Puthu Kavithai 23(1)

அத்தியாயம் 23

வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம்.

அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு செய்தார் வினோதகன். வேலை பார்க்க பங்காளிகள் உண்டென்றாலும் வருபவர்களை வாவென்று அழைப்பதே அத்தனை மகிழ்ச்சி அல்லவா!

“அவருக்கு என்ன? மச்சானுக்கு மச்சான்… மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை… எல்லாம் கொடுப்பினை தான்…” என்று வினோதகனை கேலி செய்தவர்கள் தான் அதிகம்.

அனைத்தையும் தாண்டி, பார்த்திபனின் வாழ்க்கை அபஸ்வரமாகியதற்கு காரணம் தானே என்ற யாரும் அறிந்திடாத குற்ற உணர்வு அவருக்கு அதிகம். அஞ்சலியால் பழுதுபட்ட அவனது வாழ்க்கையை இப்போது தன்னுடைய பெண்ணைக் கொண்டு சரியாக்கிவிட முடியும் என்று தீர்க்கமாக நம்பினார்.

அந்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, விநோதகனை கையால் பிடிக்க முடியவில்லை.

“என்னங் மாமா? வாயெல்லாம் பல்லாவே சுத்தறாப்ள போல…” மச்சினர் ஒருவர் இழுத்து வைத்து வம்பிழுத்ததற்கும் சிரித்தே சமாளித்தபடி வந்தார் வினோதகன்.

அத்தனையும் தாண்டி, மணமேடையில் பாத பூஜைக்காக தனது சகதர்மிணியோடு நின்ற போது அத்தனை நிறைவாக இருந்தது.

மணக் கோலத்தில் அவர் பெற்ற மகள்! உடன் அவரது மருமகனாக பார்த்திபன்!

கண்கள் பனிக்க பானுமதியோடு சேர்ந்து நின்று மகளது பாத பூஜையை ஏற்ற போது உலகை வென்ற உணர்வு!

இத்தனை நாட்கள் தன்னுடைய வீட்டில் பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்த மகள் இனி, கொண்டவனோடு மனையாளாக, இல்லத்து அரசியாக, பார்த்திபனின் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக கொலுவிருக்க போகின்ற மகிழ்ச்சி தம்பதியரின் முகத்தில் வெளிப்படையாக தென்பட, அம்மாச்சிக்கு அம்மாச்சியாய், மாமியாருக்கு மாமியாராக, தன்னுடைய பேத்தியே தனக்கு மருமகளாக வந்த சந்தோஷத்தில் சகுந்தலா!

இத்தனை பேரின் மகிழ்ச்சிக்கு காரணமான அந்த இருவரின் மனதிலும் சற்றும் மகிழ்ச்சியில்லை.

காதலே இல்லாமல் அவளை திருமணம் செய்து கொள்ள நேரிட்டு விட்டதே என்று அவனும்,

தன்னால் தானே அவனுக்கு இந்த நிலை என்ற குற்ற உணர்வில் அவளுமிருக்க, மங்கல நாண் பூட்டி மதுவந்தியை தன்னுடைய மனையாளாக்கிக் கொண்டான் பார்த்திபன்!

மதுவை பொறுத்தவரை அவளது குற்ற உணர்வோடு கோபமும் சேர்ந்திருந்தது.

அவள் தொலைகாட்சியை பார்த்து பயந்து தடுமாறிய அடுத்த நாள் மருத்துவரின் முன் இருந்தார்கள் பார்த்திபனும் மதுவும்! கொஞ்சமும் தாமதிக்கவில்லை அவன்.

வெறித்துப் பார்த்தபடி இருந்த இருந்த மதுவை கிளப்புவதுதான் சற்று கடினமாக இருந்தது.

“ப்ச்… லேட் பண்ணாதம்மா… கிளம்பு…” எழுந்தது முதல் தலையை பிடித்தபடியே அமர்ந்திருந்தவளை பார்த்திபன் அழைக்க, மது நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“மது… டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு…” பார்த்திபன் குரலை சற்று உயர்த்த, அவளுக்கு விலுக்கென்று உடல் தூக்கி வாரிப் போட்டது.

வர முடியாது என்று தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“பார்த்தி சொல்றதை கேளு மது…” பானுமதி கண்களில் கலக்கத்தோடு மதுவை எழ செய்ய, முடியாதென பிடிவாதமாக தலையாட்டினாள்.

“இப்ப கிளம்பறியா? இல்லையா?” உச்சபட்ச குரலில் பார்த்திபன் கத்த, மதி அரண்டு போய் பார்த்தார்.

கோபமென்று வந்துவிட்டால் தம்பியை யாருமே கட்டுப்படுத்த முடியாதென்பது அவர் அறிந்தது தானே!

தானாக கனியாதது தடியால் கனியுமாம்!

அதுபோலத்தான், பார்த்திபனின் கோபமுகம் மதுவிடம் வேலை செய்தது.

பதில் பேசாமல் ஒரு த்ரீ போர்த்தை அணிந்து கொண்டு அவன் பின்னே வந்தாள்.

“சுடிதார் போடு மது…” பானுமதி கண்டிப்பான குரலில் கூற,

“போர்ஸ் பண்ணாத… விடுக்கா…” என்று இன்னமும் இறுக்கமாக தமக்கையை கண்டித்தான் பார்த்திபன்.

‘செய்ய வேண்டிய நேரத்தில் எல்லாம் விட்டுவிட்டு, செய்ய கூடாத நேரத்தில் தான் கண்டிப்பை காட்ட தெரியும் இவர்களுக்கு!’ என்ற எரிச்சல் அவனுக்கு!

அதனாலேயே உடன் வருவதாக கூறிய மதியையும் சகுந்தலாவையும் முறைத்தே தவிர்த்திருந்தான்! எப்படி இருந்தாலும் அவர்கள் மருத்துவமனையிலேயே ஏதேனும் செண்டிமெண்ட் சீனை வைக்க பார்ப்பார்கள் என்பது அவனது எண்ணம்!

“போதும்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண கூத்தெல்லாம்! நானே கூட்டிட்டு போயிட்டு என்னன்னு கேட்டுட்டு வரேன். நீங்க வீட்ல இருங்க.” என்று அவன் பல்லைக் கடித்தபடி கூற,

“இல்லடா தம்பி… பிள்ளைக்கு என்னாச்சுன்னு கேட்டியான்னு மாமா கேப்பாப்ள…” என்று தயங்கிய தமக்கையை,

“அப்படீன்னா அவரை எனக்கு கால் பண்ண சொல்லு…” என்று இறுக்கம் தளரவில்லை.

அவனது தலை மேல் இன்னொரு சுமையாக தன் மகளை ஏற்றி வைக்கிறோமோ என்ற கவலை வேறு அவருக்கு வந்துவிட்டது!

மது, எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்று புரியாமல் இருந்தார் அவர்!

என்னதான் தன் மகள் என்றாலும், தனது சகோதரனுக்கு இப்படியொரு வாழ்க்கையை தான் பரிசளிக்க வேண்டுமா என்ற தயக்கம் வேறு!

அவன் அழைத்து சென்றது தன்னுடைய தோழியான கோவையின் பிரபலமான மனநல மருத்துவரிடம்!

முன்தினம் நடந்தவற்றை எல்லாம் கூறியவனின் கூற்றை கேட்டவள்,

“கொஞ்ச நேரம் வெளிய வெய்ட் பண்ணேன் எஸ்பி…” என்று அவனை வெளியே இருக்க சொல்ல, இடக்கையை மதுவின் கை மேல் வைத்து லேசாக அழுத்தியவன்,

“பூஜா கிட்ட மனசு விட்டு பேசு மது. உனக்கு என்ன வேணும், வேணாம்ன்னு சொல்லு… என்ன கஷ்டம்ன்னு என்கிட்ட பேச முடியாததை எல்லாம் நீ பூஜா கிட்ட பேசலாம். சரியா?” என்று அவளது தலையாட்டலை எதிர்பார்த்து அவளது முகத்தை பார்க்க, மதுவோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“நான் பார்த்துக்கறேன் எஸ்பி…” என்று பூஜா கூறியதை கேட்டவன், சிரித்தபடியே,

“ஓகே பூஜா… ஐ ல் வெய்ட் அவுட்சைட்…” என்று வெளியேற, மதுவை நேராக பார்த்தாள் பூஜா!

சிறு பெண்! பார்த்திபன் கூறியதை போல, இன்னமும் முதிராத இளம் மொட்டு! இந்த பூவை கசக்க முயன்றவர்களை நினைத்து கோபம் வந்தாலும், மதுவின் மனநிலை என்ன என்று ஆராய்ந்தாள் பூஜா!

மதுவை திருமணம் செய்ய சொல்லி பார்த்திபனை வீட்டினர் நெருக்குவதையும் அவன் கூறியிருந்தான். அதில் அவனுக்கு அத்தனை சங்கடம், பதினெட்டு வயது பெண்ணை போய் திருமணம் செய்துவிக்க நினைக்கிறார்களே என்ற கோபமும் கூட!

ஆனால் ஒரு பெண்ணாக பார்த்திபனின் கோபத்தில் அர்த்தமிருப்பதாக பூஜாவுக்கு படவில்லை. முப்பது வயது என்பது ரொம்பவும் அதிக வயதில்லை என்று தான் நினைத்தாள். பதினெட்டு வயது என்பது சிறு வயது தான் என்றாலும், திருமண பந்தத்தில் இருவரின் புரிதல் மட்டுமே முக்கியம் அல்லவா!

தன்னுடைய மனைவியை பாதுகாக்க தெரிந்தவனே சிறந்த கணவன், நல்ல ஆண்மகன்!

இந்த நேரத்தில் மதுவுக்கு பார்த்திபனை காட்டிலும் வேறு யாரும் அந்த பாதுகாப்பை கொடுத்து விட முடியாது என்று தீர்க்கமாக நம்பினாள் பூஜா!

அதனால் தான் அவன் தயக்கமாக திருமணம் பற்றி உரைத்த போதும் கூட,

“நான் பார்த்துக்கறேன் எஸ்பி… மது என்னோட பொறுப்பு… போதுமா?” என்று பேசியில் அவனுக்கு ஆறுதல் கூறியிருந்தாள்.

“சொல்லுங்க மது… எப்படி இருக்கீங்க?” பூஜா அவளை கேட்க,

“ம்ம்ம்…” கீழே பார்த்தபடியே பதில் கொடுக்க,

“நிமிர்ந்து என்னை பாருங்க மது…” என்றாள் பூஜா.

அதற்கு எந்த பதிலும் கூறாமல் தரையை பார்த்தபடியே, மோதிரத்தை திருகினாள் மது.

அவளது தன்னம்பிக்கையும் துணிச்சலும் அவளிடமிருந்து எப்போதோ விடைபெற்று இருந்தது.

“என்ன படிக்கறீங்க மது?” என்ற பூஜாவின் கேள்விக்கு கொஞ்சமும் மாற்றமில்லை, பதிலில்லை.

“சென்னைல இருக்கீங்களா?”

நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“நீங்க ஒரு மாடலா?”

பதிலில்லை. ஆனாலும் பூஜா விடவில்லை. என்ன பேசினால் இவளது வாயை திறக்க வைக்க முடியும் என்று யோசித்தாள்.

“எனக்கும் படிக்கும் போது அந்த ஆசை இருந்துது மது… ஒன்றெண்டு ஆட்ஸ் பண்ணிருக்கேன்..” என்று சிரித்தபடி பூஜா கூற,

நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள் மது.

“சின்னதுல இருந்தே எனக்கு மாடலிங் மேல ஒரு கிரேஸ்…” என்று அவள் தடுமாற,

“அக்கான்னு சொல்லு மது… நானும் எஸ்பியும் கிளாஸ் மேட்ஸ் தான்…” என்று கூறவும் இன்னுமே சற்று புன்னகைத்தாள் மது.

அவளது புன்னகையை ரசித்த மது, “ஸ்கூல்ல எஸ்பிய சைட் அடிக்க ஒரு கிரேஸி கேங் இருக்கும். நானெல்லாம் அந்த கேங் ல ஒருத்திதான்…” என்று பூஜா சிரிக்க, மதுவின் புன்னகை இன்னுமே விரிந்தது.

“பார்த்தி மாமா கிட்ட என்ன இருக்குன்னே தெரியல?! என் ப்ரென்ட் ஒருத்திக்கு மாமான்னா அப்படியொரு க்ரஷ்…” என்று மது சற்று வாய் திறக்க ஆரம்பித்தாள்.

“ஏன் உனக்கு பிடிக்காதா மது?” தூண்டிலிட்டாள் பூஜா!

“என்னோட அப்பாவுக்கு அப்புறம் மாமா தான் என்னோட ஹீரோ. ஆனா அதுக்கு மேல இல்ல. மாமா கூட இருந்தா நான் ரொம்பவே செக்யுர்ட்டா பீல் பண்ணுவேன். மாமா எவ்வளவு சொல்லியிருக்காங்க… அந்த பசங்க நல்ல மாதிரி தெரியலன்னு… ஆனா எதையுமே நான் கேக்கலக்கா… ஏமாந்துட்டேன்…” என்றவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“ஏமாந்தன்னு சொன்னா என்ன மீனிங் மது?” என்று பூஜா கேட்க, மது பதில் கூறாமல் கீழே பார்க்க, அவளது கண்களிலிருந்து அவளையறியாமல் கண்ணீர் வழிந்தது.

“மது… அழறது தப்பு கிடையாது… ஆனா நீ எவ்வளவு தைரியமா அந்த சிச்சுவேஷனை ஃபேஸ் பண்ணன்னு எஸ்பி சொன்னாப்ல. வேற யார் இருந்திருந்தாலும் மது அளவுக்கு தைரியமா இருந்திருப்பாங்களான்னு தெரியாதுன்னு அவன் அவ்வளவு பெருமைப்பட்டுக்கறான், உன்னை பத்தி… ஆனா நீ என்னடான்னா…” என்று பூஜா கூற, அது மதுவிடம் மிக சரியாக வேலை செய்தது.

கண்களை துடைத்தபடி ஆர்வமாக மது நிமிர்ந்து பார்க்க, “அட நிஜமா தான் மது. உன்னோட தைரியத்தையும் துணிச்சலையும் அவன் சொல்லாத நாளே கிடையாது. அவ்வளவு பெருமை…” என்று பூஜா சிரிக்க, மதுவின் முகத்திலும் மெல்லிய புன்னகை படர்ந்தது.

“அவங்க பெருமைப்பட்டுக்கற மாதிரியெல்லாம் கிடையாதுக்கா. என்னோட ஆப்ஷன் தப்பு. என்னோட சாய்ஸ் தப்பு. என்னோட குறிக்கோள் கூட தப்பு தான். மொத்தத்துல நானே தப்பாத்தான் இருக்கேன்.” என்று வலியோடு அவள் உரைக்க,

“எப்படி இந்தளவு தாழ்வு மனப்பான்மை வந்தது மது?”

 

error: Content is protected !!