தன்னவளின் பிறந்தநாளின் முதல் வாழ்த்து தன்னுடையதாகத்தான் இருக்க வேண்டும்… என்ற எண்ணத்தில், சரியாக இரவு பன்னிரண்டாக சில நொடிகளே இருக்கும் நேரம் ஸ்வேதாவின் எண்ணிற்கு அழைத்தான் ஹரி… “தேங்க் யூ டா என் செல்ல அண்ணா…” மிக மகிழ்ச்சியாக ஒலித்தது அவள் குரல்…
“மற்றவர்களைப் போலவே என்னையும் ஒரு நண்பனாக மட்டுமே நினைக்கிறாயேடி… அதுவும், முதல் முதலாக… வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆசையுடன் அழைத்த இந்த நேரத்திலும்… கைப்பேசியின் திரையைக் கூட, பார்க்காமல் இப்படியாடி பேசுவ?… ” என்று அவளது கவனக்குறைவை எண்ணி மனதுக்குள்ளேயே அவளை வறுத்தெடுத்தவாறு … சில நொடிகள் மௌனமாகவே இருந்தவனை
“ஹலோ! ஹலோ!” என்ற அவளுடைய அழைப்பு கலைக்க…
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! ஸ்வேதா!! நான் ஹரி..” என்க…
“நன்றி! நன்றி! நன்றி… ஹரி! முதல் வாழ்த்து உங்களுடையதுதான்… ரொம்பவே சந்தோஷமா இருக்கு…” அவள் குரலில் கொஞ்சம் ஆச்சர்யமும் கலந்திருந்ததோ??
“எப்பவும் அண்ணாதான் முதலில் வாழ்த்துவான்… இதுதான் முதல் முறை அவனைப் பிரிந்து, நான் பிறந்தநாள் கொண்டாடுவது… அவன்தான் அழைத்தான் என்று நினைத்துவிட்டேன்… சாரி” என்றாள் ஸ்வேதா.
“சரி விடு… பிறந்தநாளும் அதுவுமா நீ சாரி எல்லாம் கேட்க வேண்டாம்… காலை… ஏழு மணிக்கு, தயாராகி… காலேஜ் பஸ்… நிற்கும் இடத்துக்கு வந்திடு போதும்… நாளைப் பார்க்கலாம்… பை” என்று அழைப்பைத் துண்டிக்க போனவனிடம் அவசரமாக ஸ்வேதா…
“நீங்க கிஃப்ட்… செய்த புடவை ரொம்ப அழகா இருக்கு… இந்தக் கலர், எனக்கு ரொம்பப் பிடிக்கும்… மற்ற நெக்லெஸ் செட், வளையல்கள் எல்லாமும்… செம்மயா… இருக்கு… தேங்க்ஸ்…” என்று சொல்ல…
“இட்ஸ் ஓகே… ஸ்வேதா! புடவை, அம்மா வாங்கினாங்க… மற்றதெல்லாம் வர்ஷியும்… பாலுவும்தான் வாங்கினாங்க… உனக்கு பிடிச்சிருந்தா ரொம்ப சொந்தோஷம்… பை..” என்ற ஹரியிடம்…
“ஒரே ஒரு நிமிடம் ஹரி!… நாளைக்கு எங்கேதான் போகப் போகிறோம்? இப்பொழுதாவது சொல்லுங்களேன்… ப்ளீஸ்…” என்று, ஸ்வேதா… கெஞ்சும் குரலில் கேட்க…
“அது சஸ்பென்ஸ்… நாளைக்குத் தானாகவே உனக்குத் தெரியத்தான் போகிறது…” என்று அழைப்பைத் துண்டித்தான் ஹரி.
“பரவாயில்லை என்னதான் அவள் கொஞ்சம் சொதப்பினாலும் … நாம முதலில் வாழ்த்தியது அவளுக்கு மகிழ்ச்சிதான்.. நாம வாங்கிக்கொடுத்த புடவையும் அவளுக்கு பிடிச்சிருக்கு…”
“உஃப்… அவ ஜாலியாதான் இருக்கா… மனதில் இருப்பதை மறைக்க முடியாமல்.. இவ படிப்பு முடியறதுக்குள்ள நாமதான் ஒரு வழி ஆகிடுவோம் போலிருக்கே…” எனப் பலவாறாக எண்ணிக்கொண்டே உறங்கிப்போனான் ஹரி…
அடுத்த நாள் அவர்களுக்காய் அழகாக விடிந்தது…
********************************************
பேருந்து நிறுத்தத்தில், அவன் பரிசளித்த புடவையில், வர்ஷினி தேர்வு செய்திருந்த அணிகலன்களை அணிந்து அழகுற நின்றிருந்த ஸ்வேதாவை… தன் விழிகளால் பருகியவாறு… அவனது, வெள்ளை நிற மாருதி ஆல்டோவை, அவள் அருகில் ஓட்டி வந்து நிறுத்தினான் ஹரி…
பாலுவை எதிர்பார்த்திருந்த ஸ்வேதாவோ, அருகில் வந்து நின்றக் காரை கண்டு, ஒரு நொடி திடுக்கிட்டுப்போனாள்…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவீட்டா…” என்றவாறே காரிலிருந்து இறங்கிய பாலுவைக் கண்டதும் நிம்மதியுற்றவள்…
“நன்றி பாலுண்ணா… நீங்க என்ன கார்ல வந்து இறங்கறீங்க? ” என்று… ஆச்சரியத்துடன் கேட்க…
காரின் பின் கதவை திறந்தவாறே… பாலு… “நீ முதலில் உள்ள வந்து உட்கார்ந்துட்டு… மற்ற கேள்விலாம் கேளு பர்த்டே பேபி” என்று சொல்ல…
உள்ளே அமர்ந்த ஸ்வேதா… வண்டியை ஓட்டி வந்த ஹரியைக் கண்டு புன்னகைத்தவாறே…
“ஓஹோ, ஹரியோட கார்த்தானா இது” என்று மனதிற்குள் நினைத்தவள்… எப்பொழுதும்போல் விளையாட்டாக,
“ஆஹான்!! நீங்கதான் இன்றைக்கு எனக்கு டிரைவரா?” என்று கிண்டலுடன் கேட்க…
“வித் பிளஷர் மேடம்” என்று புன்னகையுடன் அவனும் உல்லாசமாகச் சொல்ல…
“மிக்க நன்றி” என்று ஸ்வேதா அவனுக்குப் பதிலை திருப்பிக் கொடுத்தவாறே வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
முன்புறக் கண்ணாடியின் வழியே அவளது முகத்தைப் பார்க்க முயன்ற ஹரி… அது முடியாமல் போகவே… எதோ பேசுவது போல் திரும்பி… அவளைப் பார்த்து… “ஸ்வேதா… பிரேக் பாஸ்ட்… சாப்பிட்டியா?” என்று கேட்க…
கொஞ்சமும் திரும்பாமல்… வேடிக்கை பார்த்தவாறே… “ஆச்சு… இட்லி… சாம்பார்… வித் லதாவோட… ஸ்பெஷல்… காரட் ஹல்வா…” என்று ஸ்வேதா… பதில் சொல்ல…
“ஒரு கேள்வி கேட்டால்… பத்து பதில் சொல்லு! இங்கே ஒருத்தன் உன் முகத்தைப் பார்க்க… ஆர்வமாய் துடிச்சிட்டு இருக்கான்… அது புரியாமல்… குட்டி பாப்பா மாதிரி… வேடிக்கை பாரு!” என மனதிற்குள்ளேயே புலம்பினான் ஹரி…
ஹரியின் கண்களில் வழிந்த காதல் யாருக்குப் புரிய வேண்டுமோ அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ…
அவன் அருகில் அமர்ந்திருந்த பாலுவிற்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது!!! மனதிற்குள்ளேயே “என்னடா நடக்கிறது இங்கே?” என்று குழம்பினான்… பாலு…
*******************************************
அவர்கள் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாள் வர்ஷினி.
அவளை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு… அந்த கார், போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாத அந்தச் சாலையில் காற்றைக் கிழித்து… பறந்ததது…
பாலு ஹரியை நோக்கி, “இப்பவாவது சொல்லுடா நாம எங்கேதான் போறோம்? ” என்று கேட்க…
“இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் வெயிட் பண்ணு… உனக்கே தெரியும்” என்று சொன்ன ஹரி , சொன்னதுபோல் பதினைந்து நிமிடத்தில்… வண்டலூர் கேளம்பாக்கம் சாலையிலிருந்து திரும்பி… அங்கே நிறுவப்பட்டிருந்த மிகப்பெரிய ஆஞ்சநேயரின் சிலை ஒன்றை தாண்டிச் சென்று… அவன் காரை நிறுத்திய இடம்… ‘கஜகிரி’ என்ற அழகிய ஒரு சிறு மலை அடிவாரம்.
இயற்கை அழகு கொட்டிக்கிடந்த அந்தக் குன்றின் மேல் கோவில் ஒன்று இருந்தது.
“வாவ் இது புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில்தானே?” கேட்ட பாலு… “செம்ம டா, நானே இங்கே வரணும்னு ரொம்ப நாளா நினைத்திருந்தேன்..” என்றான் மகிழ்ச்சியுடன் .
வர்ஷினியோ … “ஹரி அண்ணா நீங்கதான் கோவிலுக்கெல்லேம் அவ்வளவாகப் போக மாட்டீங்கன்னு… சொல்லுவிங்களே… இன்றைக்கு இங்க அழைத்துக்கொண்டு வந்திருக்கீங்க?” என்று வியக்க…
அதற்கு ஹரி… “அம்மா கூப்பிட்டால் மட்டும் போவேன்… இன்று ஸ்வேதாவிற்காக… அவதான் பரம… அனுமார் பக்தையாச்சே…” என்று அவன்… தான் அங்கே வந்த காரணத்தை சொல்ல…
மறுபடியும் அதிர்ந்தான் பாலு…
ஸ்வேதாவோ அவன் சொன்ன எதையும் கவனித்ததுபோல் தெரியவில்லை. அவள் கொஞ்சம் தள்ளிப்போய் நின்றுகொண்டு… அங்கிருந்த சூழலில் லயித்திருந்தாள்…
“ஸ்வேதா!” என்று ஹரி, அவளைக் கூப்பிட… அவன் அழைத்ததில் சற்றும் கவனமின்றி… மலையின் மேலே இருந்த கோவிலையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..
“ஸ்வேதா!!” அவள் அருகே சென்று அவளைத் தோளில் தட்டி அழைத்த வர்ஷினி… “ஹரி அண்ணா… உன்னை கூப்பிடுறாங்க…” என்று சொல்லவும்…
“சாரி! ஹரி! கவனிக்கல… சொல்லுங்க… எதுக்குக் கூப்பிட்டீங்க” என்று ஸ்வேதா கேட்க…
“இல்ல… மலைக்கு மேலே, காரிலேயே போகலாமா? இல்ல, படியில் நடந்து போகலாமா?, இதைக் கேட்கத்தான் அழைத்தேன்..” என்றான் ஹரி.
அவள் வர்ஷினியையும்… பாலுவையும் பார்க்க… நடந்தே போகலாம் என்று முடிவெடுத்தனர்.
முதலில் மலை அடிவாரத்தில் வீற்றிருந்த விநாயகரை வணங்கிவிட்டு, குறைந்த படிக்கட்டுகளே இருக்க… அனைவரும் விருப்பமுடன் நடந்தே மலையேறிப்போய், அங்கே குடிகொண்டிருக்கும் சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீராமபிரானையும், வீர ஆஞ்சநேயரையும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்…
அந்த மலையின் சூழல் அவ்வளவு இனிமையாய் இருந்தது…
நான்குபேரும், கோவிலில் பிரசாதமாக கொடுத்த சர்க்கரை பொங்கலை எடுத்துக்கொண்டு… அங்கே இருந்த ஒரு மரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர…
ஸ்வேதா… நெகிழ்ச்சியுடன்… “உண்மையிலேயே, இந்த இடம் அவ்வளவு அருமையாக இருக்கு, தேங்க்ஸ் ஹரி, இங்கே அழைத்து வந்ததுக்கு… இந்தச் சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு….நான் இது வரைக்கும் இந்தக் கோவிலைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. அம்மா அப்பாவுடன் ஒரு முறை வரணும்…” என்று மனதிலிருந்து சொல்ல…
அவளுடைய மகிழ்ச்சியை அவனுடைய கண்களும் அப்படியே பிரதிபலித்ததை… ஸ்வேதாவை தவிர மற்ற இருவரும் நன்றாகவே கவனித்தனர்.
பிறகு அவர்களை அவன் அழைத்துச்சென்ற இடம்… கோவளத்தில் அமைத்திருந்த ஒரு பிரபல… நட்சத்திர விடுதி…
அங்கே கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில், எல்லோருக்கும் பிடித்தமான உணவு ஆர்டர் செய்துவிட்டு, அலைகளில் நிற்கலாம் என வர்ஷினியும் ஸ்வேதாவும் கடலை நோக்கி போக… ஹரியும், பாலுவும் அங்கே அமைக்கப்பட்டிருந்த குடிலில் அமர்ந்திருந்தனர்.
அங்கே உணவு மேசையில் வைக்கப்பட்டிருந்த மென் தாளில் எதோ எழுதிக்கொண்டிருந்தான் ஹரி…
அப்பொழுது பாலு ஹரியிடம் “என்ன ஹரி, பேங்க் லோன் சாங்க்ஷன் ஆகிவிட்டதா? ” என்று கேட்க…
அதற்கு “இந்த டிரீட், ஸ்வேதா பிறந்தநாளுக்காக மட்டும்னு நினைத்தாயா?… லோன் கிடைத்து, முதல் படியாக.. முக்கியமான இயந்திரம் ஒன்றும் வாங்கிவிட்டோம்…” என்ற ஹரியின் கண்கள் சுவேதாவையே தொடர்ந்து கொண்டிருந்தது…
பாலுவிற்கு, நண்பனாக ஹரியை மிகவும் பிடிக்கும்தான், ஆனால் ஸ்வேதா விஷயத்தில் ஹரியின் இந்த மாறுதல்களை ஏற்க அவனுக்கு மனமில்லை.
அவள் அவனுடைய நண்பனின் தங்கைதான்… அண்ணனின் அதே இடத்தை அவள் தனக்கும் கொடுத்திருப்பதில் அவனுக்கு எப்போதும் ஒரு கர்வமுண்டு.
அவனுக்குச் சகோதரிகள் கிடையாது… ஸ்வேதா ஆறாவது படிக்கும் பொழுதிலிருந்து அவளை அவனுக்குத் தெரியும்…
நந்துவுடனான அவளது பிணைப்பை பார்த்து பலமுறை பொறாமைகூட பட்டிருக்கிறான்… காலப்போக்கில் அவர்களுள் அவனும் ஒன்றிப்போனான்…
ஸ்வேதா அவளது அன்பால் அவனை ஒன்றச்செய்தாள் என்பதே உண்மை.
அவளை ஒருவன் வேறு பார்வை பார்ப்பதை… அது ஹரியே என்றாலும், அவனுக்கு அச்செயல் பிடித்தமற்ற ஒன்று.
ஹரியையே அமைதியாகப் பார்த்திருந்தான் பாலு.
பாலுவின் அமைதி மனதில் பட அவனை திரும்பிப் பார்த்த ஹரி, அவன் முகம் இறுகி இருப்பதைக் கவனித்து, “என்ன பாலு திடீர்னு அமைதியாகிட்ட” என்று கேட்க…
நேரடியாகக் கேட்டான் பாலு… “நீ ஸ்வேதாவை லவ் பண்றியா? “
அவனும் நேரடியாகவே… பாலுவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து சொன்னான்… “ம்.. ஆமாம்” அவ்வளவு கர்வத்துடன் ஒலித்தது அவன் குரல்…
ஹரியின் சட்டையை பிடிக்கும் அளவிற்குக் கோபம் வந்தது பாலுவிற்கு… ஒரு அண்ணனாக.
பெண்கள் இருவரும் பார்த்துவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதால், அமைதியாகவே கேட்டான் பாலு…
“உன்னை நம்பி அவளுடன் பழகவிட்டதால் தானே இப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்தது?”
சொன்னான் ஹரி., “இல்லை… அவளை எனக்கு மிகவும் பிடித்தால்தான் அவளுடன் பழகவே தொடங்கினேன்…”
கல்லூரி பார்க்கிங்கில் அவளை முதன்முதலில் பார்த்ததிலிருந்து, அவளுக்காக அவன் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலையும் சொன்னான் ஹரி.
பாலுவிற்கும் முதலில் இருந்த கோபம் கொஞ்சம் மட்டுப்படவே… அவளுக்காக பார்த்துப் பார்த்து செய்யும் ஹரியுடைய மனதும் புரிந்தது.
காலையிலிருந்து அவனும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்?
ஹரி, கல்லூரியில் மற்ற பெண்களிடம் ஒரு ஒதுக்கம் காட்டியே பழகுவதும் அவனுக்குத் தெரியுமே!
“எப்படியும் பெரியவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்தாலும் ஹரியைப் போன்ற ஒரு துணை ஸ்வேதாவிற்கு கிடைக்க வாய்ப்பில்லையோ?” என்றும் தோன்றவே…
“சரி, நந்தா கிட்ட சொல்லி அவங்க அப்பாவிடம் பேச சொல்லவா? படிப்பு முடிந்தவுடன் அவளைத் திருமணம் செய்துகொள்கிறாயா? ” என்று பாலு கேட்க…
“யார் படிப்பு” வேகமாக வந்தது ஹரியின் பதிலான கேள்வி..
“ஏன்? உன் படிப்புதான்” சொன்னான் பாலு..
சிரித்துக்கொண்டான் ஹரி…
“நான் சொன்னது… உனக்கு காமெடியா இருக்கா?” என்று பாலு காய…
“உன் பாசமலருக்கு வெளிநாட்டு மணமகன் வேண்டாம்!”
“அவ அப்பாவிற்கு பாரின்ல வேலை செய்யற மாப்பிளைத்தான் வேணும்!”
“என்னோட அப்பாவுக்கு அவரோட வியாபாரத்தை மகன் வளர்த்துவிடணும்னு ஆசை”
“இப்ப உனக்கு நான் உடனே அவளைக் கல்யாணம் பண்ணிக்கணுமா?”
“நான் வெளிநாடு போகவா?, இல்ல இங்க வியாபாரத்தை கவனிக்கவா?”
“இப்பொழுது போய் பெண் கேட்டால் அவளோட அப்பா சம்மதிக்க மாட்டார் என்று உனக்குத் தெரியுமா… தெரியாதா?”
இத்தனை தொடர் கேள்விகள், ஆற்றாமையுடன் வந்து விழுந்தது ஹரியிடமிருந்து…
அவன் சொன்ன நியாயம் புரியவே, பாலு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.
“எனக்குக் கொஞ்சம் டைம் வேணும் பாலு.. குறைந்தபட்சம் அவள் படிப்பு முடியும் வரை… தேவைப்பட்டால் அவள் எம் எஸ் படிக்கட்டும்… நான் காத்திருப்பேன்… இதுக்குமேல இதை இப்படியே விடுவதும், இல்லை பிரச்சினை ஆக்குவதும் உன் விருப்பம்… ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் ஸ்வேதாவை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது…” என்று முடித்தான் ஹரி…
\அந்தக் கணத்தில், அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது…
அப்பொழுது ஹரி எழுதிக்கொண்டிருந்த அந்தக் காகிதம் பறந்து வந்து பாலுவின்மேல் ஒட்டிக்கொண்டது… அதைப் பிரித்து பார்க்க… அது ஒரு கவிதை…
ஹரி எழுதியதா இது??
மஞ்சள் மலர்களின் நடுவே…
மலர்ச் செண்டென..
உனைக் கண்டேன்!!
என்னவளே…
மனம் முழுதும்
உனைக் கொண்டேன்!!
உன் பார்வை…
உன் சிரிப்பு…
உன் கோபம்…
உன் குறும்பு…
துளித் துளியாய் சேகரிக்கிறேன்!!
என் நெஞ்சமெனும் பேழைக்குள்…
சேமிக்கிறேன்!!
சிறு துளியிலேயே மூழ்கிப்போகிறேனடி…
வெள்ளமென நீ வந்தால்??
என்னவாகும், என் நிலைமை!!
காமம் மட்டுமே, இலக்கென்றால்…
யாசித்திருப்பேன் உன்னை!
காதலென்று பெயர்ச் சொல்லி!!
யாசிப்பதும்…
இலக்கு மாறிப் பயணப்படுவதும்…
பழக்கமில்லை எனக்கு!
தவமிருக்கிறேனடி!!!
நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!!
வரம் கொடுக்கவும் …
வரமாகவும்…
நீயே வா!!
நம் காதலுடன்!!
போராடுகிறேனடி
எனக்கு நானே…
பந்தயம் வைத்து..
நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!!
வெற்றிபெறும் நாளில்…
பரிசளிக்கவும்…
பரிசாகவும்…
நீயே வா!!
நம் காதலுடன்!!
(ஹரி).
அந்தக் கவிதையின் வரிகளில், அவன் காதலின் ஆழம் மனதைத் தாக்கியதில், கண்களில் நீர் கோர்க்க, அதை ஹரிக்குக் காண்பிக்க இயலாது, கடல் அலைகளின் புறம் தன் முகத்தைத் திருப்பிய பாலு, அங்கே சிறு பிள்ளை போல் கிளிஞ்சல்களை சேகரித்தவாறே வர்ஷினியுடன் சலசலத்து கொண்டிருந்த ஸ்வேதாவை கண்டு…
கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு திரும்பி ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஹரியைப் பார்க்க … ஸ்வேதா கிளிஞ்சல்களை சேகரிக்கும் அந்தக் காட்சியையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி!!