VN6
VN6
தன் தங்கை தன்னை அணைத்து தேம்பவும் ருத்ராவிற்கும் அழுகை வந்தது.. ஆனால் அந்நிய ஆடவன் முன் அழ மனமின்றி பயந்து போய் இருக்கும் தங்கையை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
“குட்டிமா.. இங்க பாரு அக்காக்கு ஒன்னும் ஆகலை.. நான் நல்லா தான் இருக்கேன்… இப்படியா சின்ன பிள்ளை மாதிரி அழுவாங்க..?”
என்று முதுகை வருட..
வெகுநாள் கழித்து தன் செல்ல பேரான குட்டிமா வை தமக்கை சொன்னதும் சிறிது சமாதானம் ஆகியவள்… இப்போது விலகி கோபம் பொங்க,
“இனிமேல் கோபப்படுவியா நீ…? ஆத்துல குதிப்பியா நீ…?”
என்று கேட்டுக் கொண்டே சராமாரியாக ருத்ராவின் கைகள் மற்றும் தோள்களில் அடிக்க ஆரம்பித்தாள் முத்ரா.
அவள் குடுத்த அடிகளை சின்ன புன்னகையோடு வாங்கிய ருத்ரா..
“ஏய் போதும்டி வலிக்குது.. இனிமேல் எனக்கு கோபம் வராது சரியா…?”
என்று தன் தங்கையை வழக்கமாக கோபபட்ட பிறகு சொல்லும் சமாதானத்தை சொல்ல.. எப்போதும் இதைக்கூறியதும் அடங்கும் முத்ரா இந்தமுறை அடங்கவில்லை…
“இல்ல நான் இதை நம்ப மாட்டேன்… நீ என் மேல் சத்தியம் பண்ணு இனி கோபப்படமாட்டேன்னு… அப்போ நம்புறேன்”
என்று சரியாக தமக்கையின் பலவீனத்தில் அடிக்க,
ருத்ரா இப்போது மனதிற்குள்
“ஐய்யய்யோ… குட்டிமா இப்போ குட்டிசாத்தான் னா மாறிருச்சே… எப்படி தப்பிக்க”
என்று யோசிக்க… அப்போதுதான் தன் அருகில் இருப்பவனை பார்த்தவள்..
“சரி சரி அத விடு… இங்க பாரு இவங்க தான் என்ன காப்பாத்துனது… இல்லைனா நான் ஆத்தோட போயிருப்பேன்..”
என்று முகிலன் கைகாமித்து கூறினாள் ருத்ரா.
இவ்வளவு நேரம் தன்னை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கான உலகில் இருந்த இருவரையும் வேடிக்கை பார்த்த முகிலன்… அவர்களின் உரையாடல் மூலமாகவே ருத்ரா கோபம் வந்தால், நீரில் குதிப்பாள் என்று ஊகித்தான்.
மனதிற்குள் சிறிது ஆச்சரியமும் அடைந்தான். ஏன்னெனில் அவனிற்கும் இந்த பழக்கம் உண்டு. தொழிலில் துரோகத்தை சந்திக்கும் போதெல்லாம் அவனது அடைக்கலம் நீச்சல் குளமே…
தன்னைப்போல் இன்னொரு உயிர்.. அதுவும் பெண்ணை பார்த்ததும் அவன் உள்ளுக்குள் புன்னகைத்தது என்னமோ நிஜம் தான்.
தன் தமக்கை கூறியதும் தான் அருகில் நிற்கும் ஆடவனையே நிமிர்ந்து பார்த்த முத்ரா.. அவனிடம்
“ரொம்ப ரொம்ப தான்க்ஸ் சார்… நீங்க செஞ்ச உதவிய நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்..”
என்று நன்றி கூறினாள்.
அவனும் அதை சிறிது தலையசைப்போடு அங்கீகரித்தான். ருத்ராவோ,
“இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தவனுக்கு இப்போ என்னாச்சு.. வாயே தொறக்க மாட்டிக்கிறான்”
என்று எண்ணினாள். அவளுக்கெங்கே தெரியும் இவளிடம் தான் தானா வாய் விட்டு பேசியிருக்கான் னு.
இங்கே இப்படி இருக்க.. போனை எடுத்து ஆற்றோரமாக வந்த கார்த்திகேயனும் தூரத்தில் இருந்தே தன் தமையனை பார்த்துவிட்டான். சீக்கிரம் போன் பேசி வைத்துவிட்டு நன்றாக பார்க்க…
அண்ணன் அருகில் 2 பெண்கள் நின்றுக்கொண்டிருக்கவும் ஆச்சரியப்பட்டான்…
“அண்ணா கூட பொண்ணுங்களா… அதுவும் பல வருஷம் கழித்து வந்த ஊருல..”
என்று மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே அவர்கள் நோக்கி நகர…
சப்…சப்…
என்று அவன் முதுகில் அடி விழுந்தது. கூடவே,
“என்ன சொன்ன…? என்ன சொன்ன…? இந்த முஞ்சிக்கு செல்பி ஒரு கேடா வா.. உன் மூஞ்சிய விட என் முஞ்சிக்கு என்னடா குறைச்சல்..”
என்று அவன் தங்கையின் கோபக்குரல் பின்னால் கேட்டது.
வேறு நேரமாக இருந்தால் டா சொன்னதிற்கு இவனது குட்டிப்பிசாசை ஒரு வழி செய்திருப்பான். இப்போது அவனது கவனம் அண்ணனிடம் இருந்ததால்..
“ஏய் காயு… அங்க பாரேன் அண்ணா 2 பொண்ணுங்க கூட பேசிட்டு இருக்காங்க… வா போய் என்னனு பார்ப்போம்..”
என்றவாறு தங்கையையும் அழைத்தான்.
காயுவும் கார்த்தி சொல்லவும் அவன்கூறிய திசையை பார்த்தவள்… அங்கே முத்ராவை பார்த்து விட்டு,
“கார்த்தி உன் போனை தட்டிவிட்டுட்டு போன பொண்ணு அங்க தான் இருக்கா..”
என்று கூற.
தன் தங்கை கூறியதற்கு முன்பே போனை தட்டி விட்ட பொண்ணின் சுடிதாரை நியாபகப்படுத்தியவன்… அதே கடல் நீல கலரில் சுடிதார் அணிந்த பெண் அங்கு நிற்கவும் சந்தேகப்பட்டான்… பின்பு தன் தங்கை வேறு அவள் தான் என்று கூறியதும் உறுதிபடுத்தினான்.
ஆனால் அவன் மனதோ,
“நம்ம அண்ணாவை பார்க்கவா அவ்ளோ வேகமா போனா…? அண்ணாவும் நின்று பேசுறாங்க.. அண்ணாவுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்..?”
என்று யோசித்தது.
அருகில் நெருங்கியதும் தான் கார்த்திக்கும் காயுவுக்கும் அங்கிருக்கும் சூழ்நிலை புரிந்தது.
சர்ட் கசங்கினால் கூட அதை தொடாத கார்முகிலன், இன்று நன்றாக கசங்கிய… சிறிது மண் படிந்த பேண்டையும் சர்ட்டையும் அணிந்தும் முகம் மாறாமல் இயல்பாய் இருப்பதை அதிர்ச்சியோடு கண்டனர்.
எதிர்புறத்தில் ஒரு பெண் சொட்ட சொட்ட நனைந்திருக்க அவளை பற்றி கொண்டு ஓடி வந்த பெண் இருந்தாள்.
இதை பார்த்ததும்..
“ஓ.. இதற்காக தான் அவசரமா ஓடி வந்ததா இந்த பொண்ணு.. அப்போ அண்ணாவ பார்க்க வரலயா”
என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தது யாராக இருக்கும்… சாட்சாத் நம்ம கார்த்தியே தான். ( நீ அடங்க மாட்ட… அப்படியே ஓடி வந்துட்டாலும்… )
காயு தற்போது அண்ணனிடம் அலுவலகத்தில் சிறிது நன்றாக பேசுவதால் விரைந்து முகிலனிடம் சென்று
“அண்ணா என்ன ஆச்சு… ஏன் இப்படி இருக்கீங்க”
என்று வினவ
அவனோ ருத்ராவை சுட்டிக்காட்டி,
“அவங்க தண்ணில விழுந்துட்டாங்க… அதான் கரையேத்திவிட்டேன்… அவங்க அப்பா வரேன்னு சொன்னாங்க… பட் இப்போ தான் தங்கச்சி வந்துட்டாங்கள்ள… நாம போலாம் வா…”
என்றவாறு கிளம்ப… அதற்குள் வேட்டியை மடித்து கட்டியவாறு கருணாகரன் படித்துறைக்கு வந்துவிட்டார்.
முகிலன் கூறியதை கேட்டவர்…
“தம்பி நீங்க தான் என் பொண்ண காப்பாத்துனதா..? ரொம்ப நன்றி தம்பி.. ரொம்ப நன்றி..”
என்று கூறிக்கொண்டே கையை பிடித்தவர்.
ருத்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு
“ஊருக்கு புதுசா தம்பி வீட்டுக்கு வந்துட்டு போங்க… எங்க வீட்டம்மா உங்களை பார்த்தா ரொம்ப சந்தோசபடுவா…”
என்று அழைப்பு விடுத்தார்.
“இல்லை சார்… நாங்க எங்க அம்மா அப்பா கூட வந்திருக்கோம்.. அவங்க தேடுவாங்க நாங்க கிளம்பறோம்..”
என்று நாசுக்காக மறுத்துவிட்டு பெற்றோர்கள் அமர்ந்திருந்த மண்டபத்தை நோக்கி சென்றான் கார்முகிலன்.
பின்னாலேயே தந்தையிடம் கூறிவிட்டு முத்ரா, ருத்ராவை அழைத்துக்கொண்டு தனது வண்டியிலேயே வீட்டை நோக்கி புறப்பட்டாள். அப்போதும்
“உன்னால வண்டில உட்கார்ந்து வர முடியுமா…?”
என்று ஆயிரம் தடவை ருத்ராவிடம் கேட்டு உறுதி படுத்திவிட்டு தான் வண்டியை எடுத்தாள் முத்ரா.
ருத்ராவிற்கு தங்கையை பார்த்ததும் சிறிது தெம்பாக இருந்ததால் அவளும் வண்டியில் செல்ல சம்மதித்தாள். அப்பாவுடன் செல்ல சிறிது பயமாக இருப்பதும் ஒருகாரணம் என்பது அவள் மட்டும் அறிந்த ஒன்று. பின்னே இதுவரை ஒரு வார்த்தை கருணாகரன் இவளிடம் பேசவில்லையே.
இவர்கள் புறப்பட்டதும் கருணாகரனும் புறப்பட ஆயுத்தம் ஆக… அதற்குள் ஊர் பெரியவர்கள் இவரை அழைத்தனர். கருணாகரனும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல… அங்கு ஏற்கனவே மாணிக்கவேல் – அபிராமி தம்பதியினர் முகிலனின் தோற்றத்தை பார்த்து விசாரித்துக்கொண்டு இருந்தனர் அவனும்
“ஒன்னும் இல்ல… வாங்க போகலாம்”
என்று அழைத்துக்கொண்டு இருந்தான்.
அதற்குள் மாணிக்கவேலை அடையாளம் கண்டுக்கொண்ட கருணாகரன்… வேகமாக அவரிடம் சென்று,
“ஐயா நீங்க கார்மேகவண்ணன் ஐயாவோட மகன் தான…?”
என்று கேட்க,
அவரும்
“ஆமாங்கையா நீங்க…?”
என்று கேள்வியாக நிறுத்தினார்.
“நான் பெரியகுளம்ல இருக்குற விவசாயி… 1௦ வருசத்துக்கு முன்னாடி… இங்க வந்த தனியார் சிலர் சாயப்பட்டறை தொழிற்சாலை அமைக்க ஆரம்பித்தாங்க.. நாங்க அது இங்க வந்தால்… விவசாய நிலமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அப்படிங்குறதால…அதை எதிர்த்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்துல புகார் செஞ்சோம்… ஆனா அவங்க கண்டுக்கவே இல்லை. பெரிய ஐயா தான் இந்த விசியத்தை கேள்விப்பட்டு கோவைல இருந்து சென்னைக்கு போய் கோர்ட்ல கேஸ் போட்டு இந்த ஊருக்கு சாயப்பட்டறை தொழிற்சாலைய வரவிடாம பண்ணினாங்க.
இப்போ இந்த ஊரும் ஆறும் இன்னும் பசுமை மாறாம இருக்குதுன்னா… அதுக்கு முக்கிய காரணமே பெரிய ஐயா தான். இப்போ அவங்க இல்லனாலும், அவங்க குடும்பத்துக்கு நாங்க கடமைபட்டிருகிறோம்…”
என்று நன்றியோடு கூறி முடித்தார்.
இதை கேட்டதும் மாணிக்கவேலுக்கு தன் தந்தையை நினைத்து பெருமையாக இருந்தது என்றால், பேத்தி பேரன்களுக்கோ தங்களது தாத்தாவை நினைத்து நெகிழ்ச்சியாக இருந்தது.
கருணாகரனும் அவர்களை தங்கள் வீட்டிற்கு வருமாறு மாணிக்கவேலிடம் அழைப்பு விடுக்க அவரோ “இல்லங்க ஐயா இன்னொரு நாள் வரோம்… இப்போ நாங்க கிளம்புறோம்”
என்று மகனை நினைத்து கூறிமுடித்தார்.
“என்ன ஐயா…? என்ன போய் ஐயா னு கூப்பிட்டு.. என் பேர் கருணாகரன்… நீங்க கருணா னே கூப்பிடுங்க ஐயா…”
என்று கூற மாணிக்கவேலும்,
“அப்போ நீங்களும் என்னை மாணிக்கம் னே கூப்பிடுங்க.. நானும் அப்போ தான் கருணா னு கூப்பிடுவேன்”
என்று கூறினார்.
முதலில் தயங்கிய கருணாகரன்… மாணிக்கவேல் மீண்டும் வற்புறுத்தவே… அவரும் ஒத்துகொண்டார்.
பின்னர் கருணாகரன் அவர்களை உடனே செல்ல விடவில்லை…
“எத்தனை வருடம் கழித்து வந்துருக்கிங்க… ஒரு நேரம் எங்க வீட்டுல சாப்பிட்டு விட்டு தான் போகணும். எங்க பெரிய ஐயாக்காக நான் இதை கூட செய்யலைனா எப்படி…?”
என்று கேட்க…
மாணிக்கவேல் முகிலனை தயக்கத்தோடு ஏறிட்டார். முகிலனும் அந்த கிராமத்து மனிதரின் அன்பான வரவேற்பில் என்ன நினைத்தானோ… கண்களாலேயே தன் தந்தைக்கு சம்மதம் தெரிவித்தான்.
முகிலனின் சம்மதம் கிடைத்ததும்… அவரும் கருணாகரனிடம்,
“அதற்கென்ன கருணா… தாராளமா போவோம்… ஆனா சீக்கிரம் ஊருக்கு போகனும்… வேலையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டோம்… அதனால உடனே கிளம்புற மாதிரி இருக்கும்.. தப்பா எடுத்துக்காதீங்க… இன்னொரு நாள் வந்து ஊரையே சுத்தி பாத்துட்டு தான் போவோம்..”
என்று கூறினார்.
பின்னர் கருணாகரன் சீதாவிற்கு போன் செய்து நடந்ததை கூறி, விருந்து சமைக்க சொல்ல… சீதாவும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்.
கருணாகரன் தனது இருசக்கர வாகனத்தில் முன்னே செல்ல… அனைவரும் அவரது வீட்டிற்கு புறப்பட்டனர். அவரை அந்த டஸ்டர் கார் பின் தொடர்ந்தது.
கருணாகரன் வீட்டில்…
கணவன் சொன்ன வேலைக்காக அடுப்படியில் சமைத்து கொண்டிருந்தாலும்… சீதாவின் மனமோ தனது பெண்ணை காண துடித்தது. அதே நேரம் வாசலில் முத்ராவின் வண்டி சத்தம் கேட்டதும் விரைந்தவர்… பின்னால் இருந்து இறங்கிய தனது மூத்தபெண்ணை உச்சிமுதல் பாதம் வரை ஆராய்ந்தார். பெரிதாக ஒன்னும் ஆகவில்லை என்றதும் பெருமூச்சி விட்டவர்… ருத்ராவிடம்,
“எவ்ளோ நேரமா தான் இப்படி ஈரத்துல இருந்தியோ… பாரு பாதி காய்ந்தே போச்சி.. உடனே போய் துணி மாத்திட்டு வா மா… அம்மா சாம்பிராணி போட்டு தரேன்.. அதுல தலை காயவச்சனா ஜுரம் வராது…”
என்று கூறிக்கொண்டே அவளை உள்ளே அழைத்து சென்று.. சடையை பிரித்து துண்டால் தலையை துவட்ட துவங்கினார்.
பின்னர் ருத்ராவை அவளது அறை இருக்கும் மாடி பகுதிக்கு அனுப்பியவர்… முத்ராவையும் கூடவே துணைக்கு அனுப்பிவிட்டு தனது வேலையை தொடர மகள் கிடைத்த சந்தோசத்துடன் சென்றார்.
சிறிதுநேரத்தில் அந்த டஸ்டர் கார் அவர்களின் வீட்டின் முன்னால் கம்பீரமாக நின்றது.