல வந்துடறேன்” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள் உதயா.

“அடியே நல்லவளே! சாப்பிடுன்னு சொன்னியே..அனா அந்த பஃபே எங்க இருக்குனு காட்டாம போறியேடி” என்று ஸ்ருதி அலுத்துக்கொள்ள. காயத்ரியோ ”அதுனால என்னடி? அங்க பாரு ஒருத்தன் தட்டை தூக்கிண்டு போறான்.அநேகமா அவன் அங்க தான் போயிண்டு இருக்கான்னு நினைக்கிறேன்! வா போலாம், சீக்ரமா வா” எனது லட்சுமியையும் ஸ்ருதியையும் உடன் அழைத்தாள்.

“ஹே!! இனி நான் உங்க கூடலாம் எங்கேயுமே வரமாட்டேண்டி! என்னடி இது இப்படி மானத்தை வாங்கறீங்க ! அடலீஸ்ட் ! கொஞ்சம் மெள்ளமா பேசுங்கடா ! எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க !” என்று புலம்பி கொண்டே..அந்த ஆணின் பின் விரைந்த அவர்களை முறைத்த படியே லட்சுமி பின் தொடர்ந்தாள்.

ஒரு வழியாக அந்த ஹாலின் இடப்புறம் இருந்த பஃபேவை சென்று அடைந்தனர்.அங்கே வைத்திருந்த உணவு வகைககளை கண்டவராகள் நாவிலோ எச்சில் ஊறியது !.

“என்னப்பா இது? பர்த்டே பார்ட்டி மாதிரி இல்ல எதோ கல்யாண வீடு மாதிரி இருக்கு… இத்ததனை வெரைட்டி இருக்கு..எல்லாத்தையும் சும்மா டேஸ்ட் பண்ணலே நாளை காலை ஆகும் போல இருக்கே!!”என்று மலைத்து பார்த்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தங்கள் தட்டில் பரிமாறி கொண்டனர்.

ஆண்களும் பெண்களும் நவ நாகரிக உடைகளில் இருந்தனர். சற்று வயது முதிர்ந்தவர்கள் கூட மேல் நாட்டு பாணியில் தான் இருந்தனர். அவர்களை பார்த்தவாறே தோழிகள் தங்கள் டேபிளின் முன் அமர்ந்தனர்.

“நாம ஒன்றும் அவ்ளோ மோசமா இல்லப்பா !” என்று கூறி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

காயத்ரி, வயது 19, ஐந்தடி உயரமும். மாநிற சருமமும், களையான குழந்தை போன்ற முகமும்.. அதிக மேக்கப் ஏதும் இல்லாமல் பக்கத்துக்கு வீடு பெண் போல் இருந்தாள். இடை வரை நீண்ட கருங்கூந்தலை லூஸ் ஹேர் விட்டு. டார்க் பிங்க் நிறத்தில் முட்டிக்கு சற்று கீழே வரை நீளும் டிரஸ் அணிந்து இருந்தாள்.

அந்த ஹாலில் அமைக்கபட்டிருந்த மேடையில் உதயா தன் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.. உதயா பேருக்கு ஏற்றார் போல் அழகு! கிட்டத்தட்ட ஐந்தே முக்கால் அடி உயரம், கோதுமை நிறம், நேர் பட்ட நாசி, செக்க சிவந்த இதழ்கள்.தோள் வரை நீண்ட கூந்தலை சுருள செய்து. வெள்ளை நிற டிரஸ் அணிந்து முகத்தில் புன்னகையுடன் அத்தனை அழகாக இருந்தாள்.

“நம்ம உதயாதான் எவ்ளோ அழகு பாரேன். காலேஜ்க்கு ஒரு சாதாரண சல்வார்ல வந்தாலே பசங்க அப்படி சுத்தறாங்க! இப்படி இவ்வளவு அலங்காரத்தோட இவளை பார்த்தா அவ்ளோதான் மொத்தமா விழுந்துருவாங்க !” என்று சிரித்த படி தங்களுக்குள் தோழியை பெருமையாய் பேசிக்கொண்டு உணவை ருசித்தனர்.

சில நிமிடங்கள் கழித்து அவர்கள் டேபிள் அருகே உதயாவும் அவள் அண்ணன் கௌதமும் வந்தனர் ! “ சாரி பா! கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்..சாபிட்டங்களா? டேஸ்ட் பிடிச்சுதா? கெளதம் தான் பாவம் எல்லாம் ஏற்பாடு பண்ணினான்” என்று அண்ணனின் தோளில் சாய்த்து புன்னகைத்தாள்.

“ஆமா இப்போ கொஞ்சு! போனவருஷம் உன் பர்த்டேக்கு நான் ஊர்ல இல்லனு போன் பண்ணி என்னவெல்லாம் திட்டினே? அந்த பாசம் தாங்காம தானே நான் இப்படி பெருசா பார்ட்டி ஏற்பாடு பன்னினேன் ! இல்லைனா உன்கிட்ட எவன் வாங்கி கட்டிக்கிறது ?” என்று கெளதம் கிண்டல் செய்ய.

உதயா அவனை அடிப்பது போல் கையை ஓங்க,அவனும் பயப்படுவது போல் பாவனை செய்ய அவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

கெளதம் உதயாவின் அண்ணன், வயது 26, ஆறடி உயரமும், மீசை இல்லாத வழவழப்பான முகமும். எப்பொழுதும் புன்னகையை ஏந்தும் சற்று சிவந்த இதழுமாய்… ஒரு மாடல் போல் இருந்தான்.

உதயாவின் தோழிகளில் கௌதமை அண்ணா என்று கூப்பிடாதவள் லட்சுமி மட்டுமே. கௌதமற்கும் லட்சுமியின் மேல் ஈர்ப்பு இருப்பது போல் இருந்தது. இருவருமே அவர்களது அன்பை காதல் என்றோ, நட்பு என்றோ, எந்த வகையிலும் சேர்க்க வில்லை !. இவர்களின் உறவு புரிந்த தோழிகளோ, அதை பெரிதாக எடுக்காத போதிலும் அவ்வப்போது கிண்டல் செய்வது உண்டு !

“ஹோய்! என்ன உன் ஆளு இப்படி கோட் சூட் னு கலக்கறார் என்ன விஷயம் ? இந்த கெட் அப் பர்த்டே பார்ட்டிக் காகவா…இல்ல…உனக்காகவா ?” என்று ஸ்ருதி கண் சிமிட்டி முணுமுணுக்க..அந்த இருட்டிலும் லட்சுமி சற்று முகம் சிவந்தாள் !

அதை கண்டும் காணாமலும் ரசித்தவாறே கெளதம் “உதயா..அவன் வந்துட்டான்! நான் போய் பேசிண்டு இருக்கேன்.. “என்று புன்னகைத்த படி நகர்ந்தான்..அதாவது அங்கிருந்த நழுவினான்.

‘நடப்பதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.. நான் உண்டு என் ஐஸ்கிரீம் உண்டு’ என்று காயத்ரியோ மும்முரமாக ஐஸ்கிரீமை ரசித்து உண்டு கொண்டு இருந்தாள்.

“இங்க என்ன சீன் ஓடுது.. இது என்ன பண்ணுது பாரு ? ஸ்கூல் படிக்க வேண்டிய குழந்தைய யாருப்பா காலேஜ்ல சேர்த்து விட்டா?” என்று ஸ்ருதி கேலி செய்ய.

இதான் பூலோகமா? என்பது போல்..”என்னப்பா என்னாச்சு எதானா கேட்டியா? ஐஸ் கிரீம் வேணுமா ?” என்று காயத்ரி முழிக்க.

உதயவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.” இல்லடி செல்லம் !! நீ சாப்பிடு பேபி “என்று சொல்லி அவளும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

காயத்ரி தவிர மற்ற பெண்கள் தங்களை சுற்றி இருந்த வாலிபர்களை பார்த்து கமெண்ட் அடித்துக்கொண்டு, தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டிருந்தனர். அங்கே இருந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே கௌதமின் பிசினஸ் நண்பர்கள். இந்த மூன்று தோழிகள் மற்றும் சில பேர் மட்டுமே உதயாவின் விருந்தினர்கள். அதனால் அவள் வேறு எங்கும் செல்லாமல் தன் தோழிகளோடு உட்கார்ந்து கொண்டாள்

ஒருவழியாக ஐஸ்கிரீமை முடித்த காயத்ரி…மெதுவாக கூல் ட்ரிங்க்ஸ் குடித்தவாறே தலை தூக்கி அவர்களை சுற்றி இருக்கும் விருந்தினர்கள் மேல் பார்வையை சுழல விட்டாள்.

அந்த ஹாலின் வலது புறம் ஒரு வாலிபனுடன் பேசி கொண்டு இருந்தான் கௌதம். அவனும் கௌதமை போன்றே ஆறடி உயரமும், வெள்ளை சருமமும், அளவான உடற்கட்டும், அவன் வசீகரமான முகத்திற்கு ஏற்ப சீராக வெட்ட பட்ட சிகையும், மீசையுமாய் எதோ கிரேக்க சிற்பம் போல் இருந்தான்.

ஆனால் என்ன முகம் தான் கடுவன் பூனை போல் கடு கடுவென இருந்தது.

“கொஞ்சம் தான் சிறியேன்டா ! சிரிச்சா வாய் சுளுக்கிக்குமா என்ன?”என்று அவனை கூர்ந்து நோக்கி காயத்ரி மனதினுள் முணுமுணுத்தாள். அவள் பேசியது அவன் காதில் விழுதது போல், திடும் என அவளை அவன் திரும்பி பார்க்க புரைக்கேறி போய் அவள் தடுமாற…

இதை கவனிக்காத உதயாவோ “ஹே! மெதுவா குடிடி! நாங்க யாரும் கேட்க மாட்டோம்…பூராவும் உனக்குத்தான் ! வேணும்னா வேற ஜூஸ் கொண்டு வர சொல்றேன்”.என்று கிண்டல் செய்ய. காயத்ரி ஏற்கனவே சின்னதாய் இருந்த தனது அழகிய கண்களை சுருக்கி கோவமாய் முறைத்தாள்.

“ஐயோ ! அப்படிலாம் பார்க்காதேடி! சிரிப்பு சிரிப்பா வருது !! என்னமா நீ இவ்ளோ வளந்துருக்கே, ஒழுங்கா முறைக்க கூட தெரியலையே பேபி !” என்று மேலும் வெறுப்பேற்ற. நாசி பெரிதாக அவள் இன்னும் முறைக்க…உதயவோ அவள் கன்னத்தை பற்றி” ஸோ கியூட் !” என்று கொஞ்ச. “போடி!” என்று செல்லமாக கோவித்து கொண்டாள் காயத்ரி.

மெதுவாக அந்த வாலிபனை மீண்டும் காண அவள் திரும்ப, அவனோ அங்கில்லை ! ‘ எங்கே போனான்’ என்றெண்ணி அவள் திரும்ப ! அப்படியே உறைந்து விட்டாள்.

அப்பொழுதுதான் அங்கு வந்த கௌதமையும் அவனது தோழனையும் அவள் கவனித்திருக்க வில்லை. அவர்களை பார்த்தபடி கெளதம் இரண்டு நாற்காலிகளை இழுத்து போட்டான். ஆண்கள் இருவரும் அதில் அமர்ந்தனர்!

“திஸ் இஸ் சிவா ! மை பிரென்ட்,, எனக்கு எல்லாமே இவன் தான் !” என்று அவர்களுக்கு அறிமுகம் செய்ய சிவா கௌதமின் கையை பற்றி டேய் ஏண்டா ! என்பது போல் எதோ சொல்ல.” நண்பேன்டா” என்றகௌதம் அவனை பக்கவாட்டில் அனைத்து கொண்டான்.

சிவா வயது 26, கௌதமின் உயிர் தோழன்.

“சிவா அண்ணா ! இவங்க என் காலேஜ் பிரெண்ட்ஸ் ! இது லட்சுமி, அவ ஸ்ருதி, அந்த ஜூஸ் குள்ள விழுந்துடுவாங்கிற மாதிரி ஒருத்தி இருக்கா பாருங்க! அவ காயத்ரி” என்று அறிமுகம் செய்ய.

அதுவரை குடிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தவளோ உதயவை மீண்டும் அதேபோல் முறைத்தாள்.

“ஹே சொன்னேன்ல! முறைக்க ட்ரை பண்ணாதே பேபி! என்று திரும்ப அவள் கன்னத்தை பற்றி கிள்ளினாள். யாரோ ஒருவன் முன் இப்படி அவளை அவள் தோழி கொஞ்சவும், சிறிதும் கூட நிமிராமல், அவள் சொன்னது போலவே இந்த ஜூஸ் க்ளாசில் குதித்தால் தான் என்ன என்பது போல் குனிந்து கொண்டாள்.

கௌதமும் மற்றவர்களும் உரக்க சிரிக்க சிவாவோ இன்னும் முகத்தை கடினமாக்கி கொண்டான் ! இதை கவனித்த காயத்ரியோ. ‘பாரு சிடு மூஞ்சி சிரிக்க காசு கேப்பான் போல ! ‘ என்று மனதினுள் கடு கடுத்தாள்!

அவனோ அவளை சட்டென்று கூர்ந்து பார்த்தான். இவளும் பயத்தில் அவன் கண்ணை பார்க்காமல் எங்கெங்கோ பார்த்தாள்.

‘ ஆண்டவா ! இவன் முன்னாடி இன்னும் எவ்ளோ நேரம் உட்காரணுமோ! ‘ என்று மனதில் பொருமினாள். அவளின் மனம் அறிந்தாற்போல்..

சிவா சட்டென “உதய்மா! கேக் கட் பண்ணலாமா? டைம் ஆகுது மா !” என்று அன்பாக கேட்க !.

காயத்ரியோ ‘ பாக்க தான் ஆள் சிடுமூஞ்சியா இருக்கான் குரல் ஆனா நல்லாத்தான் இருக்கு! ‘ என்று நினைத்துகொண்டாள்.

“ஓகே சிவா அண்ணா! வாங்க” என்று மற்றவர்களையும் அழைத்து கொண்டு கேக் கட் செய்ய சென்றாள் உதயா.

அனைவரும் ஹாப்பி பர்த்டே வாழ்த்து பாட, சிறு குழந்தை போல் ஆர்வமாய் கேக் வெட்டி கௌதமிற்கும் சிவாவிற்கும் ஊட்டினாள். அவர்களும் அவளுக்கு ஊட்ட.

“ஐயோ பாசமலர் படம் பார்க்கிற மாதிரில இருக்கு ! நல்ல வேலை இத பார்க்க சிவாஜியும் சாவித்ரியும் இங்க இல்ல” என்று காயத்ரி சொல்ல கேட்டு பக்கென்று சிரித்து விட்டாள் லட்சுமி.

அங்கிருந்த மேஜைகள் எல்லாம் சுவர்களை ஒட்டி நகர்த்த பட்டது !

“என்னப்பா அவ்ளோதான் பார்ட்டி, கிளம்புங்கோன்னு சொல்லுறாங்களா? இருந்தாலும் இப்படியா அப்பட்டமா துரத்துவாங்க ?” என்று லட்சுமி முணுமுணுக்கும் பொழுது.

விளக்குகள் இன்னும் மங்கல் ஆக்க பட்டு. சத்தமாக டிஸ்கோ மியூசிக் ஒலிக்க..டீஜெவின் கைங்கரியத்தில் அந்த ஹாலே அல்லோல கல்லோல பட ஆரம்பித்தது.

“அய்யயோ ! என்னடி இது மெதுவா எதோ தாலாட்டு மாறி இருந்த மியூசிக்க மாத்தி இப்படி காதுல ரத்தம் வர மாறி அலற விட்டானுங்க ! வேணாம் கிளம்பிடலாம் சரி வராது. இங்க இருந்தா நான் நாலு நாள் ஆனாலும் தல வலியில அவஸ்த்தை பாடணும் டி” என்று லட்சுமி புலம்ப..

“ஏண்டி நானா போட சொன்னேன்.எனக்கே ஒன்னும் புரியல” என்று காயத்ரியும் அவள் பங்கிற்கு புலம்ப. “ஹாய்! நான் டான்ஸ் ஆட போறேன்” என்று துள்ளி குதித்து ஸ்ருதி சென்று விட்டாள்.

கிளம்பிடலாமா என்று காயத்ரி வாய் எடுக்கும் முன்னரே “ ஷல் வி டான்ஸ் ? என்று அங்கு வந்து லக்ஷ்மியின் முன்னால் நின்றான் கெளதம் ! மறுக்க முடியாமல்” ம்ம்” என்று லக்ஷ்மியும் அவனுடன் ஆடுவதற்கு சென்றுவிட்டாள்.

காயத்ரி மட்டும் என்ன செய்வது என்று புரியாமல், ஒரு ஓரமாய் இருந்த டேபிளின் முன் அமர்ந்தாள், கைபேசியை நோண்டிய படியே அங்கே வந்தான் சிவா.

‘இப்போ இங்க உட்காரலாமா? இல்ல எழுந்துடலாமா? ‘ என்று அவள் யோசிக்கும் பொழுதே.

சிவா” ஹாய் ! நான் இங்க உட்காரலாமா ? ஐஸ் இட் ஓகே ? என்று கேட்டான்.

மனதை படித்தார் போல் அவன் சட் என கேட்கவும் “பரவால்ல யாரும் திட்ட மாட்டாங்க ! நீங்க தாராளமா இங்க உக்காந்துகோங்க !” என்றாள்.

இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத அவனோ உரக்க சிரித்தபடியே அவளுக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான்.

அவன் சிரித்த பிறகே அவள் சொன்ன பதிலை அவள் உணர்ந்தாள் ‘ ஐயோ! என்னை அவன் லூசுன்னு நினைப்பானோ ! சே ! முதல் முதலா பேசுறப்போ இப்படியா சொதப்புவே காயத்ரி ! ‘ என்று தன்னை தானே நொந்து கொண்டு அதை வெளி காட்டாமல் அசடு வழிந்தாற்போல் புன்னகைத்தாள்.

அவன் சிரிப்பை அடக்கி கொண்டு “ காயு! நீ டான்ஸ் அட போகலையா? ஏன் இப்படி தனியா உட்கார்ந்து இருக்கே ?” என்று எதோ நன்கு பரிச்சயம் அனதுபோல் ஒருமையில் கேட்க..

“இல்லை எனக்கு பழக்கம் இல்லை அதான் ! ஆமா நீங்க டான்ஸ் ஆட போகலையா ?” என்றாள்.

“நோ! ஐ டோன்ட் பீல் லைக் டான்சிங் டுடே ! காலையில் இருந்து ஒரே மூட் அவுட் !! எதோ உதயா கம்பெல் பன்னதாலே வந்தேன்!” என்றான்.

இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் ? வடிவேலு சொல்லற மாறி” சேம் பிளட்” னு சொல்லவா என்று மனதினில் நினைத்துக் கொள்ளும்போதே..

“என்ன யோசிக்கிறே ?” என்று அவன் கேட்க, “சேம் பிளட்!” என்று மனதில் நினைத்ததை உளறியவள் உதட்டை கடித்து கொண்டாள். அவன் திரும்பவும் உரக்க சிரிக்க.

‘சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கான் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே ‘ என்று எண்ணிக் கொண்டவள்.

“நான் சொன்னது அவ்ளோ பெரிய ஜோக் ஆ இல்ல… நான் தப்பா எடுக்க கூடாதுன்னு சிறிசீங்களா !” என்று திரும்பவும் உளறினாள். அவனோ மறுபடி சிரிக்க.

“நான் வாய மூடிண்டு இருகர்து பெட்டெர் !” என்று அவள் வாய்விட்டு அலுத்துக்கொள்ள.

“அப்படி இல்லை ! டோன்ட் மிஸ்ட்கே மீ !” என்று சொல்லி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டான் !

‘ இவன் கண்டிப்பா மனசுக்குள்ள எதோ நினைச்சுதான் சிரிக்கிறான் ! காயு போறும் அடக்கி வாசி ‘ என்று தன்னிடம் சொல்லி கொண்டாள்.

பின்பு சில நிமிடங்கள் மௌனமாய் கழிந்தது.

“ஹேய் என்ன ரெண்டு பெரும் டான்ஸ் ஆட வரலையா ?” என்றபடி அங்கே உதயாவும் கௌதமும் வர.

லட்சுமி எங்கே என்று எட்டி பார்த்த காயத்ரி. அவளோ ஸ்ருதியுடன் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, வந்தவர்களை நோக்கினாள்.

“இல்லை உதய்மா ! மூட் இல்லை” என்றான் சிவா.

கௌதம் அங்கே சென்று கொண்டிருந்த சர்வரை கை காட்டி அழைத்தான்.. அவனிடம் இருந்து நான்கு குளிர் பானங்களை எடுத்து. ஒரு கிளாசை சிவாவிடம் நீட்ட..

“ஹேய்! நான் குடிக்க மாட்டேன்னு தெரியும் தானே ! ஐ டோன்ட் ட்ரின்க் கௌதம்!!” என்றான் சிவா கடுமையாக !

“என்னடா நீ, உன்னை எனக்கு தெரியாதா ? இதுல ஆல்கஹால் இல்லடா, வெறும் சோடா மிக்ஸ் பண்ண ஜூஸ் தான்… எடுத்துக்கோ சிவா!” என்றான் “நீயும் எடுத்துக்கோ காயத்ரி.” என்று சொல்லி அவளிடம் ஒரு கிளாஸ் கொடுத்தான். தனக்கும் உதயவுக்கும் கூட எடுத்துக் கொண்டான்.

“உட்காருடா கெளதம் ! இங்க உட்கார்ந்தால் யாரும் திட்ட மாட்டார்களாம் !” என்றான் சிவா புன்னகைத்த வாறே ஓரக்கண்ணில் காயத்ரியை பார்த்தபடி நக்கலாய் சொல்ல!

கௌதம் சிரித்து கொண்டே “ என்னடா சொல்றே ?” என்று கேட்க.. சிவாவோ காயத்ரியை காட்டி” இல்லப்பா இப்போதான் காயத்ரி எனக்கு சொன்னா… அதன் நான் உனக்கும் சொன்னேன். அதனால பயப்படாம உட்காருங்க !” என்று சர்வ சாதாரமாய் சொல்ல.

காயத்ரியோ கோவம் பொங்க அவனை முறைத்தாள்” ஐயோ ஸோ சுவீட் !!” என்று மறுபடி உதயா அவள் கன்னத்தை நோக்கி கிள்ளு வதற்காக பாய…அவளோ தன் கன்னங்களை கைகளால் மூடி கொண்டாள். அனைவருமே சிரித்து விட்டனர் காயத்ரி உள்பட.

****

இத்தனை ஆழமாய், சுகமாய் அவள் உறங்கி பல நாட்கள் ஆனது ! மெத்தைக்கூட இன்று இதமாய் இருந்தது.எழவே மனமில்லால் கண்களை மெதுவாக திறந்தாள் !

எத்தனை அழகான கண்கள், அந்த முகம் தான் எத்தனை வசீகரமாய் இருக்கிறது..அந்த கம்பீரமான மீசை!..என்று ஒவொன்றாய் மென்மையையாய் தொட்டு பார்த்தாள்.

“அம்மா !” என்று அவள் அலற ! அந்த சத்தத்தில் அரண்டு கண்விழித்த சிவா கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்தான்.

அவள் ஒரு புறம் ! அவன் ஒரு புறம் ! இருவர் முகத்திலும் அதிர்ச்சி !

error: Content is protected !!