varaaga nathikaraiyoram – 8

 

 

விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் காகிதத்தை பார்த்ததும்.. அதற்கும் ருத்ராவிற்கும் என்ன சம்மந்தம் என்று மேலும் எதாவது தகவல் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தான் முகிலன்.  இது மற்றவர்கள் அறை என்பதெல்லாம் அவன் மூளையை எட்டவேயில்லை.

 

பின்னே… அபி கன்ஸ்ட்ரக்ஷன் தொடங்கியதற்கான காரணமே அந்த விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை முந்துவதற்கு தானேஅதற்காக இவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா…?

 

சாப்ட்வேர் என்ஜினீயரிங் படித்து.. கம்ப்யூட்டர் கம்பெனி வைக்கும் கனவோடு இருந்தவன்.. இப்படி தந்தை சொல்லை மீறி குடும்ப தொழிலையும் பார்த்து.. கூடவே தெரியாத துறையில் கால் பதித்து.. அதில் முன்னேற இரவு பகல் பாராமல் உழைத்து… அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே தெரியாமல் முன்னேறி வந்தால்… கடந்த மூன்று மாதமாக  எங்கே எப்படி என்றே தெரியாமல் இவர்கள் சரிய ஆரம்பித்தனர்.

 

காரணமாக அவர்களிடம் இருக்கும் தரமான கட்டடம் மற்றும் குறைந்த விலை சொல்லப்பட்டது.

அவனும் தன் ஊழியர்களோடு கலந்து பேச… அவர்களும் அதனை ஒத்துக்கொண்டனர். ஆனால் இவ்வாறு டிசைன் செய்வது விகாஷினி என்பதை அவனால் நம்ப முடியவில்லை… அவனிற்கு சாதகமாகவே அவனது ஒற்றர் படையும்.. இது போல் டிசைன் செய்யக்கூடிய நபர் விகாஷினியில் யாருமில்லை என்றுதான் கூறியது.

எப்படி தங்களது டிசைனை முந்தியது…? யார் அதனை வடிவமைப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கையில் தான் அதிர்ஷ்டவசமாக ருத்ரா அறையில் அவர்கள் அவர்களது கம்பெனி தகவல் கிடைத்தது. சமீபத்தில் இவர்கள் கைவிட்டு போன ப்ராஜெக்ட்டில் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் டிசைனை போனில் பார்த்து அதனை ருத்ராவின் டேபிளில் தேட… அதுவும் அழகாய் சிக்கியது.

இத்தனை நாளாய் தேடிய கேள்விக்கு பதில் கிடைத்ததற்காக சந்தோசப்படுவதா…? இல்லை தன் கம்பெனியின் சரிவிற்கு ருத்ரா தான் காரணம் என்று கோபப்படுவதா…? என்றே தெரியவில்லை. ஒரு மாதிரி மனநிலையில் இருந்தான் கார்முகிலன்.

சாம்பிராணியை எடுத்து ரூமிற்கு வந்த முத்ரா பார்த்தது… அங்கும் இங்கும் கொஞ்சம் யோசனையுடன் நடந்து கொண்டிருந்த ருத்ராவை தான்… அதை பார்த்ததும் முத்ராவும்…

“என்ன ருத்ரா யோசனையா இருக்க…? தலை பாதி காஞ்சிடுச்சா… பரவால்ல வா… தலைய காமி… அம்மா சொன்னாங்க…”

என்றவாறு அவளை உட்கார வைத்து தலை உலர வைத்தாள். கூடவே,

“என்ன யோசனை ருத்ரா…?”

என்று மீண்டும் கேட்டாள்.

“இல்ல டி… அடுத்த ரூம்ல என்ன காப்பாற்றினார்ல அவரு டிரஸ் மாத்த போயிருக்கார். சப்பா… என்ன மனுஷன் டா அவரு… இந்த ரூம்மை பார்த்து கேள்வி கேட்டே ஒரு வழி பண்ணிட்டாரு… எப்படியோ சமாளிச்சிட்டு வந்துட்டேன். இப்போ அது இல்ல பிரச்சனை… அவருக்கு பொறுமையா பதில் சொல்லியே எனக்கு பசிக்குதுடி… கீழ எல்லாரும் இருப்பாங்க… எப்படி சாப்பிடுறது… அவங்க எப்போ சாப்பிட்டு… நாம எப்போ சாப்பிடுறது…”

என்றாள்.

“ஏய் அக்கா… சும்மா என்கிட்ட பொய் சொல்லக்கூடாது… அவர பார்த்தா அப்படி ஒன்னும் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுறவர் மாதிரி தெரியல… நீ….. பொறுமையா…. பதில் சொன்ன…?”

என்று கேலியாக கேட்க…

“அடியே.. நிஜமா நான் பொறுமையா தாண்டி பேசுனேன். எனக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கார். அதை எப்படி மறக்க முடியும்…”

என்று மேலும் எதுவோ கூற வர.. லேசாக சாற்றியிருந்த கதவை தட்டும் ஒலி கேட்டது.

கூடவே,

“மே ஐ கம் இன்”

என்ற கம்பீர குரலும்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள் சகோதரிகள் இருவரும். பின்பு ருத்ரா எழுந்து,

“வாங்க…”

என்று கூறவும் உள்ளே வந்த கார்முகிலன்… அங்கு இருவரும் இருப்பதை கண்டு முத்ராவை எவ்வாறு வெளியேற்றுவது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

அதற்கு வேலையே இல்லாமல் கீழே இருந்து சீதாவும்,

“முத்ரா கொஞ்சம் கீழ வாம்மா…”

என்று அழைத்தார்.

தனது அக்காவின் காதில்

“நான் போய் எதுக்கு கூப்பிடுறாங்கனு பார்த்துட்டு அப்படியே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர பாக்குறேன்…”

என்று கிசுகிசுத்தவள்… பின்பு

சத்தமாக,

“இதோ வரேன் மா…”

என்றவாறு சென்றுவிட்டாள்.

அவள் போனதும்… பாக்கெட்டில் இருந்த காகிதத்தை எடுத்து,

“இது என்னவென்று நான் தெரிஞ்சிக்கலாமா…?”

என்று இறுகிய குரலில் கேட்டான் கார்முகிலன்.

ருத்ராவும் அதை வாங்கி பார்க்க… அது தன்னுடைய டிசைன் என்பதை கண்டு அவள் சிறிது கோபத்தோடு,

“இது என்னோட டிசைன் தான்.. இதை எதுக்கு நீங்க எடுத்தீங்க…?”

என்று வினவினாள்.

“அப்போ விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன்க்கு புது சிவில் இன்ஜினியர் நீ தானா..? ஐ அம் ரைட்…?”

என்று அவள் கூறியதிற்கு பதில் தராமல் இவன் பேச…

அவளோ இப்போது,

“உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும்…?”

என்ற ரீதியில் கையை முன்புறம் கட்டி  நின்று கொண்டிருந்தாள்.

அதை உணர்ந்தவன்…

“உனக்கெல்லாம் சொன்னா புரியாதுனு எனக்கு தெரியும்… இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோ… இந்த ப்ராஜெக்ட் தான நீ லாஸ்ட் வீக் செஞ்சி குடுத்த…?

இதுக்கான சம்பளமா உனக்கு எவ்ளோ கிடைச்சிருக்கு ஒரு பத்து லட்சம் இருக்குமா…? பட் அந்த டிசைனால அவங்களுக்கு கிடைத்த லாபம்… இருபத்தி ஐந்து லட்சம்.”

என்று நிறுத்தினான்.

இதை கேட்டதும் ருத்ரா உள்ளுக்குள் திடுக்கிட்டாலும்… இவன் சொன்னது உண்மை தான் என்று எப்படி நம்புவது என்று எண்ணி அதே போஸில் இருந்தாள்.

“என்ன நம்பமுடியலையா…?”

என்று கேட்டவன்.

“சரி விடு… இதை பாரு”

என்று தன் செல்போனை காட்டியவன்…

‘எதுக்கும் உட்கார்ந்துகொண்டு பாரு ருத்ரா அதிர்ச்சில மயக்கம் போட்டு விழுந்துராத…”

என்று கேலி குரலில் கூற…

அதனை கண்டுக்கொள்ளாமல் போனை வாங்கிய ருத்ரா அதில் உள்ள டாகுமெண்ட்டை பார்க்க… அதில் அவன் சொன்னது தான் உண்மை என்று சொன்னது. ஆனால் அதற்காக எல்லாம் அவள் அதிர்ச்சி ஆகவில்லை… அவனை நிமிர்ந்து பார்த்து…

“தேங்க்ஸ் நான் பேசிக்குறேன் அவங்க கிட்ட..”

என்று கூற…

அவனோ,

“என்ன நான் அமௌன்ட்ட பார்க்க சொன்னேன்னு நினைச்சியா…? இல்ல இல்ல… கடைசி பக்கத்துல தான் உனக்கு மயக்கம் வர சான்ஸ் இருக்குனு சொன்னேன்..”

என்று கூறினான்.

அவன் கூறியது போல் கடைசி பக்கத்திற்கு போக இந்த டிசைனை வடிவமைத்தது என்று கடைசியில் இவள் பெயரில்லாமல் விகாஷினி என்ற பெயர் இருக்கவும்… இரவு பகல் பாராமல் உழைத்த உழைப்பு கண்ணுக்குள் தோன்ற… அதிர்ச்சியில் உறைந்தாள் ருத்ரா.

போனை வாங்கிய முகிலன்…

“இப்போ சொல்லு… இனிமே நீ அவங்களுக்கு டிசைன் பண்ணுவியா…?”

என்று அதிகாரமாக கேட்டான்.

அதற்கு பதில் சொல்லாமல் விறுவிறுவென வெளியேறிய ருத்ரா…

அவள் ரூமிற்கு சென்று… கம்ப்யூட்டரை ஆன் செய்து… கம்பெனியுடன் ஆன்லைனில் இருக்கும் தொடர்ப்பை துண்டித்தாள். பின்னர் இந்த ஆன்லைன் வேலையில் இருந்து விலகுவதாக கூறி காரணமாக வேறு ஒரு கம்பெனிக்கு செல்வதாகவும் கூறினாள்.

இத்தனை நேரம் இவள் செய்வதை பின்னோடு வந்து பார்த்துக்கொண்டிருந்த கார்முகிலன்… இப்போது வேறு ஒரு யோசனைக்கு சென்றான்.

அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று… கம்ப்யூட்டரை அணைத்து டேபிளில் கையூன்றி அதில் தலையை புதைத்திருந்த ருத்ராவை பார்த்தவாறு யோசித்தான்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவன்… “ருத்ரா…”

என்று அழைக்க… அவள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற மனநிலையில் உழன்றதால், அவள் காதில் அந்த அழைப்பு விழவேயில்லை.

மீண்டும் சிறிது சத்தமாக,

“ருத்ரா…”

என்று அழைத்தவன்… அவள் நிமிர்ந்து பார்த்ததும் அவள் கண்களை ஆராய்ந்தான். அதில் ஒரு அடிப்பட்ட பாவனை தெரியவும் அதனை போக்க நினைத்தவன்.

“இப்போ வேற எந்த கம்பெனி ல சேர போறீங்க…?”

என்று கேட்டான்.

அவள் பதில் கூறாமல் முகத்தை திருப்பவும், அதில் கோபப்பட்டவன்…

“இனி நீ வீட்டுல இருந்து என்ன வேலை பார்த்தாலும்… இப்படி தான் ஆகும்… வெளிய வந்து வேலை பாரு.. வேணும்னா நான் உங்க அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கட்டுமா…?”

“நீ என்னோட ஆபீஸ்க்கு வந்துரு…”

என்று அழைக்க… அவனை குழப்பத்தோடு ஏறிட்டு…

“உங்க ஆபீஸ்கா…?”

என்றாள்.

“நானும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துறவன் தான்… இல்லைனா எப்படி இவ்வளவு விசியம் தெரியும்…?”

என்று கேட்டவன்..

“சரி… நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்” என்றவாறு தன் துணியை எடுத்து கிளம்ப பார்க்க…

அப்போது தான் ருத்ரா பழையபடி ஆகினாலோ என்னவோ…?

“ஒரு நிமிஷம் நில்லுங்க…”

என்றாள்.

அவன் திரும்பவும்…

“நான் உங்க கம்பெனிக்கு வரேன்னு சொன்னேன்னா…? நீங்க பாட்டுக்கு வந்தீங்க.. அப்புறம் நான் பேசுறேன்னு சொல்றீங்க… நீங்க உங்க லிமிட்ட கிராஸ் பண்ணாதீங்க… நீங்க எனக்கு ரெண்டு நல்லது செஞ்சிருக்கிங்க… அதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… நான் எங்கயும் இனி வேலை பாக்குறதா இல்லை… நீங்க போகலாம்…”

என்றாள் ருத்ரா.

“ஓஹ்… அப்படியா மேடம்… சரி…”

என்று அவன் சொல்லவும் உடனே ஒத்துக்கொண்டானா என்ற ஆச்சரியத்தோடு முகிலனை பார்த்தாள் ருத்ரா.

ஆனால் அவனோ… மேலும்

“அப்படிலாம் நான் சொல்லுவேன் எதிர்ப்பார்த்தியா…?

என்று கேட்டுவிட்டு

“நான் முடிவு பண்ணிட்டேன்… உன்னோட திறமை எனக்கு நல்லாவே தெரியும்… இப்போ அது எங்க கம்பெனிக்கு வேணும். சும்மா அதை துருப்பிடிக்க விடமாட்டேன்…”

என்று கூறி முடிக்கவில்லை…

அதற்குள்…

“நான் டிசைன் பண்ணி தரமாட்டேன் அப்படின்னு சொன்னா, உங்களால என்னை என்ன பண்ண முடியும்… பேசாம போங்க சார்…” என்று எகிறினாள் ருத்ரா.

அவளையே பார்த்தவன்…

“சரி… கூல் கூல்… அப்போ இங்க இப்போ நடந்த விஷியத்தை உங்க அப்பாகிட்ட சொல்லலாம் அப்படி தான…?”

என்று பாக்கெட்டில் கைவிட்டவாறு நிதானமாக கேட்டான்.

அவனிற்கு தெரிய வேண்டியிருந்தது வீட்டில் இவள் வேலை பார்ப்பது அவள் அப்பாவிற்கு தெரியுமா…? தெரியாதா…? என்று.

ஆனால் அவன் நினைத்த மாதிரியே ருத்ரா விட்டிற்கு சொல்லாமல் தான் வேலை செய்கிறாள் என்பது அவளது கோபமுகமும் அடுத்து அவள் பேசிய பேச்சும் காட்டிக் கொடுத்தது.

“ஏன் சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க… உங்களுக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா… நான் இனி எங்கயும் வேலை பார்க்க மாட்டேன்… மாட்டவே மாட்டேன்…”

என்று கோப மிகுதியில் நடுங்கிய குரலில் சொல்ல…

பக்கத்தில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீர் எடுத்து அவளிற்கு தந்தவன்…

“அதை நீ சொல்ல கூடாது ருத்ரா… நான் தான் சொல்லணும்…

இப்போ நான் உனக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன்… நீ என்னோட ஆபீஸ்ல வேலைக்கு கோயம்புத்தூர் வருகிறாயா…? இல்ல வீட்டிலேயே இருந்து டிசைன் பண்ணி அனுப்புகிறாயா…?

இதுல ஏதாவது ஒன்றுக்கு நீ சம்மதிக்கணும்… இல்லைனா இருக்கவே இருக்கு மூன்றாவது ஆப்ஷன்… உங்க அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருவேன்… அப்புறம் உன் இஷ்டம்…”

என்று சொல்லி கதவருகில் சென்று  நின்றுக்கொண்டான். ( போட்டு கொடுக்க என்னே அவசரம்… கிரேட் முகிலா… )

ருத்ராவோ,

“ஏற்கனேவே காலையில் அத்தையை பேசியதால் வருத்தத்தில் இருக்கும் அப்பா… பின் ஆற்றில்  விழுந்ததும் கோபத்தில் தன்னுடன் பேசவே இல்லையே… இப்போ இந்தாளு வேற… இதை போய் சொன்னா.. என்ன நினைப்பாரு அப்படின்னு நினைத்துக்கூட பார்க்க முடியலையே…”

என்று கையை பிசைந்துக்கொண்டு யோசிக்க முடியாமல் புலம்ப…

முகிலனோ…

“இன்னும் எவ்வளவு நேரம் யோசிப்ப… ஏதாவது ஒன்றை டக்குனு சொன்னா நான் போய் ஆக வேண்டியதை பார்ப்பேன் ல…”

என்று கூற…

அவளும் கோபத்தில்…

“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை… நான் டிசைன் பண்ணி தரேன்… பட் என்னால கோயம்புத்தூர்க்கு எல்லாம் வர முடியாது… வீட்டுல இருந்து தான் பண்ண முடியும்…”

என்று தன் சம்மதத்தை கோபமாகவே கூறினாள்.

“ஓகே… நோ ப்ராப்ளம்..”

என்று கூறி வெளியேறிவிட்டான் கார்முகிலன்.

ருத்ராவிற்கோ புயல் அடித்து ஓய்ந்தாற் போல் இருந்தது.

தான் செய்தது, செய்கிறது, செய்யப்போவது சரியா…? தவறா…? என்று தெரியாமல் தொப்பென்று படுக்கையில் அமர்ந்தவள்…பின்பு பசியை மறந்து சுருண்டு படுத்துக்கொண்டாள்.

இவர்களை பார்த்து நாம் கீழே நடப்பதை விட்டுட்டோமே…

முத்ராவை அழைத்த சீதா… அவள் வந்ததும்…

“முருகன் தாத்தா தோட்டத்துல இருப்பாருடி… அவரு கிட்ட போய் ஒரு பத்து வாழை இலை வெட்டி தர சொல்லு… அப்புறம் கொண்டு வரும்போது துணியில் படாம கொண்டு வா… கரை படிந்தா போகாது… இப்போவே சொல்லிட்டேன்… அப்புறம் என்னை ஒன்னும் சொல்லக்கூடாது…”

என்றவாறு அடுப்பறைக்கு சென்றுவிட்டார்.

முத்ராவும் வாழை இலை எடுத்துவந்து அடுப்பறையில் வைத்துவிட்டு தன் தாயிடம்…

“அம்மா… அக்கா அப்போவே பசிக்குதுன்னு சொன்னா.. நான் வேணா ஏதாவது எடுத்துட்டு போகட்டுமா…?”

என்று கேட்டாள்.

சீதாவும்,

“பாவம்டி அவ… தண்ணீர்ல வேற விழுந்துட்டு வந்திருக்கா.. கீழ வந்தா அவ நல்லா சாப்பிட மாட்டாளே… இரு…”

என்றவாறு ருத்ராவிற்கு பிடித்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கூடையில் வைத்து,

“இந்தா கொண்டு போ… சாப்ட்டுட்டு தூங்க சொல்லு அவளை…”

என்றார்.

“அம்ம்மா…”

என்று மேலும் முத்ரா இழுக்கவும்…

“என்னடி… வேணும் இன்னும்..”

என்றவாறு அனைத்தையும் டைனிங் டேபிளில் எடுத்து வைக்க எல்லாவற்றையும் தயார் படுத்த…

“நானும் அக்கா கூடவே சாப்டுறேன் மா… இன்னொரு பாத்திரத்துல போட்டு தாம்மா…” என்று கெஞ்சினாள்.

அடியே…. ருத்ராக்கு தான் முடியல… உனக்கு என்ன…? நீ நல்லா தான இருக்க… கீழ வந்து சாப்பிடு… இப்போ போய் உங்க அக்காக்கு குடுத்துட்டு வா… என்று விரட்டினார்.

ஆனாலும் முத்ரா அம்மாவிடம் கெஞ்சி, கூத்தாடி, கொஞ்சி, இன்னொரு பாத்திரத்தில் தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு ஓடியே விட்டாள்.

அதற்கு முன்பே முகிலன் தன் பழைய துணியோடு கீழே இறங்கி வந்து… அதை வாசலில் இருக்கும் திண்ணையில் வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.

பின்பு கார்த்திகேயன் மற்றும் காயுவும் வர வழியில் நிறைய செல்பி எடுத்து மெதுவாக வந்து சேர்ந்தனர்.

அனைவரும் வந்ததும்… சீதாவும்…

“சாப்பாடு தயார் ஆகிருச்சி… வாங்க சாப்பிடலாம்”

என்று அனைவரையும் அழைத்து சென்றார்.

அனைவரும் எழுந்து உள்ளே செல்ல… கார்த்திகேயன் ஒரு படி அதிகமாகவே எடுத்து வைத்து டைனிங் டேபிளை அடைந்தான்… பின்னே… வாசனை அவன் மூக்கை வெகுநேரமாக துளைத்து கொண்டிருந்ததே….