paarvai9

paarvai9

பார்வை – 9

சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி

கத்தும் கடலலைத் தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டும் வைத்துப்

பவளப் பட்டும் கட்டி

அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வரச் சிந்திக்கலாமா

மன்னனை இங்கே தள்ளி வைத்துத் தண்டிக்கலாமா

காதுக்குள் இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரும் சித்ராவும் உருகிக் கொண்டிருக்கத் தன்னையே மறந்தவனாக அந்தக் கப்பலின் டெக்கில் அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். திருமணம் நின்று போயிருந்தது. அதுவும் மீனா இத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறித் திருமணத்தை நிறுத்தியிருந்தாள். அதன் பிறகு பிரபா எவ்வளவோ முயன்றும் அவளிடம் பேசக் கூட முடியவில்லை. பிரபாவின் வேலை முடியவோ இன்னும் ஒரு மாத காலம் முழுதாக இருந்தது. கையறு நிலையில் இருந்தான் பிரபாகரன்.

கப்பல் இப்பொழுது நின்று கொண்டிருந்த இடம் கரீபியின் தீவுகளில் உள்ள பஹாமாஸ் எனும் இடம். பிரபாவுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று. இத்தீவின் விசேடம் கப்பலில் இருந்தவாறே கடலின் அடி ஆழம் வரை அதாவது ஸீ பெட் என்று சொல்வார்களே அதுவரைக் காண முடியும். கப்பல் பயணத்தின் பொழுதே இந்தத் தீவின் அழகில் மனம் மயங்குபவன் இம்முறை நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தும், ரசிக்காமல் வெறித்திருந்தான்.

அவனருகில் வந்தமர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஆதரவாக அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். “இப்படியே மூஞ்சியை வைச்சுக்கிட்டு இருக்காத பிரபா. உனக்கு இது கொஞ்சங் கூட செட் ஆகலை. பொறுத்தது பொறுத்துட்ட இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ. நீ நேர்ல போய் நின்னீன்னா கண்டிப்பா அந்தப் பொண்ணால உன்னை வேண்டாமுன்னு சொல்ல முடியாது. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ.

இப்ப ஏதோ கோவத்துல அப்படி சொல்லிட்டாங்க. உன்னை நேர்ல பார்த்துட்டா அந்தக் கோபத்தை அந்தப் பொண்ணால இழுத்துப் பிடிக்க முடியாது. சோ சியர் அப் மை பாய்” ஆதரவாகப் பேசினார் ஸ்டீவ்.

“எவ்வளவு கோவம் இருந்தாலும் அதை என்கிட்ட காட்டட்டும். அதுக்காக ஒரேடியா என்னை வேண்டாமுன்னு சொல்லிடுவாளா? அவளால எப்படி முடிஞ்சுது? என்னால சுத்தமா முடியலையே” பிதற்றிக்க் கொண்டிருந்தான் பிரபா.

“எல்லாம் சரியாகிடும். இல்லை ஒரு வார்த்தை சொல்லு, நானே அந்தப் பொண்ணை நேர்ல பார்த்து, இந்தப் பய புலம்புறதை என்னால காது கொடுத்து கேட்க முடியலைம்மா. புலம்பிப் புலம்பியே எல்லாரையும் ஒரு வழி ஆக்குறான். எங்களைக் காப்பாத்துறதுக்காகவாவது நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோம்மான்னு சொல்லிக் கெஞ்சியாவது சம்மதிக்க வைக்கிறேன் போதுமா. இப்ப எந்திரிடா. எந்திரிச்சுப் போய் எஞ்சின் செக் பண்ணு போ. சும்மா சோக கீதம் இசைச்சுக்கிட்டு”

“ம்ச்… ஒரு டென் மினிட்ஸ் கேப்டன். நீங்க போங்க, நான் வரேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் நடந்ததை அசைபோடத் தொடங்கினான்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன், பிரபா கப்பலுக்கு வந்து முழுதாக இரண்டு மாத காலம் ஓடியிருந்தது. பிரபா மதுரையில் இல்லாத போதும் திருமண வேலைகள் ஜரூராகவே நடந்து கொண்டிருந்தது எந்தத் தொய்வும் இல்லாமல்.

பொள்ளாச்சியிலேயே ஆகச் சிறந்த மண்டபமாகப் பார்த்து இவர்களது திருமணத்திற்காகப் புக் செய்திருந்தார் குமரப்பன். இரு வீட்டாரும் இணைந்து காஞ்சிபுரத்துக்கே ஒரு முறை சென்று முகூர்த்தப் பட்டு வாங்கி வந்தார்கள். இரண்டு மூன்று புடவைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபாவிடம் வீடியோ காலில் காட்டிய பிறகே முகூர்த்தப் பட்டைத் தெரிவு செய்தாள் மீனா. அதுவரையில் எல்லாம் நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது.

பத்திரிக்கை அச்சடித்து வந்த பிறகு பெண் வீட்டாரின் நெருங்கிய சொந்தங்களை முறையாக அழைக்கும் பொருட்டு பிரபா வீட்டிலிருந்து சுந்தரவடிவு, மூத்த மகள் தங்கம், அவர் கணவர் நடேசன், இரண்டாவது அக்கா தனத்தின் கணவர், பாண்டி ஆகியோர் கிளம்பி வந்திருந்தனர் பூங்குளத்திற்கு. மற்றவர்களுக்கு வேறு வேலை காரணமாக வர இயலவில்லை.

வந்த வேலையும் திவ்யமாக முடிந்திருந்தது. மீனா பள்ளிக்குச் சென்றிருந்ததால் அவள் வந்தவுடன் அவளையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றெண்ணி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி மீனாவுக்காகக் காத்திருப்பதில் வந்திருந்த பிரபாவின் மாமாக்கள் இருவருக்கும் பிடித்தமில்லை.

‘ஏன் நாமதேன் இன்னைக்கி வருவோமென்டு தெரியும் தானே. அப்புறம் என்னத்துக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். வீட்ல இருக்கலாமில்ல, நம்மளை விட அதேன் முக்கியமா போச்சா’ என்று இருவரும் தங்களுக்குள்ளாக முணங்கிக் கொண்டார்கள்.

மீனாவுக்கு அன்று பள்ளியில் விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை. எப்படியும் இவர்களும் மதுரையிலிருந்து வந்து, பிறகு பத்திரிகை எல்லாம் வைத்து முடித்து வர நேரமாகும். அதற்குள் நாம் திரும்பிவிடலாம் என்றெண்ணியே பள்ளிக்குக் கிளம்பியிருந்தாள். திடீரென்று பள்ளியின் தாளாளர் வருகை தந்துவிட சட்டென்று கிளம்ப முடியாமல் கொஞ்சம் தாமதமாகி விட்டது.

அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்தவளை வாசலிலேயே வைத்துக் கடிந்து கொண்டார் லலிதா. “கொஞ்சம் சீக்கிரம் வாரதுக்கு என்ன கண்ணு? அவியெல்லாம் உனக்காகத் தான் நெம்ப நேரமா காத்துக்கிட்டிருக்காங்க. பாரு மூஞ்சியெல்லாம் எப்படி சோர்ந்து போய் இருக்குதுன்னு. அவங்களைப் பார்க்குறதுக்கு முன்னாடி போய் உன்ர ரூம்ல வேற சேலையை மாத்திக்கிட்டு முகம் கழுவி கொஞ்சம் ஃபிரெஷ்ஷா வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மீனாவும் தாயாரின் பேச்சைத் தட்டாமல் யாருடைய கவனத்தையும் கவராத வண்ணம் மாடிக்குச் செல்ல முற்படுகையில் சரியாக நடேசன் அவளைப் பார்த்துவிட்டார். பார்த்தவர் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம். அப்படி இருந்துவிட்டால் அவர் நடேசன் அல்லவே. எனவே ஆரம்பித்திருந்தார்.

“ஏம்மா உனக்காக நாங்க எல்லாம் இம்பூட்டு நேரமா காத்துக் கிடக்கோம். நீ என்னடான்னா வந்தவுகள வாங்கன்னு கூட கேட்காம நீ பாட்டுக்குப் போற” என்று உரத்தக் குரலில் கூறவும் அங்கிருந்த அனைவருக்குமே தர்ம சங்கடமாகிப் போனது.

“ஐயோ அப்படியெல்லாம் இல்லீங்க்ண்ணா. ஸ்கூல்ல கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்க். காக்க வைச்சதுக்கு நெம்ப சாரிங்க்ண்ணா. போய் கொஞ்சம் ஃபிரெஷ் அப் பண்ணிட்டு வந்து பேசலாமுன்னு நினைச்சேனுங்க்ண்ணா. இதோ ஒரு நிமிசத்துல வந்துரேனுங்க்” என்று சொல்லி மாடிப்படியேறியவளைப் பாதியில் தடுத்து நிறுத்தியது நடேசனின் குரல்.

“ஓஹோ இம்பூட்டு நேரம் மஹாராணி வாரதுக்காகக் காத்திருந்தாச்சு. இனி மேக்கப் முடிச்சு வார வரைக்கும் வேற காத்திருக்கணுமோ? நமக்கெல்லாம் வேற வேலை வெட்டியே இல்லையென்டு நினைச்சுட்டாகப் போல சகலை” என்று சொல்லி இரண்டாவது அக்கா தனத்தின் கணவனையும் துணைக்கழைத்துக் கொண்டார்.

சுந்தரவடிவும், தங்கமும் தர்மசங்கடமாக மீனாவைப் பார்க்க, முயன்று முகத்தில் ஒட்ட வைக்கப்பட்ட புன்னகையுடன் வந்து, “வாங்க அத்தை, வாங்க அண்ணா, வாங்க அண்ணி” என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்றுப் பின், “பிள்ளைங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லீங்க் அண்ணி” என்று சொல்லியவாறே சுந்தரவடிவு அருகில் அமர்ந்து கொண்டாள் மீனா. 

அலுத்துக் களைத்து வரும் மருமகளை இப்படி விடாப்படியாகப் பிடித்து வைத்துப் பேசுவதில் மனம் ஒப்பாத சுந்தரவடிவு, “ரொம்ப சோர்வா இருக்கியேம்மா. நீ போய் முகம் கழுவிட்டு வாம்மா. வந்து மொத எதையாவது கொஞ்சம் சாப்பிடு. போம்மா” என்று மெதுவான குரலில் கூற, அவரின் குரல் பேதத்தை உணர்ந்தவளாக, “பரவாயில்ல இருக்கட்டுமுங்க அத்தை. அப்புறமா சாப்பிட்டுக்கிறேனுங்க்” என்று மறுத்துக் கூறிவிட்டு அமர்ந்து கொண்டாள்.

சூழ்நிலை விரும்பத்தகாததாக மாறும் முன் வேறு பேச்சை ஆரம்பிப்பதற்காக, “மாப்பிள்ளை தம்பி விவசாயம் பண்ண நிலம் வாங்கப் போறதா சொன்னாருங்க். இப்ப நம்ம தோப்புக்கு எதுக்கால இருக்குற எடம் விலைக்கு வருதுங்க். அதைப் பேசி முடிக்கலாமுங்களா?” என்று சுந்தரவடிவிடம் கேட்டார் குமரப்பன்.

சுந்தரவடிவு பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு பதிலளித்தார் அவருடைய இரண்டாவது மருமகன். “அதெல்லாம் சரி வராதுங்க. அவென்தேன் புரியாம ஏதோ உளறிக்கிட்டு இருக்கான்னா நீங்க வேற ஏங்க. விவசாயம் பார்க்க முடியாமத்தேன் அவென்  அவென்  வேற வேலைக்குப் போயிக்கிட்டிருக்கானுங்க. இவென் என்னடான்னா இருக்குற வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்கப் போறானாம். இதெல்லாம் நடக்குற காரியமுங்களா?

யம்மா மீனா, நீதேன் அவென்கிட்ட இதெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தணும் புரியுதா” என்றார்.

“சொல்லித் திருத்துறதுக்கு அவர் ஒன்னும் தப்புப் பண்ணலீங்களேண்ணா. விவசாயம் பண்றது தான் அவருக்கு விருப்பமின்னா நான் அதுக்குத் தானுங்களே அவருக்கு உதவியா இருக்க முடியும். எனக்கொன்னும் அவர் ஆசை தப்பானதா தெரிலீங்க்ண்ணா” என்றாள் மீனா.

மீனாவின் பதிலில் மகிழ்ந்தவராக சுந்தரவடிவு அவளுக்கு “என் ராசாத்தி” என்று சொல்லித் திருஷ்டி எடுக்க அது இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றியது அவரது மருமகன்களை. சரியாக அந்நேரம் பார்த்துப் பாண்டியின் அலைப்பேசிக்குப் பிரபாவிடமிருந்து அழைப்பு வர,

“மாப்பி சூழ்நிலை கொஞ்சம் சரியில்லடா. எதாச்சும் பிரச்சன ஆகும் முன்னுக்கு நான் இவெங்களைக் கூட்டிக்கிட்டு கெளம்புறேன். நீ அப்புறமா கூப்புடுடா” என்று சொல்லிப் பாண்டி அழைப்பைத் துண்டிக்கப் பார்க்க,

“டேய் இருடா யாரு பிரச்சன பண்றா?” என்றான் பிரபா.

“வேற யாரு எல்லாம் உன் மாமனுங்கதேன்” என்று பாண்டி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

“அத்த நீங்க வேற புரியாம பெருமை பட்டுக்காதீக. அவுக நம்ம பிரபாவை வீட்டோட மாப்பிள்ளையாக்கப் பார்க்குறாக. அதுக்குத்தேன் தோப்பு விலைக்கு வருது, அது வருது, இது வருதென்டு அடி போடுறாக. அது புரியாம நீங்க பாட்டுக்கு…

நாங்கதேன்  முன்னாடியே சொன்னோமுல்ல, இந்தப் பக்கிட்டு பொண்ணு எடுத்தா நம்ம பயல வீட்டோட வைச்சிக்கிடுவாகென்டு. நீங்கதேன் ஒத்துக்கிட மாட்டேன்னீக. இப்ப நாங்க சொன்ன மாதிரி தானே நடக்குது” என்றார் நடேசன் உரத்தக் குரலில்.

அவர் கூறிய விதமும், எழுப்பிய சத்தமும் சற்றே அவமரியாதையாகத் தோன்ற அதிர்ச்சியில் அமைதியாகிவிட்டார் குமரப்பன். கோதையம்மாளும் லலிதாவும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. நடேசன் அவ்வாறு பேசியது தன் தந்தையை அவமானப்படுத்தியதைப் போல் தோன்ற,

“அதை வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற நீங்க யாரும் சொல்லக் கூடாதுங்க்ண்ணா” என்று பட்டென்று கூறியிருந்தாள் மீனா. இந்தப் பதிலைக் கேட்டு இப்பொழுது சுந்தரவடிவும், தங்கமும் ஏன் பாண்டியுமே கூட திகைத்துப் போக, “மாப்பி ஃபோனை மீனா கிட்ட கொடு” என்று இவ்வளவு நேரமும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரபா பாண்டியிடம் கூறினான்.

பாண்டி அலைப்பேசியை மீனாவிடம் நீட்ட, அவள் அதை வாங்கி ஹலோ என்று கூறும் முன், “மீனா மாப்பிள்ளைக கிட்ட மன்னிப்புக் கேளு” என்றிருந்தான் பிரபா இறுகிய குரலில்.

“இங்க என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீங்க பாட்டுக்கு மன்னிப்பு கேளுன்னா என்னங்க மாமா அர்த்தம்? அப்ப என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லீங்களா?” என்றாள் மீனா.

“இப்போதைக்கு இது பெரிய பிரச்சனை ஆகாம இருக்கணும். அதுக்கு வேண்டிதேன் சொல்றேன். நீ ஒரு தடவை மன்னிப்புக் கேட்டுடு. இதால நாம ஒன்னும் கொறஞ்சு போயிட மாட்டோம். கேளு மீனா” என்றான் பிரபா கொஞ்சம் பிடிவாதக் குரலில். திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் இந்தப் பிரச்சனை இத்துடன் முடிய வேண்டும். இதை மனதில் வைத்தே பிரபா அவ்வாறு கூறினான்.

“கேட்க முடியாதுங்க் மாமா” அதை விடப் பிடிவாதக் குரலில் மீனா. தன்னிடம் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தையும் கேட்காமல் மன்னிப்பு கேட்கச் சொன்னது தன் மீது நம்பிக்கையின்மையாகத் தோன்றியது மீனாவிற்கு.

“ஸ்ப்ப்பா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா?” சலிப்பாகப் பிரபாகரன் பேசியது அவ்வளவு நேரம் மீனா இழுத்துப் பிடித்து வைத்திருந்தப் பொறுமையை வெகு தொலைவுக்கு விரட்டியிருந்தது.

“தேவை இல்லீங்க் மிஸ்டர்.பிரபாகரன். இவ்வளவு சலிப்போட இந்தக் கல்யாணம் நடக்கோணுமுன்னு எந்தத் தேவ்வையும் இல்லீங்க் மிஸ்டர்.பிரபாகரன்.”

“மினிம்மா நான் சொல்றதை ஒரு நிமிசம் கேளுடா.”

“எப்ப நீங்க என்கிட்ட ஒரு வார்த்தையும் கேட்காம நீங்களா முடிவெடுத்துப் பேசுனீங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சுங்க். கல்யாணத்துக்கு அப்புறமும் இதே கதைதானுங்களே நடக்கும். எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லீங்க்.”

“மினிம்மா” தவிப்பானக் குரலில் பிரபா அழைக்க,

“குட் பை மிஸ்டர்.பிரபாகரன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துப் பாண்டியிடம் அலைப்பேசியை நீட்டியிருந்தாள் மீனா.

“இங்க நான் ஆருகிட்டயாவது மன்னிப்புக் கேட்கோணுமுன்னா அது உங்க கிட்ட தானுங்க்” என்று சொல்லி சுந்தரவடிவை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்னை மன்னிச்சுக்கிடுங்க. இந்தக் கல்யாணம் நடக்காதுங்க” என்றாள்.

“மீனாம்மா அவசரப்பட்டு எடுத்தோமா கவுத்தோமான்னு பேசக் கூடாது தங்கம். இதென்ன கண்ணு புதுப் பழக்கம் பெரியவங்களை எதுத்துப் பேசுறது. அவியட்ட மன்னிப்புக் கேளு” என்று கோதையம்மாளும் லலிதாவும் கூட வலியுறுத்த,

“எனக்குப் புடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி என்ர வீட்ல யாரும் வற்புறுத்த மாட்டாங்கன்னு நான் இப்ப வரைக்கும் நம்புறேனுங்க அம்மத்தா. அதே மாதிரி பண்ணாத தப்புக்கு என்னால மன்னிப்புக் கேட்க முடியாதுங்க்.  எனக்கு இந்தக் கண்ணாலத்துல இஷ்டம் இல்லீங்க்” என்று சொல்லிவிட்டு அது வரைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த அழுகையை வெளியேற்றுவதற்காகத் தன்னறை நோக்கி விரைந்துவிட்டாள்.

யாரும் யாரிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நிற்க, கலங்கிப் போய் நின்றிருந்த சுந்தரவடிவின் கைகளைப் பற்றிய கோதையம்மாள், “ஆண்டவன் போட்ட முடிச்சு இது தான்னா அதை மாத்த ஆராலயும் முடியாது கண்ணு. நீ கவலைப்படாம போயிட்டு வா. கொஞ்சம் ஆறப் போட்டு பேசலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார் கோதை.

மதுரைக்குத் திரும்பும் வழி நெடுக தங்கமும் சுந்தரவடிவும் புலம்பிக் கொண்டே வர, “இத்துணூன்டு புள்ள, எங்களை எல்லாம் அசிங்கப்படுத்தியிருக்கு. அது உங்களுக்கெல்லாம் பெருசா தெரியலை. நாங்க எவ்வளவு அசிங்கப்பட்டாலும் பரவாயில்ல. அப்படித்தானே” என்று பொங்கி விட்டனர் மருமகன்கள் இருவரும்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மீனலோசினி யாருடனும் பேச விரும்பாதவளாக அமைதியைக் கையிலெடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் தனிமையில் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தே நொந்து போயினர் மற்றவர்கள்.

பிரபா எத்தனையோ முறை முயன்றும் மீனாவிடம் பேச முடியவில்லை. ஆனால் வீட்டில் இருந்த மற்றவர்கள் பிரபாவிடம் எந்தப் பகையும் பாராட்டவில்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகள் எதையும் நிறுத்த வேண்டாம் என்றும் தான் வந்து அனைத்தையும் சரி செய்வதாக சொல்லி  அவர்களை ஆறுதல் படுத்தியிருந்தான் பிரபா. பிரபாவின் மீதுள்ள நம்பிக்கையில் பத்திரிக்கை வைப்பதை மட்டுமே நிறுத்திவிட்டு மற்ற வேலைகளை நடத்திக் கொண்டுதான் இருந்தார் குமரப்பன். அவர்களுக்கும் இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை விட மனமில்லை.

error: Content is protected !!