Rainbow kanavugal-11

Rainbow kanavugal-11

11

 நந்தினியும் தாமுவும் பரபரப்பாக அஜய் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்க, மது அவர்களுக்கு நேர்மாறாக ஆரஅமர பொறுமையாக கிளம்பி கொண்டிருந்தாள். ஏதோ அவள் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.

அஜய் அன்று கோபமாக போனதும் பின் தன் தந்தை மூலமாக திருமண பேச்சு பேசியதும் அவளுக்கு ஏனோ ஏற்புடையதாக இல்லை. அஜயிற்கு அப்படி ஒரு விருப்பமிருந்ததால் அதை தன்னிடம் நேரடியாக கேட்டிருக்கலாமே. அப்படி செய்யாமல் தன் பெற்றோரிடம் பேசியதில் அவன் காதலை விட பிடிவாதமும் அதிகாரமுமே அதிகப்படியாக தெரிந்தது.

பாஸ்கரன் காலை விடிந்ததுமே பேசியில் அழைத்து வீட்டிற்கு கார் அனுப்பி வைப்பதாக சொல்ல தாமு திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

எல்லோரும் தயாராகி வாடகை காரில் புறப்படும் சமயத்தில் சரவணனின் தம்பி பாலகுமரன் மதுவிடம் பேச வந்தான்.

“அண்ணன் உங்ககிட்ட ஏதோ பேசணுமா க்கா” என்று சொல்ல,

“உங்க நொண்ணன் மேல நான் கோபமா இருக்கேன்… பேச மாட்டேன்னு சொல்லு போ” என்றாள் மது. அன்று சரவணன் சொல்லாமல் போனதில் கோபமானவள் அன்றிலிருந்து அவன் கடைப்பக்கமே போகவில்லை.

“ஏன் க்கா? என்னாச்சு?” என்று பாலா தெரியாது வினவும்,

“அதை போய் உங்க அண்ணங்கிட்டயே கேளு” என்றவள்,

“நான் வெளியே போயிட்டு இருக்கேன்… நீ கிளம்பு” என்றதும் அவன் முகம் சுருங்கி போனது. ஏமாற்றத்தோடு திரும்பி சென்றவனை அவள் மீண்டும் அழைத்து, “ஏ! பாலா… சாயந்திரமா வந்து உங்க அண்ணன் கிட்ட பேசறன்னு சொல்லு” என்றபடி புறப்பட்டுவிட்டாள்.

அவர்கள் சென்ற கார் அஜய் வீட்டை அடைய, நந்தினி அந்த பங்களாவின் வெளித்தோற்றத்தை பார்த்து ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.

தாமோதரன் மனைவிடம், “வா நந்து உள்ளே போலாம்” என்று அழைக்க,

“இது பாஸ் அண்ணே வீடா?” என்று சந்தேகமாக கேட்டார்.

“ஆமா நந்து… இந்த அட்ரஸ்தான்… வெளியே கூட பாஸ்கரன் பேர் போட்டிருக்கு” என்று தாமு சொன்னதும் ஆச்சரியம் தாங்காமல், “எனக்கு இந்த வீட்டை பார்த்ததும் ஏதோ கலக்கமா இருக்கு… இவ்வளவு வசதியோட இருக்கவங்க ஏன் மதுவை கேட்டாங்க?” என்று ஒரு விதமான பயத்தோடு கேட்டார்.

பணம், ஆடம்பரம், அந்தஸ்து இதெல்லாம் தங்கள் வாழ்கையில் வந்த பின்ணும் நட்பை மதிக்கும் மனிதர்கள் இந்த உலகில் ரொம்பவும் அரிது.

அப்படியிருக்க நந்தினியின் கலக்கம் நியாயமனது. அதவும் நேற்று வரை அஜயை மதுவிற்கு திருமணம் முடித்துவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவர் இப்போது அது எப்படி சாத்தியமாகும் என்று யோசிக்கலானார்.

ஆனால் மது அது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அன்று பார்த்து நந்தினி அவளை புடவை அணிய சொல்லி கட்டாயப்படுத்த, அவளும் உடுத்தி கொண்டாள்.

நீல வண்ணத்தில் அழகாகவும் அவளை கம்பீரமாகவும் காட்டி கொண்டிருந்தது அந்த காட்டன் புடவை! இருப்பினும் அது ஏனோ இப்போது அவளுக்கு சங்கடமான உணர்வை தோற்றுவித்தது.

அஜய் முன்னே போய் இப்படி நிற்க வேண்டுமா என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது. இப்படி எல்லோரும் ஆளுக்கொரு சிந்தனையில் வீட்டிற்குள் நுழைய, நண்பன் வருவதை பார்த்த நொடி பாஸ்கரன் ஓடி வந்து தாமுவை ஆர தழுவி கொண்டார்.

“நீ எப்ப வருவா எப்ப வருவன்னு வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்திட்டே இருந்தேன்” என்றவர், “எப்படி நந்துமா இருக்க… மது குட்டி என்ன இவ்வளவு உயரமா வளர்த்துட்டா” வரவேற்பும் விசாரிப்புமாக அவர்களை உள்ளே அழைத்துவர,

“நான் உயரமாகிட்டேன்… நீங்க என்னைவிட குள்ளமாகிட்டீங்க பாஸ் மாமா” என்றவள் பதிலுரைக்க,

“அப்ப மாதிரியே இப்பவும் பேசற நீ” என்று மதுவின் கன்னங்களை செல்லமாக தட்டினார்.

அவர்கள் எல்லோரையும் சோபாவில் அமர வைத்து வேலையாட்களை ஏவி அவர்களை உபசரிக்க சொல்ல,

 “ரேவதிக்கா.. எங்க? காணோம்” என்று நந்தினி ஆவலாக தன் பார்வையை அந்த வீடு முழுக்க தேடலாக சுழற்றினார்.

பாஸ்கரன் சில நொடிகள் என்ன பதில் சொல்வதென்று திணறியவர், “அவ ஊருக்கு போயிருக்கா அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம்… நீங்க எல்லாம் ஜூஸ் எடுத்துக்கோங்க” என்று சொல்லி சமாளிக்க, அந்த சமயம் சுரேஷ் அங்கே வந்து நின்றிருந்தான்.

அவனை கண்டதும் பாஸ்கரன், “ஆமா அஜய் எங்கே?” என்று வினவ,

“ஏதோ அபீஸ் கால் பேசிட்டு இருக்காப்ல… முடிச்சிட்டு வரேன் சொன்னாங்க” என்க,

“அனன்யா அக்கா எங்க?” என்று மது அவனிடம் கேட்க, “ஆமா அனன்யா எங்க?” என்று நந்தினியும் அதே கேள்வியை கேட்டார்.

பாஸ்கரன் சுரேஷ் முகத்தை பார்க்க, “இப்பதான் ஏதோ போன் வந்து வெளியே கிளம்பி போனாங்க மாமா” என்றதும் அவர் முகம் தொங்கி போனது.

உடனே அவர்கள் புறம் திரும்பியவர், “நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க… அவளுக்கு எப்பவும் வேலைதான்… சினிமா இண்டஸ்டிரீல இருக்கா இல்ல” என்று சொல்லவும்,

“புரியுது பாஸ்… ஒன்னும் பிரச்சனையில்ல… இன்னொரு சமயம் கூட பார்த்துக்கலாம்” என்று தாமோதரன் புரிந்து கொண்டு பேச நந்தினிக்கு அதிக ஏமாற்றமாக இருந்தது.

தாமு மேலும், “இவர்தான் உன் மருமகனா?” என்று கேட்க, “அறிமுகப்படுததவே மறந்துட்டேன் பாரேன்” என்று இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்விக்க, சுரேஷ் சந்தேக கண் கொண்டு மதுவையே பார்த்திருந்தான்.

‘இந்த பொண்ணு அன்னைக்கு சுவரேறி குதிச்சு வந்த பொண்ணு இல்ல’ என்று எண்ணியவன் மதுவை பார்த்து, “நீங்க” என்று ஏதோ கேட்க எத்தனிக்க, அந்த சமயத்தில் அவன் பின்னோடு வந்து முதுகை தட்டிய அஜய்,

“அன்னைக்கு மதுவை பார்த்த விஷயத்தை உளறி வைக்காதீங்க… அப்புறம் அனன்யா அக்சிடென்ட் பண்ண விஷயம் தெரிஞ்சிரும்” என்று எச்சரித்தான்.

“ஆமா இல்ல” என்று ஆமோதித்தவன், “அப்போ இந்த பொண்ணுதான் அந்த பொண்ணா?” என்று குழம்ப,

“உங்களுக்கு எல்லாம் அப்புறம் தெளிவா சொல்றேன் சுரேஷ்” என்று சொல்லிவிட்டு அவன் நேராக தாமு அருகில் சென்று அமர்ந்து அவர் கையை பற்றி கொண்டு, “எப்படி இருக்கீங்க மாமா?” என்று விசாரிக்க,

“டே அஜய்! எப்படி வளர்ந்துட்ட?” என்று அவனை தோளோடு அணைத்து கொண்டு,

“உங்களை எல்லாம் திரும்ப எங்கயாச்சும் எப்பயாச்சும் பார்த்திர மாட்டோமான்னு மனசு கிடந்து ஏங்கிட்டே இருந்துது… வீட்டுல அடிக்கடி உங்களை எல்லோர பத்தியும்தான் பேசுவோம்” என்று தாமு உணர்ச்சி பெருக்கோடு பேசவும் அவரை முறுவலோடு பார்த்திருந்த அஜய்,

“பரவாயில்ல மாமா… நீங்களாச்சும் பழைய மாதிரி பேசுறீங்களே” என்றவன் ஓரக்கண்ணால் மதுவை அளவெடுத்து கொண்டே, “சிலரெல்லாம் என்னை மறந்தே மறந்துட்டாங்க… பழையபடி பேசறதே இல்ல” என்றான்.

“நீ சிலர்னு  யாரை சொல்ற அஜய்… உங்க மாமியவா இல்ல மதுவை யா?” என்றவர் கிண்டலாக சிரித்து கொண்டே வினவ அஜய் பதறி கொண்டு, “சேச்சே! மாமி அப்படியெல்லாம் இல்ல மாமா… வீட்டுக்கு போன அன்னைக்கு என்னை எப்படி உபசரிச்சாங்க தெரியுமா?” என்றவன் பார்வை மதுவிடம்தான் நிலைகொண்டிருந்தது.

அவன் தன்னைத்தான் சுட்டி காட்டுகிறான் என்பது புரிந்த மது அவனை முறைக்க, அவன் பார்வையும் மறைமுகமாக அவளை முற்றுகையிட்டு கொண்டிருந்தது.

அப்போது தாமு, “மது போய் உன்னை மறக்கறதாவது” என்றவர், “நம்ம பிரிஞ்சி வர்றக்கு முன்னாடி நீ கடைசியா அவளுக்கு ஒரு கிப்ட் கொடுத்தியே… அந்த ரெண்டு புறா பொம்மை அதை இன்னும் அவ பத்திரமா வச்சிருக்கா? எங்க ரெண்டு பேரையும் கூட அதை தொடவிடமாட்டா…  தெரியுமா உனக்கு?” என்றார். அவன் அதை கேட்டு அதிசயித்து மதுவை பார்க்க, அவளோ அந்த நொடி அவஸ்த்தையாக உணர்ந்தாள்.

அதுவல்லாது தாமுவோடு நந்தினியும் சேர்ந்து கொண்டு மது அவனை பிரிந்து வந்த பின் எந்தளவு வாடினாள், அவனை எந்தளவு தேடினாள் என்பதற்கான உதாரணங்களை அள்ளிவிட்டு, அவள் மானத்தை கப்பலேற்றி கண்டம் விட்டு கண்டம் அனுப்பியிருந்தனர்.

அஜய் உள்ளுர கர்வமாக உணரத்தான். அவன் பார்வை அவளையே சுற்றி வர,  அவனை எதிர்கொள்ள முடியாமல் அவள் பார்வை தரைதாழ்ந்தது,

‘இப்ப இவங்களை யார் இதெல்லாம் சொல்ல சொன்னா’ என்று கடுப்பானாள்.

‘ஐயோ! போதும் நந்து” என்று தன் அம்மாவின் கையை அழுத்த, “நம்ம அஜய்தானடி” என்றவர் அவள் தவிப்பு புரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அஜயின் பார்வை அவளை தழுவி செல்ல,  மதுவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தூண்டிலில் சிக்கிய மீன் போல அவள் தவிக்க,

தாமு இறுதியாக சொன்ன ஒரு விஷயம் அஜயின் அப்போதைய மொத்த சந்தோஷத்தையும் வடித்துவிட்டது.

“மதுவுக்கு சரவணனுக்கு ப்ரெண்டா கிடைச்ச போதுதான் அவ கொஞ்சம் உன்னை பத்தி பேசறதையே நிறுத்துனா” என்ற போது அவனுக்கு சுரீரென்றது.

வானத்தில் பறந்து கொண்டிருந்த அவன் உள்ளம் தரைத்தட்டி நிற்க, தன்னை மறக்கடிக்குமளவுக்கு அவளுக்கு ஒரு நட்பா?  நண்பனாகவே இருந்தாலும் அவளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாக இன்னொருவன் எப்படி இருக்கலாம் என்ற உரிமை போராட்டம் அவன் மனதிற்குள் அரங்கேறியது.

யார் அந்த சரவணன்? என்ற கேள்வி அவன் மனதை குடைய, யாராக இருந்தாலும் அவளுக்கு தன்னைவிட முக்கியமானவனாக இருத்தல் கூடாது என்றும் எண்ணியது.

சட்டென்று அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த தாமு, “என்ன அஜய்?” என்ற கேட்கவும்,

“அதில்ல மாமா… ஒரு அபீஸ் கால் வரணும்” என்று சொல்ல, “போ அஜய்… போய் பேசிட்டு வா” என்றார்.

“இப்ப அது ரொம்ப முக்கியமா? விடு அஜய்” என்ற பாஸ்கரன் மகனிடம் சொல்ல, “டூ மினிட்ஸ் ப்பா” என்று சொல்லிவிட்டு அவன் நழுவி சென்றான்.

அங்கிருந்தவர்கள் யாரும் தன் முகமாறுதல்களை கவனித்துவிட கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடு விலகி வந்திருந்தான்.

பெரியவர்களின் சம்பாஷணைகளில் நாட்டம் கொள்ளாத மது சுரேஷிடம் பேச்சு கொடுத்தாள்.

“பாப்பா எங்கே?” என்றவள் வினவ,

“தூங்குறான்” என்றான் சுரேஷ்.

“போய் பார்க்கலாமா?” என்றவள் வாஞ்சையாக கேட்க, இருவரும் பேசி கொண்டே மாடியேறினர்.

தன்னறைக்கு அவளை அழைத்து சென்றவன் தொட்டிலில் படுத்திருக்கும் அருணை காண்பிக்க, அவனோ உறங்காமல் கை கால்களை அசைத்து தனக்கான தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான்.

“இப்பதான் தூங்க வைச்சிட்டு வந்தேன்… அதுக்குள்ள எழுந்துட்டான்” என்று சுரேஷ் சலிப்பாக,

“அச்சோ! செம கியூட்… அப்படியே அனன்யா அக்கா ஜாடை” என்று சொல்லி அவனை தன் கரத்தில் ஏந்தி கொண்டாள். அவனை கொஞ்சி கொண்டே அவள் பார்வை ஆடம்பரமான அந்த அறையின் மீது படிய, அந்த சுவர்களின் நாலாபுறமும் அன்னன்யாவின் புகைப்படங்கள். புதுப்புது ரக உடைகளில் பலவிதமான ஸ்டைலில் நின்றிருந்தாள்.

“என்ன ரூம் முழுக்க… அனன்யா அக்கா போட்டோவாவே  இருக்கு… உங்க ரெண்டு பேர் போட்டோ ஒன்னு கூட இல்லையா?” என்றவள் கேட்க,

“இதோ இருக்கே” என்று மேஜை மீது நிற்க வைத்திருந்த சிறிய போட்டோவை காண்பிக்க, அதில் இருவரும் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தனர்.

அதனை உறுத்து பார்த்தவளுக்கு என்னவோ இவர்கள் இருவரும் பொருத்தமே இல்லாத தம்பதிகள் போல் தோன்றியது.

அந்த எண்ணத்தை அவள் வெளிகாட்டி கொள்ளாமல், “இந்த போட்டோவை ஏன் பெருசு பண்ணி மாட்டல” என்று கேட்க, “அது வந்து… தோணல” என்று சமாளித்தான்.

அவன் சொன்ன பதிலில் சற்றே குழம்பினாலும் அதற்கு மேல் அவளும் அவனை தோண்டி துருவி எதுவும் கேட்டு கொள்ளவில்லை. ஆனால் சுரேஷ் அவளுக்கும் அஜயிற்குமான பழக்கத்தை பற்றி விசாரித்து கொண்டிருந்தான்.

அவளும் அதையெல்லாம் கதை போல அவனுக்கு விவரித்து கொண்டிருக்க, அஜய் அந்த அறை வாசலில் வந்து நின்றதை இருவருமே கவனிக்கவில்லை.

அவள் சொல்வதை ரசனையாக அவன் கதவில் சாய்ந்து கொண்டு கேட்டிருப்பதை கவனித்த நொடி மது ஊமையாகிட, “ம்ம்ம் அப்புறம் மது” என்று சுரேஷ் ஆவலாக கேட்டான்.

“அப்புறம் மது அஜயை பிரிஞ்சு ரொம்ப தூரம் போயிட்டா… அஜய் அவளை ரொம்ப மிஸ் பண்ணான்… ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணான்… பார்க்கிற எல்லா பொண்ணுங்களோட முகத்திலும் அவன் மதுவோட சாயலை தேடினான்… ஆனா நோ யூஸ்… அவனால அவளை பார்க்கவே முடியல…

தேடினான்… தேடினான்… தேடிகிட்டே இருந்தான்… ஒரு நாள் ரொம்ப சர்ப்ரைசிங்கா அவளே அவன் வாழ்க்கையில வந்துட்டா… அவனுக்காக வந்துட்டா… அவன் கூடவே இருக்க வந்துட்டா” என்று அஜய் கைகளை கட்டி கதை போல் சொல்லி முடிக்க மது வியப்படங்காமல் அவனையே பார்த்திருந்தாள்.

அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு மெய்சிலிர்த்தது. அந்த உணர்வை விவரிக்க அவளுக்கு வார்த்தைகளே இல்லை. அந்த கண்கள் அவனிடமே சங்கமித்திருந்தன.

சுரேஷ் தயக்கமாக இருவரையும் பார்த்தவன், “டே அருண் கண்ணா… இனிமே இங்க நம்ம இருந்தா சரியா வராது… நம்ம கீழ போவோம்” என்று அவளிடமிருந்து குழந்தையை வாங்கி கொண்டு அவன் வெளியேறிவிட, அவள் அதை கூட உணராமல் அப்படியே நின்றிருந்தாள்.

அவள் விழிகள் கண்ணீரால் நிறைந்துவிட, அஜய் ரொம்பவும் நெருக்கமாக அவள் அருகில் வந்து நின்றதை கூட அவள் உணரவில்லை. அவளை தன்னோடு சேர்த்து அவன் அணைத்து கொண்ட போது அவளால் அதை தவிர்க்க முடியவில்லை.

அவள் விழிகளை நேர்கொண்டு பார்த்தவன், “நீ இனிமே என்னை விட்டு போக மாட்டதானே மது” என்று ஏக்கத்தோடு வினவ,

“உஹும்” என்றவள் தலையசைத்துவிட்டாள். காந்தமாக ஈர்த்த அவன் பார்வைக்குள் தான அடங்கி ஒடுங்கி போகும் சூட்சமம் எப்படியென்று அவளுக்கு அன்றிலிருந்து இன்று வரை புரியவேயில்லை.

அவனோ அந்த நொடி உணர்ச்சிமயமாகி அவள் முகத்தில் முத்த மாரி பொழிந்து அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான்.

மது செய்வதறியாது திகைத்து போனாள். அவனுக்கு எதிராக ஒரு சிறு எதிர்வினையை கூட அவளால் ஆற்ற முடியவில்லை.

அவள் கொஞ்சம் நிலைமையை உணர்ந்த போது அவள் மனமும் உடலும் அவனிடம் சிக்கி கொண்டு தவிக்க, “அஜய் ப்ளீஸ்” என்றவள் சில முறைகள் கெஞ்சிய பிறகே அவளை விட்டு விலகியவன், “தேங்க்ஸ் மது… தேங்க் யு ஸோ மச்” என்றான்.

அவள் புரியாமல் விழித்தபடி, “இந்த தேங்க்ஸ் எதுக்கு?” என்று கேட்க,

“நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு” என்றவன் சொல்ல, அவள் அதிர்ந்து பார்த்தாள்.

“நான் எப்போ சம்மதிச்சேன்?”

“ம்ம்ம்… என் கூடவே இருப்பன்னு சொன்னியே… அதுக்கு என்ன அர்த்தமாம்” என்றவன் விழிகள் இடுங்க அவளை பார்க்க,

“இல்ல அது அப்படி அர்த்தம் இல்ல… நாம இதை பத்தி கொஞ்சம் தெளிவா பேசுவோம்” என்றாள்.

“இதுல பேச என்ன இருக்கு?” அஜய் அலட்சியமாக கேட்க,

“இல்ல அஜய்… கல்யாணம் எல்லாம் எனக்கு செட்டாகுது… புரிஞ்சிகோ… ப்ளீஸ் வேண்டாம்” என்று அவசரமாக மறுப்பு தெரிவித்த அதேநேரம் அந்த அறையை விட்டு விரைவாக வெளியேறினாள்.

அவன் அருகாமையில் தான் ரொம்பவும் பலவீனமாக மாறி போகிறோம் என்பதை உணர்ந்த காரணத்தினாலேயே  அவள் அங்கிருந்து அகன்றாள். அவள் கீழே இறங்கி முகப்பறைக்கு வர, அங்கேயும் அவர்களின் திருமண பேச்சுதான் நடந்து கொண்டிருநத்து.

“வசதி அந்தஸ்து எல்லாம் இன்னைக்கு வந்தது… ஆனா நம்ம நட்பு அப்படி இல்ல… அது அஜய் மது கல்யாணம் மூலமா காலம் பூரா நீடிக்கணும்” என்று பாஸ்கரன் சொல்வதை கேட்டு கொண்டே இறங்கிவந்தவள், அவர்களில் எண்ணத்திற்கும் ஆசைக்கும்  உடனடியாக ஒரு முற்றி புள்ளி வைத்துவிட எண்ணி,

“நான் குறுக்கே பேசறன்னு தப்பா நினைச்சுக்காதீங்க மாமா… எங்க கல்யாணம் மூலமாதான் நம்ம நட்போட இருக்கணும்னு இல்ல… அது நடக்கலன்னாலும் அதே நட்போட நம்ம குடும்பம் இருக்கலாம்” என்றாள்.

அவர்கள் மூவரும் அவள் சொன்னதை அதிர்ச்சியோடு கேட்டிருக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.

 “இந்த கல்யாண விஷயத்தைபத்தி பேச வேண்டாம்… எனக்கு அதுல சம்மதம் இல்லை” என்று தெளிவாக அவள் தன் முடிவை சொல்லியிருக்க அவள் சொன்னதை கேட்டு கொண்டே அவள் பின்னோடு வந்து நின்றான் அஜய்!

சுரேஷ் உட்பட அவர்கள் எல்லோர் முகமும் இருண்டு போனது. அவள் அஜயை நிராகரிக்க மாட்டாள் என்று அவர்கள் மூவருமே உறுதியாக நம்பினர். அந்த எண்ணத்தை அவள் அந்த நொடி சுக்குநூறாக உடைத்திருந்தாள்.

பாஸ்கரன் தன் மகனை பார்த்து புரியாமல் விழிக்க, “என்ன ப்பா நீங்களும் அவ சொன்னதை உண்மைன்னு நம்பீட்டீங்களா?” என்றவன் சத்தமாக சிரிக்க, அவர்கள் யார் முகத்திலும் ஈயாடவில்லை.

“நீங்களுமா மாமி உங்க பொண்ணோட நடிப்பை நம்பிட்டீங்க… இவ இந்த மாதிரி நம்மல எத்தனை தடவை ஏமாத்தியிருப்பா? சரியான வாலு” என்று சந்தடி சாக்கில் மது தலையில் கொட்டிவைக்க, அவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.

நந்தினி அஜயை பார்த்து, “நடிப்பா?” என்று புரியாமல் கேட்க,

“ஆமா மாமி… என்கிட்ட சம்மதம் சொல்லிட்டு… இங்க வந்து உங்க எல்லோர்கிட்டயும் மாத்தி பேசுறா” என்றதும் மதுவிற்கு சுறுசுறுவென்று கோபம் தலைகேற, “அஜய்” என்றபடி அவனை முறைத்தாள்.

“ஏ போதும் நடிக்காதடி” என்றவன் அவர்கள் எல்லோரிடமும் திரும்பி, “உங்க எல்லோருக்கும் இப்படி ஒரு ஷாக் குடுத்தா எப்படி இருக்கும்னு கேட்டுட்டு வந்தா… சொன்னதை அப்படியே எக்ஸுகியூட் பண்றா?” என்றவன்,

“சரவெடியவே கையில வெடிச்சு நமக்கு எல்லாம் ஷாக் கொடுத்தவதானே ப்பா இவ… அதே சேட்டை இன்னும் மாறவேயில்லை” என்று படபடவென அவன் நிறுத்தாமல் பேசினான். மற்றவர்கள் நம்பும்படி பேசினான். மது பேச அவன் வாய்ப்பே தரவில்லை.

எல்லோர் முகமும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு புன்னகை பூத்தது. “ஏன் மது இப்படி பண்ண? நாங்க எல்லாம் ஒரு நிமிஷம் எப்படி பயந்துட்டோம் தெரியுமா?” என்று நந்தினி சொல்ல, “இல்ல நந்து அது” என்று மது மீண்டும் பேச வர,

“நீ எப்பதான் திருந்த போறியோ? பாரு எல்லோரும் எப்படி பயந்துட்டாங்க” என்ற அஜய் அவள் கரத்தை பிடித்து தனியாக அழைத்து கொண்டு தோட்டத்தின் பின்புறம் வந்திருந்தான்.

“அஜய் கையை விடு” என்றவள் அவனை எரித்துவிடுவது போல் பார்த்து, “இப்படியெல்லாம் நீ பண்ணா… என் முடிவு மாறிடுமா என்ன?” என்று கேட்டாள்.

அவன் நிதானமாக அவளை பார்த்தவன்,

“நான் உன்னை இத்தனை வருஷம் கழிச்சு பார்க்காம இருந்திருக்கலாம் மது… ஆனா பார்த்துட்டேன்… அட்லீஸ்ட் உனக்கு யார் கூடயாவது கல்யாணம் ஆகியிருக்கலாம்… இல்ல நீ யாரையாச்சும் காதலிச்சாவது இருக்கலாம்… ஆனா அதுவும் இல்ல… இப்ப வேற வழியே இல்ல… நீ எனக்குதான் நான் பிக்ஸ் ஆகிட்டேன்… இனிமே என்னாலயே என்னை கன்வின்ஸ் பண்ண முடியாது” என்றவன் திடமாக சொல்ல,

“நான் யாரையும் லவ் பண்ணலன்னு உனக்கு யார் சொன்னது?” என்றவள் அழுத்தமாக கேட்க, அவனுக்கு தலையில் இடியே இறங்கிய உணர்வ!

“என்னடி உளற? நான் இதை நம்ப மாட்டேன்… இல்ல நீ பொய் சொல்ற” என்றவன் குரல் படபடப்பில் நடுக்கமுற்றது.

“புரிஞ்சிக்கோ அஜய்… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ஆனா அது லவ் இல்ல…”

அவள் சொன்னதை கேட்ட மறுகணம் அவன் சீற்றமாக பொங்க ஆரம்பித்தான்.

 “நான் கட்டி பிடிச்சு உன்னை கிஸ் பண்ணும் போது கொஞ்சம் கூட ரெசிஸ்ட் பண்ணாம இருந்ததுக்கு பேர் என்னடி?” என்று அவன் வினவ, அவள் பதிலேதும் சொல்ல முடியாமல் நின்றாள்.

“ஏ! பேசு… யாரை நீ லவ் பண்ற… அவன் பேரை சொல்லு பார்ப்போம்” என்றவன் கடுங்கோபத்தோடு கேட்க,

“நான் என் ஃபிரொபஷனை லவ் பண்றேன்” என்றாள். அவனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. அவளை இழுத்து ஒரு அரை விடலாமா என்று கோபமும் வந்தது.

“இப்படியெல்லாம் லூசுத்தனமா பேச உனக்கு யார் கத்து கொடுக்கிறது… ஃபிரொபஷனை லவ் பண்றாளாம்… வாயில நல்லா வந்திரும் சொல்லிட்டேன்”

“ப்ச்… நான் சொல்றது உனக்கு புரியாது”

“ஒ! இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல… அப்படியா?” என்று அஜய் அவளை கேலி செய்து சிரிக்க, அவனை கடுப்பாக பார்த்தவள்,

“நீ என்ன பேசனாலும் என் முடிவு இதான்… நான் கிளம்புறேன்” என்று சொல்லி செல்ல பார்த்தவளின் கரத்தை அழுந்த பிடித்து நிறுத்தினான். அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“நீ மட்டும் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னு சொன்னேன்னு வை” என்று ஆழ மூச்செடுதத்தவன் அவள் விழிகளை நேர்கொண்டு பார்க்க, “என்ன செய்வ அஜய்?” என்று அலட்சியமாக கேட்டான்.

“ஐ ல் கில் மை செல்ஃப்” என்று தீர்க்கமாக சொல்ல,

“அஜய்” என்றவள் திக்பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.

“கண்டிப்பா செய்வேன் மது… உனக்கு இந்த அஜயை பத்தி நல்லா தெரியும்ல?” என்று வினவ, அவளுக்கு அதிர்ச்சியில் பேச நா எழவில்லை.

“ஏதோ அரைவேக்காடுத்தனமா காதல் கை கூடலன்னா செத்து போறென்னு சொல்றேன் நினைக்காதே… நான் உன்னை அந்தளவுக்கு நேசிக்கிறேன்… என் உயிருக்கும் மேலா நேசிக்கிறேன்… என்னால உன்னை எந்த காரணத்தை கொண்டும் விட்டு கொடுக்க முடியாது… பிரியவும் முடியாது… அப்படியொரு வாய்பை இனி அந்த விதிக்கு கூட நான் கொடுக்க தயாரா இல்லை… நெவர்

நீ என்னை இப்போ ரிஜக்ட் பண்றேன்னு சொன்னதே என்னை கிட்டத்தட்ட கொலை பண்ணதுக்கு சமானம்தான்… இதுக்கு மேல நான் உயிர் வாழ்றதுல அர்த்தமே இல்ல” என்று அவன் பாட்டுக்கு பேசி முடித்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.

மதுவின் பாதங்களுக்கு கீழே பூமி நழுவியது. அவள் பிறப்பு, வளர்ப்பு, ஆசை, கனவு, லட்சியம் என்று எல்லாவற்றையும் அவன் காதல் முறியடித்து அவள் வாழ்வை மொத்தமாக ஆக்கிரமித்து கொண்டது.

அதற்கு பிறகு எந்த கடவுளும் அவர்கள் திருமணத்தை நிறுத்த முடியவில்லை. அது அஜயின் திட்டமிடலின்படி ஒரே மாதத்தில் நடந்திருந்தது. அவன் நடத்தியிருந்தான்.

error: Content is protected !!