பார்வை – 10
சொன்னபடி நான்கு மாதங்கள் கழித்து இந்தியா வந்து சேர்ந்தான் பிரபாகரன். இம்முறை பிரபாவுக்கு சைன் ஆஃப் சிங்கப்பூருக்குக் கிடைக்க அங்கு ஒரு நாள் தங்கிவிட்டுப் பின் இந்தியா திரும்பினான். நேரடியாக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்து இறங்கியவனை வரலாற்றில் முதல் முறையாக அமைதியாக வரவேற்க வந்திருந்தான் பாண்டி. அமைதியாக ஸ்கார்ப்பியோ பொள்ளாச்சி நோக்கிப் பறந்தது.
‘இன்று பிரபா ஊர் திரும்பும் நாள்’ என்ற எண்ணம் அலைக்கழிக்க காலையில் இருந்தே மிகவும் சோர்ந்து போனாள் மீனா. திருமணம் வேண்டாமென்று ஜம்பமாகக் கூறிவிட்டாள் தான். ஆனால் பிரபாவை மறப்பது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லையே. ஊருக்கு வந்த பின் தன்னை வந்து சந்திப்பானா மாட்டானா என்று மனதுக்குள் நடக்கும் பட்டிமன்றத்திற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
காலையிலிருந்து அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் மாலை மங்கும் நேரம் கீழே இறங்கி வந்தாள். தாயாரைத் தேடி சமையலறைக்குச் செல்ல, அங்கு லலிதா மும்முரமாக ரவா பொங்கல் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்ததுமே பிரபாவின் நினைவும், அதைத் தொடர்ந்த அன்றைய நிகழ்வுகளும் மனதுக்குள் கிளை பரப்பத் தொடங்கியது.
“அம்மத்தா எங்கங்க்ம்மா” எதையாவதுப் பேச வேண்டுமே என்று கேட்டாள் மீனலோசினி.
“அவங்க ரூம்புல அவங்க பேரன் கூட பேசிக்கிட்டிருக்காங்க கண்ணு” என்றார் லலிதா.
“முகில் வந்திருக்குறானாம்மா? வாரதா என்கிட்ட சொல்லவே இல்லையே” என்றாள் மீனா.
“முகில் இல்ல கண்ணு. இவங்க வேற. நமக்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லைன்னாலும் இந்தத் தம்பி உங்க அம்மத்தாவோட பேரன் தானாம். அதை ஆரும் தடுக்க முடியாதாமா. இந்தா நீயே இதைக் கொடுத்துப்போட்டு வா” என்று சொல்லி அவள் கையில் பொங்கலைக் கொடுத்து அனுப்பி வைத்தார் லலிதா.
ஒருவேளை பிரபாவாக இருக்குமோ என்று மனதுக்குள் மறுபடியும் பட்டிமன்ற விவாதம் ஆரம்பிக்க, அதை நிறுத்தும் வழி அறியாது கோதையம்மாளின் அறையை நோக்கிச் சென்றாள் மீனா. வந்தவளை வரவேற்றது அவளின் பட்டிமன்ற நாயகனே தான். கண்களின் அணை உடைப்பெடுக்க, இமைத்தால் மறைந்து விடுவானோ என்ற பயத்தில் இமைக்கவும் மறந்து பிரபாவைப் பார்த்தபடியே நின்றுவிட்டாள்.
அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்ததை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, “ஏங்க அப்பத்தா இதேன் உங்க பேத்திங்களா? இம்புட்டு அழ்கான புள்ளைக்கா கண்ணாலம் நின்டு போச்சு? நீங்க பார்த்த மாப்பிள்ளை சரியில்லை அப்பத்தா. சுத்த கூறு கெட்டவனா இருப்பான் போலயே.
அவன் இடத்துல நான் இருந்திருந்தா, எம் பொண்டாட்டி பேசுனது உங்களை வருத்தியிருந்தா அவ சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எனக்கு நீங்க எல்லாம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவளுந்தேன் முக்கியமுன்னு சொல்லி அந்த மாமா கையில காலுல விழுந்தாவுது கண்ணாலத்தை முடிச்சிருப்பேன் இந்நேரத்துக்கு. பாருங்க இப்பக் கூட அதைத்தேன் பண்ணிட்டு வரேன்” பிரச்சனையை சரி செய்து விட்டேன் என்று சொல்லாமல் சொன்னான் பிரபாகரன்.
பேச்சு மட்டுமே கோதையம்மாளிடம் நீடித்துக் கொண்டிருந்தது. பார்வையோ மொத்தமாய் மீனாவை மொய்த்துக் கொண்டிருந்தது.
கண்கள் லேசாகக் கலங்கியிருக்க, குரலும் கரகரத்துப் போயிருக்க இயல்பாக இருப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு பிரபா பேசிய தொனியில் தன்னைத் தொலைத்தாள் பாவை. இத்தனை நாட்களாக ‘உன் குடும்பம் தான் உனக்கு முக்கியமா? நான் இல்லையா?’ என்று பிரபாவின் மீது கொண்டிருந்த தார்மீகக் கோபத்தை மறக்கச் செய்திருந்தது அவனது பேச்சு.
கோதை அங்கிருப்பதையும் மறந்து “மாமா” என்று கூவியவாறே பிரபாவை அணைத்திருந்தாள் மீனா. “ஹப்பா இந்த வார்த்தையைக் கேட்டு எத்தனை நாளாச்சு” என்று சொல்லியவாறே அவனும் அணைத்துக் கொண்டான். இருவரின் கண்களும் மழையைப் பொழிய இருவருக்குமே அந்த அணைப்பு தேவையாக இருந்தது. மனம் விட்டுப் பேசிக் கொள்ளட்டும் என்றெண்ணியவராகக் கோதை அவ்விடம் விட்டுச் சென்றார்.
“சாரிடா மினிக்குட்டி. மாமா உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா” என்று சொல்லியவாறே அவளது உச்சியில் முத்தம் பதித்தான் பிரபாகரன்.
“நாந்தான் மாமா சாரி சொல்லோணும். எனக்கு மறுநாளே புரிஞ்சு போச்சுங்க் மாமா. உங்களை விட்டு என்னால இருக்க முடியாதுன்னு. ஆனா இவ்வளவு நடந்தப்புறம் எப்படிங்க் உங்க வீட்டுல என்னை சேர்த்துப்பாங்க. அதான் நீங்க போன் பண்ணும் போதெல்லாம் எடுக்கவே இல்லீங்க். நெம்பத் தவிச்சுப் போயிட்டேனுங்க் மாமா. இனி என்ன நடந்தாலும் உங்களை விட்டுப் போக மாட்டேனுங்க் மாமா” என்று சொல்லி அணைப்பை இறுக்கியவளாய் அவன் நெஞ்சத்திலேயே தன் முதல் முத்திரையைப் பதித்தாள் மீனலோசினி.
*********************
ஐந்து வருடங்களுக்குப் பிறகு. அழகிய நல்லூர், பொள்ளாச்சிக்கும் கோவைக்கும் இடையில் இருக்கும் அழகிய கிராமம். இங்கு தான் பிரபா தன்னுடைய விவசாயக் கனவை நனவாக்கியிருந்தான். இப்பொழுது அவனுக்கென்று சொந்தமாக ஒரு தென்னந்தோப்பு, நன்செய், புன்செய், நாட்டுக் கோழிக்கென்று தனிப் பண்ணை அனைத்தும் உள்ளது.
பண விஷயத்தில் நாசூக்காக விலகிக் கொண்டவன் தொழில் விஷயத்தில் ஒவ்வொன்றையும் தன்னுடைய மாமனார் குமரப்பனிடம் ஆலோசனை கேட்ட பிறகே செய்வது வழக்கம். அதில் அவர்களுக்கும் பரம திருப்தி, சந்தோஷம். சுந்தரவடிவும் தங்கள் உணவு விடுதியை மொத்தமாகப் பாண்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு இப்பொழுது மகன், மருமகளுடன் சந்தோஷமாக நாளைக் கழிக்கிறார்.
“அப்பா தீக்கிரம் வெளியே வாங்கப்பா. பாப்பா துண்டு வைச்சிக்கேன்” என்று குளியலறையின் வாசலிலேயே பூந்துவாலையுடன் கத்திக் கொண்டிருந்த பூச்செண்டின் பெயர் ஆதர்ஷினி. பிரபாகரன் மீனலோசினி தம்பதியரின் மூன்று வயது மகள்.
“அப்பாக்கிட்ட துண்டு இருக்குடா பாப்பா. நீங்க போய் அப்பத்தாக்கிட்ட இருங்க. அப்பா இதோ வந்துடுறேன்” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான் பிரபா.
“அது அம்மா துண்டு. அது நேநா” கொஞ்சம் கொஞ்சமாய் குரல் அழுகைக்குத் தயாராக, அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாக லேசாகக் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி “என் சமத்து பாப்பா. நீங்க தாங்கடா. எப்பப் பாரு எம்மக கூட போட்டி போடுறதே இவளுக்கு வேலையா போச்சு” என்று போலியாக அலுத்துக் கொண்டு மகள் கையிலிருந்த துண்டை வாங்கிக் கொண்டான் பிரபா.
அத்தோடு நிறுத்தாமல், “அம்மா துண்டை குடுப்பா” என்று பிரபா ஏற்கனவே வைத்திருந்த துண்டைக் கேட்டு வாங்கி அதை சர்வ அலட்சியமாகக் கட்டிலில் வீசிவிட்டு அவளுடைய அப்பத்தாவிடம் ஓடிச் சென்றது அந்த வாண்டு.
அம்மா மகள் இருவருக்கும் யார் அப்பாவுக்கு முதலில் துண்டைக் கொடுப்பது என்று போட்டி நடந்திருந்தது. அதில் மகளை முந்திக் கொண்டு மீனா துண்டை நீட்டியிருந்தாள். குட்டிப்பெண் அதில் அழுது கொண்டு அப்பத்தாவிடம் குறை படிக்க ஓடிவிட, பிரபாவின் மீது நம்பிக்கையற்றவளாக அந்த அறைக்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தாள் மீனா மகளை உள்ளே விடாமல். பிரபாவோ அவள் எதிர்பார்க்கா நேரம் அவளையும் உள்ளிழுத்து முழுதாக நனைத்துவிட்டிருந்தான்.
மகள் சென்றவுடன் கதவை அடைத்துவிட்டு உள்ளே திரும்பியவனை சராமாரியாக அடித்தாள் உள்ளே தொப்பலாக நனைந்து போய் நின்று கொண்டிருந்த மீனலோசினி.
“வலிக்குதுடி பொண்டாட்டி. உன் கூட குளிக்கவே செய்றேன். உன் மக கொடுத்த துண்டை வாங்கக் கூடாதா? அம்மாவுக்கும் மகளுக்கும் என்னை வைச்சு போட்டி போடுறதே வேலை” என்று சொல்லியவாறே அவள் கைகளிரண்டையும் ஒற்றைக் கையில் அழுத்திப் பிடித்து மற்றொரு கையால் இடை வளைத்துத் திரும்பவும் அவளை ஷவருக்கடியில் நிறுத்தியிருந்தான்.
“போங்க் மாமா. உங்களுக்கு உங்க பொண்ணு பொறந்தப்புறம் என் மேல பிரியமே இல்லீங்க்” என்று செல்ல ஊடல் கொண்டு சிணுங்குபவளை இன்னும் கொஞ்சம் தன்னோடு இறுக்கி அணைத்து,
“பிரியம் இல்லாமயாடா சொக்குப்பொடி பின்னாடியே சுத்தி வரேன். நல்லா பார்வையாலேயே சொக்குப் பொடி போட்டு மயக்கி வைச்சுக்கிட்டு பேச்சைப் பாரு பேச்சை. இப்படிப் பொய்யா பேசுற இந்த உதட்டை என்ன பண்றேன் பாரு” என்று கூறியவாறே வன்மையாக அவள் உதட்டைக் கொய்திருந்தான்.
முற்றும்