Rainbow kanavugal-20

Rainbow kanavugal-20

20

 முதலிரவுக்கு பின் வந்த ஒவ்வொரு இரவுகளிலும் அந்த அறை சுமந்தது வெறும் மௌனத்தை மட்டும்தான்.

அவர்கள் இருவரும் பேசி புரிந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் நிறையவே இருந்த போதும் அவர்களுக்கு பேச எந்தவித காரணங்களும் இல்லை. உண்மையில் அப்படி எந்தவொரு காரிய காரணத்தையும் அவர்கள் தங்களுக்காக உருவாக்கி கொள்ளவில்லை.

இந்துமதி சொன்ன ஒரே காரணத்திற்காக சரவணன் அதன் பிறகு அவளை எந்தவிதத்திலும் தொல்லை செய்யவோ நெருங்க முயற்சிக்கவோ இல்லை.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக இருந்தனர்.

அன்பும் பாசமும் நிறைக்க வேண்டிய அவர்களின் அறையை தனிமை நிறைத்திருக்க, காதலும் காமமும் புழங்க வேண்டிய அவர்களின் படுக்கையோ வெறுமையை தாங்கியிருந்தது.

காதல் என்பது அதிகாரம் செய்தோ அல்லது அடித்து கட்டாயப்படுத்தியோ வர வைக்க முடியாது. மனதளவில் பல காத தூரம் அவள் விலகி இருக்கும் போது உடலளவில் அவளை நெருங்கி அவள் உணர்வுகளை காயப்படுத்த அவன் விரும்பவில்லை.

அவளாக தன்னை புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும் என்று அவன் காத்திருந்தான். இந்துவும் அதைதானே விரும்பினாள். இருப்பினும் அவளுக்கு சரவணன் செய்கையில் இருக்கும் காதல் புரிபடவில்லை. அவனையும் கட்டாயப்படுத்திதான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார்கள் என்று எண்ணி கொண்டாள்.

அவனுக்கு தன்னிடம் எந்த விருப்பமுமில்லை அல்லது அவனுக்கு தன் மீதே நல்ல அபிப்பிராயம் இல்லை என்ற கணிப்பு அவளுக்கு!

ஒரு வேளை சரவணனால் பேச முடிந்தால் இவர்களுக்கு இடையிலான இந்த பிரிவினை இத்தனை நாட்கள் நீட்டித்திருக்காது. இந்துமதி அவன் மனஎண்ணங்களை அறிய முற்பட்டிருக்க கூடும்.

அவன் பேச வந்தாலே அவள் பார்வையை திருப்பி கொள்வதும், அவனிருக்கும் திசையில் கூட அவள் இருக்க விரும்பாததும் என்று அவள் நடந்து கொண்ட விதத்திற்கு அவள் மன இறுக்கமும் கோபமும்தான் காரணம் என்று எண்ணினான். ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. வீணாவும் ஒரு முக்கிய காரணம்.

வீணாவிற்கும் இந்துமதிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்து போகவில்லை. ‘நீ என் தம்பிக்கு தகுதியானவ இல்ல’ என்று அடிக்கடி இந்துவை வீணா குத்தி காட்டி கொண்டேயிருந்தாள்.

ஒரு நிலைக்கு மேல் இந்து பொறுக்க முடியாமல் எதிர் வாதம் செய்ய, இடையில் மாட்டி கொண்டு தவித்தது என்னவோ துர்காதான்.

மகளிருக்கும் நிலையில் அவளை எதிர்த்து கொள்ள முடியாமல் துர்கா இந்துவைதான் பெரும்பாலும் அமைதியாக இருக்க சொல்வார். சரவணனுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய வேண்டாமென்று இந்துவிடம் கண்டிப்போடு சொல்லியிருந்தார். அப்படியே சொன்னாலும் அவன் என்ன செய்து விட போகிறான் என்று இந்து அவனிடம் சொல்வதுமில்லை.

சரவணன் கடையில் இருப்பதால் அவன் காதுக்கு இந்த விஷயமெல்லாம் போகவே போகாது. பாலாவும் கல்லூரியிலிருந்து திரும்ப மாலை ஆகிவிடும்.

அன்றும் அப்படிதான். துர்கா கோவிலுக்கு போயிருந்தார். இந்து தனியாக பின்கட்டில் அமர்ந்து கையில் கிடைத்த பழைய புத்தகங்களை புரட்டி கொண்டிருந்தாள்.

இந்து அப்படி வேலை எதுவும் செய்யாமல் அமர்ந்திருப்பதை பார்த்து வீணா கடுப்பாகி, “வேலை ஒன்னும் செய்றதுல… கதை புஸ்தகத்தை படிச்சிட்டு உட்காதிருக்கா பாரு” என்று அவள் காதுபடவே சொல்லி சீண்ட,

“நான் வேலையெல்லாம் முடிச்சிட்டுதான் உட்ந்காந்திருக்கேன்” என்று இந்து கடுப்பாக பதிலளித்தாள்

“என்னத்த முடிச்ச? சமையல் கட்டுல இருக்க பாத்திரமெல்லாம் யார் விலக்கி போடுவா”

“ஏன் நீங்கதான் செய்றது?”

“யார்? நான் செய்யவா?” என்று கேட்ட வீணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,

“ஏன்? உங்க மாமியார் வீட்டுல இருந்தா நீங்க செய்ய மாட்டீங்களா?” என்று எடுத்தெறிந்து பேசினாள் இந்து!

இப்படி உப்புக்கு பெறாத விஷயத்திற்கு இருவரும் பயங்கரமாக வாக்குவாதம் நடத்தி கொண்டிருக்க வீணா மேலும், “ஒழுக்ங்கெட்டவா உனக்கென்னடி இவ்வளவு வாய்…” என்று கேட்டதோடு அல்லாமல் இந்துவின் கையிலிருந்த புத்தகத்தை தூக்கி வீச எத்தனித்தாள்.

அப்போது இந்து புத்தகத்தை பிடுங்கி கொண்டு அவளை தள்ளிவிட்டுவிட வீணா பின்னோடு சாய்ந்து, “அம்ம்மம்ம்ம்ம்மா” என்று கதறியபடி தரையில் விழுந்துவிட்டாள்.

இந்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. இந்து உடனடியாக வீணாவின் கை பிடித்து தூக்க வர,

“நான் செத்தாலும் நீ என்னை தூக்க வேண்டாம்” என்று அவள் கையை உதற,

“இந்த நேரத்துல போய் இப்படியெல்லாம் பேசாதீங்க… நான் செஞ்சது தப்புதான் சாரி” என்று அவள் கேட்கும் போதே வீணா வலி தாங்க முடியாமல் கத்தி கூப்பாடு போட தொடங்கினாள். இந்துவின் கை கால்களெல்லாம் வெடவெடத்தன.

வீணாவை நெருங்கி இந்து தூக்க முயலும் போதே பனிக்குடம் உடைந்துவிட்டது போன்று தோன்றியது.

அவள் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசித்திருக்கும் போதே சரவணன் கடையிலிருந்து தமக்கையின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்திருந்தான்.

இந்து அவனை பார்த்த நொடி படபடப்போடு பேச எத்தனிக்கும் போது வீணா அந்த உயிர் போற வலியிலும் அவளை முந்தி கொண்டு, “உன் பொண்டாட்டி என்னை கீழே தள்ளி விட்டுட்டா சரவணா?!” என்றார்.

சரவணன் பார்வை நொடிக்கும் குறைவாக இந்துமதியை நோக்கியது. பின் தமக்கையை காப்பாற்றுவதே பிரதான நோக்கமென்று அவளை மருத்துவமனை அழைத்து செல்வதில் மும்முரமாக இருந்தான்.

அதேநேரம் துர்காவும் வீட்டிற்கு வந்துவிட வீணாவை மருத்துவமனை அழைத்து சென்றனர். சரவணன் இந்துவை வீட்டிலிருக்கும்படி கை காட்டிவிட்டு செல்ல அந்த நிலையிலும் வீணா துவேஷத்தோடு, “என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன்டி” என்று சூளுரைத்துவிட்டுதான் சென்றாள்.

இந்துமதியின் ஓவ்வொரு செல்களிலும் அச்சத்தின் சாயல் படிந்தது. வீணா நல்லபடியாக குழந்தை பெற்று வர வேண்டுமென்று அவள் வேண்டாத தெய்வங்களே இல்லை.

அந்த வேண்டுதல்களை மனதில் சுமந்தபடி தலையை பிடித்து கொண்டு வீட்டு வாசலை பார்த்து தரையில் அமர்நதவள்தான். அவர்கள் வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் உள்ள தவிப்போடு கிடந்தாள்.

இரவு வெகுநேரம் கழித்து சரவணனும் பாலாவும் வீட்டிற்கு வந்து சேர, அவள் ஓடி சென்று அவர்கள் முன்னே நின்றாள். களைத்து போயிருந்த அவளின் பார்வையில் அந்தளவு பயமும் எதிர்பார்ப்பும் இருந்தது. அவர்கள் சொல்லப் போகும் ஒரு வார்த்தையில்!

“பாலா… வீணா அண்ணிக்கு ஒன்னும் இல்லையே… நல்லா இருக்காங்க இல்ல… குழந்தை நல்லப்படியா புறந்துடுச்சா?” என்றவள் கேள்விகளை அடுக்க,

“அதெல்லாம் நல்லபடியா புறந்துடுச்சு அண்ணி… ஆம்பள குழந்தை” என்றான். அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது. அவள் நிம்மதி பெருமூச்செறிய சரவணன் தன் தம்பி பாலாவிடம் ஏதோ செய்கை செய்தான்.

மறுநொடியே அவன் இந்துவிடம், “அண்ணி வாங்க சாப்பிடலாம்… டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான்.

அவளுக்கு அதுவரை பசி உணர்வே இல்லை. பாலா கேட்கும் போதுதான் அவளுக்கு அந்த நினைவே வந்தது.

பாலா கொடுத்த பார்சலை வாங்கி கொண்டவள், “நீ சாப்பிட்டியா பாலா?” என்று வினவ,

“நான் சாப்பிட்டேன்… ஆனா அண்ணன்தான்” என்று தமையன் முகம் பார்த்தான்.

அத்தனை நேரம் அவன் அருகில் நிற்பதை கூட அவள் கவனித்ததாக தெரியவில்லை. எல்லா கேள்விகளையும் அவள் பாலாவை பார்த்துதான் எழுப்பினாள். அந்த ஒரு விஷயமே அவன் மனதை ஆழமாக குத்தியது. தன்னால் பேச முடியவில்லை என்பதால்தானே அவள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை அவன் மனதை வருத்த, ‘எனக்கு வேண்டாம்’ என்பது போல தலையசைத்துவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட, பாலாவிற்கு சங்கடமாகி போனது.

“அண்ணன் மதியத்துல இருந்து சாப்பிடல… அவரை சாப்பிட சொல்லுங்க… நான் ட்ரஸ் மாத்திட்டு ஹாஸ்பெட்டில் கிளம்புறேன்” என்றவன் தன் அறை நோக்கி விரைந்துவிட்டான்.

கையிலிருந்த அந்த உணவு பொட்டலத்தை பார்த்தவளுக்கு உள்ளுர பசி இருந்தாலும் சரவணனை கூப்பிட வேண்டுமா என்று தவிப்பாக இருந்தது.

அதுவும் கூப்பிட சென்று அவன் பாட்டுக்கு தன் தமக்கையை நீதான் தள்ளி விட்டாயா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

அந்த விஷயம் அவளை அணுஅணுவாக சித்ரவதை செய்தது. அறைக்குள் போகவும் பயந்து கொண்டு அப்படியே முகப்பறையில் அமர்ந்து கொண்டாள்.

ஆனால் சில நிமிடங்கள் கழித்து அவனே வந்து நின்றான். அவள் உணவு உண்ணாதிருப்பதை கவனித்தவன் உணவு பொட்டலத்தை பிரித்து அவள் அருகில் வைத்தான். அவனை நிமிர்ந்தும் பாராமல், “நீங்க” என்று கேட்டாள்.

பின் அவனும் மௌனமாக அமர்ந்து உணவு உண்ணவும் அவளும் சாப்பிட்டாள். ஆனால் மனதில் இதயம் படபடவென வேகமாக அடித்து கொண்டிருந்தது.

இருவரும் உண்டு முடித்து அறைக்குள் வரவும் சரவணன் தன் கையில் கணக்கு புத்தகம் ஒன்றையும் பணக் கட்டையும் வைத்து கணக்கு பார்த்து எண்ணி வைத்து கொண்டிருந்தான்.

அறைக்குள் நுழைந்தவள் அவனையே ஆழமாக பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவள் பார்வையை உணர்ந்தவனாக தலையை நிமிர்த்தி என்ன என்பது போல் புருவத்தை உயரத்தவும், அவள் ஒன்றுமில்லை என்பது போல் படப்படபோடு தலையசைத்துவிட்டு அவசரமாக தன்னிடத்தில் எப்போதும் போல் போர்வையை விரித்து படுத்து கொண்டாள்.

சரவணனுக்கு அவள் செய்கையை பார்த்து மெல்லிய புன்னகை தவழ்ந்தது. பின் அவன் மீண்டும் கணக்கு பார்ப்பதில் மும்முரமானான். அவனாக அது குறித்து எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை.

மௌனமாக கழிந்தது அவர்களின் அந்த இரவும்!

ஆனால் முந்தைய நாளுக்கும் சேர்த்து அடுத்த நாள் அனைத்து களேபரங்களும் நடந்தேறின.

அன்றைய தினம் விடிந்ததும் வந்திறங்கியிருந்தார் இந்துவின் அம்மா. அவர் ஊரிலிருந்து புறபட்டு மருத்துவமனைக்கு வீணாவை பார்க்க செல்ல,

துர்கா ஒன்று விடாமல் நடந்த அனைத்து விஷயங்களையும் விவரித்துவிட்டார். செல்விக்கு உள்ளுர கனலாக கோப ஏற, வீணாவும் சேர்ந்து கொண்டு அந்த நெருப்பை நன்றாக பற்றி எரியும்படி செய்துவிட்டார்.

அதோடு அவள் முடிக்கவில்லை.

“இனிமே இந்து அந்த வீட்டுல இருந்தா நான் அங்கே வரவே மாட்டேன்” என்று ஒரே போடாக போட, துர்காவிற்குமே மகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சிதான். இந்துவை பழி தீர்த்து கொள்ள வேண்டுமென்பதே வீணாவின் நோக்கமாக இருந்ததே ஒழிய இதில் தன் தம்பியின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை அவள் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

துர்காவும் மருமகளா மகளா என்று வந்தாள் மகள்தான் என்று யோசித்தார். இடையில் மகன் என்ற உறவின் நிலைமையை பற்றி யோசிக்கவே இல்லை.

அவர் செல்வியிடம், “உங்க பொண்ணு அழைச்சிட்டு போயிடுங்க… ஒரு மூணு மாசம் கழிச்சு வீணாவை அவ புகுந்த வீட்டுக்கு அனுப்பின பிறகு சரவணனை அனுப்பி அழைச்சிக்கிறோம்” என்று அவரும் மனசாட்சியே இல்லாமல் ஒரு குண்டை தூக்கி போட்டார். செல்வியால் ஒன்றுமே பேச முடியவில்லை.

மொத்த கோபமும் மகளின் மீதுதான் திரும்பியது. இது வரை செய்ததெல்லாம் போதாதென்று சம்பந்தம் செய்த வீட்டில் இப்படி தன்னை அவமானப்படுத்திவிட்டாளே என்றவர் உள்ளம் எரிமலையாக தகித்தது.

உள்ளூர குமுறி கொண்டே வீட்டிற்கு வந்தவர், வந்ததுமே மகளை பிடித்து வெளு வெளுவென வெளுத்து வாங்கிவிட்டார்.

“உனக்கு எங்கிருந்துடி அவ்வளவு கோபம் வரும்… அதுவும் நிறை மாச புள்ளைதாச்சியை தள்ளிவிடுற அளவுக்கு” என்று ஆரம்பித்து அவளை திட்டி தீர்த்துவிட்டு,

“ஒழுங்கா கிளம்பு போகலாம்” என்று அவளை துணிகளை எடுத்து வைக்க சொன்னார். இந்துவின் மனதில் அந்த நொடி கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.

தன் ஊருக்கே போய்விடலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தவள் ஒரு பையை எடுத்து தம் துணிகளை நிரப்பி வைத்தாள். அந்த நொடி கடையிலிருந்து சரவணன் வரவும் செல்வி அவனிடம் சொல்லிவிட்டு மகளை அழைத்து செல்ல தயார் நிலையிலிருந்தார்.

“நடந்தெல்லாம் அம்மா சொன்னாங்க… இவ ஏதோ கோபத்துல பண்ணிட்டாளே ஒழிய தெரிஞ்சுச் எதுவும் பண்ணல” என்று மகளுக்காக பரிந்து பேசியவர்,

“துர்காசொல்ற மாதிரி வீணாவும் இவளும் ஒண்ணா இருந்தா பிரச்சனைதான் வரும்… அதான் வீணா இருக்கிற வரைக்கும் நான் இந்துவை அழைச்சிட்டு போய் ஊர்ல வைச்சுக்கிறேன்… அப்புறம் வீணா அவங்க புகுந்த வீட்டுக்கு போன பிறகு வந்து நீங்க இந்துவை அழைச்சிட்டு போங்க” என்று சொல்ல சரவணன் முகம் வெளிறி போனது.

“மாப்ள கிட்ட சொல்லிட்டு வா… இந்து” என்று செல்வி சொல்ல அவன் தவிப்போடு தன் மனைவியை பார்த்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து புறப்படுவதாக தலையசைத்தாள். அது கூட வேண்டா வெறுப்பாகதான்!

சரவணன் பார்வையிலிருந்த வலியை அவள் உணரவேயில்லை. அவன் வேண்டாமென்று கண்ணசைத்ததையும் அவள் பார்க்கவேயில்லை.

அப்போதைக்கு அவள் அந்த வீட்டை விட்டு கிளம்பி போனால் போதும் என்ற மனநிலையிலிருந்தாள்.

செல்வி சரவணனிடம் சொல்லிவிட்டு முன்னே செல்ல அவரை பின்தொடர்ந்த இந்துவின் பேகை சரவணன் பறித்து கொண்டான்.

அதோடு அவளை போக வேண்டாமென்று திட்டவட்டமாக தலையசைத்து மறுத்துவிட்டு அவள் பையை சென்று அறைக்குள் வைத்துவிட்டான்.

இந்த காட்சியை பார்த்த செல்விக்கு உள்ளுர சந்தோஷமாக இருந்தது. யாராவது இப்படி சொல்ல மாட்டார்களா என்றவர் ஏக்கத்தோடு எதிர்ப்பார்த்திருக்க, சரவணன் அதை சொன்னது அவருக்குள் ஆழ்ந்த நிம்மதியை பரவ செய்தது.

ஆனால் அதற்கு நேர்மாறாக இந்துவின் முகத்தில் அதிர்ச்சி, கோபம், வெறுப்பு என்று அத்தனை உணர்ச்சிகளும் ஒரு சேர பிரதிபலித்தன.

சரவணன் இப்படி செய்தது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. தன்னை நிம்மதியாக இருக்க விட கூடாதென்று செய்கிறான் என்றே தோன்றியது அவளுக்கு!

அவள் மனதில் வெறுப்புணர்வு பொங்கி பெருக செல்வி அது புரியாமல் சரவணனை பற்றி மகளிடம் புகழ்ந்து தள்ளிமகளின் கோபத்தை அதிகப்படுத்தினார்.

“நான் கூட ஆரம்பத்துல மாப்பிள்ளையை பத்தி தப்பா நினைச்சேன்… ஆனா அவர் அப்படியெல்லாம் இல்ல… ரொம்ப நல்லவரு” என்று பாராட்டியதோடு நிறுத்தி கொள்ளாமல்,

“நீ அதிர்ஷ்டகாரிதான்… கண்டிப்பா மாப்பிள்ளை உன்னை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டாரு” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். அந்த வார்த்தைகளின் ஆழம் அப்போதைக்கு இந்துவிற்கு புரியவில்லை. ஆனால் அனுபவபூர்வமாக அதை அவளே உணரும் ஒரு நாள் வருமென்று அவள் யோசித்திருக்கவில்லை.

அவனின் தூய்மையான அன்பையும் காதலையும் அன்றே உணர்ந்திருந்தால் இன்று தனக்கு இப்படி ஒரு கெதி நேரிட்டிருக்காது என்று கணவனின் கடிதத்தை அணைத்தபடி கண்ணீரில் கரைந்திருந்தாள் அந்த காரிகை!

அருகிலிருக்கும் போதெல்லாம் வராத இந்த காதல் இப்போது வந்து தொலைப்பானேன்!

மனம் முழுக்க நிறைந்துவிட்ட அவன் பிம்பத்தை நேரில் பார்க்க அவள் உள்ளம் தவித்தது.

error: Content is protected !!