tk39

அத்தியாயம் – 39
திருச்சியிலிருந்து பெங்களூர் வந்த நாளில் இருந்தே பிரபா உற்சாகமாக
இருப்பதை கவனித்தாள் ஜெயா.. அவன் பழைய நிலைக்கு திரும்பியது
அவளின் மனதிற்கு சந்தோஷம் அளித்தாலும் கூட அதற்கான காரணம்
புரியாமல் குழப்பத்துடனே இருந்தாள்..

அந்த சிந்தனையுடன் சமையல் செய்து கொண்டிருந்தவளின்
காதோரம், “ஓய்.. என்னடி பண்ணிட்டு இருக்கிற..” என்றவனின் குரல்
கேட்க தன்னுடைய கவனம் களைந்து திரும்பியவள், “பிரபா..” என்று
முடிக்கும் முன்பே திணறிவிட்டாள்.. அந்த அளவிற்கு அவளை நெருங்கி
நின்றிருந்தான்..

அவனின் பார்வை அவளின் மீது நிலைத்திருக்க, “இப்போ எதுக்கு
இவ்வளவு நெருங்கி வந்து நிற்கிறீங்க..” என்றவள் முறைத்துக்கொண்டே..
“நான் அப்படித்தான் நெருங்கி நிற்பேன்.. என்னை தடை செய்ய யாரும்
இல்ல..” என்றவன் அவளிடம் வம்பு வளர்க்க, “நான் இருக்கேன்..” என்றதும்
அவனின் பார்வை விஷமமாக அவளின் மீது படிந்தது..

“இல்ல உனக்கு பேய் ஓட்டனும் போல தெரியுது பிரபா..” என்றவள்
திரும்பி வேலையைக் கவனிக்க, “அதை மெல்ல ஓட்டலாம்..” என்றவனோ,
“என்ன யோசனையில் இருக்கிற..” என்று அவளை நெருங்கி நின்று அவளை
இம்சை செய்தான் பிரபா..

“முதலில் நகர்ந்து நின்னு பேசுடா..” என்று கோபத்தில் அவனை, ‘டா’
போட்டு அவள் அழைக்க, “புருஷன் மேல ரொம்ப நம்பிக்கை..” என்று
சிடுசிடுத்துவிட்டு அவளைவிட்டு விலகி நின்றவன்,
“ம்ம் இப்போ சொல்லு..” என்றான்..

“உங்கமேல் நம்பிக்கை இல்லாமல் இல்ல.. என்னவோ மார்க்கமாக
இருக்கீங்களே.. அதன் ஒரே யோசனையாக இருக்கு..” என்று அவள்
இழுத்தாள்..

“என்னிடம் மாற்றம் தெரியுதா..? இல்ல உன்னோட பார்வை
மாறிவிட்டதா..?” அவன் மீண்டும் அவளை வம்பிற்கு இழுத்தான்..
“இல்லடா கன்பார்ம் உனக்கு யாரோ நல்ல செய்வினை
வெச்சிட்டாங்க.. ஆனால் அது யாருன்னு தான் தெரியல..” என்றவள்
தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்..
“என்னோட பனிமலர்தான்.. எனக்கு செய்வினை செஞ்சிட்டான்னு
நினைக்கிறேன்.. ஆமா ஜெயா நீ இதைப்பற்றி என்ன நினைக்கிற..”
என்றவன் அவளிடமே கேட்டான்..
தன்னுடைய வேலையை ஓரம் கட்டிவிட்டு, “பாஸ் உங்களுக்கு
இப்போ என்ன வேண்டும்..” என்றவள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்..
“இல்ல ஊரில் இருந்து வந்த பிறகு ஒரே யோசனையாகவே இருக்கிற..
அதன் என்ன யோசனை என்று கேட்டேன்..” என்றதும் இடையில் கையூன்றி
அவனை முறைத்தவளோ, “நான் என்ன யோசனையில் இருந்த உங்களுக்கு
என்ன..?” என்று அவனை மிரட்டினாள் ஜெயா..
அவள் வைத்த குழம்பில் ஒரு கரண்டியை எடுத்து, “இதை கொஞ்சம்
டெஸ்ட் பண்ணி பாரு..” என்று அவளிடம் கொடுக்க, ‘இதில் என்ன..?’ என்ற
சிந்தனையுடன் குழம்பை சுவைத்து பார்த்தவளின் முகம் மாறிவிட்டது..
“ஐயோ குழம்பில் காரத்திற்கு பதிலாக சக்கரை போட்டு பருப்பு குழம்பு
பாயசம் மாதிரி இருக்கு.. உவே..” என்று அவளுக்கு குமட்டிக்கொண்டு
வந்தது..
“ஹா..ஹா..ஹா..” என்று வாய்விட்டு சிரித்த பிரபா, “நான் மட்டும்
கவனிக்கல.. இன்னைக்கு எங்களோட நிலைமை..” என்றவன் மீண்டும்
அவளை கிண்டலடித்து சிரித்தான்..
“நான் உங்களை பற்றிய சிந்தனையில் இருந்தேன்..” என்று தலையை
குனிந்து கொண்டாள் ஜெயா..

அவளையே இமைக்காமல் பார்த்த பிரபா, “சரி பரவல்ல விடு..
இன்னைக்கு நீ சமையல் பண்ண வேண்டாம்.. சுந்தரிம்மாவை சமையல்
செய்ய சொல்லு..” என்றவன் சொல்ல சரியென்று தலையாட்டினாள்..
ஏனோ அவளின் மனசு ஒருநிலையில் இல்லாமல் இங்கும் அங்கும்
அழைப்பாய, “சரி ஜெயா.. நான் ஆபீஸ் கிளம்பறேன்..” என்றவனின்
பார்வை அவளின் மீது நிலைத்தது..
“ம்ம் கிளம்புங்க..” என்றவள் அவனை அதட்ட, “ம்ஹும்.. உன்னோட
மனசு எப்போ மாறுமோ..” என்று பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு
அறையைவிட்டு வெளியே சென்றான் பிரபா..
அவனின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த ஜெயாஅது பற்றிய
யோசனையுடன் அவளின் அறைக்கு சென்றுவிட சுந்தரிம்மா சமையல்
வேலையை கவனித்தார்.. நேத்ரா ஸ்கூல் போய்விட அறைக்குள்
தஞ்சமடைந்தவளுக்கு பொழுது போகாமல் அந்த அறையை
மாற்றியமைக்கும் வேலையில் ஈடுபட்டாள்..
அவள் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் இடமாற்றும் செய்யும்
பொழுது அவளின் கையில் ஒரு சாவி கிடைத்தது.. அந்த சாவியை கையில்
எடுத்தவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது..

அது ஏன் என்று புரியாமல் அந்த சாவியை எடுத்துக்கொண்டு
கோபிநாத் அறைக்கு செல்ல நினைத்தவளுக்கு பிரபாவின் நினைவு வர,
‘இந்த அறையில் இருக்கும் ஏதோவொரு லாக்கரின் சாவிதான் இது..
அப்புறம் எதற்காக இந்த சாவியை இங்கே கிடக்கிறது..’ என்ற கேள்வியுடன்
சிந்தனையுடன் படுக்கையில் அமர்ந்தாள்..
அந்த வீட்டில் திறக்கப்படாத ஒரு அறை மட்டும் இருந்தது.. அதுவும்
பிரபாவின் அறையுடன் இணைக்கபட்ட அந்த அறையின் கதவின் மீது
அவளின் பார்வை படிய, “இந்த கதவுடைய சாவியாக இருக்குமோ..” என்ற
கேள்வியுடன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று அந்த சாவியை வைத்து
கதவை திறந்தாள்..

அந்த அறைக்குள் நுழைந்து லைட் போட்டதும் அறை முழுவதும்
வெளிச்சம் பரவியது.. அந்த அறை முழுவதும் நாவல்கள் மிகவும் நேர்த்தியாக
அடுக்கப்பட்டிருந்தது.. ஒரு லைப்ரரி போலவே அந்த அறையை மிகவும்
நேர்த்தியாக பராமரித்து இருந்தான் பிரபாகரன்..

அந்த புத்தகங்களைப் பார்த்த ஜெயா, ‘இவருக்கு நாவல் ரீடிங் ஹப்பிட்
இருக்கும் போலவே..’ என்ற சிந்தனையுடன் அந்த அறையை சுற்று வந்தாள்..
இரவு நேரங்களில் எழுதுவதற்கு உதவியாக மேசையில் லைட்டுடன் கூடிய
மேஜையும் அவளின் கருத்தை கவர்ந்திட அதன் அருகில் சென்று பார்த்தாள்..
‘என் காதலியின் கையில் இருந்து எனக்கு கிடைத்த முதல் பரிசு..’
என்று வாக்கியத்தை படித்துவிட்டு அந்த தாளை எடுத்துவிட்டு
பார்த்தவளோ, “இது என்னோட கவிதை புத்தகம்..” என்றவளின்
இதயத்துடிப்பு அதிகரித்தது..

“இந்த புத்தகம் எனக்கு வரபோகும் கணவரின் கையில் இருந்து
கிடைத்தால் என்னைவிட லக்கி யாருமே இல்லை என்று
நினைத்துக்கொள்கிறேன்..” என்று அவள் அன்று ருக்மணியிடம் சொன்னது
இன்று அவளின் நினைவிற்கு வந்தது..
‘இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தில் நான் எழுதிய கவிதை
இருக்குமா..?’ என்ற தவிப்புடன் அவள் அந்த கவிதை புத்தகத்தைக் கையில்
எடுத்து கடைசி பக்கத்தைப் பார்த்தாள்..
அவள் கைப்பட எழுதிய கவிதை அந்த பக்கத்தில் இருக்க, ‘என்னைச்
சிறைவைப்பது நீயென்றால் அந்த காதல் சிறையில் கைதியாக இருக்க நான்
வருகிறேன் பனிமலர்..’ என்றவனின் கைப்பட எழுதிய வரிகளை
படித்தவளின் விழிகள் தானாகவே கலங்கியது..

அந்த வரிகளில் வெளிப்பட்ட காதலை உணர்ந்த ஜெயா, ‘பிரபா
என்னைக் காதலித்திருக்கிறாரா..?’ என்ற சந்தோஷத்தில் அந்த புத்தகத்தை
மார்புடன் அணைத்துக் கொண்டு நிமிர்ந்தவளின் பார்வையில் விழுந்தது
அந்த சுவர் சித்திரம்..

அந்த சுவற்றில் அவளின் உருவம் அழகாக வரையப்பட்டிருந்தது..
அவள் அந்த ஓவியத்தை ஆழ்ந்து கவனிக்க மழையில் நனைந்த வண்ணம்
பாவாடை, தாவணியில் நின்றிருந்த பெண்ணாக இவளின் உருவத்தை அந்த
பெயிண்டிங் பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தது..

அதன் கீழே அவளின் பெயரை, ‘பனிமலர்..’ என்று குறிப்பிட்டப்பட்டு
இருக்கவே, ‘பனிமலர்.. இது என்னோட கவிதை தொகுப்பின் தலைப்பு
இல்ல..’ என்றவளின் உதட்டில் புன்னகை அரும்பியது..

அப்பொழுது தான் அவளின் உருவம் அவளின் கருத்தில் பதிய,
‘இவருக்கு முன்னாடியே என்னை தெரியுமா..?’ என்ற திகைப்புடன் அந்த
அறையைச் சுற்றி வந்தாள்.. அந்த அறைக்கு கொஞ்சம் கூட சம்மதம்
இல்லாத ஒரு நோட் அவளின் விழிகளில் விழுந்தது..

‘இது என்ன..?’ என்ற கேள்வியுடன் அந்த நோட் எடுத்து பார்த்தவளின்
விழிகள் மீண்டும் வியப்பில் ஆழ்ந்தது.. அந்த நோட்டில் இருந்த பேப்பர்
கட்டிங் அனைத்தும் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன்னாடி பேப்பரில்
வந்த அவளின் கவிதைகள்..

‘இந்த கவிதையின் மூலமாக தான் பெண்ணே என் மனம் உன்னிடம்
தஞ்சமடைந்தது..’ என்ற வரிகள் எங்கோ படித்த நினைவு வந்தது.. ஆனால்
அது எங்கு என்று தெரியாமல் குழப்பத்துடன் மீண்டும் அந்த அறையை சுற்று
வந்தாள்..

அப்பொழுது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த வெள்ளை நிறத்து சட்டை
அவளின் கருத்தை கவரவே, “இந்த சட்டையை இவ்வளவு பத்திரமாக
வைத்திருக்கிறார்.. என்ன காரணமாக இருக்கும்..” என்ற சிந்தித்தாள்..
அந்த சட்டையில் இருந்த செம்மண் கரையைப் பார்த்தும் அவளின்
நினைவுகள் பின்னோக்கிச் செல்ல அன்று கோவிலில் நடந்த விஷயம்
அவளின் மனதில் படமாக ஓடிட, ‘அன்று கோவிலுக்கு வந்தது பிரபாவா..?’
என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்..

அன்று அவனுக்கு வந்த கோபம் உடனே மறைந்தது இப்பொழுதும்
அவளின் நினைவில் வந்து செல்ல, ‘இன்னும் எதை எல்லாம் என்னிடம்
மறைத்தார்..?’ என்ற கேள்வியுடன் அவள் மீண்டும் அந்த அலைமாரியை
ஆராய்ந்து பார்க்க அவனின் டைரி அவளின் கைக்கு சிக்கியது..
‘ஒருவரின் மனதை நமக்கு படம்பிடித்து காட்டும் இந்த டைரி..’ என்று
அந்த பெரியவர் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.. அந்த அறையில்
அமர்ந்து அந்த டைரியை படிக்க தொடங்கினாள்..

அவன் மதன் மீது வைத்த நடப்பில் தொடங்கிய டைரி அவனின்
மனதின் ஆசைகளுக்கு இடம் பெயர்ந்து அவள் மீது காதல் கொண்ட நாளில்
இருந்து அவனும் மதனும் பேசிய விஷயங்கள் என்று பல பரிமாணங்களை
வெளிபடுத்தியது அந்த டைரி..

அந்த டைரி அவனின் காதலை வெளிபடுத்த அந்த அறையில் அவள்
கண்ணால் கண்ட ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் மறைந்திருக்கும்
காரணங்களைக் கூறியது அந்த டைரி..

“இன்று முதல் முறையாக ஒரு பெண்ணை பார்த்தும் என்னோட
இதயத்துடிப்பு எகிறியது.. ஆனால் அது ஏன் என்று தெரியாமல் கவிதை
புத்தகத்தை வாங்கிட்டு ஊருக்கு செல்லும் பொழுதுதான் அவள் பனிமலர்
என்ற விஷயமே எனக்கு தெரிந்தது..” என்ற வரிகள் அந்த கவிதை
புத்தகப்பற்றிய விவரம் சொன்னது..

“ஓஹோ இது காதல் பரிசாக இடம்பெற இதுதான் காரணமா..?” என்ற
கேள்வியுடன் கையில் இருந்த கவிதை புத்தகத்தை வருடிவிட்டு மீண்டும்
படிக்க தொடங்கினாள்..

‘இன்று ஒரு பெண் என்னோட சட்டையில் ஈரமண்ணை வீசிவிட்டாள்..
ஆனால் அவளை பார்த்தும் என்னோட கோபம் எல்லாம் போன இடம்
தெரியாமல் போயிருச்சு.. ஆனால் அவள் பனிமலர் என்ற விஷயம் எனக்கு
அப்புறமாகதான் தெரிந்தது..’ என்று படித்ததும், “திடீரென்று அன்று மனதில்

படபடப்பு வர காரணம் இதுதானா..?” என்ற கேள்வியுடன் அவள் அடுத்து
பக்கத்தை புரட்டினாள்..

மதன் அம்மாவின் பாசம், மதனுக்கு நடந்த முதல் திருமணம் மற்றும்
விஜியின் அறிமுகம், கற்பகத்தின் இறப்பு, அதன்பிறகு மதனின்
வாழ்க்கையில் நிகழ்ந்த விஷயங்கள் என்று அனைத்தையும் எழுதியிருந்த
பிரபா அன்று அவனுக்கு வந்த கனவையும் மறக்காமல் எழுதியிருந்தான்..
“நான் இன்று கனவில் கண்ட பெண் ஜெயாவிற்கும், எனக்கும் என்ன
சம்மதம்.. இந்த கனவு நடக்குமா..?” என்றவனின் கேள்வி அவளை அதிர
வைக்க, ‘இந்த கனவு எனக்கும் வந்தது.. அதுதான் நிஜமாக நடந்தது..’ என்று
அதிர்ந்தாள்..

சிலநேரங்களில் சிலவகை விஷயங்களுக்கு நாம் விடை காண
முடியாது.. அந்த மாதிரி இந்த கனவில் தாக்கத்தில் இருந்துதான், ‘தனக்கு
வந்த இரண்டு கனவும் நிஜமாகவே பலித்தது..’ என்ற உண்மையை
உணர்ந்தாள்..

அந்த டைரியில் இருந்து அவளுக்கு தெரிந்த விசயங்களில் அவளுக்கு
சில சந்தேகங்கள் எழுந்தது.. அதை மனதில் தக்க வைத்த வண்ணம் மீண்டும்
படிக்க தொடங்கினாள்.. அது மட்டும் இல்லாமல் அவள் ஆன்லைனில்
எழுதிய கவிதைகளும் அந்த பக்கத்தில் இடம்பெற்றது..

‘நான்தான் எழுதுகிறேன் என்று இவர் எப்படி கண்டுப்பிடித்தார்..?’
என்ற சந்தேகத்துடன் அவள் பக்கத்தை திருப்ப, “நான் எந்த கவிதைப் படித்து
அவளிடம் என் மனதை பறிகொடுத்தேனோ.. அதே கவிதையை இன்று
முகநூலில், ‘தமிழரசியின் கவிதை அரும்புகள்..’பக்கத்தில் படித்தேன்..” என்ற
வரிகள் அவளை அதிர்ச்சியில் ஆழ்ந்தியது..

கவிதைத் தொகுப்பில் அவளுக்கு ரொம்ப பிடித்த கவிதை வரிகள்
என்ற முறையில் அந்த கவிதையை மட்டும் அந்த பக்கத்தில் ஷேர்
செய்திருந்தாள்.. அந்த அறையில் அவளுக்கு கிடைத்த ஒவ்வொரு விசயமும்
பிரபாவின் காதல் மனதை அவளுக்கு படம் பிடித்து காட்டியது..

அவள் மீண்டும் அந்த டைரியை படிக்க, ‘என்னோட காதலி இப்போ
நாவல் எழுதுகிறாள்.. அவள் முதல் நாவலின் தலைப்பு.. கதிரழகி..’ என்று
சந்தோஷத்துடன் எழுதியிருந்தான்.. அதை படித்த ஜெயாவிற்கு சிரிப்புதான்
வந்தது.. அவன் தன்னை எந்த அளவிற்கு நேசித்திருக்கிறான் என்று அந்த
டைரி அவளுக்கு சொன்னது..

அவள் அடுத்தடுத்து படிக்கவே, ‘இன்று கோவிலில் ஒரு பெண்ணிற்கு
ஐ லவ் யூ சொன்னேன்.. அவளின் பெயர் கேட்காமல் வந்துவிட்டேன்.. எந்த
பெண்ணைப் பார்த்தும் நான் இந்த வார்த்தை சொன்னது இல்லை..
இதுதான் முதல் முறை.. என்னோட பனிமலர் உருவத்திற்கும் அவளுக்கும்
ஏதோவொரு சம்மதம் இருக்கு..’ என்று எழுதியிருந்தான்..

‘அன்னைக்கு கோவிலில் பார்த்து கூட எழுதி வெச்சிருக்கிறார்..’ என்று
அவள் அடுத்த பக்கத்தை புரட்ட, ‘இந்த நேத்ரா தினமும் பூங்காவில் ஒரு
பொண்ணு கூட விலையாட்டிட்டு வந்து அந்த அக்கா அப்படி, இப்படி என்று
என்னோட உயிரை வாங்கிற.. முதல்ல அந்த பொண்ணு யார் என்று பார்த்து
நல்ல திட்டிவிட வேண்டும்..’ என்று கோபத்தில் எழுதியிருந்தான்..

“அடப்பாவி..” என்று வாய்விட்டு கூறியவள் மீண்டும் படிக்க,
“இன்னைக்கு ஹோட்டலில் ஜெயாவைப் பார்த்தேன்.. பாவம் அவளிடம்
வம்பு வளர்த்து ஒரு வழி பண்ணிவிட்டேன்..” என்று ரசனையுடன்
எழுதியிருக்க அவளும் அந்த நாளுக்கு சென்று வந்தாள்..

“இன்று நேத்ரவை அழைத்துவர பூங்கா சென்றேன்.. அங்கே நான்
ஜெயாவைப் பார்த்தேன்.. அவளுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையாம்..
நிறைய விஷயம் பேசினாள்.. நான் அவளோட வீட்டில் வந்து பேசமாட்டேன்
என்று நினைக்கிறாளா..” என்ற சந்தேகத்துடன் எழுதியிருந்தான்..

அவள் தொடர்ந்து அந்த டைரியை படிக்க, ‘இன்று எபி படித்ததும்ஜெயா தான் எழுதுகிறாள் என்று எண்பது சதவீதம் உறுதியாகிவிட்டது..
அதன் மாமாவிடம்உண்மையைச் சொல்லி ஜெயாவின் வீட்டிற்கு பெண்

கேட்டு போங்க மாமான்னு சொல்லிட்டேன்.. நான் ஊரிலிருந்து வந்த பிறகு
எங்கள் இருவருக்கும் திருமணம்..’ என்று எழுதியிருந்தான்..
அந்த டைரி முழுவதும் முற்றுபெறும் வரையில் பொறுமையாக
படித்தவள், ‘கிட்டதட்ட பத்து வருடம் காதலித்திருக்கிறார்.. அப்புறம்
எப்படி..’ என்றவளின் மனதில் சந்தேகம் எழுந்தது..

அவன் ஒவ்வொரு முறை சொன்ன, ‘ஐ லவ் யூ பின்னாடி எந்த
அளவிற்கு காதல் மறைந்திருக்கிறது..’ என்று உணர்ந்தவளுக்கு காலையில்
பிரபா சொன்னது நினைவிற்கு வந்தது..

‘பத்து வருடம் மனம் இருந்த காதல் ஒரே நாளில் பொய்யாக போக
முடியுமா..? அந்த அளவிற்கு மனம் தடுமாறி தவறு செய்ய அவரால்
முடியுமா..?’ என்றவளுக்கு சந்தேகம் எழுந்தது..
அதன்பிறகு நடந்த அனைத்தும் அவளின் நினைவில் படமாக ஓடவே
ஒரு முடிவுடன் எழுந்த ஜெயா எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு
அந்த அறைக்குள் அவள் சென்ற சுவடே தெரியாத அந்த அறையைவிட்டு
வெளியே வந்தாள் ஜெயா..

அவளிடம் இருக்கும் கவிதை புத்தகத்தை எடுத்து கடைசி பக்கத்தில்
இருந்த கவிதையை படித்தவளுக்கு, ‘இந்த பிரபாகரன் இவர்தான்..’ என்ற
உண்மையை உணர்ந்த ஜெயாவின் விழிகள் இரண்டும் கலங்கியது..
அவனின் காதலை உணர்ந்த சந்தோஷத்தில் சிறிதுநேரம் அழுதாள்..
சிலநேரங்களில் சொல்லாத காதலை உணர்வு பூர்வமாக உணரும்
பொழுது வார்த்தைகளுக்கு பதிலாக கண்ணீர் மட்டுமே வரும் அந்த
நிலையில்தான் இருந்தாள் ஜெயா..

‘இவருக்குள் இருக்கும் மாற்றம் இப்பொழுது வந்தது அல்ல.. அவர்
என்னை பத்து வருடமாக காதலிக்கிறார்.. அப்புறம் எப்படி..?’ என்ற
கேள்வியுடன் தன்னுடைய அலைமாரியைத் திறந்து அந்த டைரியையும்
பேனாவையும் எடுத்தாள்..

‘அவன் தன் மீது வைத்த காதல் எப்படி பொய்த்து போகும்..’ என்று ஒரு
மனதாக நினைத்தவள் குழப்பத்திற்கு விடை கிடைக்கான அந்த டைரியை
பயன்படுத்த சொல்லி அந்த பெரியவர் கொடுத்த டைரியை தேடி எடுத்தாள்..
தனக்கு இருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கொள்ள நினைத்தவள் அந்த
டைரியில் எதையோ எழுதினாள்.. அவளிடம் பிரபா சொன்ன விஷயங்கள்..

இப்பொழுது அவள் அறிந்த உண்மைகள்.. அவனின் காதல்.. அவனின்
காயங்கள்.. அவளுக்கு இருக்கும் சந்தேகங்கள்..

கடைசியாக அவனின் துரோகம் என்று அனைத்தையும் பட்டியலிட்டு
வைத்துவிட்டு நிமிர்ந்தாள் ஜெயா.. அதிலிருந்து அவளுக்கு ஆயிரம்
சந்தேகங்கள் எழுந்தது.. அதற்கு விடை காண வழியை தேடி
கொண்டிருந்தாள்..

அன்றைய பொழுது சென்று மறைய பிரபா வீட்டிற்கு வரும்
நேரமானது உணர்ந்து, ‘சீக்கிரமே உண்மையை கண்டு பிடிக்கிறேன்..’ என்ற
உறுதி அவளின் மனதில் எழுந்தது..

அதன்பிறகு வந்த நாட்கள் அவளின் சந்தேகங்கள் பலவற்றிற்கு விடை
கொடுத்தது.. அவள் உணர்ந்த சில உண்மைகள் அவர்களின் வாழ்க்கையை
புரட்டி போட்டது..