VNE 55(1)

VNE 55(1)

55

சோர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் மஹா. மருத்துவமனையிலிருந்து நேராக பைரவியை பார்க்க வந்திருந்தாள், பிருந்தாவுடன்.

அதீத சோர்வு… உடலிலும் மனதிலும்!

உறக்கமற்ற இரவாக கழிந்த முந்தைய இரவு, வெகுவாக கசப்பை விதைத்திருந்தது. அதிகாலையிலேயே ஷ்யாம் கிளம்பியிருந்தான், உத்தண்டிக்கு!

பெரிதாக சொல்லவுமில்லை. மகேந்திரன் வருவதற்கு நேரமிருந்ததால் அவனுக்கு காலை உணவை தான் தயாரிப்பதாக இவள் கூற, அவளது முகத்தையும் பார்க்காமல் மறுத்திருந்தான்.

“வேணாம் மஹா… அங்க வாட்ச்மேனை விட்டு வாங்கிட்டு வர சொல்லிக்கறேன்…” என்று கிளம்ப பார்த்தவனும் தான் இரவு உறங்கவில்லை என்பது தெரியும்.

“சரி… அட்லீஸ்ட் காபியாவது… ப்ளீஸ்…” என்று கெஞ்சியவளை மேலும் கெஞ்ச வைக்க அவன் விரும்பவில்லை. மனம் காயப்பட்டு இருக்கிறது தான். ஆனால் அதன் காரணம் என்ன? அவன் தானே? அவனை போலவே அவனது மனைவியும் காயப்படுகிறாள். வலிக்க வலிக்க காயப்படுகிறாள். அத்தனை காதலை அவன் மேல் வைத்ததை தவிர மஹா செய்த தவறு என்ன?

திருமணமானவுடன் அவள் அத்தனையும் மறந்து விட்டு தன்னோடு ஒன்றி விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அது அவனுக்கும் தெரியும்… திருமணத்திற்கு முன்பே ஒரு மாதிரியாக தன்னுடைய மனதை தயார்படுத்தியும் வைத்திருந்தான்.

ஆனால் அவையெல்லாம் அவனது மனைவியை தன்னருகில் காணும் வரை தான்… அருகில் அவளை காணும் போதே, அவள் வேண்டும் என்று தவிக்கும் மனதை என்ன செய்து அடக்குவது என்று தெரியவில்லை. அவனது கட்டுபாட்டை பற்றி அவன் அறிவான். வேண்டும் என்றால் வேண்டும்… வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அப்படிதான் அனைத்தையும் ஒதுக்கினான். வேண்டாமென்று தீர்க்கமான முடிவோடு இருக்கிறான். அது அவளுக்கு தான் செய்யும் மரியாதை அல்ல… இருவரது உறவுக்கும் தான் கொடுக்கும் செய்து கொடுத்திருக்கும் சத்தியம்.

அந்த உறுதியை அவன் கடைசி வரை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீர்க்கத்தோடு தான் அவளது கழுத்தில் பொன் தாலியை அவன் அணிவித்ததும். ஆனால் அவளை தவிர்த்து, வெளியில் அவனது அணுகுமுறையை அவனால் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள முடியாது… மாற்றவே முடியாது… கொட்டினால் தான் குளவி… வெட்டினால் தான் வீச்சரிவாள்…

சரி தவறு என்பதற்கான அவனது கோட்பாடுகள் வேறு… அது சமூக விழுமியங்களிலிருந்து மாறுபட்டது. அதன் சாட்சி, அவனது அறிவு மட்டுமே… வேறு எதற்கும் கட்டுப்படாதது அந்த கோட்பாடுகள்.

இப்போது மகாவை அருகிலிருந்து பார்க்கும் போது அறிவு கண்டிப்பாக வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. அவளோடு முழுவதுமாக ஆழ்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் அவனது மனதுக்கும், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவனது மனையாளின் மனதுக்குமான போராட்டம், என்ன சொல்வது? காயம் இருவருக்கும் பொதுவானது அல்லவா!

அவசரமாக காபியை கலந்து கொண்டு வந்தாள் மஹா. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. நிறைய அழுதிருப்பாள் போல… அவளால் அழ முடிகிறது… பெண்களுக்கு அழுவதற்கான லக்ஸுரி இருக்கிறது… ஏனென்றால் அவர்கள் பெண்கள்… ஆண்களுக்கு அந்த லக்ஸுரி இல்லை… மறுக்கப்படுகிறது… நீ ஆண் அழக்கூடாது என்று சிறு வயது முதல் போதித்து வளர்க்கப்படுகிறான். ஏன்? காயம் இருவருக்கும் ஒன்று என்றால் வலியும் ஒன்றுதானே? அந்த வலி தரும் கண்ணீர்? அது மட்டும் எப்படி வேறாக முடியும்?

ஆண் என்பவன், தன்னுடைய வேதனைகளை வெளிக்காட்டக் கூடாது, உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது, வலிகளை பற்றி பேசக்கூடாது, முக்கியமாக அழவே கூடாது என்றெல்லாம் சமூகத்தின் மூளையில் பதிந்து வைத்தது யார்?

அழ தோன்றினால் அழ வேண்டும்… இப்போது அவனுக்கு அழ தோன்றியது… மஹாவின் வேதனைகளை பார்க்கும் போது அழ தோன்றியது.  ஆனால் அழ முடியாது.

கடந்து வந்த அவமானங்கள் அது போல அல்லவா!

வெளிப்படையாக யாரிடமும் பேச முடியாத அவமானங்கள்… உயிராக நினைத்தவளிடமே தள்ளி நிற்க செய்த அவமானங்கள்… சற்று அவகாசம் கேட்டவளை, வற்புறுத்தி தன்னுடைய சுயநலத்துக்காக, அவமானங்களை மறப்பதற்காக திருமணம் செய்து கொண்டு, அவளையும் காயப்படுத்துவதின் வேதனையையும் உள்ளுக்குள் அவன் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிவாளா?

கண்டிப்பாக மாட்டாள்… ஆனால் அத்தனை வேதனையும் உண்மை… அவளது கண்களில் கண்ணீரை கண்ட போது அதற்கு காரணமானவனை அழித்து விட வேண்டும் என்ற கோபம் வந்தது… ஆனால் இப்போது அதன் காரணமே தானாகி போனதின் வேதனையை யாரிடமுரைக்க?

அவனையும் அறியாத பெருமூச்சு… காபியை வாங்கிக் கொண்டவன், அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்… முகம் வீங்கி சிறுத்து இருந்தது. மனைவியின் முகத்தில் கவலைக் கோடுகள் தென்படுமானால், அது கணவனால் மட்டுமே அல்லவா!

தான் கையாலாகாதவன் என்று உரைக்கிறதா அந்த கவலைக் கோடுகள்?

இன்னமும் முக்கால் பேண்ட்டில் தான் இருந்தாள்.

தலகுப்பாவில் அவன் கண்ட மகா இப்போது நினைவுக்கு வந்தாள். அப்போதும் இதுபோலத்தான் தான் வாங்கிக் கொடுத்த த்ரீ போர்த், டிஷர்ட்டில், தலை குளித்து அப்படியே முடியை வழிய விட்டு வந்தவளை பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. கண்கள் திரும்ப திரும்ப அவளையே சரணடைந்து இருந்தது.

அப்போது அவள் முகத்தில் இருந்த அப்பாவித்தனமும், தெளிவும், தைரியமும், துணிச்சலும் நிச்சயமாக இப்போது இல்லை. அத்தனை தெளிவானவளை தன்னுடைய காதல் இந்தளவுக்கு காயப்படுத்த வேண்டுமா?

வலது கையில் காபி கோப்பையை வைத்துக் கொண்டு, இடது கையை அவளை நோக்கி நீட்டினான், வாவென்று கண்களால் அழைத்தபடி!

மூக்கு சிவந்து விடைக்க, அவனது முகத்தை நேராக பார்க்காமல், தலை குனிந்தபடி, அவனது கையை பிடித்தவள், அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.

“இன்னைக்கு வேலை இருக்கு மஹா… நைட் வர நேரமாகிடும்… வேணும்னா நீ பெசன்ட் நகர் போயேன்! நானும் கார்த்திக்கும் வேலை முடிச்சுட்டு அங்க வந்துடறோம்… அங்க இருந்து உன்னை பிக் அப் பண்ணிக்கறேன்….” என்றவனுக்கு பதில் கொடுக்கும் மனநிலை அவளுக்கு இல்லை.

“ம்ம்ம்… ஆஸ் யூ விஷ்…” என்று கூற,

“நாளைக்கு ஈவினிங் மோஸ்ட் ப்ராபப்லி நான் ப்ரீயாத்தான் இருப்பேன்… வெளிய எங்கயாவது போலாமா?” என்று கேட்க, என்ன வேலையென்று கேட்கவில்லை அவள்.

“ம்ம்ம்ம்… ஆஸ் யூ விஷ்…” என்று மெல்லிய குரலில் கூற,

“எங்க போலாம் சொல்லு…” என்றான், காபியை சிப்பியபடியே!

“ஆஸ் யூ விஷ்…” என்றவளை திரும்பிப் பார்த்தான்.

“உனக்கு எங்க போகணும்?” என்று கேட்க,

“ஆஸ் யூ விஷ்…” என்றாள். அவள் தன்னுடைய நினைவிலேயே இல்லை என்பது புரிந்தது.

“என்னோட விஷ் படி தான் எல்லாம் நடக்குதா மஹா?” என்று சற்று புன்னகையோடு கூறியவன், “அதை பற்றியெல்லாம் நான் நினைக்கக் கூட இல்லடா… சியர் அப்… நார்மலாகு…” என்று அவளை சமாதானப்படுத்த முயல, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்களில் கண்ணீர்!

“உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா ஷ்யாம்?” என்று கேட்க, அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

உள்ளுக்குள் டன் டன் னாக ஏமாற்றம் இருக்கிறது தான். ஆனால் அவளது கண்ணீரின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையை அவனால் வரவேற்க முடியவில்லை.

“ப்ச்… அதை விடு… லைஃப்ல நமக்கு இன்னமும் எவ்வளவோ காலம் இருக்கு… நமக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கு… அதை பார்க்கலாம் மஹா… ஒரு நாள் உன்னால என்னை ஏத்துக்க முடியும்ங்கற நம்பிக்கை இருக்கு…” அவளது கழுத்தில் கையை போட்டு, தன்னோடு சேர்த்து அணைத்தபடி அவன் கூற, அவளது முகம் இன்னமும் குழப்பத்தை சுமக்க ஆரம்பித்தது.

“எனக்கு அந்த நம்பிக்கையே வர மாட்டேங்குதே…” என்றவளின் குரலில் அத்தனை நிராசை!

“வரும்… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…”

“எனக்கு இல்லையே…” என்றவளின் கண்களில் அத்தனை வலி. அவளது மனதின் வலி!

“சரி… அதனால என்னடா? இதெல்லாம் ஜஸ்ட் பார்ட் ஆப் லைப் தானே தவிர, இதுவே லைப் கிடையாது…” என்று முடிந்தவரையில் தன்னைத்தானே சமாதானமும் செய்து கொண்டு, அவளுக்குமாக கூற, அவளது கண்களில் கலக்கம்!

இன்னும் என்ன என்று ஷ்யாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தலை குனிந்தவள், தயங்க,

“என்ன மஹா?” என்று இவன் கேட்க,

“இல்ல…. அதாவது…” என்று இழுக்க,

“சொல்லு…” என்றான் ஷ்யாம்.

“ம்ம்ம்… அதாவது… பழைய லைஃப்க்கு போக எவ்வளவு நேரமாகிட போகுதுன்னு கேட்டியே… நான் இப்படியே…. இருந்தா… அப்படி…” என்று தயங்கியபடி கூறியவள், சற்று நிறுத்தி, முகத்தை மூடிக் கொண்டாள். கையால் முகத்தை தாங்கியபடி! அவளையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அதன் பின், சற்று நிதானமானவள், “விட்டுட்டு போயிடுவியா?” என்றவளின் கண்களில் கண்ணீர்.

அந்த நொடியில் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. தன்னுடைய காதலை இப்படிக் கூட சந்தேகப்பட இடமுண்டா என்று தான் தோன்றியது. தான் அவளிடம் வெளிப்படுத்திய முறையில் தவறு நேர்ந்து விட்டதா? நோக்கமில்லாமல் கோபத்தில் சொன்ன வார்த்தைகளின் பிரதிபலிப்பு.

மனதை வாள் கொண்டு அறுப்பது போல தோன்றியது…

அதற்கு மேலும் அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. விளக்கம் கொடுத்து தன்னை நிலை நிறுத்தவும் பிடிக்கவில்லை. மெளனமாக எழுந்தவன், அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டான்.

அவளிடம் இன்னமும் ஒரு வார்த்தை பேசினாலும் வெடித்து விடும் மனநிலையில் இருந்தான்.

“ஷ்யாம்…” என்று அழைக்க காதிலேயே வாங்காமல் வெளியேறியவன், அதே வேகத்தில் காரை ஸ்டார்ட் செய்து சீறினான். அவனது கோபமெல்லாம் வேகமானது.

கண்ணீரோடு அவன் போன திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.

****

பிருந்தா பைரவியுடன் சமையலறையில் பேசிக்கொண்டே ஏதோ செய்து கொண்டிருந்தாள் போல… திருமண வேலைகள் எல்லாம் முடிந்த பின் அவளும் இப்போதுதான் அங்கு வந்திருந்தாள். பைரவிக்கும் அவளுக்கும் நன்றாகவே ஒத்துப் போனது. கார்த்திக்கின் காதல் தெரியும் முன்னர் அவளிடம் சற்று ஒதுங்கியே இருப்பார் பைரவி. வீட்டில் கார்த்திக் இருப்பதால் வயது பெண்கள் வருவதை ஊக்குவிக்க கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவர் அவர்.

இப்போது இருவரும், இப்படியும் இருக்க முடியுமா என்ற அளவில் ஈஷிக் கொண்டிருந்தனர். அதை முருகானந்தம் அவ்வப்போது கிண்டலடிப்பதும் உண்டு.

இப்போதும், “மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டாங்கப்பா… இனிமே நமக்கு வேலை இல்ல…” என்று கிண்டலாக கூறியவர், சோபாவில் அமர்ந்திருந்த மகளின் அருகில் அமர்ந்து கொண்டார்.

“என்னடா கண்ணா… ஒரு மாதிரியா இருக்க?” அவளது தலையை தடவிக் கொண்டே அவர் கேட்க,

“காலைல இருந்தே அப்படித்தான் இருக்கா மாமா… தலைவலியாம்…” சமையலறையிலிருந்து பிருந்தா குரல் கொடுக்க,

“அப்படியாடா லட்டு? ஒத்தை தலைவலி ஆரம்பமாகிடுச்சா?” என்று கேட்க, மெளனமாக அவரை பார்த்துக் கொண்டிருந்தவள், தலையாட்டி,

“ஆமாப்பா… மாத்திரை போட்டும் கேக்கலை…” என்றாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!