Ruok- 5
Ruok- 5
நிலா-முகிலன் 5
முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. “நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல.
ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ ஒருத்தனை காதலிக்கறேன்னு வந்து நின்னுச்சு.
சாதி மாறி, அதுவும் பெத்தவங்க கூட இல்லாத ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க நாங்க சம்மதிக்கல.
எங்களுக்கு தெரியாம அவனையே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு வந்து எங்க சனங்க முகத்துல முழிக்க முடியாம செஞ்சுடிச்சு பாவி மக. அதோட அவளைத் தலை முழுகி விலக்கி வெச்சுட்டோம்.
எங்க மூத்த மகள இங்கனையே பக்கத்து ஊருல கட்டி கொடுத்திருக்கோம். இவ செஞ்ச வேலையால அவ குடும்பத்து ஆளுங்க அவளை எங்க வீட்டுக்கே வர விடல.
மூணு மாசத்துக்கு முன்னாடி, இங்க ஒரு நாள் புயலும் மழையுமா இருந்துச்சே, அன்னைக்கு மங்கை இங்கே வந்துச்சு! என் புருஷனை கொஞ்ச நாளா காணும்! மனசு கஷ்டத்துல இருக்கேன்! உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணிச்சு! அதுதான் இங்க வந்திருக்கேன்னு!‘ செல்லிச்சு.
உங்க ஆசிர்வாதம் இல்லாம கல்யாணம் செஞ்சுகிட்டதாலதான இப்படி கஷ்ட படுறேன்.
எங்களை மன்னிச்சிடுங்கன்னு கதறிச்சு.
அவங்க அப்பா அவளை வீட்டுக்குள்ளேயே நுழைய விடல.
‘அவனோட சோலி முடிஞ்சதும் உன்னை கை கழுவி விட்டுட்டான். இனிமேல் திரும்ப வர மாட்டான்.
உன்னால போன மானம் மரியாதைய மீட்டெடுக்க போராடிட்டு இருக்கோம். பெரியவ வீட்டுல இப்பதான் கொஞ்சம் இறங்கி வராங்க. உன்னை மறுபடியும் சேர்த்துக்கிட்டா உங்க அக்கா நெலம மோசமா போகும்.
உனக்கு நல்ல படிப்பு வேலை எல்லாமே அமைஞ்சிருக்கு. எப்படியோ பிழைச்சு போ.
இங்க வந்து எங்க நிம்மதியைக் கெடுக்காத‘ன்னு ஆத்திரமா பேசி கதவை அடைச்சிட்டாங்க.. அவங்களுக்குப் பயந்துகிட்டு நானும் அப்படியே இருந்துட்டேன்.
ஒரு லெவலுக்குமேல் கெஞ்சிகிட்டு இருக்க அவ விரும்பல போல, முகத்தை துடைச்சிகிட்டு அதே கார்லயே திரும்பி போயிடிச்சு என் மக. அப்ப மணி ராத்திரி ஏழு இருக்கும்.
பத்து மணி வாக்குல கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்து ஒருத்தங்க போன் பண்ணி மங்கைக்கு ஆக்சிடண்ட் ஆயிடிச்சு, தலையில அடி பட்டிருக்கு. உடனே ஆப்பரேஷன் செய்யணும். அதுக்கு முன்னால உஙகளை ஒரு முறை பார்க்கணும்னு உங்க மக ஆசை படறாங்க. தயவு செஞ்சு வந்து பாருங்கன்னு‘சொன்னாங்க.
ஆனால் அவளை போய் பார்க்க அவங்க அப்பா விருப்பப்படல.
என்னையும் போக அனுமதிக்கல” என்று சொல்லிவிட்டு, முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினார் அந்த பெண்மணி.
அவரது கணவரின் முகம் அவமானத்திலும் வேதனையிலும் இறுகிப் போய் இருந்தது.
முகத்தில் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான் முகிலன்.
தொடர்ந்தார் அந்த பெண்மணி.
“அடுத்த நாள் காலையில, இவங்க வேலைக்கு கிளம்பிட்டு இருக்கும் போது இங்க ஒரு பொண்ணு வந்துச்சு.
அத பார்க்கும் போது ராவெல்லாம் தூங்காத மாதிரி கண்ணெல்லாம் செவந்து போய் இருந்துது.
‘நீங்கதான் நிலாவோட அம்மாவா‘ன்னு கேட்டுது அந்த பொண்ணு.
அதுக்குள்ளே இவங்க, ‘நிலானு யாரையும் எங்களுக்குத் தெரியாது. நீங்க போகலா‘ம்னு கோவமா சொன்னாங்க.
‘நீங்க அப்படியெல்லாம் சொல்ல கூடாது. ரொம்ப பெரிய ஆபத்துல இருந்து பிழைச்சிருக்காங்க உங்க மக. அவங்களுக்கு ரொம்ப பெரிய ஆபரேஷன் நடந்து முடிஞ்சிருக்கு. எப்படியும் மதியத்துக்கு மேல கண்ணை முழிச்சிடுவாங்க நிலா; அந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு முன்னால நின்னா, அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்.‘அப்படினு பொறுமையா அந்த பொண்ணு சொல்லிச்சு.
ஆனா அதுக்கு, ‘அதுதான் ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சு போச்சு இல்ல! உயிருக்கு ஆபத்து இல்லைதானே. இப்ப நீங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க மங்கையோட அப்பா.
அதுக்கு பொறவும் கெஞ்சி பார்த்துட்டு, இவங்களை சம்மதிக்க வைக்க முடியாம, ‘நீங்களாவது கொஞ்சம் சொல்லி, அவரை அங்க அழைச்சிட்டு வாங்கம்மா‘ன்னு சொல்லிட்டு போயிடிச்சு தம்பி அந்த பொண்ணு.
பொறவு, அழுது புலம்பி கெஞ்சி இவங்களை சம்மதிக்க வெச்சு அங்க ஹாஸ்பிடலுக்கு போனேன்.
ஆனா அங்க, என் மகளுக்கு பிட்ஸ் வந்து இறந்துடிச்சுன்னு சொன்னாங்க.
மொத நா உசுரோட, ஓவியமா பார்த்த எங்க மகளை, உயிரில்லாத பிணமா வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தோம் தம்பி!” என்று சொல்லி தேம்பினார் அந்த பெண்மணி.
அதன் பின் வீட்டிற்குள் அழைத்துச்சென்று நிலமங்கையுடைய புகைப் படத்தையும் முகிலனுக்குக் காண்பித்தார் அவர்.
அதைத் தன கைப்பேசியில் பதிய வைத்துக்கொண்டு, நிலமங்கையுடைய தாய், தந்தை இருவரையும் வீட்டின் வெளிப்புறம் அழைத்து வந்த முகிலன்,காரிலேயே சரிந்து உறங்கிய நிலையிலிருந்த நிலாவை அவர்களிடம் காண்பித்து, “இந்த பொண்ணை உங்களுக்கு தெரியமா?” என்று கேட்டான்.
அவளைப் பார்த்ததும் அதிர்ந்தனர் இருவரும். “ஐயோ தம்பி! இந்த பொண்ணுதான் தம்பி, மங்கை இறந்துபோன அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்துச்சு! இந்த பொண்ணுதான் அன்னைக்கு என் மகளுக்காக அவ்வளவு கெஞ்சிட்டு போச்சு!” என்றார் அதிர்ச்சி விலகாமல்.
“இந்த பொண்ணை பத்தின விவரம் எதாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான் முகிலன்.
“ஐயோ! அன்னைக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் இவளை நாங்க பார்த்திருக்கோம் தம்பி. மத்தபடி இந்த பொண்ணு யாருன்னே எங்களுக்கு தெரியாது.
இந்த பொண்ணுக்கு எதாவது மேலுக்கு சரி இல்லையா? இல்ல வேற ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார் அந்த பெண்மணி அக்கறையுடன்.
அதுவரை அடங்கி அமைதியை கடைபிடித்தவனாக இருந்த கதிர், “பிரச்சினை இந்த பொண்ணுக்கு இல்ல! எங்க அண்ணாவுக்குத்தான்” என்றான் தீவிரமாக.
“ஏன்?” என்று அந்த பெண்மணி கேட்க, “போன மாசம்தான் இந்த பொண்ணுக்கும்,எங்க அண்ணாவுக்கும் கல்யாணம் ஆச்சு.
பிறகுதான் தெரிஞ்சுது,அவங்களுக்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு! அதாவது சந்திரமுகி படத்துல ஜோதிகா வருவாங்க இல்ல, அந்த மாதிரி!
எப்ப கங்காவா இருப்பாங்க; எப்ப சந்ரமுகியா மாறுவாங்கன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது! எங்க அண்ணாவை வெச்சு செய்யறாங்க!” என்று அவன் கொஞ்சமும் சிரிக்காமல் சொல்லவும், அதை உண்மை என்றே நம்பி,
“அடப்பாவமே நல்ல டாக்டரா காமிங்க! இல்லன்னா பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு வேண்டிக்கோங்க; சரியாபோயிரும்” என்று அவர் உருக்கமாகச் சொல்ல,
“ஆமாங்க! அப்படியே பேய் ஓட்டற பூசாரி யாராவது தெரிஞ்சா சொல்லுங்க; அவரையும் பார்த்துடலாம்” என்று கதிர் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல, அந்த பெண்மணி முகிலனை ஒரு பரிதாப பார்வை பார்த்து வைத்தார்.
அதை உணர்ந்து, “ஷட் அப் கதிர்!” என ஒரு முறைப்புடன் அவனை அடக்கிய முகிலன்,
“ஒண்ணும் இல்லமா! ஷி இஸ் ஃபைன்! உங்க மகளை நினச்சு ரொம்ப பீல் பன்றாங்க! அவ்வளவுதான்!” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டேன்! மன்னிச்சிடுங்க!” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டு, காரில் ஏறி அமர்ந்துகொண்டான் முகிலன்.
கதிர் அவனுக்கு அருகில் வந்து உட்கார,அப்பொழுதுதான் நினைவு வந்தவனாக, “மிஸர்ஸ் மங்கையோட ஹஸ்பண்ட் நேம் என்ன?” என்று அவன் கேட்க, அந்த பெண்மணி தயக்கத்துடன் கணவரின் முகம் பார்க்கவும், “பிரபஞ்சன்!” என்றார் அவர் வெறுப்புடன்.
அந்த நொடி முகிலனின் கண்களில் ஒரு மின்னல் வெட்டி மறைய, அதை நன்றாகக் கவனித்தான் கதிர்.
பின்பு அவர்களிடம் விடைபெற்று காரை உயிர்ப்பித்தவாறே, “அவ தூங்கற தைரியத்துலதான இந்த ஆட்டம் ஆடுற! நீ பேசினத மட்டும் அவ கேட்டிருந்தா வைய்யி, ஒரே லக லக லக தான் தெரிஞ்சுக்கோ!” என்றான் முகிலன் கடுப்புடன்..
பின் புறம் திரும்பி நிலாவைப் பார்த்தவாறு கதிர், “சுத்தி இவ்ளோ நடக்குது, இவ என்னடான்னா பொம்பள கும்பகர்ணன் மாதிரி இப்படி தூங்கிட்டு இருக்கா? எனக்கு மண்டையே வெடிச்சிரும் போல இருக்கு. இப்பவாவது சொல்லுங்க அண்ணா! யாருன்னா இவ!” என மூச்சே விடாமல் பேசியவாறு, கேட்க,
“இவதான் உன்னோட வருங்கால அண்ணி! அவ இவனென்று சொல்றதையெல்லாம் இதோட நிறுத்திக்கோ! என்ன புரியுதா!” என்றான் முகிலன் உறுதியான குரலில்.
“ஓஓஓஓ ஹோஓஓ! அவளுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் சொல்லியும், நீங்க சும்மா இருக்கும் போதே நினைச்சேன்!
எலி ஏன் ஏரோபிளேன் ஓட்டுதுன்னு இப்போ நல்லாவே புரியதுங்கண்ணா! புரியுது! நீங்க நடத்துங்கண்ணா நல்லா நடத்துங்க!” என அவன் முகிலனை ஓட்ட தொடங்கவும், அவன் புறம் திரும்பி அவனை முறைத்தவன், “அடங்குடா! இல்லன்னா போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரதை!” என்றவாறு கைப்பேசியுடன் இணைக்கப்பட்டிருந்த ‘கார் கிட் ப்ளூ டூத்‘ மூலம் ஒரு தொடர்பு என்னை அழுத்த, எதிர் முனையில்,
“டேய் மாமூ! உயிரோடதான் இருக்கியா! என்னையெல்லாம் ஞாபகம் வெச்சி போன் பண்ணியிருக்க!” என மகிழ்ச்சியும் நக்கலுமாக ஒலித்த குரலில்,
“அடங்குடா எரும!” என்றான் முகிலன் அதே உற்சாகத்துடன்.