Rainbow kanavugal-35

Rainbow kanavugal-35

35

அந்த அறைக்குள் இந்துமதி ஒரு மூலையில் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள். முகம் வெளுத்து விழிகள் அச்சத்தின் சாயலை பிரதிபலிக்க குளிர் காய்ச்சல் வந்தவள் போல அவள் தேகம் முழுவதும் நடுக்கம் பரவியிருந்தது.

கடந்த இரண்டு நாட்களாகதான் அவள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கணவனின் அணைப்பிலிருந்த பாதுக்காப்பு உணரவும் அவன் பார்வையில் கடத்திய காதல் உணர்வும் அவளின் ஏனைய பிரச்சனைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி இருந்தது.

ஆனால் காலையில் வந்த கைபேசி அழைப்பில் மீண்டும் அவள் நிம்மதி மொத்தமாக பறிபோயிருந்தது.

விசாரணைக்காக காவல் நிலையத்திலிருந்து அவளை வர சொல்லியிருந்தார்கள். அதுதான் தற்போதைய அவளின் பயத்திற்கான காரணம்!

சரவணன் அவளிடம், ‘ஒன்னும் பிரச்சனை இல்ல… பார்த்துக்கலாம்’ என்று எப்படி எப்படியோ சமாதானங்கள் செய்தும் அது எதுவும் அவள் மூளையை எட்டவேயில்லை.

அந்த இன்ஸ்பெக்டரை மீண்டும் பார்க்க போவதை எண்ணும் போதே வார்த்தைகளால் விவரிக்க முடியாத அருவருக்கத்தக்க உணர்வும் பயவுணர்வும் அவள் மனதை ஆட்டிபடைக்க தொடங்கியிருந்தது.

கூடவே தன் கணவனுக்கு இம்முறையும் அந்த இன்ஸ்பெக்டரால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலை வேறு அவளை பாடாய் படுத்த, பெண்ணவள் அச்சத்தோடு அந்த அறைக்குள்ளேயே காலையிலிருந்து  முடங்கிகிடந்தாள்.

ஒருவாறு சரவணன் அவள் நிலைமை புரிந்து தன் அம்மாவிடம் அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் சொல்லிவிட்டு கடைக்கு சென்றுவிட்டான்.

இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் கடைக்கு போகுமளவுக்கு அவனுக்கு உடல் தேறியிருந்தது. அவன் கடையிலிருந்தாலும் அவன் கவனம் துளி கூட வேலையில் இல்லை.

நேற்று முன்தினமே தாமு மது வீட்டுக்கு கிளம்புவதாக தெரிய வரவும், ‘நல்லதாக போச்சு’ என்று அவரிடமே அந்த கடிதத்தை கொடுத்துவிட சொன்னான். அன்றே அவரும் மதுவிடம் சேர்ப்பித்துவிட்டதாக சொல்லியிருந்தார்.

ஆனால் இருதினங்கள் கடந்த போதும் ஏன் அவள் அந்த கடிதத்தை படித்துவிட்டு தன்னை தொடர்பு கொள்ளவே இல்லை? தான் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் கூட பதிலுரை இல்லையே! ஒரு வேளை அவளுக்கு ஏதாவது பிரச்சனையா?

இப்படியாக கவலைப்பட்டு கொண்டிருந்தவன் இன்று காவல் நிலையத்துக்கு இந்துவை விசாரணைக்கு வர சொன்னதிலிருந்து அந்த விஷயத்தை தோழியிடம் தெரிவித்துவிட வேண்டுமென்று அவளின் செல்பேசிக்கு காலையிலிருந்து அழைத்து கொண்டிருந்தான். ஆனால் அவளோ அழைப்பை ஏற்கவே இல்லை.

அவனுக்கு பதட்டம் கூடி கொண்டே போனது.

****

இரண்டு நாட்கள் கழித்து இன்றுதான் ரேவதி ஓரளவு தேறியிருந்தார். எழுந்து அமர்ந்து எல்லோரிடமும் முகம் பார்த்து இயல்பாக உரையாட ஆரம்பித்திருந்தார்.

மருத்துவரே ஆச்சரியபடுமளவுக்கு கோமாவிலிருந்து எழுந்தவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள். அதற்கு ஒருவகையில் முக்கிய காரணம் மதுதான்.

அஜய் மதுவை திருமணம் செய்து கொண்டதும் அவள் கர்பஸ்திரியாக இருப்பதும்தான் அவர் மனதை நிறைத்திருந்தது. ஆசைப்பட்ட விஷயமெல்லாம் நடந்தேறிய சந்தோஷத்தில் விரைவில் எழுந்து நடமாட அவர் மனதில் உண்டான உந்துதல்தான் அவர் உடலுக்கும் பலத்தை தந்திருந்தது.

இத்தனை நாளாக துயரம், சோகம் என்று மூழ்கியிருந்த அந்த வீடே விழா கோலம் பூண்டிருந்தது. வேலைகாரர்கள் உட்பட எல்லோர் முகத்திலும் அத்தனை உவகை!

வீட்டில் படிந்திருந்த சோக சாயல் அகன்று ஆனந்தம் பொங்கி பெருக, இத்தனை சந்தோஷத்திலும் ரேவதி மகளை மட்டும் மன்னிக்க தயாராக இல்லை. பேரனை மட்டும் ஆர்வமாக வருடி உச்சிமுகர்ந்தவர் மகள் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை. ஒருவகையில் அந்த தண்டனை தனக்கு தேவைதான் என்று அனுவும் தன் அம்மாவின் கோபத்தை மனமார ஏற்று ஒதுங்கிருந்தாள்.

பிரச்சனைகள் கைமீறி போன பிறகுதான் அனு போன்ற பலருக்கும் புத்தியும் தெளிவும் வருகிறது. ஆனால் அதற்கு எந்த தவறும் செய்யாத ஒரு அப்பாவியின் உயிர் போக வேண்டுமா என்ற கேள்விதான் மதுவின் மனதில் அரித்து கொண்டேயிருந்தது.

இதற்கிடையில்தான் ரேவதி குணமானது தெரிந்து மதுவின் பெற்றோர்கள் அங்கே வந்திருந்தனர். அப்போதுதான் அந்த கடிதத்தை தாமு மகளிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

இந்து தன்னிடம் சொன்ன அனைத்தையும் ஒன்றுவிடாமல் சரவணன் அதில் எழுதியிருந்த  அதேநேரம் எந்த இடத்திலும் தன் மனைவியை விட்டுகொடுக்கவும் இல்லை.

சரவணனின் மௌன மொழியையே சுலபமாக புரிந்து கொள்ள முடிந்த அந்த தோழிக்கு அவன் எழுதிய வரிகளின்  பின்னணியில் மறைந்து கிடந்த தோழனின் ஆழமான காதலை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

அந்த கடிதத்தை படித்த பிறகு நண்பனிடம் பேச வேண்டுமென்று அவளுக்குள்ளும் ஆவலும் தவிப்பும்  உண்டான போதும், அவள் வீட்டின் சூழ்நிலை அதற்கு ஏதுவாக இல்லை.

அம்மா கண்விழித்த சந்தோஷத்தில் அஜய் இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கே போகவில்லை.

இன்றும் கூட அவன் வீட்டில்தான் இருந்தான். தன் அம்மாவிடம் தங்களின் திருமண ஆல்பத்தை காட்டி ஒவ்வொரு நிகழ்வையும் அவன் படுஆர்வமாக விவரித்து கொண்டிருக்க, மதுவும் விடாமல் கணவன் செய்த வேலையெல்லாம் சொல்லி அவனை ஒட்டி கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக பேசுவதை பார்த்து ரேவதி சிரித்து சிரித்து ஓய்ந்து போக அப்போது அஜய், “போதும் போதும்… ரொம்ப நேரம் பேசிட்டோம்… நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க ம்மா” என்று சொல்லிவிட்டு மதுவை அழைத்து கொண்டு அறையை விட்டு வெளியே வர,

அப்போது ரேவதி தன் கணவனிடம் சந்தோஷம் பொங்க, “இந்த பசங்க இரண்டு பேரும் பேசறதை பார்க்கும் போது இப்பவும் சின்ன புள்ளையல பார்த்த மாதிரியே இருக்கு இல்லைங்க” என்க,

“ஆமா மா” என்று பாஸ்கரனும் தன் மனைவியின் வார்த்தைகளை ஆமோதித்தார். அவர் முகத்திலும் முன்னே இருந்த துயரத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லை.

அவரிடம் ரேவதி ஏதோ நினைவு வந்தவராக, “ஆமா… அந்த சுரேஷ் எங்கே?” என்று கேட்கவும் பாஸ்கரனுக்கு பயங்கர அதிர்ச்சி!

என்ன சொல்லி சமாளிப்பது என்று குழம்பியவர், பின் அவன் ஊரில் இல்லை என்று சொல்லி சமாளித்துவிட்டார்.

ரேவதியும் அதற்கு மேல் ஒன்றும் கேட்டு கொள்ளவில்லை. ஆனால் மனதிற்குள் அவனையும் மகளையும் பற்றிய விஷயம் கணவருக்கு தெரிந்திருக்குமோ என்ற கேள்வியும் பயமும் இருந்தது.

அதேநேரம் பாஸ்கரனுக்கும் சுரேஷின் மரணம் மனைவிக்கு தெரிந்துவிட கூடாது என்ற கவலை!

கணவனும் மனைவியும் ஒரே போல தங்களுக்கு தெரிந்த ரகசியத்தை தங்களுக்குள்ளாகவே மறைந்து வைத்து கொண்டனர். ஆனால் எத்தனை நாளைக்கு?

இந்த சமயத்தில் தன் அம்மாவின் அறையை விட்டு வெளியே வந்த அஜய் மதுவிடம், “நீ ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி சிட்அவுட்டில் தன் லாப்டாப்புடன் அமர்ந்து கொள்ள,

தனியே அறைக்குள் நுழைந்த மதுவோ தன் செல்பேசியில் தொடர்ச்சியாக வந்த சரவணின் அழைப்பை பார்த்து துணுக்குற்றாள்.

‘மறுபடியும் ஏதாச்சும் பிரச்சனையா இருக்குமோ?’ என்ற பதட்டத்தோடு அவனுக்கு அவள் அழைப்பு விடுக்க, சில நொடிகள் தாமதித்து அவள் அழைப்பு ஏற்கப்பட்டது.

எதிர்புறத்தில் மிகுந்த தயக்கத்தோடு ஒலித்தது இந்துமதியின் குரல்!

மதுவிடமிருந்து அழைப்பு வந்த மாத்திரத்தில் சரவணன் தன் கைபேசியை ஸ்பீகரில் போட்டு இந்துவை பேச சொன்னான்.

மதுவுக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை என்று ஜாமீனில் எடுத்த அன்று அவள் கேட்ட கேள்வியை வைத்தே புரிந்து கொண்ட இந்துவிற்கு அவளிடம் இப்போது பேச சங்கடமாக இருந்தது.

“நான் இந்து பேசறேன்” என்று சொல்லும் போதே மது பதிலுக்கு என்ன சொல்வாளோ என்றவள் அஞ்ச,

“தெரியுது… சரவணன் பக்கத்தில இருக்கானா?” என்று மது சகஜமாக பேசினாள். அதேநேரம் தனக்கு அழைப்பு விடுத்தது சரவணனனாகவே இருக்கும் என்று தெரிந்து கொண்டே அவள் அந்த கேள்வியை கேட்க இந்து எதிர்புறத்தில், “ம்ம்ம்” என்றாள்.

“சாரி இந்து… நான் ஸ்டேஷன்ல கொஞ்சம் கோபமா உன்கிட்ட பேசிட்டேன்” என்ற போது இந்து முகம் வியப்பாக,

மது மேலும், “சரவணன் எழுதி அனுப்பியிருந்த லெட்டர்ல எல்லாமே டீடைலா இருந்துச்சு… அதை படிச்ச பிறகுதான் உன் பக்கம் இருக்க நியாயத்தை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது…” என்றாள்.

இந்துவிற்கு அப்போதே அன்று அவன் எழுதியது மதுவிற்காக என்ற புரிய அவள் பார்வை கணவனை ஏறிட்டது. அவன் புன்னகை முகமாக அவளை பார்க்க மது மேலும்,

“அப்புறம் இன்னொரு விஷயமும் புரிஞ்சுது” என்றவள் நிறுத்தி,

“உன் புருஷன் உன்னை பயங்கரமா லவ் பண்றான்… அதுவும் எந்தளவுக்குன்னா பன்னிரண்டு வருஷமா கூடவே இருந்த தோழியை கூட நம்ப முடியாதளவுக்கு” என்றதும் சரவணனை அந்த வார்த்தை ஆழமாக குத்திவிட்டது.

அவன் முகம் சுருங்கிவிட கணவனின் முகம் பார்த்து அவன் மனமறிந்து, “ச்சே ச்சே அது அப்படி இருக்காது… அவர் எது செஞ்சாலும் அதுல எதாச்சும் ஒரு காரணம் இருக்கும்” என்று தன் கணவனுக்காக பேசினாள் அந்த காரிகை!

அந்த வார்த்தையில் அவர்களுக்கு இடையிலான புரிதலை உணர்ந்து கொண்ட மதுவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

அந்த பக்கம்மோ மனைவியின் வார்த்தையில் உருகி போன சரவணன் காதலோடு தன் மனைவியை பார்க்க அந்த பார்வையில் சிக்குண்டவள் அந்த காதல் பார்வையில் கலந்து இணைப்பில் மது இருப்பதையும் மறந்து போனாள்.

“ஹெலோ… என்னாச்சு?” என்ற மது குரல் கொடுக்கவும் இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர்.

சரவணன் அப்போது இந்துவிடம் காவல் நிலையம் வர சொன்ன தகவலை மதுவிடம் தெரிவிக்க சொல்லி செய்கை செய்ய, அவளும் அனைத்தையும் மதுவிடம் விவரித்தாள்.

“ஸ்டேஷன்ல விசாரணைக்கு கூப்பிட்டா போய்தான் ஆகனும்” என்ற மது சொல்ல,

“இல்ல அந்த இன்ஸ்பெக்டர்” என்று இந்து மேலே சொல்ல முடியுமால் தயங்கினாள்.

“தெரியும்… அந்த இன்ஸ்பெக்டர் பேரு சாரங்கபாணி… அவன் ஒரு பொம்பள பொறுக்கி… இதுநாள்வரைக்கும் அந்த ஆளு எந்த கேஸ்லயும் நியாயமா நடந்துக்கிட்டதே இல்ல… என் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு கேஸ் விஷயமா பேச போன என்கிட்டயே தப்பா பேசி என கையால அடி வாங்கி சஸ்பென்ஷேன் வரைக்கும் போனவன்… அப்புறம் திரும்பி போஸ்டிங் வாங்கி இந்த ஸ்டேஷன் வந்திருக்கான்” என்றவள் சொன்னதை கேட்ட இந்துவை கிலி பற்றி கொள்ள, சரவணனுக்கும் பதட்டமானது.

இந்து பதில் பேச முடியாமல் மௌனமாகிட, “இந்த மாதிரி விஷ கிருமிகள் ஊர் பூரா நிறைய கிடக்கு… இவங்க எல்லாம் கொரானா வைரஸை விட பயங்கரமானவங்க… நம்மால அவங்களை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது… நீ விசாரணைல நேர்மையா என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்லிடு… மத்ததை நம்ம கோர்ட்ல பார்த்துக்கலாம்” என்றவள்,

“அப்புறம்” என்று சற்று தயங்கிவிட்டு,

“ஆந்த ஆளு வேணும்டே விசாரணையை சாக்கா வைச்சு உன்கிட்ட எல்லை மீறி பேசவும் நடந்துக்கவும் செய்வான்… அதுக்கெல்லாம் பயந்துடாதே” என்றாள்.

இந்துவிற்கு இப்போதுதான் இன்னும் அதிகமாக பயம் உண்டாக, கணவன் முகத்தை அவள் கவலையோடு ஏறிட்டாள்.

“இந்து” என்று மது அழைக்க, “ம்ம்ம்” என்றாள் இந்துமதி நடுக்கத்தோடு!

“ஏதாச்சும் கையெழுத்து போட சொன்னா போட்டுடாதே” என்றவள் சொன்ன நொடி, இந்துவிற்கு அன்று ஜெயா கையெழுத்து கேட்டது நினைவுக்கு வர,

“அவங்க அன்னைக்கே என்கிட்ட கையெழுத்து கேட்டாங்க… ஆனா நான் போட மாட்டேன்னு சொல்லிட்டேன்” என்றாள்.

“எதுக்கு கையெழுத்து கேட்டாங்க… விவரமா சொல்லு” என்று மது தீவிரமாக கேட்க, இந்து காவல் நிலையத்தில் ஜெயா பேசிய அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

மது அதிர்ச்சியோடு, “அப்படின்னா இந்த கொலை நீ செய்யலன்னும் தெரிஞ்சும் உன்னை குற்றவாளியா மாத்த பார்க்கிறாங்க” என்றாள்.

சில நொடிகள் கழித்து மதுவே, “சரி விடுங்க… இப்போதைக்கு விசாரணைக்கு நீங்க போயிட்டு வாங்க… மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றவள்,

“அத்தை கோமால இருந்து இப்பதான் குணமாகி இருக்காங்க… அப்படி இருக்கும் போது என்னால ஸ்டேஷனுக்கு இன்னைக்கு வரவும் முடியாது…” என்று தயக்கமாக சொல்லி முடித்தாள்.

அத்தனை நேரம் சுரத்தையே இல்லாமல் பேசி கொண்டிருந்த இந்து ரேவதி குணமான விஷயத்தை அறிந்த மறுகணமே உற்சாகம் பொங்க, “அம்மா எழுந்துட்டாங்களா? பேசுறாங்களா? டாக்டர் வந்து செக் பண்ணினாங்களா? நல்லா இருக்காங்களா?” என்று அக்கறையாக விசாரித்தாள்.

அவள் குரலில் தொனித்த மகிழ்ச்சியை கவனித்த மதுவுக்கு இந்துவின் மீது கொஞ்சம் நஞ்சமிருந்த தவறான அபிப்ராயங்களும் மாறி போயிருந்தது.

“அத்தை ரொம்ப நல்லா இருக்காங்க… டாக்டர் கூட செக் பண்ணிட்டு அவங்க ஃபாஸ்டா ரெகவர் ஆகிட்டு இருக்கிறதா சொன்னாங்க” என்றாள்.

அதன் பின் அவர்கள் உரையாடல்கள் மிக சுமுகமாக நடந்த முடிந்தது. இந்துவிற்கு தைரியம் சொல்லி இணைப்பை துண்டித்தவள் எண்ணம் முழுக்க சுரேஷின் கொலை வழக்கு பற்றிய யோசனைகள் முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டன.

உடனடியாக வேறொரு எண்ணிற்கு அழைப்பு விடுத்து, “ஹலோ” என்க,

“யாரு? என்ன விஷயம்” என்று கணீர் குரலில் பேசிய அந்த பெண் குரலிடம், “நீங்க எஸ் ஐ ஜெயாதானே?” என்று கேட்டாள் மது.

“ம்ம்ம் ஆமா… நீங்க யாரு?”

“நான் லாயர் மதுபாலா” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள,

சில நொடி மௌனத்திற்கு பின் ஜெயா, “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்க,

“இந்து நிரபராதின்னு தெரிஞ்சும் அவளை ஏன் இந்த கேஸ்ல சிக்க வைக்க பார்க்குறீங்க?” என்ற கேள்விக்கு உடனடியாக ஜெயாவால் பதில் பேச முடியவில்லை.

“நீங்க நினைச்சா இந்த கேஸ்ல இருந்து இந்து வெளியே வர ஹெல்ப் பண்ண முடியும்” என்ற மது மேலும் சொல்ல,

“சாரி என்னால ஒன்னும் செய்ய முடியாது” என்று விட்டேற்றியாக பதிலளித்த ஜெயா,

“எனக்கு நிறைய வேலை இருக்கு… போனை கட் பண்றீங்களா?” என்றாள்.

“இந்துமதி மாதிரி அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை அழிக்க போறோம்ங்கிற குற்றவுணர்வு உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லைனா போனை நீங்களே கட் பண்ணிடுங்க” என்ற போது ஒரு நீண்ட நெடிய மௌனத்திற்கு பின் ஜெயா மதுவிடம் பேசினாள்.

மது ஜெயாவிடம் விவரமாக இந்த வழக்கு பற்றி அனைத்தையும் கேட்டறிந்த பின் மதுவுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது.

‘யாரோ பணபலம் இருக்கிறவங்க பின்னாடி இருந்து இந்த கேசை திசை திருப்ப பார்க்கிறாங்க?” இந்த கேள்வி அவள் மூளையை துளைக்க, ‘அது யாரா இருக்கும்?’ என்று தன்னை தானே கேட்டு கொண்டாள்.

அவள் யோசித்தவரை அப்படி செய்ய ஒருவரால் மட்டுமே முடியும்.

‘உஹும் அப்படி இருக்க கூடாது… அப்படி மட்டும் இருந்துவிடவே கூடாது’ என்று அவள் யோசித்திருக்கும் போது அந்த அறைக்குள் நுழைந்த அஜய்,

“உன்னை ரெஸ்ட் எடுக்கத்தானே சொன்னேன்… என்ன பண்ணிட்டு இருக்க நீ” என்று அக்கறையான அதட்டலோடு அவன் அவளை நெருங்கினான்.

அவளுக்குள் அப்போது எழுந்த சந்தேகத்தை சாதாரணமாக அவளால் ஒதுக்கிவிட முடியவில்லை.

“இருக்கலாம்” என்று அவள் மூளை சொல்ல மனமோ, “அப்படி இருக்காது… இருக்கவே இருக்காது” என்று திட்டவட்டமாக மறுத்தது.

error: Content is protected !!