Pidikaadu 20

பிடி காடு – 20
ஒதுக்க நினைக்கும் உறவுகளும் ஒத்திவைக்க நினைக்கும் சந்திப்புகளும் துரத்திக் கொண்டே இருப்பது சில நேரங்களில் வரம்; சில நேரங்களில் சாபம்! ஓடி ஒளிவதும் நின்று எதிர்கொள்வதும் தனி மனித விருப்பம். முடிவென்பது முன்னெப்பொழுதோ நடந்து முடிந்த நிகழ்வுகளின் நிழாடலால் தீர்மானிக்கப்படலாம். முன் யோசனையின்றியும் எடுக்கப்படலாம்.
செந்திலின் கண் முன் நிழலோவியங்களின் அணிவகுப்பு. இறுதியில் பாஸ்கரிடம் அவன் கேட்டக் கேள்வியே தொக்கி நின்றது. ‘கௌரிக்காக மாமா பேசுவாரா?’
அவள் தன் முகம் பார்க்கிறாள். சங்கடப்படுகிறாள். எல்லாம் தெரிந்தே இருந்தது. அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் சங்கடம் மறைத்தான்.
மாமா உதவியே செய்யாதவர் இல்லை. தாய் தந்தை மறைந்த தினத்திலிருந்து எத்தனையோ செய்திருக்கிறார். எதுவும் அவன் கேட்டதில்லை. அவராகச் செய்தார். ‘போதும்’ என்று சொல்லிப் பழக்கப்பட்டவன். ‘வேண்டும்’ என்று கேட்க விரும்பாதவன்.
பாஸ்கர் கடைக்குச் செல்லவில்லை. செந்திலின் வீட்டில் அமர்ந்திருந்தான். கௌரி அடுக்களையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். செய்வதற்கு எதுவுமில்லை. அடுக்கிய பாத்திரங்களை முப்பதாவது முறையாகக் கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
புறம் கூச்சலும் குழப்பமுமாய் இருப்பினும் அகத்தில் காண்பிக்காதிருந்தான் செந்தில். முடிவெடுக்கும் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைக்க முடிந்தால்? 
“எவ்வளோ நேரம் இப்படியே அமைதியா ஒக்காந்திருப்ப?”
“இப்ப என்ன அவசரம்?”
“உச்சி வேளையாயிப் போச்சு. எப்பப் போயி அப்பாகிட்டப் பேசுறது?”
“நா கொஞ்ச நேரம் படுக்குறேன்”
கௌரி வேகமாக ஹாலிற்கு வந்தாள்.
“நானும் வீட்டுக்குப் போறேன்”
“என்ன ரெண்டுப் பேரும்… கௌரி நீ மொதல்ல இங்க ஒக்காரு. ராஜாவ எறக்கிவிடு அவன் பாட்டுக்கு வெளையாடுவான். செந்தில்கிட்ட ஒனக்கு என்ன கேக்கணும்?”
“இதுக்கு மேல நா என்னத்தக் கேக்க? இம்புட்டு செஞ்சிருக்காக…”
“சும்மா சும்மா ஒங்கிட்ட இது வேணும் அது வேணும்னுக் கேக்க யோசிக்குறா. இதுக்கு மேல ஒன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நெனைக்குறியா செந்திலு?”
“ஐயோ ஏன் இப்படியெல்லாம் கேக்குறீக?”
“நீதானம்மா…”
“பாஸ்கர் இரு… மாமாகிட்ட நா பேசுறேன்”
“அப்போ கெளம்புவோமா?”
“இப்போ வேணாம். கடையப் பாக்கணும். வியாபார நேரத்துல அங்க போயி நிக்க முடியாது. அதோட இத வீட்டுல வெச்சுப் பேசணும். ஒங்க வீடு வேணாம். அத்தைத் தேவையில்லாம இதுல தலையிட வேண்டாம்னு நெனைக்குறேன். போன் பண்ணி சாயந்தரம் சீக்கிரம் கடையடச்சிட்டு இங்க வர சொல்லுறேன்”
“நானும் இருக்கேன். ரெண்டுப் பேருக்குள்ள வாக்குவாதமாச்சுன்னா…”
“அப்படி ஆச்சுன்னா நீ அமைதியா வேடிக்கதாப் பாப்ப”
“இல்ல நா…”
“ஒன்னால ஒங்கப்பாவ நேரடியா எதிர்த்து பேசவோ கேள்விக் கேக்கவோ முடியாது பாஸ்கர்”
“அது… சரி அப்போ சேகரண்ணன்?”
“வேணாம். கண்மணிய காலேஜூலேந்து இங்க கூட்டிட்டு வா”
“ஹ்ம்ம்… சின்ன வயசுலேந்து எனக்கு ஒன்ன மாதிரி இருக்கணும்னு ஆச. கொஞ்சம் பொறாம கூட உண்டு. கொஞ்ச நாளா எனக்குத் தோணுச்சு… நீ பயந்து ஒளியுற மாதிரி. தெளிவா யோசிக்காத மாதிரி. எனக்கு நீ புதுசாத் தெரிஞ்ச. இப்போதா நீ நீயா இருக்க. நா கெளம்பவா? வீட்டுக்குப் போயிட்டு வண்டி எடுத்துட்டு கண்மணியக் கூட்டிட்டு வரேன்”
“வீட்டுக்குப் போனா அத்த இருப்பாங்க. கடைக்குப் போனா மாமா இருப்பாங்க. ரெண்டுப் பேருகிட்டயும் வாயே தொறக்காம ஒன்னால சமாளிக்க முடியுமா?”
“அதெல்லா…”
“கஷ்டம்”
“இப்ப என்னத்துக்குத் திரும்பத் திரும்ப அசிங்கப்படுத்துற நீ?”
“இங்கயே இரு. நம்ம கார்ல போயி கண்மணிய கூட்டிட்டு வருவோம். போறதுக்கு முன்னாடி மாமாவுக்கு கால் பண்ணி சொல்லுறேன். அத்தைகிட்ட அவரே சொல்லிக்கட்டும்”
“எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணுற சரி… நடுவுல என்ன எதுக்கு ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வெக்குற?”
“எனக்கு ஒம்மேல நம்பிக்க இல்ல”
“காலையிலேந்துக் கூட இருக்கேன்…”
“சரி எனக்குத் தொணையா ஒன்ன இங்க நிறுத்தி வெக்குறேன்”
“அப்படின்னா இருக்கேன்”
“போறேன்னு சொன்னாலும் ஒன்ன வெளில விடுறதா இல்ல. கௌரி… மாமாகிட்ட எதுனாலும் நா பேசிக்குறேன். ஒங்கிட்ட ஏதாவது கேட்டாங்கன்னா பதில் சொல்லுறதுக்கெல்லாம் யோசிக்காத. நீ ஒன் வீட்டுக்குப் போ. சாப்பாடு வெளில வாங்கிட்டு வந்து தரேன். நாங்க இங்க சாப்பிட்டுக்குவோம். கண்மணிய கூட்டிட்டு வந்ததும் அங்க கொண்டு வந்து விடுறேன். மாமா வந்ததுக்கப்பறம் இங்க வந்தாப் போதும்”
“எனக்குத் தெரிஞ்சு இப்போ கண்மணி இங்க வரணும்னு அவசியமே இல்ல. நீ ரொம்ப தெளிவா யோசிக்குற. அப்பாகிட்ட நீயே ஒழுங்காதா பேசுவ”
“கண்மணிய இங்க வர சொல்லுறது எனக்கும் மாமாவுக்கும் மத்தியஸ்தம் பண்ணி வெக்க இல்ல. கௌரிக்கு தொணையா இருக்க. எந்திரி சாப்பாடு வாங்கிட்டு வருவோம். நீ வீட்டுக்குப் போ”
சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் சலித்தபடி எழுந்தாள். ஜன்னல் விளிம்பைப் பிடித்தபடி நின்றிருந்த மகனைத் தூக்கினாள்.
“சாவி எங்க வெச்சிருக்க?”
“சாமி படத்துகிட்ட இருக்குப் பாரு”
“சரி நா வரேன்…”
“நில்லு. ராஜாவுக்கு பால் எடுத்துக்கோ”
“ஆமால்ல…”
“காலையிலதா அவ்ளோ சொன்னேன்…”
“பால் சூடு பண்ண வேணாம். அப்படியே எடுத்துக்குறேன். சாதம் தனியாக் கொஞ்சம் வாங்கிட்டு வா. ஒரு தயிர் பாக்கெட்டும். பிஸ்கட்டு இருக்குது. சாயந்தரம் வரைக்கும் புள்ளைக்கு அது போதும். ராத்திரிக்கு மாவு இருக்குது. தக்காளி மட்டும் வேணும். இப்போவே வாங்கிட்டு வந்தாலும் சரி… அப்பறமா வாங்கிக் குடுத்தாலும் சரி.
நாளைக்கு எப்படியும் கடப் போட முடியாது. இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்ல ராத்திரி சாப்பாடு செய்யுறதத் தவிர. அதனால உங்க மாமா வர வரைக்கும் இங்க வர மாட்டேன். கண்மணிய எனக்குத் தொணைக்கு வர சொல்லுறப் பாரு… ரெண்டு நிமிசம் முன்னாடி வரைக்கும் ஊம சாமியாராட்டம் ஒக்காந்திருந்துட்டு எப்போ இம்புட்டும் யோசிச்சன்னு மலப்பா இருக்குதுய்யா”
கௌரி சென்ற பிறகு கைபேசியை எடுத்து மாமாவின் எண்ணிற்கு அழைத்தான்.
“சொல்லுப்பா”
“ஒங்கக்கிட்டப் பேசணும். பாஸ்கர் இங்கதா இருக்கான். கண்மணிய காலேஜ் முடிஞ்சதும் கூட்டிட்டு வந்திடுறேன். ஆறு மணிபோலக் கடைய சாத்திட்டு வரீங்களா?”
“எப்படி… நா மட்டுமா? இல்ல உங்கத்தையும் கூட்டிட்டு… தாம்பாளத் தட்டுலப் பூ பழம் வெச்சு எடுத்துட்டு வரணுமா?”
“கல்யாணம் பேச வர சொல்லல. அப்படி ஒரு எண்ணம் எனக்கில்ல. பஞ்சாயத்துப் பேசக் கூப்பிடுறேன். கண்மணி, பாஸ்கர் இங்க இருக்காங்கன்னு அத்தகிட்ட சொல்லிடுங்க. வரும்போது கடையிலேந்து ஒரு கிலோ தக்காளி எடுத்துட்டு வாங்க. வெக்குறேன்”
“என்ன செந்திலு… பொசுக்குன்னு அப்பாவ தக்காளி எடுத்தார சொல்லிட்ட?”
“சும்மா எப்போ பாரு கல்யாணம் கல்யாணம்னா… எப்படியும் வாங்கிதான ஆகணும். கொண்டு வரட்டும். ஏன் இத கூட செய்யமாட்டாரா?”
“ஏன் மாட்டாரு? அவரு ஒனக்குன்னு எவ்வளவோ செய்ய ஆசப்படுறாரு. நீதா விட்டதில்ல”
“வா போலாம்”
பரசுராமன் எழுந்தார். காய் வைத்திருக்கும் அடுக்கருகில் சென்றார். தக்காளியை இரண்டு கைகளிலும் அள்ளினார். அள்ளி என்ன செய்ய? கவர் வேண்டுமே. கண்ணில் படவில்லை.
காலையிலிருந்து எத்தனையோ பேருக்கு எத்தனையோ பொருட்கள் எடுத்துக் கொடுத்தாயிற்று. கண்முன் இருக்கும் யாவையும் காணாமல் போக்குமளவு இருந்தது செந்தில் பேசிய வார்த்தைகளின் தாக்கம்.
கவரை எடுத்து, அது கொள்ளுமளவு தக்காளியை அள்ளிப் போட்டு மூட்டைக் கட்டிக் கல்லாப் பெட்டியின் மேல் வைத்த தடவிக் கொடுத்தார்.
ஆறு மணி வரை பொறுக்க முடியவில்லை. ஐந்தரை மணிக்கே ஷட்டரை மூடயாயிற்று. ஓட்டமும் நடையுமாக தக்காளி மூட்டையுடன் செந்திலின் வீட்டை எட்டியிருந்தார். அவர் கேட்டைத் திறந்தபோது செந்தில் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
“உள்ள வாங்க”
“இந்தாக் கேட்டியே… கண்மணி வந்துடுச்சா?”
“கூட்டிட்டு வந்துட்டேன். கௌரி வீட்டுல இருக்கு”
“சாப்பிட்டியா?”
“இப்போவா?”
“நேராமாவலல்ல… சரி சரி… மத்தியானம் சாப்பிட்டியா?”
“அதெல்லா சாப்டாச்சு… இப்படி ஒக்காருங்க. பாஸ்கர்… போயி அவங்க ரெண்டுப் பேரையும் கூப்பிடு”
“கவர் கைலயே வெச்சுட்டு நிக்குறியே… உள்ள வெக்கலையா?”
“ம்ம்… தண்ணிக் குடிக்குறீங்களா?”
“குடுப்பாக் குடிக்குறேன்”
அவன் தந்த சொம்பு நீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தார். கண்மணி, பாஸ்கர், கௌரி வீட்டினுள் வந்தனர். அவர் நீட்டிய சொம்பை வாங்க கௌரி கை நீட்டினாள்.
“நல்லாயிருக்கியாம்மா?”
தன்னிடம் தான் கேட்டாரா என்ற சந்தேகம். திரும்பிப் பார்த்தாள். செந்தில் பதில் சொல்லுமாறு தலையசைத்தான்.
“இருக்கேன். நீங்க நல்லாயிருக்கீங்களா?”
“இருக்கேம்மா. என்னப்பாப் பேசணும்னு சொன்ன?”
“சண்முகம்னு ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா?”
“சண்முகம்… ரெண்டு மூணுப் பேரு இருக்காங்க. யாரு?”
“தள்ளுவண்டியிலக் கடப் போடணும்னாக் கூட அவருக்கிட்டக் கேக்கணும்னு ஒருத்தன் ரெண்டு நாளா பிரச்சனப் பண்ணுறான். இன்னைக்கு பாஸ்கரப் பாத்ததும் அவனுக்கு அடையாளம் தெரிஞ்சுது. ஒங்களப் பேச சொல்லுறான்”
“ஆமா… சண்முகம்… நம்ம ஜங்க்ஷன் ஏரியாவுலக் கடப் போடுறவங்க எல்லாருக்கும் அவருதா தலைவரு. சங்கமெல்லாம் கெடையாது. ஆனா ஒரு கட்டுப்பாடு. அவருட்டக் கேட்டுப் பண்ணணும். எதாவது பிரச்சன வந்தா அவருப் பாத்துப்பாரு. ரொம்ப வருஷமா இதா பழக்கம். கடத் தொறந்தன்னைக்கு எனக்கு இதெல்லா நியாபகம் வரலப்பா. ஒருவேள ஒனக்குன்னா யோசிச்சிருப்பேனா இருக்கும்…”
“இவளோட சாப்பாட்டுக்கு வழிப் பண்ணிக் குடுக்கணும். அவப் பொழப்ப அவப் பாத்துக்குற மாதிரி இருக்கணும். அதுக்கு நீங்க போயிப் பேசுனாதா முடியும்னா… பேசுவீங்களா?”
“நீ என்டக் கேக்குறியா?”
“ஆமா ஒங்கக்கிட்டதாக் கேக்குறேன். நீங்க…”
“செய்வேன்டா… நீ என்டக் கேக்குறப் பத்தியா? எத்தன வருஷம் கழிச்சு… அப்பனாத்தாளத் தொலச்சுப்புட்டு எழவு வீட்டுல அமைதியா நின்னயே… அன்னைக்கு ஒங்க வீட்டுக்கே கூட்டிட்டுப் போங்க மாமான்னு ஒரு வாத்த சொல்லிருந்தீன்னா எம்பொஞ்ஜாதிய ஒதுக்கிட்டு ஒன்னக் கூட்டிட்டுப் போயி தங்கமாப் பாத்திருப்பேன்டா. ஆனா நீ எதுவுமே கேக்கலையே… வீட்டுக்கு வான்னுக் கூப்பிட்டதுக்கு எனக்குத் தனி வீடு பாத்துத் தாங்கன்னுக் கேட்டப் பாரு… போய் சேந்த என் அக்கா மாமாவுக்காக அழுவுறதா ஒன்ன நெனச்சு அழுவுறதான்னுத் தெரியாம… அப்பா… அந்த நாளெல்லாம் திரும்பி வந்துடவே கூடாதுடா சாமி.
படிக்க வையுன்னாவது கேட்டிருக்கலாமேடா. பத்தாப்பு வரைக்கும் நல்லாப் படிச்சுட்ட… மேலப் படிக்க வெக்குறேன்னு கேட்டதுக்கு வேலைக்கு சேத்துவிட சொன்ன. வீடு, குடும்பம், ஊருன்னு யோசிச்சு ஒன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போற தைரியம் இல்லாம… மொத நாள் வேலைக்குக் கொண்டு போயி விட்டப்போ… இந்தப் பொழப்புக்கு செத்துடலாம்னுத் தோணுச்சுய்யா.
பசிக்குது சோறு போடுன்னு கூடக் கேட்டதில்லயேடா பாவி… இப்போ எனக்குக் குடுத்தயே… இந்த ஒரு வாய் தண்ணிய கூட நா ஒனக்குக் குடுக்க விட்டதில்லடா நீ. எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுத் திருப்பிக் குடுத்துட்ட. என் வைத்திய செலவுக்கு எம்புள்ளயால செய்ய முடியல. நீ செஞ்ச…
இருக்க ஒரு சொந்தத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு அனாத மாதிரி இந்த வீட்டுல இருந்துக்கிட்டு… எந்த வயசுலேந்து? மாமான்னாவதுக் கூப்பிடுறியா?
நீ கேளுப்பா… என்னா வேணாக் கேளு. பசங்க சின்னதா இருந்த வரைக்கும் பெண்டாட்டி அத்துக்கிட்டுப் போயிட்டாப் புள்ளைங்க வாழ்க்கக் கெட்டுடும்னு யோசிச்சேன். இனிமே என்ன? செய் மாமான்னு சொல்லு. நா ஒனக்காகப் பண்ணுவேன்டா”
யாரும் யாரையும் நிமிர்ந்துப் பார்க்கும் நிலையில் இல்லை. எதை முதலில் பேசுவது? எதைப் பேசினாலும் பொருந்தாதோ?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!