நீயும் நானும் அன்பே…
அன்பு-16
நண்பர்களின் முழு ஒத்துழைப்போடு திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவன், மனமெல்லாம் அன்றைய நிகழ்வுகளில் நிரம்பியிருந்தது.
வந்தவர்கள் அனைவரும் சென்றிருக்க, மிக நெருங்கிய தோழர்கள் மட்டும் நால்வர் உடனிருந்தனர்.
“சாப்பிடுட்டு கிளம்புங்க… இனி நான் பாத்துக்கறேன்”, என்று சங்கர் கூற
“மச்சான் ரெண்டு நாளைக்கு நாங்க… இங்க தான் இருப்போம்! நீ சிஸ்டரைப் போயி கவனி”, என்று ஒருவன் கூற
மற்றொருவன், “சிஸ்டரில்லை மாப்பிள்ளை… டாக்டரூடா”, என்று திருத்த
வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த சாமியானாவிற்குள் மண்தரையில் பாயை விரித்து, படுத்திருந்த நால்வரும் இணைந்து சங்கரைக் கிண்டல் செய்ய…
அதுவரை இருந்த இறுக்கம் மறைந்தவனாய் தானும் பதிலுக்கு அவர்களின் கேலிக்கு பதில் கொடுக்க, என்று கலகலப்பாக அரட்டையடித்தபடி பொழுது சென்றது.
சங்கர், தான் இனி பார்த்துக் கொள்வதாகக் கூறியும், வீட்டிற்குச் செல்லாமல் அங்கேயே தங்கி இருந்தனர். எதாவது பெண்ணின் வீட்டிலிருந்து பிரச்சனை வந்தால் தனியாளாக சமாளிக்கச் சிரமமாக இருக்கும் என்ற எண்ணத்தில், இரு நாள்களுக்கு முன்பிருந்தே நண்பர்கள் அவர்களாகவே சங்கருக்கு உதவ முன்வந்திருந்தனர்.
பெரியளவில் சமையல் செய்ய உரிய வசதி அவ்வீட்டில் இல்லாததால், இரவு உணவிற்கு வெளியிலிருந்து தருவிக்க ஏற்பாடு செய்திருந்தான் சங்கர்.
பெண்கள் அதனால் வேலைப்பளு இல்லாமல், வீட்டை ஒழுங்குபடுத்துவதில் முனைந்திருந்தனர்.
அன்னம்மாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை ஏவியபடி இருந்தார்.
மோனிகா தனி ஒருத்தியாக வேலை செய்வதைக் கண்ட நவீனா, “நானும் உனக்கு ஹெல்ப் பண்ணவா”, என்று முன்வர
“போம்மா… புதுப்பொண்ணு…! இன்னும் எத்தனை நாளுக்கு இந்த ரெஸ்ட் எல்லாம் கிடைக்கும்னு சொல்ல முடியாது…! அதுவரை நல்லா அனுபவி…! அதுக்கப்புறம் நீயா நினைச்சாகூட ரெஸ்ட் கிடைக்காது!”, என்று நவீனாவை அங்கிருந்து அகற்றியிருந்தாள் மோனிகா.
தனிமையில் சென்றமர்ந்த பெண்ணுக்கு, தந்தையும், தாயும் வந்து சென்றது, சாந்தனுவின் வீட்டினர் வந்து பேசிச் சென்றது, அனைத்தும் மனதில் வந்து இம்சித்து, இரக்கமில்லாமல் புது மணப்பெண்ணை மனதால் புழுங்கச் செய்தது.
/////////
மருமகளின் ஒவ்வொரு செயலையும் கவனித்தவாறே இருந்த சசிகலா, “நவீனா இங்க வா…!”, என்று அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தார்.
“என்னத்தை…!” என்று மாமியாரின் பின்னோடு சென்றவளை, வேறு ஆடையை உடுத்தச் செய்தார் புஷ்பா.
மருமகளுக்கு காலையில் செய்திருந்த அலங்காரங்களை அகற்ற உதவியர், தலையை வாரி மதுரை மல்லியை தலைநிறைய வைத்தார்.
அதுவரை பெண் அதிகம் பூ வைத்துப் பழக்கமில்லாததால், “அத்தை போதும்”, என்று சிணுங்க
“இன்னிக்கு ஒரு நாளாவது வச்சிக்கடா.. யாராவது உன்னைப் பாக்க வந்தா… இப்டி பூ கொஞ்சமா வச்சிருக்கறது நல்லா இருக்காது”, என்று காரணத்தைக் கூறினார்.
பார்த்து, பார்த்து மருமகளை அழகுபடுத்தியவர் திருப்தியானதும், ‘இப்பத்தான் நல்லாயிருக்கு’ என்று திருப்தியுற…
பெண் மாமியாரை கேள்வியாக நோக்க, “உங்களுக்கு எப்பத் தோணுதோ உங்க வாழ்க்கைய நீங்க வாழத் துவங்குங்க…! பெரியவங்களுக்குனு சில கடமைகள் இருக்கு…! எங்க பங்குக்கு செய்ய வேண்டியதைச் செய்யனும்னு… வழக்கமா செய்யறதை நாள் பாத்து… நல்ல நாளா இருக்கறதால… இன்னிக்கே ஏற்பாடு பண்றதா இருக்கோம்!”, என்று இழுத்தவர்
மருமகளின் மிரண்ட பார்வையைக் கண்டார்.
“நவீனா… உம்மனசு எனக்குப் புரியுது…! அதுக்காக நடந்ததையே நினைச்சு துவண்டு போயிறக்கூடாது. நடந்தது நடந்து போச்சு. இனி அதை மாத்த முடியாது. ஆனா நீங்க ரெண்டுபேரும் ஒற்றுமையா சீரும், சிறப்புமா வாழற வாழ்க்கையப் பாத்து அண்ணன் மனசு மாறிரும்!”, என்று அன்றைய நிகழ்விலிருந்து மீள முடியாமல் தவித்த மருமகளிடம் ஆறுதல் கூற
“எனக்குப் புரியுதுத்தை!”, என்றவளின் கண்களில் இருந்தது கரகரவென கண்ணீர் வழியத் துவங்கியதைக் கண்டு பதறியவர்
“அம்மாடி…! நல்ல நாளும் அதுவும் இப்டி அழுகாத…! என்ன செய்யலாம் சொல்லு…! உன் மனசுக்கு பிடிச்ச மாதிரியே பண்ணலாம்!”, என்று சமாதானமாகப் பேச…
“என்னாலதான…! உங்க எல்லாருக்கும் இவ்வளவு கஷ்டம்!”, என்று பெண் தடுமாற்றம் நிறைந்த குரலோடு கேட்க
“உன்னால ஒரு கஷ்டமும் இல்ல…! உங்க கல்யாணம் இப்டித்தான் நடக்கணும்னு ஆண்டவன் நினைச்சிருந்திருக்கான். அதுமாதிரி நடந்துருச்சு. இனி அதையே நினைச்சு வருத்தப்படக்கூடாது!”, என்று பெண்ணைத் தேற்றினார் சசிகலா.
ஒருவழியாக தேறியவள் சிறுபிள்ளைபோல, “மாமா மாதிரியே… இவங்களும் அப்டி பண்ணிருவாங்கனு அப்பா சொன்னப்போ… இவங்க முகமே சரியில்லை…! எம்மேல, நான் எடுத்த முடிவுனால, ரொம்ப வருத்தத்துல இருப்பாங்களோனு இருக்கு!”, என்று சங்கடமாகக் கூறினாள்.
அன்று காலை திருநாண் பூட்டலுக்குப் பிறகு, நவீனாவிடம் இலகுவாக சீண்டியபடி இருந்தவன், வீட்டில் நடந்த களேபரங்களுக்குப் பிறகு, பெண் இருந்த பக்கமாக வரவே இல்லை என்பதால் நவீனா மனதளவில் கணவனின் செயலில் கவலைக்குள்ளாகி இருந்தாள்.
அதன்தாக்கமே பெண்ணை அவ்வாறு சிந்திக்க செய்திருக்க, ”… நாந்தான் அவசரப்பட்டு உங்களை எல்லாம் சங்கடத்தில நிறுத்திட்டேன்!”, என்று மீண்டும் கண்ணில் நீரோடு நவீனா நிற்க…
“உங்க மாமா பண்ண தப்பை, சங்கரும் பண்ணுவான்னு உனக்கு பயமா இருக்கா நவீனா?”, என்று சசிகலா நவீனாவிடம் நேரடியாகக் கேட்க
“இல்லைத்தை!”, என்று திடமாக மறுத்தவள்,
“எனக்கு அப்டி சந்தேகம்லாம் இல்லை…! எனக்கு எட்டு வருசமா அவங்களை நல்லா தெரியும்! ஆனா உங்க எல்லாருக்கும் என்னாலதான தலைகுனிவா போயிருச்சு!”, என்று பெண் வருந்த…
“அதையெல்லாம் போட்டு மனசுல குழப்பாம… ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் ஒற்றுமையா, சின்னச் சின்ன சண்டை சச்சரவு வந்தாலும், உங்களுக்குள்ளயே சமாதானமாகி, இளக்காரமா பேசிட்டு போனவங்க முன்ன… வியந்து போற அளவுக்கு சந்தோசமா வாழ்ந்து காட்டனும்!”, என்று இலட்சிய வார்த்தைகளைக் கூறி மருமகளைத் தேற்றினார் சசி.
“ம்…”, என்று தலையை ஆட்டிய மருமகளை ஆதூரமாகத் தலையை தடவிக் கொடுத்தவர்
“அத்தை ஒன்னு சொல்லுவேன்…!”, என்று சசிகலா மருமகளிடம் பீடிகைபோட
‘சொல்லுங்கத்தை’ என்பதுபோல சசியிடம் கவனம் வைத்து நின்றவளைப் பார்த்து,
“காலத்துக்கு காலம் மக்களோட மனங்கள் மாறினாலும் சில விசயங்கள் மாறாது…! அதைப் பத்தி உங்கிட்ட சொல்லனும்!”, என்று பீடிகையோடுடனான பேச்சினைத் தயக்கத்துடன் சசிகலா துவங்க…
தயக்கத்தைப் போக்கும் விதமாக சசியைப் பார்த்து, “சொல்லுங்கத்தை…”, என்று இளநகையோடு பேசத் தூண்டியவளிடம்
“உங்க ரெண்டு பேரோட புரொஃபசனும் எதிரெதிரா இருக்கு…! நீ டாக்டரா இருந்தாலும், ஒரு கணவனுக்குரிய நியாமான எதிர்பார்ப்பா… உன்னோட கவனிப்பு அவனுக்கு எப்போதும் தேவை…! அதைப் புரிஞ்சு நீ சமத்தா நடந்துக்கணும்”, என்றவர்
நவீனாவின் முகமாறுதல்களைக் கவனித்தவாறே, “அதுக்காக உன்னை உன் சவுகரியதை, உன்னோட சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்கச் சொல்ல மாட்டேன். அவனும் அப்டி எதிர்பார்க்கமாட்டான். ஆனா… நீ இன்னியிலிருந்து ஒரு குடும்பத்துக்கு தலைவிங்கறதை எந்த சூழல்லயும் மறந்துறக்கூடாது…! அப்பத்தான் நல்ல அனுசரனையான சந்தோசமான வாழ்க்கை அமையும்!”, என்று கூற அமைதியாக செவிமடுத்திருந்த மருமகளை வாஞ்சையாக தன்னோடு அணைத்து
“உனக்கு அத்தை என்ன சொல்ல வரேன்னு புரியுதுல்ல!”, என்று நவீனாவிடம் கேட்க
“என்ன சொல்லனும்னு நினைக்கிறீங்களோ. அதை தயங்காம எங்கிட்ட ஓப்பனாவே சொல்லுங்கத்தை!”, என்று நவீனா பதில் கூறியிருந்தாள்.
“அண்ணன் இன்னிக்கு… உன்னைப் பாத்துச் சொன்ன வார்த்தைய உண்மையாக்குறதும், பொய்யாக்குறதும் குடும்பத் தலைவியான உங்கைலதான் இருக்கு…!”, என்று சசி நிறுத்த
மிரட்சியான பார்வையோடு மாமியாரை நோக்கியவளை ஆதூரமாகத் தட்டிக் கொடுத்தார்.
அத்தோடு, “ஆம்பிளைங்க… ஒவ்வொருத்தவங்களும் வளர்ந்த சூழலுக்கு ஏத்த மாதிரி கடைசிவரை இருப்பாங்க…! அவ்வளவு சீக்கிரமா அவங்களை மாத்திக்க மாட்டாங்க.
காலங்காலமா பொண்ணுகதான் வாழ்க்கைய தக்க வச்சிக்கவும், குடும்பம் சிதறாம இருக்கவும் நிறைய விசயங்கள்ல விட்டுக் கொடுக்கறமாதிரி இருக்கும்.
அதுனால எந்தப் பொண்ணும் குறைஞ்சி போயிட்டதா நினைக்கக்கூடாது. வீம்பு பண்ணா குடும்பம் சிதஞ்சிரும். புள்ளைங்கதான் ரெண்டு பேருக்குமிடையில கஷ்டப்படுவாங்க…”, என்று நிறுத்தியவர்
“சங்கரப்பா… அதான் உங்க மாமா தவறினதா ஊரே பேசினது உனக்கும் தெரிஞ்சிருக்கும்!
அப்டிப் பேசினவனங்க பாதிபேரு, போற ஊருல எல்லாம் தப்புப் பண்ணிட்டு வந்தவங்கதான்…! எவனும் யோக்கியன்னு சொல்ல முடியாது.
ஏன்னா யோக்கியனுக்கு இதைப் பத்தி பேச நேரமிருக்காது!
நேரமிருக்காதுங்கறதைவிட அடுத்தவங்களைப் பத்தின புறணி பேசுறதுல அவங்களுக்கு ஈடுபாடு இருக்காது!
உங்க மாமா செய்ததை நான் நியாயப்படுத்தலை. ஆனா அவரோட தவறுல எனக்கும் பங்கிருக்கு…!”, என்று சசி நிறுத்த
“என்னத்தை சொல்றீங்க!”, என்று அதிர்ந்து போய் பெண் கேட்டாள்.
“உண்மைதான்…! உணர்வுகளோட தேடல் அப்டிங்கற நிலையில மனுசங்க இருக்கும்போது… உறவா, உணர்வாங்கற போராட்டத்துல… உணர்வு ஜெயிக்கறதும் நடக்கும்.
சிலரோட கட்டுக்கோப்பான பழக்கவழக்கத்தால, உறவுகளை நினைச்சு தன்னோட உணர்வுகளை தங்களுக்குள்ள புதைத்துச்சுக்கறதும் உண்டு.
நீண்ட காலத் தனிமையை தன்னோட வாழ்க்கைத் துணைக்கு கொடுத்துட்டு, எனக்கென்னனு ஒரு பொம்பிளை கட்டுனவனை கவனிக்காம இருந்தா… கட்டுப்பாடு அதிகமில்லாதவங்க யாராக இருந்தாலும் தவறுறது இயல்புதான்.
சங்கரு டெலிவரிக்கு வந்திருந்த நான், பெரியவங்க சொன்னதைக் கேட்டு, இங்கேயே இருந்திட்டேன். அவங்க சொன்னாங்க… இவங்க சொன்னாங்கனு இருந்த என் முட்டாள்தனத்தால என்னையே சுத்தி சுத்தி வந்தவரு, நான் எதிர்பார்க்காத அளவுக்கு மாறிட்டாரு…!
எனக்குத்தான், மனைவி அப்டிங்கற நிலையில அவரோட உணர்வுகளோட தேடல் தெரியும். புரியும்… அப்டி சொல்றதைவிட புரிஞ்சி வச்சிருந்திருக்கனும்.
அப்டியிருக்க… அதை நான் ஒரு பொருட்டா நினைக்காம இருந்ததால… அதே நேரம் அவரோட வீக்னெஸ் புரிஞ்சிட்டவங்க… அவரை தன்னோட எண்ணத்துக்கு ஏற்றமாதிரி மாத்திட்டாங்க..!
அப்போ சங்கரப்பா பண்ண தப்புல எனக்கும் பங்கிருக்குதான…!
அதுக்குத்தான் சொல்றேன்… என் மகனுக்கு கஷ்டம் புரிஞ்சு வளர்ந்திருந்தாலும், கட்டுப்பாடு அதிகமிருந்தாலும்… உறவுக்கு மதிப்புக் கொடுக்கறவன்தான் அப்டினாலும், மாறுறதுக்குரிய வாய்ப்பை நீயும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லறேன்!”, என்று தெளிவாகவே விளக்கியிருந்தார் சசிகலா.
“இல்லைத்தை… அவங்க அப்டி மாமா மாதிரியில்லை!”, என்று நவீனா தன்னவனுக்கு கொடி பிடிக்க
பெண்ணின் பேச்சைக் கேட்டு இதழ்களில் சிரிப்பை மின்னல்போல வெளியிட்டவர்
“எங்க அம்மாச்சிதான் அடிக்கடி சொல்லும்…”, என்று தனது ஆச்சியின் வார்த்தையான, ‘ஒரு ஆம்பிளையோ, பொம்பிளையோ கல்யாணத்துக்கு பின்ன தப்பா போனா அதுக்கு அவன் பொண்டாட்டியோ, இல்லை புருசனோதான் காரணமா இருக்க முடியும்’, என்பதை சசிகலா நினைவு கூற
விழிவிரித்துப் பார்த்தபடியே யோசனையில் இருந்தவளை, “அதுக்காக சந்தேகப்படச் சொல்லலை நவீனா… நாம ஒழுங்கா இருந்தா அவங்களும் சரியா இருப்பாங்க…! நம்ம கடமையை நாம சரியா செய்ய தவறும்போது, இந்த மாதிரி எதிர்பாராத இன்னல் எல்லாம் வரக்கூடிய வாய்ப்பு அதிகம்”, என்று ஆதரவாக அணைத்தபடியே மருமகளுக்கு கூறியிருந்தார் சசிகலா.
“நிறைய ஜென்ட்ஸ் ஃபாரின்ல போயி சம்பாதிச்சிட்டு ஒழுங்கா வரத்தானே செய்யறாங்க?”, என்று அவள் இதுவரை சந்தித்தவர்களைக் கண்ணுற்று, மனதில் தோன்றிய கேள்வியை நவீனா முன்னே வைக்க…
“எவ்வளவு நல்லா சுவையா, வேளைக்கு செஞ்சு கொடுத்தாலும் வெளியே போயி சாப்டாத்தான் சாப்ட மாதிரி இருக்கும்னு நினைச்சு வாழற சிலர் இருப்பாங்க… அந்த மாதிரி இருக்கிறவனை என்னதான் நீ கண்காணிச்சு கண்ணாடிக்குள்ள அடைச்சு வச்சன்னாலும், அவனுக்கு தேவையான தேடலுக்கு வடிகாலா ஒருத்தி எப்போவும் இருந்தாலும், அவனால ஒழுங்கா இருக்க முடியாது. இதுவா, அதுவான்னு மனசு கிடந்து அலைபாயும். அந்த மாதிரி ஆளுங்க தப்பு பண்றதை இயல்பா செய்துட்டு திரிவாங்க…!”, என்று உலக வழக்கை எடுத்துக் கூறினார் சசிகலா.
“சிலர், மானம், மரியாதை, குடும்ப கௌரவம்… பொண்ணுங்களோட பிறந்திருக்கனு… இப்டியே சொல்லி சொல்லி வளர்த்து… உறவுகள் பெரிசுன்னு… ஒரு வரைமுறைக்கு உட்பட்டு வளந்திருப்பாங்க… அப்படிப்பட்டவங்க தவறக்கூடிய சூழல் வந்தாலும், விழிப்போட அதில மாட்டாம சூதனமா தப்பிச்சு வந்திருவாங்க… அந்த மாதிரி ஆளுங்க… எப்பவுமே தவற மாட்டாங்க”, என சில விதிவிலக்கான ஆண்களைப் பற்றிய கருத்துருவையும் முன்வைத்திருந்தார் சசி.
“சில ஆளுங்க வாய்க்கி வக்கனையா இல்லனாலும், வெளிச்சாப்பாடே வேணானு, சுடு கஞ்சியக் காய்ச்சிட்டு பச்சை மிளகாய உப்புல தொட்டு சாப்பிடற ரகமா இருப்பாங்க.
இல்லாக் குறைக்கு வயித்தில ஈரத்துணியக் கட்டிட்டு படுக்கிற ரகமா இருக்கும். எப்டிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் இந்த மாதிரி மனுசங்க உறவுகளோட உணர்வுகளை கொன்னுட்டு, தன்னோட உணர்வுகளைத் தீக்க வெளியே போகவே மாட்டாங்க!”, என்று மருமகளுக்கு இலைமறை காய்மறையாக ஆண்களில் பொதுவான குணத்தைப் பற்றிய விடயத்தை விளக்கியிருந்தார் சசிகலா.
“சிலர் சந்தர்ப்பம் கிடைச்சா தப்பு செஞ்சிட்டு… அப்புறம் நல்லவன் வேசம் போட்டுட்டு ஊருக்குள்ள திரியறவங்களும் உண்டு…!”, வீதிக்கொன்று இப்படியும் இருக்கும் என்பதைக் கூறியிருந்தார்.
“சிலர் தவறினதை யாருக்கிட்டயும் மறைக்காம… நான் இப்டித்தான்னு ஒளிவுமறைவு இல்லாம… ஆனா அதுக்காக அடுத்தடுத்து அதே மாதிரி தவறைச் செய்யாம… தன்னோட பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காம வாழற ரகம்”, திணவெடுத்து இருப்பதோடு, திமிரும் கூடிய மனநிலையில் சிலர் இப்படியும் உண்டு என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டிருந்தவளைக் கண்டு, “என்னடா அத்தை கல்யாணமாகி வந்தவொடனே என்னன்னமோ சொல்லிக் குழப்பறாங்களேனு நினைக்கிறியா?”, என்று கேட்க,
“இல்லைத்தை… இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ண மாமாவை எப்டி மன்னிச்சி அவங்களோட இயல்பா பேசி, அவங்களுக்கு வேண்டியதைச் செய்யறீங்கனு இவ்ளோ நாளா எனக்குள்ளேயே ஒரு கேள்வி இருந்தது. அதுக்குரிய காரணத்தை இன்னிக்கு தெரிஞ்சிட்டதை நினைச்சி யோசிச்சிட்டிருந்தேன்.
என்னோட கண்ணோட்டம் வேறயா இருந்திருக்கு. சம்பந்தப்பட்டவங்களுக்கு மட்டுமே, நடந்த சத்தியமான சம்பவங்களைப் பத்தி தெரியும். அந்த வகையில உங்க பங்கை நீங்க புரிஞ்சிகிட்டதோட அதை ஒத்துக்கறீங்க. யூ ஆர் க்ரேட்த்தை”, என்றவள்
“உங்க மனப்பக்குவம் எல்லாத்துக்கும் வராது. அடுத்தவங்க மேல பழிய போட்டுட்டு போறவங்கதான் இங்க அநேகம்னு யோசிச்சேன். நாமா யாரையும் விமர்சிக்கக்கூடாதுன்னும் புரிஞ்சிட்டேன் அத்தை”, என்றவளை
அதற்குமேலும் வெறுப்பேற்ற விரும்பாமல் பொதுவான விடயங்களைப் பேசியதோடு, இரவு உணவை விரைவில் உண்ணச் செய்தார்.
இரவுக்கான உணவிற்குப் பிறகு, வழமையான திருமணமான தம்பதியருக்கான, முதல்இரவு ஏற்பாட்டை மோனிகாவைக் கொண்டு ஏற்பாடு செய்யத் துவங்கினர் சசிகலா.
////
வெற்றியின் கோபம், மனைவி மீது திரும்பியிருந்தது. புள்ளைய எப்டி வளத்திருக்க என்று சகட்டுமேனிக்கு வாயில் வந்ததைத் திட்டியபடியே நாளைக் கடத்தியிருந்தார்.
பள்ளி விட்டு வந்த நந்தாவிற்கு எதுவும் புரியாமல், அனுமானமாக ஏதோ யோசித்தபடியே அமைதியாக இருந்தான்.
புஷ்பா, கணவரின் எந்த வார்த்தைகளுக்கும் பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன், “கல்யாணம் முடிஞ்சிருச்சு… வாழ்த்தற அளவு மனசில்லனாலும், புள்ளைக்கு சாபம் கொடுக்காதீங்க”, என்றதோடு வாயைத் திறக்காமலேயே வலம் வந்திருந்தார்.
புஷ்பாவிற்கு மனதில், வெற்றி வீம்பு பிடிக்காமல், சற்றே காலம் தாழ்த்தி திருமணத்தைச் செய்யலாம் என்று சங்கரிடம் பேசியிருந்தால் இதுபோன்றதொரு எதிர்பாரா நிகழ்வே வராமல் தடுத்திருக்கலாம் என்றே தோன்றியது. ஆனால் அதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாதவரை என்ன செய்ய இயலும் என்று விட்டுவிட்டார்.
எப்போதானாலும் சங்கருக்கு, நவீனா என்பதை யாரும் மாற்ற இயலாது என்பதனை இன்றைய நிகழ்வு உறுதி செய்திருந்ததில், பரம திருப்தியாகவே இருந்தார் புஷ்பா. ஆனால் தனது எண்ணத்தை வெளியில் காட்டாமல் இருந்தார்.
இதற்கிடையில் சாந்தனு வீட்டில் இருந்து வந்து, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல பேசி, வெற்றியை தூண்டி விட்டுவிட்டு சென்றிருந்தனர்.
வெற்றியும் மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்டார்.
////
சாந்தனுவின் தாத்தா, ‘நடந்தை இனி மாற்ற முடியாது… விட்டுவிடுங்கள்’ என்று எவ்வளவோ கூறியும், சாந்தனுவின் தந்தை விடாமல் இதைப்பற்றியே புலம்பியவாறு, தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும், தகுந்த பாடம் சங்கருக்கு விரைவில் புகட்ட இருப்பதாகவும் கூறியபடியே, குட்டி போட்ட பூனைபோல அங்குமிங்கும் திரிந்தார்.
சாந்தனு எதைப்பற்றியும் பேசாமல் அமைதியாகி இருந்தான்.
சங்கரின் முடிவால் நடந்த திருமணமாக இது இராது என்பதை நூறு சதவீதம் நம்பினான்.
தான் அன்று பேசிய பேச்சின் தீவிரத்தில் பெண் எடுத்த அவசர முடிவு என்பதையும், அதை சங்கர் செயல்படுத்தியிருக்கிறான் என்பதையும் உணர்ந்து யாரிடமும் அதைப்பற்றி விவாதிக்காமல் இருந்தான்.
ராஜவேலு, அன்னம்மாள் வந்து தங்களிடம் பேசியபோதே, தங்களது முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்று மூத்த மகனிடம் பேசிப் பார்த்திருந்தார்.
மகனோ, “அது எப்படி… வயக்காட்டுல வேல பாக்கப் போறவனுக்கு டாக்டரு பொண்ணு கேக்குதோ… நாமதான் முதல்ல போயி பேசி முடிச்சோம்… நமக்குத்தான் பொண்ணு”, என்று பிடிவாதமாக மறுத்திருந்தார்.
“பொண்ணுக்கு வேற எண்ணமிருந்தா, அதைக் கொண்டு வந்து இங்க எப்டி நல்லா வாழ வைக்க முடியும்னு யோசி!”, என்று மகனிடம் கூறிவிட்டு அன்றே இது சம்பந்தமான எந்த விடயத்திலும் தலையை நுழைக்காது ஒதுங்கியிருந்தார் ராஜவேலு.
ஒரு காலத்திற்குப் பிறகு, மகன்களின் முடிவில் தலையிடக்கூடிய உரிமையை சில மகன்கள் தருவதில்லை எனும்போது, எதற்கு வேண்டாத மனஉளைச்சல் என்று ஒதுங்கியிருந்தனர் பெரியவர்கள்.
இன்று மகனின் நடவடிக்கையைக் கண்டு, இது இன்னும் என்னென்ன விபரீதத்தை கொண்டு வருமோ என்கிற பதற்றம் மட்டுமே பெரியவருக்கு வந்திருந்தது.
சாரதாவும் கணவனின் மனதில் ஓடுவதை அறிந்து, மருமகளை அழைத்துப் பேசியிருந்தார்.
////
நவீனாவை அலங்கரிக்கும் வேலையில் இறங்கியிருந்த மோனிகா, “எங்கண்ணனை கண் கலங்காம பாத்துக்க!”, என்று நவீனாவைக் கிண்டல் செய்ய
“அவரு அழுதா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். என்னை இப்டி அதட்டி அனுப்பற மாதிரி உங்கண்ணங்கிட்ட.. எவ்வளவு உள்ள வாங்கினாலும் கண்ணுல தண்ணி வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லு அனுப்பிடீ!”, என்று தோழியிடம் சகஜமாக உரையாடினாள் நவீனா.
இருவரது சம்பாசனைகளைக் கேட்டபடியே, அங்குமிங்கும் வேலையாக திரிந்த சசிகலா வந்த சிரிப்பை அடக்கியவாறே கண்டு கொள்ளாமல் இருந்தார்.
அன்னம்மாளும் நவீனாவை அழைத்து, “அவுக சொன்னாக, இவுக சொன்னாகன்னு வாழறது வாழ்க்கையில்ல…! யாருக்காகவும் வாழக்கூடாது. நாம நமக்காக வாழனும். தைரியமா இருக்கனும். புருசன் பொண்டாட்டிக்குள்ள சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், சண்டை சச்சரவுகள், பிணக்குகள், வந்தாலும், மனசுல ஆழமா வன்மம் வளக்கக்கூடாது.
இந்த உறவு எதுக்குன்னா, ரெண்டு பேரோட கர்மத்தை கழிக்க, அந்தப் படைச்சவன் போட்ட முடிச்சு. அதுல கர்மந் தொலையனும். அப்பத்தான் முக்தி.
அது தொலைய, நம்மைச் சுத்தியிருக்கிறவங்க மூலமாத்தான் கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம், அமைதி, பேரமைதி இப்டி மாறி மாறி எல்லாம் வரும்.
எந்த சூழலையும் ஒரே மாதிரி மனநிலையோட அணுக கத்துக்கனும்.
கல்யாணம் முடிஞ்சவுடனே இன்னிக்கு நடந்தது எல்லாம் அப்டித்தான்!
எந்தக் காலத்திலயும், நமக்கோ, வேற யாருக்குமோ, நம்ம பேச்சினாலயோ, எண்ணத்தாலயோ, செயலாலயோ கஷ்டத்தைக் குடுக்கற மாதிரியான விசயத்தை, அறியாமக்கூட செய்யக்கூடாது.
தீர்க்க சுமங்கலியா நீ நல்லாயிருப்ப…!”, என்று பேத்திக்கு அறவுரையோடு, ஆசியையும் கூறி அனுப்பி வைத்தார் அன்னம்மாள்.
////////////////
சங்கர் அன்னம்மாளிடம் சங்கடத்தோடு, “இன்னிக்கு எந்த ஏற்பாடும் வேணாமே ஆத்தா”, என்க
“அடப்போடா…! உன் வயசுல உங்க ஐயாவுக்கு எல்லாப் புள்ளையும் பொறந்திருச்சு…! இப்பத்தான் வந்துகிட்டு… வேணானு அபசகுனம் புடிச்சமாதிரி பேசிகிட்டு…!”, என்று பேரனை சந்தோசமாகச் சாடியவர்
“அந்தப் புள்ளையே சொன்னதைக் கேட்டு சரினு போயிருக்கா…! நீ போயி அவளையும் குழப்பாம… நடக்கிற விசயத்தை மட்டும் போயிப்பாரு!”, என்று அதட்டி அனுப்பியிருந்தார்.
உல்டாவான ஏற்பாடால், பெண் முன்பே அறைக்குள் சென்றிருக்க, அதற்குப்பின் சங்கர் அறைக்குள் நுழைந்திருந்தான்.
நண்பர்களின் கேலி வேறு மனதில் வந்து ஏதோ உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்க… தன்னவளின் நிலையை உணர்ந்து கொண்டு, மேற்படி யோசிக்க ஏதுவாக தயாராக வந்திருந்தான் சங்கர்.
சாதாரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் இருந்த, கட்டிலில் இதுவரையில்லாத பதற்றத்தோடு அமர்ந்திருந்தவள், சங்கர் அறைக்குள் நுழைந்ததும், வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்ததும் எழுந்து நிற்கும் மாணவிபோல அவளையறியாமல எழுந்து நின்றிருந்தாள்.
நவீனாவின் இயல்பு இதுவல்ல என்பது கண்டதும் புரிந்து கொண்டான் சங்கர்.
“ம்… அப்புறம் நீ நினைச்ச மாதிரி நம்ம கல்யாண ஏற்பாடெல்லாம் சரியா இருந்ததா வீனா?”, என்ற கேள்வியோடு தன்னவளை இயல்பாக்க வேண்டிய முயற்சியில் பேசியிருந்தான்.
“ம்..”, என்ற சத்தம்கூட சுரத்தில்லாமல், ஆனால் தன்னையே பார்த்தபடியே நின்றவளை, கட்டிலில் தான் அமர்ந்ததோடு, கையைப் பிடித்து தனதருகே அமர வைத்தான்.
சேலை பெரும்பாலும் கட்டியிராதவள், ஏதோ அவஸ்தையில் இருக்கக் கண்டவன் தன்னை பெண் ஏற்கும் மனநிலையில் தற்போது இல்லையோ என்று எண்ணி, “என்ன வீனா… ரொம்ப டயர்டா இருந்தா படுத்துத் தூங்கு”, என்றுவிட்டு அறைக்குள் இருந்த குளியறைக்குள் நுழைந்திருந்தான்.
பெண்ணுக்கு கணவன் இயல்பாகப் பேசியதிலேயே ஓய்ந்திருந்த மனம் சற்றே மீண்டிருந்தது.
ஆனாலும், பழகிய, சொந்த உறவாக இருந்தபோதிலும், தயக்கம் வந்து பெண்ணை ஆட்கொண்டிருந்தது.
உடையை மாற்றுவதாக இருந்தாலும், பெண் மாற்றிக் கொள்ள அவகாசம் தந்து தாமதமாகவே வெளியில் வந்தான் சங்கர்.
குளித்துவிட்டு சங்கர் வெளியில் வரும்வரை, அமர்ந்திருந்த இடத்திலேயே அவஸ்தையாக வீற்றிருந்தாள் நவீனா.
வெளியில் வந்தவன் தன்னவள் இடத்திலிருந்து சற்றும் அசையாமல் அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்தபடியே அருகில் வந்தவன், “என்ன வீனா? ஏன் உக்காந்திருக்க…? தூக்கம் வரலையா”, என்று வினவ
“எம்மேல எதுவும் கோபமா?”, என்று மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள் பெண்.
எதுக்கு என்று தோன்றியதை முகத்தில் கேள்வியாக்கி நிமிர்ந்து தன்னவளைப் பார்க்க, விட்டால் அழுதுவிடும் தோற்றத்தில் இருந்தவளைப் பார்த்து
அன்றைக்கு நடந்த விடயங்களைப் பற்றி மனைவி கேட்கிறாள் என்பது புரிய, “அதுல கோபமில்லை. வருத்தம்தான்”, என்றுவிட்டு
“அதக் கேக்கவா இவ்ளோ நேரம் இப்டியே உக்காந்திருந்த?” என்ற வினாவோடு
இளைப்பாற எண்ணி படுக்கையில் வந்து படுத்திருந்தான்.
தன்னை நெருங்காதவனை, தானாக நெருங்க நெருஞ்சி ஒன்று இதயத்தில் தைக்க, வழிதெரியாமல் அமர்ந்தே இருந்தாள்.
தான் வந்து படுத்தும், படுக்கையில் படுக்காமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, “என்ன வீனா? எதுவும் வேணுமா?”, என்று கேட்க
“பால் குடிக்காம படுத்துட்டீங்க”, என்று பதவிசாகப் பேசியவளைப் புதிதாகப் பார்த்தான். இது வீனாவின் இயல்பே இல்லை…
ஏதோ ஒரு சங்கடம் அவளை தன்னிடம் நெருங்க தடுக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவன், அமர்ந்திருந்தவளை தன்னோடு படுக்கையில் இழுத்துக் கொண்டே, “உனக்கு வேணுனா குடி… எனக்கு இப்ப வேணாம்”, என்றிருந்தான்.
இழுத்தவனோடு அட்டைபோல ஒட்டிக் கொண்டு அருகில் படுத்திருந்தவளை, அணைத்தவாறே, “ஒரு வாரமா தூக்கமே இல்லை… உனக்கும் ரொம்ப டயர்டா இருக்கும்”, என்றவன்,
“நீயும் இன்னைக்கு நடந்த சம்பவத்துல… அப்செட்டா இருப்பல்ல… தூங்கு”, என்று கூறிவிட்டு கண்ணை மூடியவனுக்கும் உறக்கம் வரவில்லை.
பெண்ணும் உறங்காமல் படுத்திருந்தாள்.
வெகுநேரம் அமைதியிலும், புரண்டு படுப்பதிலுமாக நேரத்தை இருவருமே விரயமாக்கினர்.
உணர்வுகள் விழித்திருக்க, உல்லாச உணர்வுக்குள் உந்தித்தள்ள… தேகத்தின் தேடலைத் துவங்க ஆடவன் தயங்க, பெண்ணும் அதே தயக்கத்தில்…
ஆடவனின் தயக்கம் நீடிப்பதில்லை.
தயக்கம், வெட்கம், நாணம் மட்டுப்பட்ட இனமது. அதனால்தான் பெண்கள் தயக்கம், நாணத்தோடு வாழ முடிகிறது.
ஒரு பிளஸ் ஒரு மைனஸ் ரெண்டும் சேரும்போதுதான் சுபிட்சமாகும்.
“வீனா…”, என்று இதமான குரலால் பெண்ணின் உணர்வுகளுக்கும் அழைப்பு விடுத்தான்.
“ம்…”, என்ற சொல்லே சொன்னது, நான் உறங்காமல் விழித்து இருக்கிறேன் என்று…
ஆனாலும், “என்ன யோசனை?”, என்றான்
“ம்ஹூம்”, என்ற வாயைத் திறவாத ஓசையிலே,
விடி விளக்கின் வெளிச்சத்தில் பெண்ணின் கண்களை நெருக்கத்தில் காண, காமன் விட்ட அம்புகளால், பெண்ணின் கண்கள் தன்னைக் குறிவைத்து கவரக் காத்திருந்ததைக் கண்டவன், பெண்ணை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
பெண்ணை புரிந்து கொண்டவன், புது மடல் எழுத தூரிகையைத் தேடினான்.
தேடலுக்கு, பெண்ணும் ஒத்துழைப்பு நல்கினாள்.
எழுபத்திரெண்டாயிரம் நாடி, நரம்புகளின் சங்கம பிரதேசங்களை மன்மதன் குத்தகைக்கு எடுத்துள்ளானோ? என்னவோ?
தீண்டினால் தூண்டும் சொர்க்கம்…!
உணர்ந்தவன் சிகரம் தொடுகிறான்! உணராதவன் துயரம் கொள்கிறான்!
பெண்ணது, உணர்வுச் சங்கம பிரதேசங்களை முற்றுகையிடத் தயாராகினான்.
தலையிலிருந்து பாதத்திற்கு என்ற முறைமையில்… முதலில் வரவேற்ற இளஞ்சிவப்பு நிற இதழில் தனது முற்றுகையைத் துவங்கியிருந்தான்.
இதழ்தேனை அருந்தியவனுக்கு பழைய நினைவு வந்திட, பருகலோடு இளநகையும் சேர்ந்திருந்தது.
தன்னவனின் இளநகையில், அவனது இதழ் சிறையிலிருந்த தன் இதழை மீட்டவள், “எதுக்கு இந்த நேரத்துல சிரிப்பு!”, என்று ரகசியமாகக் கோபக் குரலில் பெண் கேட்க
“கண்டுபிடி…!”, என்று அதே குரலில் பதில் சொன்னதோடு, விட்டதை விடாது தொடர்ந்திருந்தான்.
பெண்ணுக்கு மனம் ரெட்டை வேலை செய்யத் துவங்கியிருக்க, ஒத்துழைப்பு குறைந்தாற்போல தோன்றவே, “கண்டு பிடிச்சியா? இல்லையா?”, என்று தன்னவளிடம் கேட்க
“அப்ப சின்னப் புள்ளை…! அதனால தெரியாம… லிப்லாக்குல பாப்பா வந்துரும்னு பயந்து போயி, உங்ககிட்ட தெரியாம வந்து கேட்டதை இப்ப ஞாபகப்படுத்தி சிரிக்கிறீங்கதானே!”, என்று பொய்க் கோபம் காட்டி முகத்தைத் திருப்பியவளை
“டாக்டரே ஒன்னுந் தெரியாத என்னை அன்னிக்கு சந்தேகப்பட்டதை யாருகிட்டபோயி நான் சொல்லமுடியும்? சொல்லு…! அதான் உங்கிட்டயே வந்து சொல்லி சிரிக்கிறேன்!”, என்க
“அப்பதான் காலேஜ்ல சேர்ந்த புதுசு…! அப்ப நான் டாக்டரில்ல…!”, என்று பெண் சிணுங்க…
“சரி… அதை விடு…! இன்னிக்காவது எனக்கு நீயா ஒன்னு தாடீ!”, என்று பேச்சை மாற்ற… ஏக்கமாகக் கேட்டவனை
கிறங்கடிக்கும் வகையில் நீண்டதொரு இதழ் முத்தத்தை பாரி வள்ளல்போல முதன் முறையாக வாரி வழங்கினாள் பெண்.
”உம்மா போதுமா?”, என்று கேட்டவளை,
“இதன்ன செட்டியார் கடையா? கணக்கு வச்சிக்க… அமுதசுரபியா நீ இருக்க… கணக்கில்லாம அள்ளிப் பருக நான் ரெடி…!”, என்று அனுபவித்துக் கூறியவனை, பெண் பொய்யாகக் குத்த
“ஃபர்ஸ் நைட்லயே தைரியமா வந்து புருசனை அடிச்சவ நீ ஒருத்தியாத்தான்டீ இருப்ப!”, என்று பெண்ணை அந்நிலையிலும் வம்பிழுக்க
பெண் உடனே ஊடலோடு கோபம் கொண்டு, தன்னவனிடமிருந்து விலக எத்தனிக்க
விடாமல் பிடித்து தன்னோடு இறுக அணைத்தவனை, “போங்க… போயி பாலைக் குடிச்சிட்டு தூங்குங்க!”, என்று நவீனா அதட்டினாள்.
பெண் பழைய நிலைக்குத் திரும்புவதை வேடிக்கை பார்த்தவாறே, “நாந்தெம்பாயிட்டா உனக்கு வம்பாயிரும் பரவாயில்லையா?”, என்று பெண்ணிடம் வம்பு வளர்க்க
“வம்புன்னா விட்ருவீங்களா?”
“அது… இன்னிக்கு மட்டும் போனாப் போகுதுன்னு…!”, என்று மழுப்பலோடு சங்கர் இழுக்க
“பெரிய மனசுன்னு இதுக்கெல்லாம் யாரும் உங்களுக்கு அவார்டெல்லாம் தரமாட்டாங்க…! நானும் சிலையெல்லாம் வைக்கமாட்டேன். ஆமா பாத்துக்கங்க!”, என்று பெண் உறுதியாகக் கூற
“அலைஞ்சதுல டயர்டா இருக்கும்லனு விட்டா… என்ன பேச்சுப் பேசுற!”, என்று சங்கர் பெண்ணை தன்னோடு இறுக்கி அணைத்து, இதழில் முரட்டுத்தனமாக முற்றுகை இட்டிருந்தான்.
மூச்சுக்குப் போராடி மீண்டவள், “அதுக்குத்தானே உங்க தொங்கச்சி பாதம், பிஸ்தானு என்னன்னத்தையோ அரைச்சு கொதிக்க வச்சிக் குடுத்திருக்கா!”, என்று வீனா தன்னவனது இறுகிய அணைப்பிலும், விடயத்தை விளக்க
பெண்ணது வார்த்தை மூலம் சம்மதத்தை உணர்ந்தவன், பெண்ணை விடுவித்ததோடு, எழுந்து சென்று நவீனா எடுத்து வந்திருந்த பாலைக் குடித்தான்.
‘செம டேஸ்ட்… உனக்கு?’ என்று பெண்ணிடம் நீட்ட, ‘எனக்கு இப்ப வேணாம்’ என்று பெண் மறுத்திருந்தாள்.
பாலைக் குடித்ததால் வேகமா? பல கால ஏக்கமா? என்று புரிந்து கொள்ள இயலாத வகையில், பெண்ணின் இதழை அடுத்துள்ள உணர்வுச் சங்கமங்கள் ஒவ்வொன்றுடனும் உதடுகளால் உறவாடி, உறவுக்கு ஏதுவாக பெண்ணை தன்வசப்படுத்தினான்.
பிகு செய்து இதுவரை பித்தாக்குபவள், வகையாக வாகாக தன்னவனுக்கு ஒத்துழைத்தாள்.
தடையாக எண்ணிய அனைத்தையும் தளிருடலில் இருந்து அகற்றியிருந்தான்.
ஆடவனின் கைபட்டதில் உடல் கூச, துள்ளலோடு நெளிந்தவள், ஆணது முன்னேறிய கைகளை கெட்டியாக முன்னேற விடாது பிடித்துக் கொண்டாள்.
பெண்ணின் செயலில் சிரித்தவன், “எதுக்குடீ இந்த நெளி நெளியற”, என்று விளக்கம் கேட்க
“ம்.. கூசுது…”, என்று வார்த்தைகள் கூச கூறியவளை
“அப்டிதான் ஃபர்ஸ்ட் டைம் இருக்கும்…! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… போகப்போக சரியாகிரும்!”, என்று பெண்ணையும், அவளது கூசிய உடலினையும் சமாதானம் செய்து, தடைகளை மீறி முன்னேறினான்.
நாணம் கொண்டு மறைய தன்னிடம் ஒண்டியவளின், தளிர்மேனியின் மீது பரவி, தனக்குள் மறைத்துக் கொண்டான்.
எட்டு வருடத்தில்… கிட்டாமல் எட்டாக் கனியாக தூரத்தில், இருந்தவளை, அணு அணுவாக ரசித்து, ருசித்து, நிதானமாக உணரத் துவங்கியிருந்தான்.
பெண்ணும் புதிய அனுபவத்தால் உண்டான உணர்வில் முனகலோடு, முழு ஒத்துழைப்பைத் தந்திருந்தாள்.
முரடனை முதல் முறையாக மஞ்சத்தில் சந்திப்பதில் மகிழ்ந்திருந்தாலும், தன்னவன் இதமாகக் கையாண்ட போதிலும், இடர்பாடுகளால் வந்த இன்னல்களுக்கு தயங்கியவளின் தயக்கம் போக்கியிருந்தான்.
தன்னவனின் இயக்கத்தில் பூரண ஒத்துழைப்பை இயன்றவரை நல்க உத்தேசித்ததன் முடிவில், இன்பத்தை உணரத் துவங்கினாள்.
ஏதோ… உணர்வு என்று எதிர்பார்த்திருந்ததை, இதுதான் என்று உணர்ந்த தருணமது…!
வேதனையோடு கூடிய கந்தர்வச் சாதனை மன்மதனால் மகிழ்ச்சிக்குரியதாக அரங்கேறியது பெண்ணுக்கு.
ஆடவனின் தேடலில் தன்னைத் தொலைத்தவள் களைத்திருந்தாள்.
ஆடவனும் தேடலின் நிறைவோடு, படுக்கைக்கு வந்து மல்லார்ந்தவன், மார்பில் தன்னவளையும் தாங்கி அணைத்தவாறே… பெண்ணைக் கவனித்தான்.
இயல்பிலேயே மெல்லியலானவள், தனது அரங்கேற்றத்தினால் களைத்துத் தெரிந்ததைக் கண்ணுற்றவன், “பாலைக் குடிக்கிறியா”, என்ற வினவ
வேண்டாம் என்று மறுத்து, தன்னவனை மெத்தையாக்கித் துயில் கொள்ளத் துவங்கினாள் பெண்.
பெண்ணிற்கு உண்டான களைப்பில், உறக்கம் கண்களைத் தழுவியதைக் கண்கூடாகக் கண்டவன்,
உறங்குமுன், பெண் கொண்டு வந்திருந்த பாலில் மீதமிருந்ததை, அதட்டிக் குடிக்க வைத்தே பெண்ணை உறங்க அனுமதித்தான்.
நவீனாவும் தன்னவனின் பரந்து விரிந்த மார்பை படுக்கையாக்கி உடனே உறங்கியிருந்தாள்.
பெண் உறங்கியும் உறங்காது விளித்திருந்தவன், உறக்கத்தில் உருண்டவளை இதமாக அருகில் படுக்க வைத்துவிட்டு, நிறைவான உறக்கத்தைத் தழுவி இருந்தான்.
அதிகாலை இரண்டு மணியளவில் கேட்காமலேயே, இதழ் ஒத்தடம் தானாகத் தந்த உணர்வில் விழித்தவன், சூழலை உணரும்முன் தன்னிடமிருந்து விலகியவளையே பார்த்திருந்தான்.
உறக்கம் கலைந்து எழுந்தவனைக் கண்டு கொள்ளாமல் படுக்கையை விட்டுச் சென்றவள், சென்ற வேலை முடிந்து மீண்டும் வந்து சங்கரின் மீதே படுத்திருந்தாள்.
“ஏய்… என்னையப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது”, என்க
“ம்… மெத்தைன்னு நினைச்சுப் படுத்தேன்”, என்றுவிட்டு அமைதியான பெண்ணின் செயலில் தன்னவளை இறுக அணைத்துக் கொண்டு, இதமாக விடியல்வரை சுகமான சுமையோடு உறங்கியிருந்தான் சங்கர்.
காலம் முழுமைக்கும் வீனாவைத் தாங்குவானா?
///////