VNE 55 (2)

VNE 55 (2)

பைரவி கொண்டு வந்த காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது. காலை, மதியம் என்று இரண்டு நேரமும் பட்டினி கிடந்தது வேறு… வெகுவாக சோர்ந்து போயிருந்தாள். கிருஷ்ணம்மாள் இருந்து இருந்தால் கூட சற்று ஆறுதலாக இருந்திருக்கும். அவள் தவறே செய்தால் கூட தன்னை விட்டுக் கொடுக்காதவர் தன்னுடைய பாட்டி மட்டும் தானே. அவர் தன்னை தலை சாய்த்து கோதி விட்டு, “என்னடா ராசாத்தி?” என்று கேட்கும் போது சோர்வெல்லாம் பறந்திருக்கும். அவரும் மகளை பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டிருந்தார்.

அப்போது வரை ஷ்யாம் ஒருமுறை கூட அழைக்கவில்லை. வேலை அதிகமாக இருக்கலாம்… கார்த்திக்குடன் சேர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தல் விஷயமாக அலைந்து கொண்டிருக்கிறான் என்று பிருந்தா சொல்லித்தான் தெரிந்தது. இன்று கார்த்திக்கின் குழு மனுத் தாக்கல் செய்ய போவதாக அவள் தெரிவித்து இருந்தாள். கார்த்திக்கின் பின்னால் இருப்பவன் ஷ்யாம். கார்த்திக்கை கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றியேயாக வேண்டும் என்று கூறினானாம். பிருந்தா பூரிப்பாக சொன்னதை உணர்வே இல்லாமல் கேட்டுக் கொண்டாள். அதையும் கூட அவன் சொல்லவில்லை. ஆனால் சொல்வதற்கு இவளும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

கேட்ட கேள்வியிலிருந்த தவறு அவன் போன பின் தான் உரைத்தது. அது போல நேரடியாக கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் மனதை அழுத்திக் கொண்டிருப்பதை யாரிடம் கொட்டுவது? யாரிடமும் வெளிப்படையாக கணவனை பற்றி பேசிவிட முடியாது. அதிலும் இவனை போன்றவனை எப்படி பேசுவது? தானே விட்டுக்கொடுப்பது போல ஆகிவிடாதா? யாரிடமும் பேச முடியாது என்ற நிலையில் அவனிடம் தானே கொட்ட முடியும்?

அவனது கோபமும் இன்னமும் மனதை அழுத்த, தலையை பிடித்துக் கொண்டாள்.

தந்தையின் முகத்தை பார்க்கும் போதே மனதுக்குள் எழுந்த கேவலை மென்று விழுங்கினாள்.

அவரே உடல்நிலை சரியில்லாதவர். அவரிடம் அழுது, அவர் என்னவோ ஏதோவென்று நினைத்துக் கொண்டு கவலையில் ஆழ வேண்டுமா என்று அவளது மனது கேள்வி கேட்டது.

பைரவி அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டுதானிருந்தார். புதிதாக திருமணமான பெண்ணுக்கான லக்ஷணம் அவளுடைய முகத்திலேயே இல்லை. வெறுமையாக, இறுக்கமாக, உணர்வுகளை வெளிப்படுத்திவிட கூடாது என்பதில் வெகு ஜாக்கிரதையாக அவள் இருப்பது அவருக்கு புரிந்தது.

“ஏதாவது பிரச்சனைன்னு உன்கிட்ட ஏதாவது சொன்னாளா பிருந்தா?” சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு பைரவி கொடுத்த காபியை சிப்பியபடி அவரிடம் வளவளத்துக் கொண்டிருந்தவளிடம் அவர் கேட்க,

“இல்ல த்தை… அப்படியொண்ணும் அவ சொல்லலை… ஆனா ஒரு மாதிரியேத்தான் இருக்கா… ஹனிமூன் போகலையாடின்னு கேட்டேன்… அது ஒண்ணுதான் குறைச்சலான்னு என்கிட்டயே கேக்கறா… ஏன்டின்னு கேட்டா தலைவலின்னு மழுப்பறா… அவங்க கிட்ட என்னன்னு கேட்டேன்… நான் பார்த்துக்கறேன் விடுங்கறாங்க… ஆனா மாமா கிட்ட எதுவும் சொல்லாதீங்க…” என்று முழுவதுமாக கொட்டி தீர்த்தவளை சற்று கவலையாக பார்த்தார் பைரவி.

“என்ன பிருந்தா இப்படி சொல்ற? ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனையா? ஆனா ஷ்யாம் தம்பியை பார்த்தாலும் அப்படியொண்ணும் தெரியலையே…” என்று கேட்க,

“அண்ணன் கேஷுவலா இருக்க மாதிரி தான் தெரியுது… இந்த மேடம் தான் என்னவோ மாதிரி இருக்கா… விடுங்க தானா சரியாகி விடுவா… இல்லைன்னா அண்ணன் பார்த்துக்குவார்…” என்று கூற, தாய் மனதுக்கு புரிந்தது. இது தானாக சரியாகக் கூடியது அல்ல என்று.

கண்டிப்பாக கார்த்திக்கிடம் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவர், மஹாவை நோக்கி போனார்.

“மதியம் சாப்பிட்டியா மஹா?” என்று பைரவி கேட்டார். அவளது ஒய்ந்து போன தோற்றம் அவரை என்னவோ செய்தது.

“ம்ம்ம்…” என்று மட்டும் கூற, பிருந்தா சமையலறையில் இருந்து சப்தமாக கூறினாள்.

“இல்லத்த… என்னவோ விரதம்ன்னு அவ சாப்பிடவே இல்ல…” எனவும், பைரவி மஹாவை ஒரு மாதிரியாக பார்த்தார்.

“என்ன மஹா இது? புதுசா விரதமெல்லாம்? உன்னால பசி தாங்க முடியாதே?” என்று கேட்க,

“நீங்க வேற… நானும் அதை தான் நெனச்சேன்… ஆனா தில்லா சாப்பிடாம இருக்கா… இவ சாப்பிடாம எனக்கும் சாப்பிடவே மூட் இல்லாம, இப்ப வந்து தான் காபி குடிச்சேன்…” எனவும்,

“லூசாடி நீ? உன்னை யார் சாப்பிட வேண்டாம்ன்னு சொன்னது?” என்று பிருந்தாவை திட்டவும்,

“மஹா… பிருந்தா உனக்கு அண்ணியாக போறா… இந்த வாடி போடி எல்லாம் விட்டுடு…” என்று சற்று கறாராக கூறவும், மஹா தன் தாயை வெறித்து பார்த்தாள்.

எப்படி இருந்தாலும் இது அவர்களுடைய வீடு. பிருந்தா தான் அவர்களுடைய மருமகளாக போகிறவள். தன் தாயும் கூட இப்போது அன்னியமாக தோன்ற ஆரம்பித்து இருந்தது மஹாவுக்கு.

ஆனால் இந்த மனநிலை ஒவ்வொரு பெண்ணும் சந்திப்பது தான். போன வீட்டிலும் ஒன்ற முடியாமல், பிறந்த வீட்டிலும் அந்நியப்படும் அந்த நேரத்தை எல்லோராலும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. இருக்கும் குழப்பத்தோடு இந்த குழப்பமும் சேர்ந்து கொள்ள, மஹாவின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் கோர்த்தது.

“ஏய்… என்னடி? ஏன் அழற?” ஒன்று போல பதறிக் கொண்டு வந்தார்கள் பைரவியும் பிருந்தாவும்.

“உனக்கு இப்ப பிருந்தா தானே முக்கியமா போய்ட்டா… நான் இப்ப யாரோதானே… போ.. உன் மருமகளையே கொஞ்சு… கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே இப்படி பண்ற… ஆகிட்டா என்னையெல்லாம் கண்டுக்கக் கூட மாட்ட…” என்று சிறு பிள்ளையாக அழவும், பிருந்தாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஏய் லூசு… என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி? மம்மி என்ன சொன்னாங்க? அண்ணின்னு தானே? ஏன்டி என்னை அண்ணின்னு சொல்ல மாட்டியா?” என்று கிண்டலாக கேட்க, அவளை முறைத்தாள்.

“ஏன் பாப்பா… கல்யாணத்துக்கு அப்புறமும் நீ இப்படியே கூப்பிட்டா அண்ணன் கோவுச்சுக்க மாட்டானா? பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா? இப்ப நீ பொறுப்பான நிலைல இருக்க… அதனால தான்டா சொன்னேன்…” என்று பைரவி கூறவும், சற்றாக சமாதானமடைந்தவள், தந்தையை நெருங்கி அமர்ந்து கொள்ள, அவள் முறுக்கிக் கொண்டதை பார்த்தவர் புன்னகைத்தார்.

“ஏய்… மாமியாரும் மருமகளும் சேர்ந்துகிட்டு என் புள்ளைய கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா? நான் இருக்கேனாக்கும்…” என்று அவளை அணைத்துக் கொள்ள,

“ப்பா… எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் குடுமிய பிடிச்சுக்குவாங்க… அப்ப நாம பார்த்துக்கலாம்…” என்று மஹா சிரிக்க,

“ஆமா… எப்படி இருந்தாலும் மாமியார் மாமியார் தான்… மருமக மருமக தான்..” என்று இவரும் சிரிக்க, பைரவியும் பிருந்தாவும் மேல் பார்வையாக பார்த்துக் கொண்டனர்.

“நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்…” என்று முருகானந்தத்தின் தலையில் நங்கென்று கொட்டு வைத்தவர், உள்ளே போக, மற்ற இருவருக்கும் அடக்க முடியாத சிரிப்பு.

இருவரையும் பார்த்து, “ஏன்… நல்லாதானே போயிட்டு இருந்துது… ஏன் இப்படி?” என்று பாவமாக கேட்க,

“அப்பா மண்டைல கொண்டை…” என்று கிண்டலாக சிரித்தாள் மஹா. வாயை மூடிக்கொண்டு சிரித்தாள் பிருந்தா. என்ன இருந்தாலும் மாமனாராகிற்றே!

“எல்லாம் நேரம் தான்…” என்று சிரித்தார்.

அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை மாற, பைரவி உணவு ஊட்ட, பிருந்தாவுடன் கேலி பேசிக்கொண்டு, தந்தையை கலாய்த்துக் கொண்டு கழிந்தது நேரம்.

“சரி மஹா… நான் கிளம்பறேன்…” என்றாள் பிருந்தா. மணி ஏழாகி இருந்தது. தந்தை வர எப்படி இருந்தாலும் பத்து மணியை தாண்டி விடும். வீட்டில் இருந்தால் தனியாக இருக்க நேரிடும் என்பதால் இப்போதெல்லாம் இங்கு தான் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள். அதனாலேயே பைரவிக்கு அவசரம், கார்த்திக் திருமணத்தையும் விரைவில் முடித்து விட வேண்டுமென்று.

ஆனால் அவனோ, ‘லவ் பண்றேன் ஆனா இப்ப கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்று முரண்டிக் கொண்டிருந்தான்.

“அடேய் பையா… இதென்னடா இப்படியொரு ஸ்டேட்மென்ட்” என்றும் கூட இருவருமாக கேட்டு விட்டனர்.

“பிருந்தா படிச்சு முடிக்கட்டும்…” என்று பிடிவாதமாக கூற,

“படிக்கறதுன்னா இன்னும் எம்டி அப்புறம் என்னன்னவோ படிக்கலாம்… ஆனா கல்யாணம் இப்பத்தான பண்ண முடியும்?” என்று வேறு பிருந்தாவின் தந்தையே கேட்டு விட்டாலும், அவனுக்கு என்னவோ அதில் ஒப்ப முடியவில்லை. எம்பிபிஎஸ் ஆவது முடிக்கட்டும் என்பது அவனது பிடிவாதம்.

முதலில் முகம் கொடுக்காமல் இருந்த பிருந்தாவும், இப்போது ஒருவாறாக சமாதானம் ஆகிக் கொண்டாள்.

“என் வண்டியை நீ எடுத்துட்டு போய்டு பிருந்தா… காலைல நான் அவங்க கூட வந்துக்கறேன்…” என்று கூறினாள் மஹா.

“ம்ம்ம்… ஓகே டி…” என்ற பிருந்தா, எதேச்சையாக தொலைக்காட்சியை பார்க்க, அதில் அப்போதுதான் தயாரிப்பாளர் சங்க தேர்தலைப் பற்றி கூறிக்கொண்டிருக்க,

“ஏய்… உங்க அண்ணாவ பாரேன்…” புன்னகையோடு பரபரப்பானாள் பிருந்தா.

அவசரமாக தொலைகாட்சியை பார்த்தாள் மஹா. கார்த்திக் மனுதாக்கல் செய்யும் காட்சி.

“ஏய்… ஷ்யாம் அண்ணாவும் இருக்காங்க…” உடன் நின்றிருந்தான் ஷ்யாம். கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக! மற்ற அத்தனை பேரும் மனுதாக்கலில் பரபரப்பாக இருந்தனர்.

பெருமையாக பார்த்தாள் மஹா.

“அத்தை இங்க வாங்க…” உள்ளிருந்தவரை அவசரமாக அழைத்தாள். பதறியபடி வந்தவர், கார்த்திக்கையும் ஷ்யாமையும் சந்தோஷமாக பார்க்க,

“மாப்பிள்ளையால தான் கார்த்திக் இந்தளவு இருக்கான் மஹா… இல்லன்னா இந்த பீல்டே வேண்டாம்ன்னு ஓடின பையன் அவன்…” என்று பூரிப்பாக கூறிக் கொண்டே தொலைகாட்சியை பார்த்தார். அது என்னவோ உண்மைதான் என்றாலும் ஷ்யாமுடைய நோக்கம் என்னவென்று யாருக்கு தெரியுமென்று தான் தோன்றியது. ஆனால் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

“ஓடினதே உன் மாப்பிள்ளையால தான…” சிரித்துக் கொண்டே சொன்ன மஹாவை கடுமையாக பார்த்தார் பைரவி.

“பழசை பேசி இப்ப என்னவாக போகுது மஹா? இப்படித்தான் அங்கயும் பேசறியா?” என்றார் கோபமாக. ஒரு தாயாக அது அவரது தவிப்பு. எப்போதும் போல இந்த பெண் வாயை விட்டுவிட கூடாதே என்று இருந்தது அவருக்கு. ஆனால் வாயை விட்டு தானும் புண்ணாகி, அவனையும் புண்ணாக்கிக் கொண்டுதானிருக்கிறாள் என்பதை யார் சொல்ல?

“என்ன வந்த புள்ளைக்கிட்ட உன் கோபத்தை காட்ற பைரவி?” என்று மஹாவை தன்னோடு அணைத்துக் கொண்டார் முருகானந்தம்.

“ம்ம்ம்… நல்லா கொஞ்சுங்க… அங்க என்ன புள்ளைய வளர்த்து வெச்சு இருக்காங்கன்னு நம்மளை பாட்டு பாடினா நல்லா இருக்கும்…”

“எதுக்கு பாடப்போறாங்க? என் பொண்ணு கிடைக்க அவங்க கொடுத்து வெச்சு இருக்கனும்ல…” எப்போதும் போல பெண்ணை பற்றி பெருமை பேச, பைரவி முறைத்தார்.

“பொண்ணு மேல பாசம் இருக்க வேண்டியதுதான்… ஆனா அது வெறியாகிட கூடாது மாமா…” நிதர்சனத்தை பைரவி எடுத்துக் கூற,

“அப்படி கிடையாது பைரவி… புள்ளையே வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கு… அதுகிட்டப் போய் இப்ப நியாயம் பேசிட்டு இருக்க? இன்னொரு வீட்டுக்கு போய்ட்ட பிள்ளை… அதை நாம தான கொண்டாடனும்?” என்று சிறிய குரலில் கேட்க, பைரவி எந்த பதிலும் கூறவில்லை.

தொலைகாட்சியில் காட்சி மாறியிருந்தது. தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அனைவருமாக பேசிக் கொண்டிருப்பதை போல காட்ட, கார்த்திக் ஷ்யாமுக்கு அருகில் சௌஜன்யா!

ஷ்யாம் எதையோ கூற, அவனது இடையை வளைத்துப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்தாள் சௌஜன்யா. அதை கேமராவும் ஜூம் செய்து கொண்டிருந்தது.

பார்த்துக் கொண்டிருந்த பைரவி திடுக்கிட, பிருந்தாவும் அதிர்ந்து மகாவை பார்க்க, அவள் தொலைகாட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவ என்னடி வெட்கம் கெட்டவளா இருக்கா? ஒரு ஆம்பிளை இடுப்பைப் புடிச்சுக்கிட்டுத்தான் சிரிப்பாளாமாம்?” என்று கடுகடுத்தவர், “இந்த மாப்பிளை தம்பிதான் தள்ளி நின்னா என்ன?” என்று கேட்க, அருகில் நிற்பதை பார்த்தற்க்கே இப்படியா என்று நகைக்க தோன்றியது மஹாவுக்கு.

“இந்த கார்த்திக் பக்கத்துல நின்னுட்டு என்ன பண்றான்?” எரிச்சலாக கேட்ட பைரவியை ஒரு மார்கமாக பார்த்தார் முருகானந்தம். ஷ்யாமை பற்றி ஓரளவு அறிந்தவர் அவர். இந்த விஷயத்தில் தான் ஏதாவது பேசினால் மஹாவின் மனது காயப்பட்டு விடும் என்பதனால் அமைதி காக்க,

“ஏய் மஹா… உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி வை… இந்த மாதிரி பொம்பிளைங்களை எல்லாம் பக்கத்துல சேர்க்கக் கூடாதுன்னு…” என்று பட்டாசாக பொறிந்தவரை பிருந்தா, “அத்தை…” என்றழைத்து மகாவை கண்களால் காட்டி அடக்கினாள்.

தொலைகாட்சியை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மஹா, உணர்வற்று இருந்தது அவளது பார்வை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!