NN 8

NN 8

அன்று காலை உணவின் பொழுதே கெளதம் படபடப்பாக இருந்ததைக் கண்டு சிவா என்னவென்று கேட்க, காயத்ரியும் உதயாவும் அங்கே இருப்பதால் ‘பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று ஜாடை காட்டினான் கௌதம்.

காயத்ரியும் உதயாவும் கல்லூரி சென்றுவிட, அலுவலகம் செல்லும் வழியில் காரில் சிவா

“என்னடா விஷயம்? ஏன் கார்த்தாலேயே இவளோ டென்ஷனா இருக்கே ? ” என்று காரை ஓட்டியபடியே கேட்க.

” சிவா அந்த லயா தான் டா அந்த டெண்டர் விவரங்களை ஜெ.சி குரூப்ஸ்க்கு கொடுத்திருக்கா”.

“என்ன டா சொல்றே ? அப்போ லயாவை ஏன்டா விட்டு வச்சுருக்கே? முன்னாடியே என்கிட்டே சொல்ல வேண்டியதுதானே ? “

“அவசரப் பட முடியாதுடா சிவா. அவ தனியா இதைச் செஞ்சுருக்க வாய்ப்பில்லை, பிளஸ் அவ பின்னாடி யார் இருக்கான்னு தெரியணும்டா. அதான் பொறுமையா இருக்கேன் இல்லாட்டி வர கோவத்துக்கு! ” என்று கௌதம் ஆத்திரத்தில் தன் முன்னே இருந்த கார் டேஷ்-போர்டை ஓங்கி அடித்தான்.

“ கௌதம் கூல் டௌன். நீ இப்படிப் பொறுமை இழந்து நான் பார்த்தது இல்லை, பொறுமையா டீல் பண்ணலாம். அவசரப் படாதே இன்னும் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணுவோம்டா” என்று சிவா அவனைச் சமாதானம் செய்தான்.

மதியமே உடல்நிலை சரி இல்லை ஓய்வு தேவை என்று கௌதம் வீட்டிற்குக் கிளம்பிவிட்டான்.

மாலை சிவா வீட்டிற்குள் நுழைந்தவுடன்

“அண்ணா கௌதம் எங்கே? எவ்ளோநேரம் போன் பண்றேன் எடுக்கவே மாட்டேங்கறான். மீட்டிங் இருந்துருக்கும் அதுனால எடுக்கலைனு நெனச்சேன். எங்க அந்தத் தடியன்?” என்று அவன் பின்னால் கௌதம் இருக்கிறானா என்று உதயா தேட,

“ உதயா அவன் வீட்டுக்கு அப்போவே கெளம்பிட்டானே. நீ வரும்போது அவன் இல்லையா ? “ என்று அவன் கேட்க

“இல்லையே, நாங்க காலேஜ் முடிஞ்சு வரச்சே வீடு பூட்டித்தானே இருந்துது“ என்றபடி காயத்ரி அங்கு வந்து சேர்ந்தாள்.

சிவா கௌதமின் போனிற்குக் கால் செய்து பார்த்து ரிங் அடிக்கர்து ஆனா எடுக்க மாட்டேன்றானே! “ என்று யோசிக்க.

காயத்ரியோ உள்ளுக்குள் தன் கனவை நினைத்து பதற, வெளியே உதயாவிடம் எதையும் காட்டி கொள்ளாமல், சிவாவிற்கு மெதுவாக வாட்சப்பில்

“ அண்ணா எங்க போயிருப்பார் ? எனக்குப் பயமா இருக்கு சிவா. ஒருவேளை என் கனவுல வந்த மாதிரி?.” என்று அனுப்ப.

அந்த மெஸ்சேஜை படித்த சிவா ‘அப்படி ஏதும் நேர்ந்திருக்காது’ என்று அவளிற்குப் பதில் அனுப்பிவிட்டு, யாருக்கோ ஃபோன் செய்து கொண்டே தோட்டத்திற்குச் சென்றான்.

அங்கு அவன் ” எஸ்! கெளதம் ஃபோன் எந்த ஏரியால இருக்குனு இப்பவே செக் பண்ணு! அர்ஜென்ட் ! ” என்று யாருக்கோ கட்டளை பிறப்பித்தவன் அங்கேயே உலவி கொண்டு இருந்தான் .

சிறிது நேரத்தில் அவன் கைப்பேசி ஒலிக்க அதை எடுத்துப் பேசியவன் ” வாட் ? அங்க எப்படி ? சரி தேங்க்ஸ் எனக்கு இன்னும் ஒரு ஹெல்ப்” என்று தனக்கு வேண்டியதைக் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவசரமாக ஹாலுக்குச் சென்ற சிவா ” உதயாம்மா ! நான் காயத்ரி கூடக் கொஞ்சம் வெளில போகணும். நீ இங்க தனியா இருக்க வேண்டாம் லட்சுமி வீட்டுக்குப் போய் இரேன்? நான் வரும்போது உன்னையும் பிக்-அப் பணிகிறேன்” என்றான்.

“என்ன அண்ணா எதானபிரச்சனையா? நான் இங்கேயே இருக்கேனே! ” என்று உதயா தயங்க,

“இல்லமா நான் காரணம் இல்லாம சொல்வேனா? பிரச்சனை ஒன்னும் இல்ல. டோன்ட் பி சில்லி ” என்று சொல்லி அவளைச் சம்மதிக்க வைத்தவன, அவளை லக்ஷ்மியின் வீட்டில் விட்டு விட்டு, காயத்ரியுடன் கிளப்பினான் .

” சிவா ! இப்போவாது சொல்லுங்க கெளதம் அண்ணா எங்க? உதயா பயப்படக் கூடாதுன்னு நான் அவகிட்ட கனவை பற்றிச் சொல்லல ! ப்ளீஸ் சொல்லுங்க என்ன நடக்குது ? ” என்று காயத்ரி கெஞ்ச.

” தெரியலை, காயு. கௌதம் இப்போ எங்க இருக்கானு சரியா தெரியல” என்றவன் ஆழந்த மௌனத்திற்கு பிறகு,

“அத கண்டுபிடிக்க நீ எனக்கு உதவனும். அவன் செல்போன் இருக்குமிடம் அவ்ளோ துல்லியமா எனக்குத் தெரியல ஆனா அந்த ஏரியான்னு மட்டும் தெரியும் அங்க நீ கனவுல பார்த்த மாதிரி இடம் இருந்தா எனக்குக் காட்டு ப்ளீஸ். ஸ்டே அலெர்ட் அண்ட் கான்பிடென்ட் “ என்று சொல்ல,

அவளோ மனதை பயம் சூழ்ந்தாலும், சிவாவின் தைரியத்தை குலைக்காமல் இருக்க ” கண்டிப்பா அண்ணாவுக்கு ஒன்னும் ஆகாது, நான் உங்களை நம்பறேன் சிவா! ” என்று சொல்லி கண்களை மூடி தன்னால் முயன்றவரை அந்தக் கனவை நினைவு படுத்திக்கொள்ள முயல ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தவள் “சே! டைரில எழுதவேணாம்னு சொல்லிடீங்க. இப்போ பாருங்க கொஞ்சம் கொஞ்சம் தான் ஞாபகம் வருது “ என்று ஆதங்கப்பட .

“சாரி காயு என் தப்புதான். இன்னும் சீரியசா இருந்துருக்கும் சாரி பொறுமையா எவ்ளோ முடியுதோ நினைவு படுத்திப் பாரு ப்ளீஸ்”.

சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருந்த ஒரு மலை அடிவாரத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். அந்த இடமே புதரும் மரங்களும் சூழ காடுபோல் காட்சியளித்தது.

“காயு இங்க எதாவது நீ பார்த்த இடம்போல் இருக்கா பாரு மா . சீக்கிரமா ப்ளீஸ். நானும் இந்தப் பக்கம் தேடறேன் ” என்று அவன் சொல்ல ஆளுக்கொரு புறமாய்த் தேட துவங்கினார்கள்.

சிவாவும் கௌதமின் செல்லிற்கு விடாமல் கால் செய்து அந்த ஒலி எங்காவது கேட்கிறதா என்று கேட்டுக் கொண்டே வேகமாக நடந்தான் !

” சிவா இங்கே ! இது கெளதம் அண்ணா ஃபோன் தானே?” என்று அவள் அலற, பதறிய படி அவள் இருந்த இடத்திற்கு விரைந்தான் சிவா .

அங்கே புதரின் பக்கம் கௌதமின் ஃபோன் ஸ்கிரீன் உடைந்து கிடைக்க, அதில் சிவாவின் எண் கொஞ்சம் மட்டுமே தெரிந்தபடி வைப்ரேட் ஆகிக் கொண்டிருந்தது.

அதை எடுத்துக்கொண்ட சிவா “காயு, கண்டிப்பா இங்க பக்கத்துலதான் எங்கயோ கெளதம் இருக்கனும் வா ” என்று சொல்ல காயத்ரியோ அசைவு இல்லாமல் நின்றிருந்தாள்.

கண்கள் அகல விரித்து அவனைப் பார்த்து ” சிவா, கெளதம் அண்ணா தலையில் ரத்தம் வந்துட்டு இருக்கும்பொழுது அவர் பின்னால் ஏரியோ, குளமோ இருக்குறமாதி தோணுது, லயாவும் அங்கேயே நிக்குறா!. இங்க நம்ம பக்கத்துல எதானா இடம் அப்படி இருக்கா ? ” என்று பதற .

” வெயிட் பாக்கறேன்” என்றவன் , தன் மொபைலில் மேப்ப்பை திறந்து சுற்று வட்டாரத்தில் எங்காவது நீர் நிலை இருக்கிறதா என்று தேடினான்.

” காட் இட் ! வா” என்று அவளையும் காருக்கு விரைந்தவன். காரில் மறுநொடி தன் கைப்பேசியில் யாருக்கோ மெசேஜ் அனுப்பி விட்டு , கால் செய்தான்

“நான் லொகேஷன் ஷேர் பண்றேன் சீக்கிரமா வாங்க ” என்றபடி காரில் சீறி பாய்ந்தான்.

அவன் மேப்பில் குறித்த இடத்தை நெருங்கியதும் அவ்விடத்திற்குச் சற்று முன்னதாகவே காரை நிறுத்தி

” சத்தம் போடாமல் போகணும் காயு, நாம வரோம்னு யாருக்கும் தெரியக் கூடாது. புரியுதா? வா ” என்று காயத்ரியிடம் எச்சரித்துவிட்டு மெல்ல அந்த ஏரியின் அருகில் புதர்களில் ஒளிந்து ஒளிந்து அவர்கள் சென்றபொழுது.

காயத்ரி தன் கையால் வாயை மூடி கொண்டாள் !

“என்ன?” என்று சிவா கிசு கிசுக்க. அவள் கைகாட்டிய திசையில் தான் கண்ட காட்சியின் உறைந்து நின்றான்.

அங்கே முகமெல்லாம் ரத்தம் வழிய கௌதம் கீழே விழுந்து கிடந்தான். அவன் அருகில் லயாவும் எவனோ ஒருவனும் யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தனர்.
சற்றும் தாமதிக்காமல், மெல்ல ஓசை எழுப்பாமல் பதுங்கி அவர்களின் பின் புறமாய்ச் சென்ற சிவா ஒரே பாய்ச்சலில் அந்த ஆணை உதைத்து கீழே தள்ள, அவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். அவன் முகத்தைத் திருப்பிப் பார்த்த சிவா, அவன் திவாகர் என்று தெரிந்ததும் அதிர்ந்தவன் விடாமல் அவன் முகத்தில் இடியென அடிக்கத் துவங்கினான்.

லயாவோ இந்தத் திடீர் தாக்குதலை கண்டு பயத்தில் இரண்டடி பின்னே செல்ல அவள் எதிர்பாராத நேரம் கையில் கிடைத்த கல்லால் காயத்ரி, அவள் பின் தலையில் தாக்க லயா அலறியபடி கீழே விழுந்தாள். அவள் முதுகில் கால் முட்டியால் அழுத்திய காயத்ரி அவள் கைகளைப் பின்னல் முறுக்கி இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அங்கே ஒரு ஜீப்பும், அம்புலனஸும் வந்தது . ஜீப்பிலிருந்து சிவாவின் மெய்காப்பாளர்கள் நான்கு பேர் தட தடவென இறங்கி திவாகரையும், லயாவையும் தூக்கி ஜீப்பில் அள்ளி போட்டுகொண்டு நொடியில் பறந்துவிட்டனர்.

ஆம்புலன்ஸில் கௌதமை ஏற்றியவுடன் காயத்ரியும் கௌதமுடன் கிளம்ப, சிவா தன் காரில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

எதோ எல்லா அறிந்து தயாராய் இருந்தது போல ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் இருவர் கௌதமிற்கு முதலுதவி செய்யத் துவங்கினர். அரைமணி நேரத்திற்குள் ஹாஸ்பிடலை சென்றடைந்தவர்கள் அவனை ஆப்ரேஷன் தியேட்டருக்கு வேகமாய் எடுத்து சென்றனர்.

ஆப்ரேஷன் தியேட்டர் வெளியே சிவா கண்களை மூடி , இறுக்கமாய் அமர்ந்திருக்க, காயத்ரியோ அங்கிருந்த பிள்ளையார் சிலைக்கு அருகிலேயே நின்று வேண்டி கொண்டு இருந்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த தலைமை மருத்துவர் ” சிவா சார் ! அவர் உயிருக்கு ஆபத்தில்லை, ஹி இஸ் அவுட் ஆப் டேஞ்சர் ! “ என்று சொன்னவுடன் தான் சிவாவிற்கு உயிரே வந்தது.

அவர் மேலும் “நல்ல வேலை நீங்க எங்களுக்கு முன்னாடியே தகவல் சொன்னதால் நாங்கள் பி+ குரூப் ரத்தத்துடன் தயாராய் இருந்தோம். தலையில் பலமாய் அடிபட்டு இருக்கு, நிறையப் பிளட் லாஸ் வேற. வலது கையில் மைல்டா எலும்பு முறிவு, மற்றபடி ஹி இஸ் ஓகே .

இன்னும் கொஞ்ச நேரத்துல ரூம்க்கு ஷிபிட் பண்ணிடுவோம். ஒருவாரம் இங்கே இருக்கட்டும் அப்புறம் வீட்டிற்குக் கூட்டிட்டுப் போகலாம். கவலை படவேண்டியதில்லை” என்று சிவாவிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.

காயத்ரியிடம் அனைத்தையும் தெரிவித்த சிவா, அவளை அங்கேயே இருக்கும் படி சொல்லிவிட்டு உதயாவை அழைத்து வர கிளம்பினான் .

கெளதம் ரூமிற்க்கு மாற்றப்படக் காயத்ரி அவனுடன் அந்த அறையிலேயே இருந்தாள். வாசலில் இரு மெய் காப்பாளர்கள் நின்று கொண்டனர் !

அங்குவந்த உதயா கௌதமை பார்த்து கதறி அழ அவளைத் தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டுப் போனார்கள் சிவாவும் காயத்ரியும்.

“சாரி உதயாம்மா அவன் வீட்டுக்குப் போறான்னு தான் நானும் கவன குறைவா விட்டுட்டேன் . இவன் ஏன் என்கிட்ட சொல்லாம அங்கே போனான்? இடியட் ! ஏன் இப்படிப் பாடி கார்ட்ஸ் இல்லாம இவன் அவ்ளோ ரிஸ்க் எடுத்தான்? ” என்று சிவா குற்ற உணர்ச்சியில் பொருமிக்கொண்டு இருந்தான் .

மூவருமே அன்றிரவு அந்த அறையிலேயே தங்கினார்கள்… உதயா அங்கே இருந்த அட்டெண்டர் பெட்டில் அழுது அழுது களைத்து உறங்கி விட, காயத்ரியோ வெளியே சாலையை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

சிவா குறுக்கும் நெடுக்கும் வெகுநேரம் நடந்து பின்பு காயத்ரியின் அருகே சென்று “காயு நீயும் கொஞ்சம் தூங்கு ! நான் முழிச்சுருக்கேன்ல போறும் ! ” என்றான் .

“நோ சிவா! தூங்கவே பயமா இருக்கு. வேற எதான கனவு வந்தா? எல்லாம் என்னால தான் ! நேத்தே இன்னும் கவனமா இருக்கும் படி அவருக்கு அறிவுறுத்தி இருக்கணும் ! அவர் ஜோக் அடிக்க நானும் அதைப் பெருசா எடுத்துக்காம விட்டேனே! எல்லாம் என்னாலதான் ! ” என்று பிதற்றியபடி ஜன்னல் வழியே சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள் .

சிவாவோ கோவமாய் ” ஸ்டுபிட் ! லூசாடி நீ ? நீ அந்தக் கனவை பார்கலைனா நமக்கு இன்னிக்கி கௌதமிற்கு ஆபத்துன்னு எப்படித் தெரிஞ்சு இருக்கும்? அவனை எப்படிக் கண்டு பிடிச்சு காப்பாத்தி இருப்போம்? எல்லாம் நன்மைக்கே ! ஏதாவது உளறிக்கிட்டு இருக்காம தூங்கு போ ! ”

அவளோ அவன் சொன்னதைச் சற்றும் காதில் வாங்காமல்
” சிவா! அவர் எப்போ கண் திறப்பார்? இது நல்ல ஹாஸ்பிடல் தானே? வேற எங்கயாவது கூட்டிண்டு போகலாமா? எனக்குப் பயமா இருக்கு. இவங்க நல்ல டாக்டர்ஸா ? இவருக்கு ஒழுங்கா ட்ரீட்மெண்ட் கொடுத்து இருப்பாங்களா? ” என்று தன் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே போனாள்.

மெல்ல புன்னகைத்த சிவா, அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் இருபக்க கைபிடியிலும் கைகளை ஊன்றியபடி குனிந்து, அவள் கண்களைத் தீர்க்கமாய்ப் பார்த்து

“திஸ் ஈஸ் தி பெஸ்ட் ஹாஸ்பிடல் இன் சென்னை ! அதுவும் நம்ம கௌதமிற்குப் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுக்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி விட்டுடுவேனா? எல்லாரையும் தொலைச்சுட மாட்டேன் தொலைச்சு! ” என்றான் கொஞ்சம் மிடுக்காய்.

“சிவா எல்லா இடத்திலும் நீங்க அதிகாரம் செய்ய முடியாது. அவங்க கிட்ட ஏதாவது இப்படி ஏடாகுடமா பேசி வைக்காதீங்க. நம்ம கெளதம் அண்ணா சீக்கிரம் குணமாகனும் அவ்ளோதான் நமக்கு வேணும். ” என்று காயத்ரி முடிக்கும் முன்பே…

“இங்க தான் கௌதமிற்குப் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கிடைக்கும்! நான் உத்திரவாதம் தரேன் ! ” என்றவன் நிமிர்ந்து தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு உறுதியாய்ச் சொன்னான்

“நீங்க எப்படி அவ்ளோ காண்பிடேண்டா சொல்றீங்க? ”

சிவாவோ அவளைத் தீர்க்கமாய்ப் பார்த்து ” திஸ் ஈஸ் மை ஹாஸ்பிடல் பேபி ! இந்த ஹாஸ்பிடல் சேர்மேன் என்ற முறையில் நான் காண்பிடேண்டா சொல்லலைனா யார் சொல்லுவா டியர் ? ” என்று கேட்க.

” உங்க ஹாஸ்பிடலா? நீங்க எதோ சாப்ட்வேர் கம்பெனி தானே நடத்துறீங்க? ” என்று அவள் மேலும் குழப்பமாய்க் கேட்க,

” சூப்பர்! நீ ஹாஸ்பிடல் பேரையே பார்கலாயா? என்னத்த விஸ்காம் படிக்கிறியோ? கண்ணைத் திறந்து பாரு! ” என்று அங்கிருந்த போஸ்டர் ஒன்றை காட்ட.

அதில் “S&G Group of Hospitals’ என்று பெயரும, கீழே அவர்களின் சிறப்பம்சங்களைப் பற்றியும், எங்கெங்கு கிளைகள் இருக்கின்றன என்ற பட்டியலும் இருந்தன.

படுக்கையில் கைகளில் ட்ரிப்ஸ்சும் தலையிலும், காலிலும் கட்டுமாய்ப் படுத்திருந்த கௌதமை காட்டி ” பிளஸ் இப்போ இங்க படுத்து இருக்கிற இவன் இந்த ஹாஸ்பிடல் போர்டு மெம்பெர்! இப்போ நம்பறியா இவனுக்கு இங்க நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு ? ” என்றான் சிவா.

” சாரி தெரியாம சொல்லிட்டேன் !” என்று இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டாள் காயத்ரி புன்னகைத்தபடியே. அவள் மனதில் இப்பொழுதுதான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது.

நள்ளிரவு கௌதமிற்கு மயக்கம் தெளிந்தாலும் அவன் சோர்வாய் உறங்கி கொண்டே இருக்க, அடிக்கடி டாக்டர், நர்ஸ்கள் என வந்து பார்த்து சென்றனர்.

காயத்ரி அமர்ந்தபடி உறங்கிவிட, சிவாவோ கௌதமின் கையைப் பிடித்துக் கொண்டே உறங்கியும் முழித்தும் இரவை கழித்தான்.

error: Content is protected !!