“ஓகே டாக்டர்…” என்றவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவள் இன்னமும் படித்து முடிக்கவில்லை. ஜூனியர் எனும் போது, அத்தனை பெரிய மருத்துவர் தன்னிடம் ரிப்போர்ட் செய்வது போல சொல்வதை நெளிந்து கொண்டே கேட்டுக் கொண்டாள். ஆனால் வேறு வழியில்லை. பழகித்தானாக வேண்டும்.
அந்த மருத்துவர் சென்று விட, “என்னவா வேலை பார்த்தேங்க?” என்று கேட்டான் விஜி. மஹா நிமிர்ந்து பார்த்தாள்.
“அவருக்கு எல்லாமே நீங்களாத்தான் இருந்தீங்க… சென்னைல அவரோட ரெப்ரசெண்டேடிவ் நீங்க தான்…” எனவும்,
“ஓஓ…” என்று கேட்டுக் கொண்டான். அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. “அப்படீன்னா அவர் இப்ப வருத்தப்படறதுல அர்த்தம் இருக்கு…” என்றவனை விசித்திரமாக பார்த்தாள். அவன் வருத்தப்படுகிறான் தான், இவனை விட்டு வைத்ததற்கு என்று நினைத்துக் கொண்டாள்.
“ஓகே… நீங்க ரெஸ்ட் எடுங்க… டெஸ்ட் எடுக்க ஷிப்ட் பண்ணுவாங்க… கண்டிப்பா உங்களுக்கு குணமாகிடும்…” என்று லேசாக புன்னகைத்தவளை ஆழமாக பார்த்தான்.
அவளது புன்னகை புதிதாக பூத்த மலரை போல இருந்தது, அத்தனை மலர்ச்சியாக, குளிர்ச்சியாக இருந்தது. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல!
“மறுபடியும் எப்ப வருவீங்க?” என்று கேட்ட விஜியை பார்க்க தயக்கமாக இருந்தது.
“நாளைக்கு உங்க வீட்ல இருந்து வந்துடுவாங்க… உங்களை அவங்க டேக் கேர் பண்ணிக்குவாங்க விஜி…” என்று பதில் கூறியவளை நேரிட்டு பார்த்தான்.
“நீங்க மறுபடியும் எப்ப வருவீங்க?”
“எனக்கு காலேஜ் இருக்கும்… வர்றது கஷ்டம்…”
“எனக்கு பழசு நினைவுக்கு வந்துட்டா வருவீங்களா?” என்று கேட்டவனை பராவிருத்தமாய் பார்த்தாள். அவனுக்கு நினைவு வந்துவிட்டால் இங்கே நிற்பானா என்ன? கற்பனைக்கும் ஆகவில்லை.
“முடிஞ்சாச்சா?” என்று கேட்க, அண்ணாந்து பார்த்தாள் மஹா!
“ம்ம்ம்… ஆச்சுடா…” என்றவள், அங்கிருந்த மற்ற மருத்துவர்களிடம் கூறிக் கொண்டு, அவனோடு கிளம்ப எத்தனிக்க,
“ஐ வில் பி வெய்டிங் மஹா…” என்றான் விஜி.
முகம் இறுக, திகைத்தான் ஷ்யாம்.
அன்றொருநாள் மகாவிடம் தான் கூறிய அதே வார்த்தை. அவளது சம்மதம் வேண்டி காத்துக் கொண்டிருப்பதை அவளுக்கு உரைத்த வார்த்தைகள்.
கைகளை இறுக்கமாக பிணைத்துக் கொண்டான் அவளோடு. அவனது இறுக்கம் மஹாவுக்கு வலியை கொடுக்க, அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள். முடியவில்லை. அது முடியவும் முடியாது.
அவளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. இந்த விஜி இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் அந்த வாக்கை காற்றில் பறக்க விட வருமாய் இருக்கலாம். ஆனால் அதுவும் முடியாது. தான் முதன் முதலாக அவளிடம் கொடுத்த வாக்கு. பொறுமை காக்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
முகங்கோன மகாவை பார்த்தான்.
“கிளம்பு… எனக்கும் கார்த்திக்கும் ப்ரொடியுசர் கவுன்சில்ல மீட்டிங் இருக்கு… உன்னை விட்டுட்டு மச்சானை கூட்டிட்டு போறதா சொல்லிருக்கேன்…” என்று உறுதியாக கூற, திரும்பி விஜியை பார்த்துக் கூறிக் கொள்ள முனைந்தாள்.
விடாப்பிடியாக இழுத்துப் பிடித்தவன், அதே இறுக்கத்தோடு அவளை அழைத்து சென்று விட்டான்.
விஜியை என்னவென்று பார்க்கவில்லை. எதுவும் கேட்கவில்லை. அவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தார் போலக் கூட நினைக்கவில்லை. மஹா பார்க்க நினைத்தாள் அது மட்டுமே அவனது எண்ணமாக இருந்தது.
மஹா போன திசையை விஜய் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவன் இழுத்ததில் கை வலித்தது.
“ஏன் ஷ்யாம் இப்படி பிஹேவ் பண்ற?” அவனிடமிருந்து கையை பிடிவாதமாக விடுவித்துக் கொண்டு சினந்தாள்.
மெளனமாக அவளைப் பார்த்தவன், “ஏன்… அங்கேயே இருந்துக்கலாம் போல இருக்கா?” விசாரமாக கேட்டவனை பார்வையால் எரித்தாள்.
“அங்கேயே இருந்து என்ன பண்ண போறேன்?”
“பார்த்தா பார்த்துட்டு வந்துட்டே இருக்கணும்… அதை விட்டுட்டு…” என்று ஆரம்பித்தவன் முடிக்காமல், கார் கதவை திறக்க, ஏறாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
“ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருது? அவனை தான் ஊருக்கே ஒண்ணுமில்லாம காட்டிட்டியே… இன்னுமா உன் ஆத்திரம் அடங்கலை?”
அவளது கோபத்தை கண்டுக் கொள்ளாமல்,
“கமான் கெட் இன் மஹா… லேட்டாகுது…” என்று கூற, அவள் பேசாமலேயே நின்றிருந்தாள்.
கண்களை மூடித் திறந்தவன்,
“எனக்கு பிடிக்கல… நீ அவனை பார்க்க வந்தது பிடிக்கல… பேசறது பிடிக்கல… நான் அவனை அந்த அளவு பனிஷ் பண்ணது தப்பு தான் எனக்கு தெரியும்… ஆனா இதுதான் நான்… இவ்வளவுதான்… எல்லாம் உனக்கும் தெரியும்… என்னோட வே ஆப் அப்ரோச்ச என்னால மாத்திக்கவே முடியாது… அதை மாற்ற நீ ட்ரை பண்ற… நானும் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்… அவ்வளவுதான் மேட்டர் ஓவர்… பார்த்துட்டு வந்துட்டே இரு… அதை விட்டுட்டு அவன் கூட ஓவரா டைம் ஸ்பென்ட் பண்றது… அவனுக்காக என்கிட்டே பரிஞ்சு பேசறது எல்லாம் வேண்டாம்…” வெகு நிதானமாக, அழுத்தமாக, ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தவனின் தொனி அத்தனை கடுமையாக இருந்தது.
நான் உன்னை காதலிக்கலாம்… நீ என்னுடைய சரி பாதியாக இருக்கலாம்… ஆனால் என்னுடைய வழக்கத்தை மாற்ற யாராலும் முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினான்.
“ஐ வில் பி வெய்டிங் மஹாவாம்… ஹவ் டேர்… எனக்கு வந்த கோபத்துக்கு அவனுக்கு பல்லு பேந்துருக்கும்… கை காலை உடைச்சு படுக்க வெச்சாச்சேன்னு பார்க்கறேன்… இன்னொரு தடவை உன் பேரை சொல்லி மட்டும் அவன் கூப்பிட்டான்… தொலைச்சுருவேன் தொலைச்சு…” அத்தனை வன்மம்… அத்தனை குரோதம்… அவனையும் மீறிய எரிச்சல்!
“உனக்கு பொசெசிவ்னஸ் ஓவரா போய்டுச்சு ஷ்யாம்…” கைகளை கட்டிக் கொண்டு சஞ்சலமாக அவனை பார்க்க,
“ஆமா… அப்படித்தான்… உன்னை விட்டு கொடுத்துட்டு போக நான் என்ன சொம்பையா? ஆம்பளைடி…” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“உன் ஆம்பிளைத்தனத்தை முடியாதவன் கிட்ட காட்ட கூடாது ஷ்யாம்… இதுக்கு பேர் ஆம்பிளைத்தனம் இல்ல…” என்றவள், அதற்கும் மேல் விவாதத்தை தொடராமல் காரில் ஏறி அமர்ந்து கொள்ள, பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவன், தலையை அழுத்தமாக கோதியவாறு தூரத்தில் தெரிந்த மேகங்களை பார்த்தான்.
மேகம் கருக்கொண்டு அழ காத்திருந்தது. கோடை மழை. வெளியிலும் வெம்மை… அதை காட்டிலும் மனதிலும்!
மெளனமாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனை அவள் பார்க்கவே இல்லை. மனம் முழுக்க ஏதோவொரு வலி. அவனை காயப்படுத்தக் கூடாது என்று நினைத்தாலும் அவளையும் மீறி வந்து விழும் வார்த்தைகள்.
“ஏய் மகா… வார்த்தைய அடக்கி பேசு… ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்…” என்று பைரவி அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.
மூச்சை இழுத்து விட்டு அமர்ந்தாலும் மனம் நிதானத்துக்கு வருவேனா என்றது. தான் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டினாலும் முன்னர் இருந்த ஷ்யாம் இப்படி இல்லையே… குழந்தையை தாங்குவது போல அல்லவா தாங்குவான்… அவனது அத்தகைய பரிவுக்காக மனம் ஏங்கியது. ஆனால் அவள் அறியவில்லை. எப்போதும் தாங்கிக் கொண்டே இருக்க யாரும் ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோக்கள் இல்லையே.
ரத்தமும் சதையுமான மனிதர்கள்.
ஒரு நேரம் தாங்கினால், ஒரு நேரத்தில் கோபம் வரத்தான் செய்யும். அவனுக்கும் அவனது கோபங்களை எங்கு காட்ட?
குனிந்துக் கொண்டவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. மூக்கு சிவந்து விடைக்க, வயிற்றிலிருந்து கிளம்பிய உருண்டையை தொண்டைக்குள் விழுங்கினாள்.
தன்னை காதல் பலவீனமாக்குகிறது என்பதை உணர்ந்தாள். அவளது பலமும் அவளது காதல் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறாள்?
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஷ்யாம், அவளது முகத்தைப் பார்த்து,
“சாரி மஹா…” என்று அவளது கையை பிடித்து அழுத்தினான். அவளை காயப்படுத்த அவன் நினைக்கவில்லை. ஆனால் அவனது காதல் அவனையும் மீறி அவளை காயப்படுத்திக் கொண்டிருந்தது.
*****
அடுத்த நாள், ஆர்த்தோ ஐசியூவின் சீப் டாக்டர் ஷ்யாமிடம் பேசினார், அவனது அறையில்! உடன் மஹா, கார்த்திக்!
“பாஸ்… அவர் நடிக்கற மாதிரி எங்களுக்கு தோணலை… இது ஒரு விதமான அம்னீசியா, போஸ்ட் ட்றாமடிக் அம்னீசியா. அதாவது ரொம்ப பிரச்சனையோ, அவமானமோ, அதீதமான மாற்றங்கள் வரும் போது மனசு அதையும் அறியாம ஒரு மாஸ்க் போட்டுக்கும்… எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நாம பொய் சொல்வோம் இல்லையா… அது மாதிரி… அந்த சிச்சுவேஷனை கடக்க முடியாம இருக்க மனதோட ஒரு அதீதமான வெளிப்பாடு தான் இந்த மாதிரியான அம்னீஷியா…” என்று அவர் கூற, ஷ்யாம் தீவிரமாக அவரை பார்த்தான்.
“இது எவ்வளவு நாளைக்கு இருக்கும்?” கார்த்திக் கேள்வி எழுப்ப,
“அதை சொல்ல முடியாது சர்… ஒரே நாள்ல குணமாகலாம்… இல்லைன்னா ஒரு வாரம்… ஒரு மாசம்… ஒரு வருஷம்… டைம் சொல்ல முடியாது… பழைய நினைவுகளை கொண்டு வரணும்…” என்று கூறினார், அதை மகாவும் ஒப்புக் கொண்டாள்.
“ம்ம்ம்… ஆமா…” என்றவளுக்கு யோசனையாகவே இருந்தது.
“பழைய வாழ்கையை ஞாபகப்படுத்திட்டே இருந்தா பேஷண்டுக்கு சீக்கிரம் மெமரி ரீகெய்யின் ஆக வாய்ப்பு இருக்கா டாக்டர்?” என்று மஹா கேட்க, இவள் ஏன் இந்த ஆணியை பிடுங்குகிறாள் என்று பார்த்தான் ஷ்யாம்.
ஏனென்றால் ப்ரொடியுசர் கவுன்சில் மீட்டிங் போகும் போதே மகாவின் இத்தகைய நடவடிக்கைகளை பற்றி இருவருமாக பேசிக் கொண்டு தான் இருந்தனர்.
கார்த்திக்கு இந்த திருமணம் நடைபெற வேண்டுமா என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் வந்தாலும், அடுத்த நிமிடமே ஷ்யாமை தவிர வேறு யாரையுமே தன்னுடைய மாப்பிளையாக நினைக்க முடியவில்லை. அதை அவனிடம் கூறியுமிருந்தான்.
அதனால் தான் அவனுக்கு மஹா இப்படி கேட்டதும் கோபம் வந்தது.
ஷ்யாமை பற்றி தெரிந்து தானே, அவனுடைய காதலை ஒப்புக் கொண்டாள். திருமணமும் நிச்சயம் செய்தாயிற்று!
இப்போது ஏன் குழப்புகிறாள் என்பது புரியவில்லை.
“ண்ணா… ப்ளீஸ்… என்னோட ஸ்டடீஸ்காக கேக்கறேன்…” எனவும், அந்த மருத்துவர் தலையாட்டினார்.
“எஸ் மேம்… யூ வார் ரைட்…” என்றார் அவர்!
ஷ்யாம் சிரித்தபடி கார்த்திக்கை பார்த்து,
“மச்சான்… உன் தங்கச்சியை பாரேன்… விளக்கை தூக்கிட்டு நான் தான் அடுத்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்ன்னு கிளம்புவா…” என்றான் சிரித்துக் கொண்டே!
“கூட நீயும் கிளம்பிடு மாப்ள…” என்றான் கார்த்திக்!
இருவரும் கலாய்க்க, முறைத்தாள் மஹா!
“உனக்கு இவன் இருந்தா மட்டும் எப்படித்தான் இப்படி சிரிப்பு வருமோ… கல்யாணம் ஆன உடனே உங்க ரெண்டு பேரையும் கட் பண்ணி விடனும்டா…” என்றாள் உதட்டை சுளித்தபடி!
“அடிப்பாவி… நீயெல்லாம் ஒரு தங்கச்சியா?” வாயை பிளந்தான் கார்த்திக்!
இவர்கள் சிரித்தபடி பேசிக் கொண்டிருக்க, விஜி மஹாவுக்காக வாசலைப் பார்த்தபடி காத்திருந்தான்!