1
மோகினி பிசாசு!
‘ஹே எத்தன சந்தோஷம்
தினமும் கொட்டுது உன்மேல..
நீ மனசு வச்சிப்புட்டா
ரசிக்க முடியும் உன்னால…
ரிப்பறிரப்பாரே..
ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே..
ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே..
ரிப்பப்ப ரபபப்பா..’
நெடுஞ்சாலையில் அதிவேகமாய் சென்று கொண்டிருக்கும் அந்த டஸ்டர் காரின் ஒளிப்பெருக்கியில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது அந்த பாடல். உள்ளே வாலில்லாத குரங்குகள் போல ஐந்து பேர் கொண்ட குழு!
நம் நாயகனையும் சேர்த்து…
இளமை ஊஞ்சாலடும் வயது. இருபத்து நாலு முடிந்து இருபத்து ஐந்து தொடங்கியிருந்தது. எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழ்க்கையை அனுபவிப்பவதாக சொல்லி கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தி அவன்!
படிப்பு முடித்து உடனே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஆன்ஸைட் என்று வெளிநாடுகள் எல்லாம் சுற்றி வந்துவிட்டான்.
சம்பாதித்த பணத்தை எப்படியெல்லாம் வீணாக செலவழிப்பது என்று அவனைதான் கேட்க வேண்டும். இந்த உலகின் அனைத்து சந்தோஷங்களையும் இளமையிலேயே அனுபவித்து பார்த்துவிட வேண்டுமென்பதே அவன் எண்ணம்!
அவன்தான் பரிமேலழகன்! பரி என்கிற பரிமேலழகன்!
ஒழுக்கம் என்றால் என்ன விலையென்று கேட்பான். அவன் அப்பா கலிவரதன் ஒரு கிரிமினல் லாயர். மனைவி தாமரை கணவனுக்கு அடங்கிய வீட்டையே வலம் வரும் உலகமறியா பெண்மணி!
கலிவரதனின் வசிப்பிடம் சென்னைதான். ஆனால் தாமரைக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. பெரும் அரசியல் செல்வாக்கு படைத்த குடும்பத்தில் பிறந்தவர்.
தாமரையின் தந்தை மாடசாமி சிறந்த மேடை பேச்சாளர். பேறு பெற்ற அரசியல்வாதி. அதோடு அவர் கொஞ்சம் அதீத தமிழ் பற்றுடையவர். அதன் தாக்கம் மகன், மகள், பேரன், பெயர்த்திகளின் பெயர்களில் நன்றாக தெரியும்.
மாடசாமிக்கு இரண்டு மகன் ஒரு மகள். அதில் பெரியவர் விமலன். சின்னவர் சுசீந்திரன். கடைக்குட்டிதான் பரியின் அம்மா தாமரை.
மாடசாமி இறந்த பிறகு வந்த சொத்து பிரச்சனையில் பரியின் தந்தை கலிவரதனோடு விமலன் மற்றும் சுசீந்திரன் சகோதரர்களிடம் பெரும் மனஸ்தபாம் உண்டானதில் கிட்டதட்ட பதினைந்து வருடம் மேலாக அந்த ஊர்பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை
எந்த சமாதான பேச்சுக்களும் கலிவரதனிடம் எடுப்படவில்லை.
அவ்வப்போது தாமரை மட்டும் ஏதாவது குடும்ப விழாவிற்கு…
அதுவும் கலிவரதன் மனம் வைத்தால் வந்து போவார். அப்போதும் அண்ணன்களிடம் பேச கூடாது. வீட்டிற்கு போக கூடாது என்று கண்டிப்போடு சொல்லித்தான் அனுப்புவார்.
இருப்பினும் கணவனுக்கு தெரியாமல் சில கொடுக்கல் வாங்கல்கள் அந்த பாசமலர்களுக்கு இடையில் நடந்து கொண்டுதான் இருந்தது. சகோதரர்களுக்கும் தங்கை மேல் கொள்ளை பிரியம்.
ஆனால் இந்த ஆறு மாதத்தில் நிலைமையே வேறானது. தாமரையின் சகோதரர்களோடு கலிவரதன் இன்று ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டார்.
அதற்கு காரணம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு முடிந்து திரும்பும் கலிவரதனை அங்கேயே கொலை செய்ய சிலர் திட்டமிட, இந்த விஷயம் அறிய வந்த சுசீந்திரன் எப்படியோ தங்கை கணவனின் உயிரை காப்பாற்றிவிட்டார்.
பிறகு கலிவரதன் சமாதான புறாவை பறக்கிவிட்டு ஊருக்கு பலமுறை சென்று வந்தார். ஆனால் இப்போதுதான் முதல் முறை தன் தாய் ஊருக்கு செல்கிறான் பரிமேலழகன் என்கிற பரி!
பரி (குதிரை) போல அவனும் வேகமும் துருதுருப்பும் உடையவன். அவன்தான் அந்த காரை தற்போது இயக்கி கொண்டிருந்தான்.
பிரௌன் ஷார்ட்ஸ் அதற்கு பொருத்தமாக கருப்பு நிற டீஷர்ட் அணிந்து கொண்டிருக்க, அந்த உடையில் அவனை பார்க்கும் போதே அவன் தேகத்தின் உடற்கட்டுக்கள் அவனை கம்பீரமாக மிளரச் செய்தது.
அளவான மீசை. அலைபாயும் கேசம் ஹீரோ கெத்தில் ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த அறிமுகத்தோடு சேர்த்து ஒரு டிஸ்கிளைமர் போட்டேயாக வேண்டும். (புகைப்பழக்கமும் மதுபழக்கமும் உடல்நலத்திற்கு கேடு)
பரி தம் நண்பர்களோடு சேர்ந்து குதூகலத்தோடு பீர் சிகரெட் என்று படுஜோராக தன் பயணத்தை மேற்கொண்டிருந்தான். இதெல்லாம் பரிக்கு ஸ்டைல் என்று நினைப்பு. சில பிரபலமான நடிகர்கள் தொடங்கி அவன் தந்தை வரை எல்லோரிடமும் இந்த பழக்கத்தை பார்த்து தானும் பழக்கப்படுத்தி கொண்டான்.
அவன் கார் சென்னை செக் போஸ்டையெல்லாம் அசால்ட்டாக கடந்து வந்துவிட்டாலும் இப்போது சேலம் மாவட்டத்தின் நுழைவாயிலின் சாலையோரத்தில் நின்றிருந்த காவலதிகாரியிடம் சிக்கி தொலைத்துவிட்டது. ஆனால் அதுக்கெல்லாம் அசறுபவன் அல்ல பரி!
எப்படியோ பேசி சமாளித்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை பரி நீட்டும் போது அந்த இடத்தை ஓர் உயர்ரக கார் கடந்து சென்று முன்னே நின்றது. முன்புறத்தில் ஒரு கட்சிக்கொடி படுசீற்றமாக பறந்து இப்போது சற்று தணிந்து அமைதி பெற்றிருந்தது.
வெள்ளை வேட்டி சட்டையோடு பெருத்த மீசை பருத்த உடலோடு கம்பீரமாக நடந்து வந்தவர் பரியை நெருங்கி, “ஏன் மாப்பிள்ளை… ஏன் இங்க நிற்குறீங்க?” என்று பதட்டமாக கேட்கவும் அவரை குழப்பமாக ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தான் பரி. அவனுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
அதற்குள் அந்த வெள்ளை வேட்டி மனிதர் பரி சொல்லாமலே நிலைமையை புரிந்து காவலாளிகளை படுத்தீவிரமாக முறைத்து, “என்ன… என் மாப்பிள்ளைகிட்ட என்ன உங்களுக்கு?” என்று கேட்க,
“அய்யய்யோ! இல்லைங்க ஐயா… தம்பி குடிச்சிட்டு வண்டி ஓட்டின்னு வந்திருக்காப்ல… அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தோம்” என்றதும் அவர் பரியிடம் தன் பார்வையை ஒரு மாதிரியாக திருப்பினார்.
அவன் அலட்சியமாக நின்று கொண்டிருந்தான்.
“குடிச்சிருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று தாழ்வாக அவன் காதோரம் வினவ,
“ஏன்… நீங்கெல்லாம் குடிக்க மாட்டீங்களா?” என்று எகத்தாளமாக அவரை பார்த்து கேட்டான் பரி! அந்த மனிதர் முகத்தில் அத்தனை கடுப்பு!
‘வரதன் மாமாவோட ஜெராக்ஸா இருப்பான் போல’ என்று மனதில் தோன்றிய எண்ணத்தை மறைத்து கொண்டு
அங்கிருந்த காவலாளிகளிடம் அவர் கண்ஜாடையால் ஏதோ சொல்ல அவர்கள் பயபக்தியோடு, “நீங்க போகலாம் சார்” என்றனர் பரியிடம்!
அவர் உடனே பரியின் புறம் திரும்பி, “உங்க வண்டியை ஓட்ட நான் நம்ம டிரைவரை அனுப்புறேன் மாப்பிள்ளை” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“அதெல்லாம் வேண்டாம்… ஐ கேன் மேனேஜ்” என்றான் அலட்சிய தொனியில்!
“அப்படின்னா சரிங்க மாப்பிள்ளை… நீங்க என் வண்டியை ஃபாலோ பண்ணி வந்திருங்க” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தார்.
பரி அந்த காவலர்களை பார்த்து ஐநூறு ரூபாயை மீண்டும் நீட்டி, “வைச்சுக்கோங்க” என்க,
“அய்யோ வேண்டாம்… சுசி ஐயா கொன்னுடுவாரு” என்று மிரண்டு ஒதுங்கினர்.
பரி அவர்களை யோசனையாக பார்த்துவிட்டு மீண்டும் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, “இவர்தான் சின்ன மாமாவோ?” என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டிருக்கும் போதே,
“யாருடா அந்த வெள்ளை வேட்டி? பயங்கரமா இருக்காரு?” என்று அவன் நண்பர் குழுவில் ஒருவன் கேட்க,
“என் மாமா” என்று சொல்லி கொண்டே காரை எடுத்தவன் வேகமெடுத்து தன் மாமா சொல்வதை கேட்க கூடாதென்றே அவர் காரை முந்தியடித்தான்.
சுசீந்திரனுக்கு அவன் செயல் எரிச்சலை வரவழைத்தாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலைமை!
பரியின் கார் ஊருக்குள் நுழைந்து அந்த பிரமாண்டமான வீட்டு வாயிலில் வந்து நின்றது.
உள்ளே ஓரே போல இரண்டு வீடுகள் அருகருகே இருந்தது. என்னதான் விமலனும் சுசியும் ஒற்றுமையாக இருந்தாலும் ஓரகத்திகள் அப்படி இருக்க வேண்டுமே!
பெரியவர் விமலனின் மனைவி மஞ்சுளாவும் சின்னவர் சுசீந்திரனின் மனைவி வஸந்தியும் எதிரும் புதிரும். ஆதலால்தான் இருவருக்கும் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனி வீடு. தனித்தனி சமையல்.
ஆனாலும் சகோதரர்களுக்கிடையில் இன்று வரை எந்தவித பிரிவினையும் இல்லை.
அதேநேரம் விமலன் சுசீந்திரன் ஒற்றுமையை பற்றி அந்த ஊரறிந்தது. அண்ணன் தம்பி என்றால் அப்படி இருக்க வேண்டுமென்பார்கள். அரசியல் அடிதடி மற்றும் சாதி கலவரம் செய்வது. இதுதான் அவர்களின் முக்கிய வேலையே.
சாதிக்காக உயிரையும் கொடுப்பார்கள். உயிரையும் எடுப்பார்கள் தங்கள் சாதியை மட்டும் எக்காரணம் கொண்டு விட்டுத்தர மாட்டார்கள்.
ஆகையால் சாதி பிரச்சனை என்றால் அவர்களுக்கு பெரும்பாலும் வாய் பேசாது. அரிவாள்தான் பேசும். ஊரையே ரத்தகளரியாக்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.
பரி வீட்டினுள் காரை நுழைக்க வாழை மர தோரணம் சீரியல் பல்பு அலங்காரம் எல்லாம் படுஜோராக இருந்தது.
“என்னடா மச்சி? வீட்டுல ஏதாச்சும் விசேஷமா?” என்றவன் நண்பன் சமீர் கேட்க,
“ஹ்ம்ம்… எனக்கு கல்யாணம்” என்று பரி அலட்சியமாக சொன்ன விதத்தில் அவன் நண்பர்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டனர்.
சில நொடிகள் தாமதித்து, “என்னடா சும்மா ஊரை சுத்தி பார்க்கலாம்னு எங்களை கூட்டிட்டு வந்துட்டு இப்போ உனக்கு கல்யாணங்கிற… நிஜமாவா டா?” என்றவர்கள் அதிர்ச்சி மாறாமல் கேட்க,
“ப்ச்… இப்போ எதுக்கு இந்த ஷாக் ரியாக்ஷன்? வாங்கடா வீட்டுக்குள்ள போகலாம்” என்று அழைத்துவிட்டு உள்ளே செல்ல, சுசீந்திரன் கார் பின்னோடு சீறி கொண்டு வந்து வாயிலிற்குள் நுழைந்தது.
சுசீந்திரன் வேகமாக இறங்கிவந்து, “மாப்பிள்ளை!” என்றழைக்க,
பரி கடுப்பாக திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தான்.
“இப்படியே உள்ளே போகாதீங்க மாப்பிள்ளை… ரூமுக்கு போய் குளிச்சி கிளிச்சி நல்லா” என்றவர் சொல்லி கொண்டே, “வீட்டில சொந்தகாரவங்க எல்லாம் இருக்காவுங்க” என்று தயக்கமாக இழுத்தார்.
அவன் சரியென்று கூட ஒரு வார்த்தை சொல்லாமல் திரும்பி நடக்க, சுசீந்திரன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!
அதேநேரம் பரியை பார்த்துவிட்டு தாமரை ஓடிவந்து மகனை அணைத்து கொண்டார்.
“என்ன ராசா? கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வந்திருக்கலாம்ல” என்று கேட்க, ஒரே மகனென்ற செல்லம் அவர் செய்கையில் நன்றாக தெரிந்தது.
“அதான் வந்துட்டேன் இல்ல” என்று சொன்னவன் தன் நண்பர்களை திரும்பி உள்ளே அழைக்க தாமரையும் முகமன் கூறி அவர்களை மரியாதையாக வரவேற்றார்.
“ம்மா… எங்க பிரைவஸியை டிஸ்டர்ப் பண்ணாத மாறி நானும் என் பிரெண்ட்ஸும் தங்க தனியா ஒரு ரூம் வேணுன்னு சொன்னேனே” என்றவன் அதிகாரமாக கேட்க,
“மாடில கடைசி ரூம்… உனக்காகவே மாமா கிளீன் பண்ணி வைக்க சொல்லி இருக்காரு” என்றவர் முடிக்கும் போதே மாடி படிக்கெட்டை பார்த்தவன் விறுவிறுவென ஏறி கொண்டே,
“வாங்கடா” என்று நண்பர்களை அழைத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான்.
வசதியாக விசாலமாக அவனும் அவன் நண்பர்களும் தங்க ஏற்றவாறு இருந்தது அந்த அறை. அதனை சுற்றும் முற்றும்
பரி பார்வையிட்டு கொண்டிருக்க,
“என்ன மச்சி? கல்யாணம்னு ஒரு வார்த்தை கூட சொல்லல… இன்விடேஷன் கொடுக்கல” என்று மீண்டும் அவன் நண்பன் ஒருவன் கேட்டான்.
“இப்ப அது ரொம்ப முக்கியமா? கம்னு படுங்கடா… லாங்க டிரைவ் பண்ணிட்டு வந்தது ரொம்ப டையர்டா இருக்கு” என்று படுக்கையில் சரிந்தான் பரி!
அப்படியே அவன் உறங்கியும் விட அவன் நண்பர்கள் அவனின் திருமண விஷயத்தை பற்றி தங்களுக்குள் அங்கலாய்த்துவிட்டு அவர்களும் உறங்கிவிட்டனர்.
அந்தி சாய்ந்தது. மெல்ல கண்விழித்த பரி அயர்ந்து உறங்கும் தம் நண்பர்களை தொந்தரவு செய்யாமல் குளியலறையில் புகுந்து அலுப்பு தீர ஒரு குளியலை போட்டு துண்டால் தலையை துவட்டி கொண்டே வெளியே வந்தான்.
வீட்டை சுற்றி உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் கூட்டம். பந்தியில் இரவு உணவு உண்ண பந்தலின் கீழே கூட்டமாக குழுமியிருந்தனர். சமையலும் அங்கேயே நடந்து கொண்டிருந்தது.
ட்ரேக் பனியன் அணிந்து கொண்டு அவன் மேலே நின்று கொண்டு அவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருக்க,
அவன் மாடியில் நின்று கொண்டிருப்பதை விசித்திரமாக சிலர் பார்த்தும் வைத்தனர். யாரையும் அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
கடைசியாக அவன் அந்த ஊருக்கு வரும் போது ஏழு வயதிருக்கும். உறவினர்கள் யாரையும் அவனுக்கு பெரிதாக நினைவில்லை. ஏன்? அவனின் சொந்த தாய்மாமன்களையே அவனுக்கு இன்று அடையாளம் தெரியவில்லை.
கலிவரதன் தன் மகனோடு தாமரையின் சொந்தங்கள் யார் தொடர்பும் இல்லாமல்தான் வைத்திருந்தான். ஆனால் இப்போது திடீரென்று மச்சான்கள் பாசம் பொங்கிவழிந்தது. அதுவும் அவர்கள் இவர் உயிரை காப்பாற்றியதினால்!
கலிவரதனுக்கு வேண்டாமென்றால் மொத்தமாக யாரும் வேண்டாம். வேண்டுமென்றால் அப்படியே ஓட்டி உறவாடுவர்.
பெரியவர் விமலனுக்கு மூன்று பிள்ளைகள். அமுதன், இளமாறன் கடைசியாக ஒரு மகள் சௌந்தர்யா. கலிவரதன் சௌந்தர்யாவை தன் மகன் பரிக்கு பெண் கேட்க, மாமனிடம் எப்படி முடியாதென்று சொல்ல முடியும். சம்மதிக்க வேண்டிய நிர்பந்தம். அதேநேரம் பரி படிப்பு முடித்து நல்ல வேலை, சம்பளமென்று இருந்ததால் மறுக்க அவர்களுக்கு காரணமுமில்லை.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது பரி கெனடாவில் இருந்தான். தாமரைதான் மகனிடம் கைப்பேசியில் கெஞ்சி சம்மதம் வாங்கினர். அதுவும் தன் தாய் வீட்டினர் உறவை தொடர கடவுளாக கொடுத்த அரிய வாய்ப்பு இது. அதை அவர் நழுவ விட்டுவிடுவாரா என்ன?
அதேநேரம் பரியும் சுலபமாக சம்மதிக்கவில்லை. சௌந்தர்யா போட்டோ மற்றும் கைப்பேசி எண்ணெல்லாம் வாங்கி அவளிடம் தெளிவாக பேசிய பின்னே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான்.
இன்னும் சௌந்தர்யாவை அவன் நேரில் பார்த்ததில்லை எனினும் வீடியோ கால் மூலமாக இருவரும் பார்த்து பேசியிருக்கிறார்கள்.
அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் விரைவாக நடைப்பெற ஊரிலேயே நிச்சியதார்த்தம் திருமணம் யாவும் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வைப்பதாக முடிவானது.
அவன் கெனடாவிலிருந்து ஒரு வாரம் முன்னதாகதான் வந்திருந்தான். தாமரையும் கலிவரதனும் இரண்டு நாள் முன்னதாக ஊர் வந்து சேர்ந்துவிட அவன் தன் அலுவல் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்துசேர்ந்தான்.
ஆனால் அவனுக்கு திருமணம் என்றவாறு யாருக்கும் ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. அவன் முகத்தில் திருமண பூரிப்பு கொஞ்சமும் இல்லை.
அறையிலிருந்து தன் பேசியை எடுத்த பரி சௌந்தர்யாவிற்கு பலமுறை அழைக்க, அவள் எடுக்கவில்லை. யோசனையோடு கீழே இறங்கி வந்தவன் யார் கவனத்தையும் ஈர்க்காமல் பின்கட்டு வழியாக சென்று பெரிய தோப்பிற்குள் காலார நடக்க தொடங்கினான்.
மாமரம் புளியமரம் தென்னை மரங்கள் என்று சூழ அந்த இடமே இருள் கவ்வியிருந்தது. அந்த தோப்பும் கூட அண்ணன் தம்பிகளுக்கு சொந்தமான இடம்தான்.
பரி அந்த தோப்பிற்குள் நடந்து செல்வதை பார்த்த பெரியவர், “அய்யோ! தம்பி இந்த இருட்டில தோப்பு பக்கம் போக கூடாது” என்று அஞ்சிய தோரணையில் சொல்ல,
“ஏன்?” என்று புருவங்களை சுருக்கினான்.
“காத்து கருப்பு அடிச்சிடும்… இங்க மோகினி நடமாட்டமெல்லாம் இருக்கு… ஆள் வேற வாட்டசாட்டமா இருக்கீங்க” என்றவர் அஞ்சிய தோரணையில் சொல்ல அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.
“எந்த மோகினியும் என்ன ஒண்ணும் பண்ணாது… நான் வேணா அதை ஏதாச்சும் பண்ணலாம்” என்று கேலி செய்து நகைத்தபடி சொல்லிவிட்டு அவரை கடந்து உள்ளே நடந்தான்.
அந்த பெரியவர் ஏதோ புலம்பி கொண்டே சென்றுவிட கொஞ்ச தூரம் நடந்த பரி சிகரெட்டை பற்ற வைத்து புகைக்க ஆரம்பித்து கொண்டே ஒரு பெரிய மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான். காற்று பலமாக வீசியது.
அந்த கும்மிருட்டில் வெள்ளை உடையில் ஆக்ரோஷமாக ஒரு பெண் ஓடி வர, அவளின் கால் சலங்கை ஒலி அந்த இடம் முழுக்க அதிர்ந்தது.
“ஹே! உன்னை விட மாட்டேன்” என்று பெரும் கூச்சலிட்டு கொண்டு கையில் கம்போடு ஆவேசமாக ஓடி வந்து கொண்டிருந்த அந்த பெண் உருவத்தை பார்த்து அவனின் சர்வாங்கமும் ஆடியது.
இதய துடிப்பு கூட ஒரு நொடி நின்று போன உணர்வு!
‘ஒரு வேளை அந்த தாத்தாகிட்ட நம்ம கிண்டலா சொன்னதை இந்த மோகினி பிசாசு கேட்டிருக்குமோ?!’ என்று அவன் அச்சத்தோடு எச்சிலை கூட்டி விழுங்க,
பேய் பிசாசு நம்பிக்கை எல்லாம் சுத்தமாக இல்லாத பரிக்கு ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று எண்ணம் தோன்ற, அரண்டு போய் நின்றுவிட்டான் பரி.
2
பெண் பார்க்கும் படலம்
அந்த தோப்பின் அடர்ந்த இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஓடி வருவது மட்டுமே தெரிந்தது. போதாக் குறைக்கு எதிரே பருத்த உடலோடு ஒரு பூனை தெறித்து ஓட, பரிக்கு அச்சம் அதிகரித்தது. சிகரெட் அவன் விரலிலிருந்து அதுவாகவே நழுவியது.
“பேய் வர்றது சில ஜீவராசிகளுக்கு எல்லாம் தெரியும்பாங்களே… ஒரு வேளை இந்த பூனைக்கு தெரிஞ்சிருக்குமோ?!” என்றவன் யோசிக்கும் போதே அந்த பெண் உருவம் அதிவேகமாய் நெருங்கிவிட,
அந்த உருவம் தன்னைத்தான் அடிக்க வருகிறது என்று எண்ணி,
“ஆஆஆஆஆ” என்று பரி அச்சத்தில் கத்த ஆரம்பித்தான்.
“ஆஆஆஆஆ” என்று அந்த பெண் உருவமும் பரியின் கதறலில் பயந்து கத்த, இருவரின் சத்தமும் அந்த இடத்தையே அதிர செய்தது.
அதே நேரம் அந்த பெண் உருவம் பரி கத்தியதில் பயந்து ஓடிவந்த வேகத்தில் தட்டுத்தடுமாறி பரியின் மீதே விழுந்து வைத்துவிட்டது.
அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் அவன் அவள் தன் மீது விழுந்த வேகத்தில் தரையில் சரிய அந்த பெண் உருவமோ விடாமல், “ஆஆஆஆ” என்று கத்தி அவன் காதை கிழித்துவிட்டது.
பரிக்கு அதிர்ச்சியும் அச்சமும் மறைந்து அந்த பெண்ணின் கத்தலில் அவள் மோகினி இல்லை என்று புரிந்தது.
அவள் கத்தலில் எரிச்சலானவன், “அய்யோ! காது வலிக்குது” என்று சொல்லியபடி அவளை புரட்டி கீழே தள்ளி அவள் வாயை மூட எத்தனிக்க அவன் கரம் எடாகூடாமாக அவள் மீது பட்டுவிட்டது.
“அம்ம்ம்ம்ம்மா” என்று அவள் மீண்டும் கத்தி வைக்க,
“அய்யோ சாரி சாரி சாரி தெரியாம கை பட்டிருச்சு… இவ என்ன இப்படி கூப்பாடு போடுறா… இதுல இவ வாய் வேற எங்க இருக்குன்னு தெரியலயே” என்று அவன் படபடத்த அதே நேரம் சுதாரித்து எழுந்தமர்ந்து கொண்டு தன் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி டார்ச்சை ஆன் செய்தான்.
அந்த வெளிச்சத்தில் லேசாக கண் கூசி முகம் சிணுங்கிய அதே நேரம் வாயடைத்து அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் அந்த இளம் காரிகை!
வெள்ளை சுடிதாரில் சிவந்த மேனியோடு உருட்டை உருட்டையாக இருந்த விழிகளிரண்டும் பயத்தை அப்பட்டமாக காட்டி கொடுத்தன.
அவளின் கொழு கொழு கன்னங்களும் இரட்டை ஜடையும் அவள் இளம் கன்னித்தன்மையை அழகுற மிளரச் செய்தது.
அதுவும் அவளின் செம்மாதுளை இதழ்கள் அவன் குடித்த மது போதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றளவுக்கு கிறுகிறுக்க செய்ய,
அழுகு தேவதையாக அவன் முன்னே கிடந்தவளை பேயென்று எண்ணி கொண்டோமா?! என்ன ஒரு அறிவீனம் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான் பரி!
அதோடு அவள் மீதிருந்து பார்வையை எடுப்பேனா என்றிருந்த பரியை தள்ளிவிட்டு நிமிர்ந்த அமர்ந்தவள், “மாமா நீங்களா?” என்று கேட்டாள் வியப்போடு!
அவள் மீது மயக்கத்திலிருந்த அவன் முளை பட்டென சுதாரிப்பு நிலைக்கு வந்தது.
“மாமாவா?!” என்றவன் அவளை ஏறஇறங்க பார்க்க,
“ஆமா… மாமாதான்… எங்க அக்காவை கட்டப்போற நீங்க எனக்கு மாமாதானே?!” என்று சொல்லி கொண்டே அவள் எழுந்து கொள்ள அவனும் எழுந்து நின்றான்.
இருவரும் தங்கள் மேல் ஓட்டியிருந்த மணலை தட்ட பரி யோசனையோடு, ‘சௌந்தர்யாவுக்கு அண்ணனுங்கதானே… தங்கச்சி இல்லையே’ என்று யோசித்துவிட்டு,
“நீ எப்படி சௌந்தர்யாவுக்கு தங்கச்சி?” என்று கேட்க,
“அவங்க என் சொந்த பெரியப்பா மக ன்னா… நான் அவங்களுக்கு தங்கச்சிதானே… அதுவுமில்லாம நீங்க எனக்கு அத்தை மவன்… அப்படி பார்த்தாலும் நீங்க எனக்கு மாமாதானே” என்றவள் கொடுத்த விளக்கத்தில் அவனுக்கு தெளிவாக புரிந்து போனது.
“அப்போ நீ சுசி மாமா பொண்ணா?” என்று கேட்க,
“ஹ்ம்ம்… நான் அவரோட ஓரே மக… அத்தை உங்ககிட்ட சொல்லலயா?” என்று அவள் கேட்கும் போது சுசீந்திரனின் பயங்கரமான உருவத்தை கண்முன்னே நிறுத்தி பார்த்தது.
‘அவருக்கு இப்படி ஒரு மகளா? ஒரு வேளை மாமி அழகா இருப்பாங்களோ?!’ என்று பரி மனதில் எண்ணி கொண்டான்.
“என்ன மாமா யோசிக்கிறீங்க?” என்றவள் அவன் முகம் பார்க்க,
“உன் பேர் என்ன?” என்று கேட்டான்.
“அக்கா… அத்தை யாருமே உங்ககிட்ட என்னை பத்தி எதுவுமே சொல்லலயா மாமா?” என்றவன் ஏமாற்றமாக கேட்க,
“ப்ச் நான் உன் பேரை கேட்டேன்?” என்றவன் மீண்டும் அழுத்தி கேட்டான்.
அவள் உடனே, “என் பேர் மகிழினி!” என்றாள் முகமெல்லாம் புன்னகையாக!
“என்னது… மோகினியா?” என்றவன் வேண்டுமென்றே கிண்டலாக கேட்டு வைக்க,
“மோகினி இல்ல மாமா… மகிழினி” என்று அவள் உரக்க சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்தது.
“அந்த பேரை விட உனக்கு மோகினிதான் பொருத்தமா இருக்கு” என்று சொல்லி சிரித்து கொண்டே முன்னே நடக்க,
“நான் ஒண்ணும் மோகினி இல்ல” என்றவள் நொடித்து கொண்டு
அவன் முன்னே வந்து நிற்க,
“வெள்ளை டிரஸ் போட்டிட்டு வந்து இப்படி இராத்திரல உலாத்தினா மோகினின்னுதான் சொல்வாங்க” என்றான்.
“அப்போ நீங்க என்னை பார்த்து மோகினின்னு நினைச்சு பயந்துட்டீங்களா?!” என்று அவள் கேலி பார்வையோடு கேட்க, அவனுக்கு எரிச்சல் மிகுந்தது.
“பயப்படாம என்ன செய்வாங்களாம்… கட்டையை தூக்கிட்டு கத்துக்கிட்டே அடிக்க வந்தா… பேயா பொண்ணான்னு இந்த இருட்டில ஒரு மண்ணும் தெரியல”
“அய்யோ மாமா! நான் ஒரு காட்டு பூனையை துரத்திட்டு வந்தேன்… உங்களால அதை எஸ்கேப்பாயிடுச்சு” என்றவள் படுதீவிரமாக சொல்ல பரிக்கு சிரிப்பு தாளவில்லை.
“பூனையை துரத்திட்டு வந்தியா… அதனாலதான் அது அப்படி தெறிச்சு ஓடுச்சா” என்று அந்த பூனை ஓடியதை எண்ணி சிரித்து கொண்டே,
“எதுக்கு… போயும் போயும் அந்த பாவப்பட்ட ஜீவனை போய் கட்டையை தூக்கிட்டு துரத்தின?” என்று கேட்டான்.
“அது பாவப்பட்ட ஜீவனா? போங்க மாமா… நான் வளர்க்கிற முயல்குட்டியை அது சாப்பிட பார்க்குது தெரியுமா?” என்று குழந்தைத்தனமாக சொன்னவளை பரி சுவாரசியமாக பார்த்து,
“பெரிய வீராங்கனைதான்… ஆனா சத்தியமா உண்மையான பேய் பிசாசு வந்திருந்தா கூட எனக்கு இவ்வளவு பீதியை கிளப்பியிருக்காது” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“அய்யோ! காட்டு பூனையை தேடி வந்தா இதென்ன காட்டெருமை கூட்டம் வருது” என்று அவளாக ஏதோ சொல்லி கொண்டாள்.
“காட்டெருமையா?” என்று புரியாமல் திரும்பி பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
எதிரே ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் வெள்ளை வேட்டிகளில் தொப்பையும் தொந்தியுமாக பயங்கரமான தோற்றத்தோடு வந்து கொண்டிருக்க, மகிழினி அவர்களை பார்த்து அஞ்சி பரியின் கையை பிடித்து இழுத்து வந்து ஒரு மரத்தின் மறைவில் நிறுத்தினாள்.
அந்த கும்பலோ, “அண்ணே வேற ஏதோ கத்திற சத்தம் கேட்டுதுன்னு சொன்னாரே… அது என்னடா சத்தமா இருக்கும்… உண்மையிலேயே மோகினி பிசாசா இருக்குமோ?!” என்று அவர்களும் பயந்து கொண்டு டார்ச் வைத்து தீவிரமாக அந்த இடத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
“எதுக்கு இவங்களை பார்த்து நீ பயப்படுற?” என்று பரி கேட்க,
“ஷ்ஷ்ஷ்… மெல்ல பேசுங்க… இவங்கெல்லாம் எங்க அப்பா பெரியப்பாவோட ஆளுங்க… நான் இந்தப்பக்கம் வந்திருக்கேன்னு தெரிஞ்சா இவனுங்க போய் அப்பாகிட்ட வத்தி வைச்சிருவாங்க… அப்புறம் அவர் என்னை தோளை உரிச்சு தொங்கவுட்டிருவாரு” என்று பீதியோடு அவள் குரலை தாழ்த்தி சொன்னாள்.
அவன் அடக்கிய புன்னகையோடு,”அதுக்கு எதுக்கு என்னை இழுத்துட்டு வந்த” என்று கேட்க, “நான் இங்க இருக்கேன்னு அவங்ககிட்ட நீங்க சொல்லிட்டா” என்றாள்.
அவளின் பதிலை கேட்டு பரி சத்தமாக சிரிக்க அவள், “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என்று எட்டி தன் கரத்தால் அவன் வாயை பொத்திவிட்டாள். பரிக்கு அத்தனை நேரம் இருந்த சந்தோஷமெல்லாம் காணாமல் போய் சங்கடமாகி போனது.
பரி சத்தியமாக கண்ணியவான் எல்லாம் கிடையாது. பெண்ணின் ஸ்பரிசமெல்லாம் அவனுக்கு புதிதுமல்ல. வேலைக்கு போக ஆரம்பித்த பின் அந்த சுகத்தையும் கொஞ்சம் கண்டவன்தான். மொத்தத்தில் ருசிகண்ட பூனை அவன்.
அதேநேரம் அவனாக எந்த பெண்ணையும் தேடி போக மாட்டான்.
அவன் ரத்ததிலேயே ஊறியிருக்கும் ஆணென்ற திமிரும் கர்வமும் எந்த பெண்ணின் பின்னோடும் போக அவனை அனுமதித்ததில்லை. அவனை பொறுத்தவரை அது கௌரவ குறைவு!
அதேநேரம் அவனிடம் மயங்கி நாடி வரும் பெண்களை வேண்டாமென்று மறுக்குமளவுக்கு ஆக சிறந்த நல்லவனும் இல்லை. அப்படியாக அவனை தேடி வந்த ஒன்றிரண்டு பெண்களால் கட்டில் சுகத்தையும் பார்த்தவன்தான்.
அவனின் ஒழுக்கமான நண்பர்கள் சிலர், “இதெல்லாம் தப்புடா” என்று அவனை எச்சரிக்க, “சேன்ஸ் கிடைச்சா நீங்க யூஸ் பண்ணிக்க மாட்டீங்களா? போங்கடா” என்று அவர்களையே எதிர் கேள்வி கேட்டு அடக்கிவிடுவான். அதுதான் பரி. வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி கொள்ளும் சராசரியிலும் சராசரியான ஆண்மகன் அவன்!
அப்படியான பரிக்கு மகிழினியின் அருகாமையும் தீண்டலும் எப்படி இருக்கும்? அதுவும் அவள் அவன் வாயை மூடி கொண்டே எட்டி அவர்கள் போய்விட்டதை கவனிக்க எண்ணும் போது அவள் தேகம் அவனை உரசவும்,
அவன் உணர்வுகள் வெகுவாக தூண்டப்பட்டது. தான் இருக்கும் சூழ்நிலையை சிரமப்பட்டு நினைவில் நிறுத்தி கொண்டவன்,
அவளின் இந்த செய்கையில் தன் ஆண்மையை கட்டுக்குள் வைக்க ரொம்பவும் அவதியுற்றான். அந்த கடுப்பில் அவன் உதட்டை மூடியிருந்த அவள் கரத்தை கடித்து வைத்துவிட்டான்.
“ஆஆஆ மாமா… ஏன் கடிச்சீங்க?” என்று அவள் வலியால் கரத்தை உதறி கொண்டே விலகி வர,
“முதல்ல வீட்டுக்கு போ… அவங்கதான் போயிட்டாங்க இல்ல” என்றான் மிரட்டலாக.
“அப்போ நீங்க”
“நான் வருவேன்… நீ போ” என்றவன் அவளை அனுப்ப, திருதிருவென்று நின்று கொண்டே விழித்தாள்.
“என்ன நிற்கிற போ?” பரி அதிகாரமாக உரைக்க,
“தனியா போக பயமா இருக்கு… நீங்களும் வாங்களேன்” என்றாள் அவள்!
“பூனையை துரத்திட்டு வர மட்டும் பயமா இல்லையா?”
“அது ஏதோ ஒரு ஆவேசத்துல” என்று வேகமாக ஆரம்பித்து அவள் குரலில் சுருதி இறங்க அவனுக்கு சிரிப்புவந்துவிட்டது. அவளிடம் முறைப்பாக பேச அவனே நினைத்தாலும் முடியவில்லை.
“சரியான காமெடி பீஸு… சரி நீ முன்னாடி நட… நான் பின்னாடி வர்றேன்” என்று சொல்ல அவள் ஜோராக தலையசைத்துவிட்டு முன்னே நடக்க அவன் பின்னோடு நடந்துவந்தான்.
அவன் நடந்து கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து லைட்டரில் பற்ற வைக்க,
முன்னே சென்றவள் அவனை திரும்பி பார்த்து அதிர்ச்சியாகி, “இந்த பழக்கமெல்லாம் இருக்கா உங்களுக்கு” என்று முகத்தை சுளித்தாள்.
“ஏன் இருந்தா என்ன?” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே புகைக்க ஆரம்பித்தான்.
“வேண்டாம் மாமா” என்று சொல்லி அவள் பட்டென அவன் வாயிலிருந்த சிகரெட்டை பக்கத்திலிருந்த மரத்தில் தேய்த்து அணைத்துவிட்டு கீழே போட்டுவிட்டாள்.
அவளின் துடுக்கான செயலில் அவன் முகம் கோபத்தில் சிவக்க, “ஏய் அறிவிருக்கா!” என்று கடுகடுக்க அவளோ சற்றும் அசறாமல்,
“அறிவு இருக்கிறதாலதான் இப்படி பண்ணேன்” என்று பதிலுக்கு பதில் சொல்லிய அதேநேரம், “சரக்கு கூட கொஞ்சமா அடிக்கலாம்… தப்பில்லை… ஆனா சிகரெட் மட்டும் வேண்டாம் மாமா… அது உடம்புக்கு ரொம்ப கெடுதல்” என்றாள்.
“உன் சைஸுக்கு நீ எனக்கு அட்வைஸ் பன்றியா?” என்றவன் முறைக்க,
“அட்வைஸ் இல்ல… அக்கறை” என்றாள்.
“உனக்கென்ன என் மேல அக்கறை?”
“நீங்க ஆரோக்கியமா இருந்தாதானே எங்க அக்கா சந்தோஷமா இருப்பா… அந்த அக்கறைதான்” என்று தெள்ளதெளிவாக உரைத்தவளின் விழிகளில் அத்தனை நேரம் இருந்த துடுக்குத்தனமும் குழந்தைத்தனமும் தொலைந்து போய் முதிர்ச்சி தெரிந்தது.
அவன் கோபம் மறைந்து மனம் இளகியது. இத்தனை நாளாக பலரும் அறிவுரை சொல்லி கேட்காத பரிக்கு அவள் அப்படி சொன்னதும் கேட்க வேண்டும் போலிருந்தது.
அவளின் வெள்ளந்தியான புன்னகையும் வெகுளித்தனமான முகமும் அதோடு அவள் வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று விளிக்கும் விதமும் அவனுக்கு ரசனையாக இருந்தது.
நிதானமாக அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சரி வா போகலாம்” என்று உடன் நடந்து கொண்டே,
“ஆமா… நீ இப்போ என்ன பண்ணிட்டிருக்க?” என்று அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதியில் கேட்க,
“நான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு இப்போ காலேஜ் ஜாயின் பண்ண போறேனே!” என்று சந்தோஷம் பொங்க உரைத்தாள்.
“ஓ! அப்போ உனக்கு வயசு ஒரு எய்ட்டீன்தான் இருக்குமா?” என்று கேட்டவனின் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றமும் கலந்திருந்தது.
“உம்ஹும்… இல்ல… ஒரு வயசு கூட நைன்டீன்” என்று அவள் சொல்ல அவன் முகம் குழப்பமாக மாறியது.
“அதெப்படி?” என்றவன் கேட்கும் போதே அவள் எதிரே பார்த்து,
“அந்த காட்டெருமை கூட்டம் போய் இப்போ ஏதோ கழுதை கூட்டம் வருது” என்றாள்.
“என்னது?” என்று நிமிர்ந்து பார்த்த பரி சீற்றமாகி,
“உனக்கிருந்தாலும் இவ்வளவு வாய் ஆகாது… அவங்கள எல்லாம் பார்த்தா கழுதை கூட்டம் மாறியா தெரியுது” என்றான்.
“அப்போ இல்லையா? குரங்கு கூட்டமா?” என்று அவள் படுதீவிரமாகவே கேட்க அவளை முறைக்க எண்ணி தோற்று போய் சிரித்துவிட்டான். அப்போது பரியை பார்த்த அவன் நண்பர்கள் பாய்ந்துவந்து,
“எங்கடா போன… உன்னைய எங்கெல்லாம் தேடறது… யாரு என்னன்னு தெரியாத ஊர்ல விட்டுட்டு போயிட்டியோன்னு பயந்துட்டோம்… அதுலயும் இங்க இருக்க ஒருத்தன் மூஞ்சை பார்த்தா கூட சரியா படல” என்று பயந்த தொனியில் அவன் நண்பர்கள் உரைக்க,
“அய்யோ மாமா! இவங்கெல்லாம் உங்க பிரெண்ட்ஸா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
“இல்ல கழுதை கூட்டமும் குரங்கு கூட்டமும்” என்றவன் கடுப்பாய் பதிலளிக்க,
“டேய்” என்று அவன் நண்பர்கள் கோபமாக பரியை முறைத்தனர்.
அப்போது மகிழினி, “சாரி மாமா! தெரியாம சொல்லிட்டேன்… அப்பா தேடுவாங்க… நான் போறேன்” என்று சொல்லியவள், தலைதெறிக்க அங்கிருந்து ஓடியே விட்டாள்.
பரி அவள் போன திசையே பார்த்து கொண்டிருந்தான். அவன் நண்பர்களோ, “கட்டிக்க போற பொண்ணு பக்கத்தில இருக்கும் போது நாங்கெல்லாம் குரங்காவும் கழுதையாவும்தான்டா தெரிவோம்… ஹ்ம்ம் நீ நடத்து மச்சி” என்றனர்.
அவர்களை அலட்சியமாய் பார்த்த பரி, “அதுவாவாவது தெரியிறீங்களேன்னு சந்தோஷ படுங்க” என்க,
“அடப்பாவி!” என்ற அவன் நண்பர்கள் மொத்தமாக சேர்ந்த அவனை மொத்தி வைத்தனர்.
“டே விடுங்கடா” என்று கத்தியும் விடாதவர்கள்,
“பரி” என்ற அவன் அம்மாவின் அழைப்பு கேட்டு போனால் போகட்டும் என்று அவனை விட்டுவிட்டார்கள்.
இதற்கிடையில் அவன் நண்பர்கள் மகிழினியைதான் மணமகளாக நினைத்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் பரி அதை திருத்தவோ மறுக்கவோ இல்லை.
தாமரை மகனை தேடி கொண்டு வந்து, “உன்னை எங்கெல்லாம் தேடுறது பரி… போய் உடனே டிரஸ் மாத்திட்டு வா… சொந்த காரங்க எல்லாம் வந்திருக்காங்க” என்று பட்டுவேட்டியும் குங்கும சிவப்பில் ஒரு சட்டையையும் கொடுக்க,
“இதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது” என்று தடலாடியாக மறுத்தான் பரி.
“பரி கண்ணா.. ” தாமரை கெஞ்ச
“முடியாதும்மா” என்றான்.
“என் செல்லம்ல”
“முடியாதுன்னா முடியாது”
“சரி போ… உங்க அப்பா உள்ளேதான் இருக்காரு” என்று தாமரை சொன்ன அடுத்த நொடி அந்த வேட்டி சட்டை பரியின் கரத்திற்கு இடம் மாறியிருந்தது.
கலிவரதனிடமும் மட்டும் பரிக்கு கொஞ்சம் பயம்தான். அடி உதையெல்லாம் வாங்கியதில்லை எனினும் எப்போதும் கஞ்சிபோட்ட சட்டை போல விறைப்பாக சுற்றி கொண்டிருக்கும் அப்பாவை பார்த்து அவனுக்கு சிறுவயதில் தோன்றிய அச்சம்தான் இன்னும் மிச்சம் மீதியாக இருந்தது.
ஆதலால் பரி அதிகம் அப்பாவிடம் பேச கூட மாட்டான். பரி தம் உடைகளை மாற்ற சென்றிருந்த நேரம் சுசீந்திரன் வீட்டில் ஒரு பெரிய உறவினர் பட்டாளமே அமர்ந்திருந்தது.
சுசீந்திரன் மனைவி வஸந்தா முகமோ கடுகடுத்து கொண்டிருந்தது.
“அவங்க வீட்டு பொண்ணுக்குதானே கல்யாணம்… நான் ஏன் இதெல்லாம் செய்யணும்?” என்றவள் முனகி கொண்டே தன் வேலைகளை செய்தாள். இதே வார்த்தையை கணவனிடம் நேரடியாக சொன்னால் அரைதான் விழும். ஆதலால் அவள் தனக்குள்ளெயே புலம்பி கொண்டிருக்க அவர் கடுப்பு புரியாமல், “நான் இந்த புடவையை கட்டிக்கட்டுமா?” என்று கேட்ட மகளை எரிச்சலாக பார்த்தார்.
“எல்லா போட்டிருக்க டிரஸே நல்லாதான் இருக்கு… போடி… என்னவோ இவளுக்கே கல்யாணம் மாறி ஆடிக்கிட்டு இருக்கா?”
“போம்மா… நான் போட்டிருக்க டிரஸ் அழுக்காயிடுச்சு” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே சுசீந்திரன் உள்ளே வந்துவிட்டிருந்தான்.
“என்ன என்னாச்சு?” என்று கேட்க,
“ஹ்ம்ம்… புடவையை கட்டிக்கணுமா உங்க பொண்ணுக்கு… யாருக்கோ விசேஷம்… இவளுக்கு எதுக்கு இந்த சிங்காரிப்பு எல்லாம்” என்று வஸந்தி தன் மனதிலுள்ள எண்ணத்தை மறைமுகமாக சொல்ல சுசீந்திரன் மனைவியை பார்த்து முறைத்து,
“யாருக்கோவா… என் அண்ணன் பொண்ணுக்கு விசேஷம்… நான்தான் எல்லாத்தையும் எடுத்து செய்வேன்” என்றவர் மகளை பார்த்து, “நீ போய் புடவை கட்டிக்கோ” என்றார்.
மகிழினிக்கு அந்த ஒரு வார்த்தையே போதும் என்று ஓடிவிட வஸந்தி கணவனை பார்த்து, “நீங்க செய்ற மாறியே உங்க அண்ணனும் அண்ணியும் செய்வாங்களா உங்க பொண்ணுக்கு?” என்று கேட்டு நொடித்து கொண்டார்.
“வஸந்தி!” என்றவர் குரலையுயர்த்த,
“நான் எதுவும் பேசல சாமி” என்று அதோடு பேச்சை நிறுத்திவிட்டார். கணவனின் கோபத்தை தூண்டிவிட்டு அவர் அடி வாங்க விரும்பவில்லை. தப்பி கொண்டார். ஆனால் உள்ளூர அவர் மனம் ஓயாமல் கமலனையும் அவர் மனைவியையும் நிந்தித்து கொண்டுதான் இருந்தது.
விமலன் போல அல்லாது சுசீந்திரனுக்கு ஒரே மகள்தான். ஆனால் அவர் அமுதன் இளா மற்றும் சௌந்தர்யாவையும் தன் சொந்த பிள்ளைகள் போல்தான் பார்த்தார். அவர்களுக்கு தேவையானதை சுசீந்திரன் பார்த்து பார்த்து செய்ய தன் கணவனின் சாம்பாத்தியமெல்லாம் அண்ணன் குடும்பத்திற்காகவே கரைகிறதே என்று வஸந்திக்கு வருத்தம். அதுதான் தன் மூத்தாரின் மனைவி மீது கடுப்பாகவும் வருத்தமாகவும் மாறியிருந்தது.
சுசீந்திரன் வீட்டில் சொந்த பந்தங்கள் நிறைந்து அந்த இடமே கூச்சலாக இருக்க, விமலனும் அவர் மனைவி மஞ்சுளா ஒரு புறமும் கலிவரதனும் தாமரையும் மறுபுறம் அமர்ந்திருந்தனர்.
வேட்டி சட்டையில் மிடுக்கோடு நுழைந்த பரியை பார்த்து எல்லோரும் வியப்பாகினர். சினிமா படநாயகன் போல இருக்கிறான் என்று எல்லோருமே அவனின் தோற்றத்தை கண்டு அளவளாவி கொண்டிருக்க விமலனுக்கு ஒரே பெருமை. வரதனுக்கு எப்போதும் போல மகனை வளர்த்த விதத்தில் அடங்கா கர்வம்.
பரியோடு அவன் நண்பர்கள் நுழைய அவர்கள் அமர தனியாக இருக்கை அமைக்கப்பட்டது. பரி அமர்ந்த பிறகு திருமண பேச்சு வார்த்தைகள் தொடங்க அதில் எல்லாம் அவன் கவனம் துளி கூட செல்லவில்லை. ஏதோ பெயருக்கென்று அமர்ந்திருந்தான்.
அந்த ஏற்பாடு மணமகனையும் மணமகளையும் நேரில் பார்த்து கொள்ள ஏற்படுத்திய ஒரு பெயரளவிலான பெண் பார்க்கும் சடங்கு! அவ்வளவே!
அவர்கள் பேச்சுவார்த்தை முடியும் போது சௌந்தர்யா தழைய தழைய ஒர் தங்க நிற பட்டுசரிகை புடவையை உடுத்தி கொண்டு தலை நிறைய மல்லிகை பூ சூடி கொண்டு அழுகு தேவதையென வெட்கத்தோடு தலைகுனிந்து வந்து நிற்க,
“டே அந்த தோப்பில பார்த்த பொண்ணு பக்கத்தில நிற்குது… அப்போ அது கல்யாண பொண்ணு இல்லையா… அந்த கோல்ட் கலர் சேரி கட்டியிருக்கிறவங்கதான் பொண்ணா?” என்று சமீர் அதிர்ச்சியாக கேட்க அப்போதுதான் தலையை நிமிர்த்தி பார்த்தான் பரி!
அவன் சௌந்தர்யாவை பார்த்த அதேநேரம் அருகில் சிவப்பு நிற சேலையில் ஒற்றை சர மல்லி தோள் மீது தவழ தங்கநிறத்தல் மின்னி கொண்டிருந்த காந்தாள் மலராள் போல் நின்ற மகிழினியை பார்த்தான்.
இரட்டை ஜடை ஒற்றை பின்னலாக மாறியிருந்தது. சற்று முன்பு குழந்தைத்தனமாக பார்த்த அதே பெண்ணிடம் இத்தனை முதிர்ச்சியான அழகா என்று வியக்க தோன்றியது.
சின்ன பெண் என்று கொஞ்சமே கொஞ்சம் இருந்த குற்றவுணர்வு கூட இப்போது சுத்தமாக தொலைந்து போனது.சௌந்தர்யாவை பார்ப்பது போல அவன் மகிழினியைதான் பார்த்து கொண்டிருந்தான். மகிழினியை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தான்.
காந்தமாய் அவன் பார்வை அவளிடமே ஓட்டி கொண்டு நிற்க, “டே யாருடா பொண்ணு? நீ யாரடா பார்க்கிற” என்று சமீர் பல்லை கடிக்க,
“எனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவளைதான் பார்க்கிறேன்” என்றான்.
சமீர் குழப்பமாகி, “பிடிச்சுதானேடா கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்க” என்று வேதாளம் போல அவனை விடாமல் அவன் கேள்வி கணைகளை தொடுக்க,
“கொஞ்ச நேரம் மனுஷனை நிம்மதியா சைட் அடிக்க விடுறியா” என்று பரி திரும்பி நண்பனை பார்த்து முறைத்தான்.
“சைட் அடிக்கிறியா? யாரை டா?” அவன் மெல்லிய குரலில் கேட்க,
“மோகினியை… சுடிதாரை விட ஸேரி சும்மா அவளுக்கு நச்சுன்னு இருக்கு”
“அய்யோ புரியாமலே பேசுறானே… யாருடா அந்த மோகினி?”
“அவ பேர் மோகினி இல்ல மச்சி… மகிழினி? ரெட் கலர் சேரி”
“அது பொண்ணோட தங்கச்சின்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க”
“ஹ்ம்ம்ம்”
“அடேய்! இதெல்லாம் ரொம்ப தப்புடா… அப்புறம் உன் மாமன்காரனுங்ககிட்ட நீ தர்ம அடி வாங்குவ… பார்த்துக்கோ… ரெண்டு பேரும் பைல்வான் மாறி படுபயங்கரமா இருக்காணுங்க” என்ற சமீரின் வாய்முகூர்த்தம் அப்படியே விரைவில் நம் நாயகனுக்கு பளிக்கத்தான் போகிறது.
ஆனால் பரி அதை பற்றியெல்லாம் கவலையில்லாமல் தன் நண்பனை அலட்சியமாக பார்த்து, “அதெல்லாம் வாங்கும் போது பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் மகிழினியை சைட்டடிக்க தொடங்கினான்.
யாருக்குமே பரி மகிழினியை பார்ப்பதை யூகிக்க கூட முடியவில்லை. ஆனால் சுசீந்திரன் மட்டும் தெள்ளத்தெளிவாக கவனித்துவிட்டார்.
‘இவ என்ன நம் பொண்ணையே பார்த்துட்டு இருக்கான்’ என்று சந்தேகம் உதித்தது அவருக்கு!
3
உயிர் கொல்லி நண்பன்
சுசீந்திரன் பரியை தீவிரமாக நோட்டமிட அதை எப்படியோ கவனித்துவிட்ட சமீர் நண்பனை எச்சரிக்கை செய்தான்.
“டே மச்சான்! உன் எதிர்காலம் எனக்கு இப்பவே நல்லா தெரியுது” என்று அவனிடம் ரகசியமாக சொல்ல,
“என்னடா உளற?” என்று புரியாமல் கேட்டான் பரி!
“அவசரப்படாம கொஞ்சம் பொறுமையா திரும்பி பாருடி… உன் மாமன் உன்னையேதான் பார்த்திட்டிருக்கான்… அவரு மீசை வேற பயங்கரமா துடிக்குது… இங்கேயே நீ கைமாதான் நினைக்கிறேன்” என்று அவன் எதிர்காலத்தை படித்தது போல் சொன்னான் சமீர்.
பரி கொஞ்சமும் அசறாமல் ஓரபார்வையால் தன் மாமனை பார்த்துவிட்டு, சில நொடிகளில் அந்த இடத்தின் காட்சியையே மாற்றிவிட்டான். ஓரே ஒரு வரிதான் சொன்னான்.
“நான் பொண்ணு கூட தனியா பேசணும்” என்று!
அங்கே இருந்த குழுமிய கூட்டத்திலுள்ள அனைவரும் அவனை ஒவ்வொரு விதமாக பார்த்தனர். இதில் அவர்களுக்குள் ரகசிய பேச்சுவார்த்தை வேறு!
சுசீந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையே சுற்றியது. தான்தான் ஏதோ தவறாக புரிந்து கொண்டோமோ என்று யோசிக்கும் போது அவரின் தமையன் விமலன், “மாப்பிள்ளை இப்படி கேட்கிறாரு… என்னடா தம்பி சொல்றது? அதுவும் சொந்த காரங்க எல்லாம் ஒண்ணா கூடி இருக்கும் போது” என்று யோசனை செய்து தயங்கி கொண்டிருந்தார்.
கலிவரதன் அப்போது தாமரையை பார்த்து, “உன் பையன் அடங்கவே மாட்டானா…அதான் போன்ல மணிக்கணக்கா சௌந்தர்யாகிட்ட பேசுறானே… அப்புறம் எதுக்கு இப்ப தனியா அவனுக்கு பேசணும்” என்று கடுப்படித்து கொண்டிருந்தார்.
“பொண்ணை நேர்ல பார்த்து பேசணும்னு அவனுக்கும் ஆசை இருக்காதாங்க” என்று தாமரை மகனுக்காக பரிந்து பேசி கொண்டிருக்கும் போதே கலிவரதன் மனைவியை முறைத்து வைக்க, அவர் பட்டென தன் வாயை மூடி கொண்டார். இவர்கள் எல்லோரும் அரசல் புரசலாக பேசி கொண்டிருக்க, சமீருக்கு விவாகரமான ஓர் சந்தேகம் உதித்தது.
“டே! நீ எந்த பொண்ணுக்கிட்ட தனியா பேச போற… முதல அதை சொல்லு” என்று கேட்டு வைக்க, பரி விஷமமான புன்னகையோடு அவனை பார்த்தான்.
“இவன் அடி வாங்கறது இல்லாம நம்மலயும் சேர்த்து அடி வாங்க வைப்பான் போல இருக்கே” என்று சமீர் புலம்பி கொண்டிருக்க, அங்கே நிலுவிய உறவினரின் சலசலப்பை அடக்கியது போல ஓர் பாட்டியின் குரல் ஓலித்தது.
“அட! என்னப்பா நீங்க… இதுக்கு போய் இம்புட்டு நேரம் யோசிச்சிக்கிட்டு… புள்ளைய அனுப்பிவிடுங்க… மாப்பிள்ளை தனியா பேசட்டும்… எங்க காலத்துலதான் இப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கல” என்று கம்பீரமாக ஆரம்பித்து அவர் புலம்பலோடு முடிக்க, பரி முகமெல்லாம் புன்னகை வழிந்தோடியது.
“பாட்டி! நீங்க செம டிரெண்டிங்கான ஆளு… சூப்பர்” என்று பாராட்டி பாட்டியின் டொக்கு விழுந்த கன்னத்தை கிள்ளி வைத்தான்.
அந்த காட்சியை பார்த்த அங்கிருந்த எல்லோரும் ஒரே மொத்தமாக சிரிக்க, அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.
“நீ பாட்டியை கூட விட்டு வைக்க மாட்டியாடா?” என்று சமீர் அவனை கலாய்த்து வைக்க, அவனை கடுப்பாக முறைத்துவிட்டு அனுமதி கிடைத்த சந்தோஷத்தில் சௌந்தர்யாவோட தனியாக பேச சென்றான் பரி!
அந்த வீட்டின் பின்வாயிலில் அமைந்த தோட்டத்தில்தான் அவர்கள் தனியாக பேச அனுப்பி வைக்கப்பட்டனர்.
‘நானும் வரவா?’ என்று கெஞ்சி கேட்ட தங்கையை சாமர்த்தியமாக கழற்றிவிட்டுவிட்டு சென்றாள் சௌந்தர்யா!
இன்னொரு புறம் சொந்தங்கள் எல்லாம் மெல்ல மெல்ல களைந்து செல்ல, பாட்டிகள் கூட்டங்கள் சுற்றி அமர்ந்து கொண்டு, ‘மாப்பிள்ளை அப்படி என்ன பேசுவாரு?’ என்று சிரித்து பேசி வெட்கப்பட்டு கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை பார்த்த சமீர், “ஐயோ! ஐயோ!” என்று தலையிலடித்து கொண்டு தன் நண்பர்களோட வெளியே வர, பெரிய தூண் போல வழிமறித்து நின்றார் சுசீந்திரன்.
அவர் முகத்தை பார்த்ததும் சமீருக்கு வயிற்றிலிருந்து தொண்டை வரை ஏதோ பெரிதாக மேலும் கீழுமாக உருண்டது.
“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சுசி அழுத்தமாக சொல்ல,
‘அவன் பொண்ணு கூட்டிக்கிட்டு தனியா பேச போனா இந்த ஆளு என்ன நம்மல கூப்பிடுறான்… டேய்! பரி இப்படி சிக்க வைச்சிட்டியே டா’ என்று மனதில் புலம்பி தீர்க்க,
“கொஞ்சம் அப்படி வர்றீங்களா?” என்று சொல்லிவிட்டு சுசி கூட்டமில்லாத இடமாக தள்ளி சென்று நின்றார்.
“நீ போய் பேசிட்டு வாடா… நாங்கெல்லாம் ரூமுக்கு போறோம்” என்று அவன் நண்பர்கள் எல்லாம் சாமர்த்தியமாக கழண்டு கொள்ள,
“அடப்பாவிங்ளா… டேய் இருங்கடா” என்று அவர்கள் பின்னோடு ஓட பார்த்த சமீரின் பின்பக்கம் வலிய கரம் பற்றியது. அவன் திரும்பி பார்த்து அதிர்ந்துவிட,
சுசீந்திரனின் ஆள் ஒருவன் நின்று கொண்டு, “ஐயா! காத்திட்டிருக்காரு போங்க” என்று படுபயங்கர குரலோடு மீசையை நீவி கொண்டே உரைத்தான்.
அவனை பார்த்ததும் பகீரென்றது சமீருக்கு!
‘இவன் என்ன கரடிக்கு காண்டாமிருகம் வேஷம் போட்ட மாறி இருக்கான்’ என்று சமீர் பயந்து கொண்டே வேறுவழியின்றி சுசீந்திரன் முன்னே வந்து நின்று,
“பேன்ன எசனும்? சீ… என்ன பேசணும்” என்று வார்த்தைகளை குழறி கொண்டே பேச,
சுசீந்திரன் சுமுகமாக அவன் தோளில் கை போட்டு கொண்டு, “எதுக்கு பயப்படுறீங்க தம்பி? சும்மா மாப்பிள்ளை எப்படி என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்… உங்ககிட்ட பேசணும்னு சொன்னேன்” என்று அவனை மெல்ல நடத்தி கொண்டே கேட்டார்.
சமீர் எச்சிலை விழுங்கி கொண்டான்.
“ஆமா! மாப்பிள்ளை பழக்கம் வழக்கமெல்லாம் எப்படி?” என்று சுசீந்திரன் அவனிடம் கேட்க,
“பரி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்” என்றான்.
“ரொம்ப குடிப்பாரா?” சுசீந்திரன் அடுத்த கேள்விக்கு வர,
“சும்மா எப்பயாச்சும் பிரெண்ட்ஸ்லாம் சேர்ந்தா பீர் அடிப்போம்… நாங்கெல்லாம் அதிகமா அடிச்சாலும் அவன் கொஞ்சமாதான் காபி டீ மாறிதான் குடிப்பான்” என்று நண்பனுக்காக அசராமல் பொய்யுரைத்தான் சமீர்!
“பொண்ணுங்க விஷயத்தில” என்று சுசி கேட்டு அவனை ஓரப்பார்வை பார்க்க,
“ஐயோ பரி! பொண்ணுங்க மூஞ்சை பார்த்தே பேசவே மாட்டானே!” என்று சமீர் சூசகமாக சொல்ல, சுசி அவனை ஆழ்ந்து பார்த்தார்.
“இல்ல… அந்தளவு பொண்ணுங்க விஷயத்தில நல்லவன்… நாலு தெரிஞ்சவன்” என்று சொல்லும் போதே கடைசியில் நல்லவனுக்கு பிறகான வார்த்தைகளை மனதிற்குள்ளேயே சொல்லி கொண்டான்.
“ஓ!” என்ற சுசீந்திரன் பார்வை அவனை நம்பவில்லை என்பது புரிய, “நான் போகட்டுமா சார்” என்று படபடப்பாக கேட்டான் சமீர்!
“இருங்க போகலாம் தம்பி” என்றவன் சமீரை மெல்ல பின்னோடு இருந்த தோப்பிற்கு நடத்தி அழைத்து வந்திருக்க, பகலிலும் கூட அந்த இடம் கொஞ்சம் பயங்கரமாகத்தான் காட்சியளித்தது.
சுசீந்திரன் பின்னோடு வந்த ஆட்களிடம், “என்னடா மண்ணை கிளறி உரம் வைக்க சொன்னனே வைச்சிட்டீங்களாடா?” என்று மிரட்டலாக கேட்க, சமீருக்கு சுசியின் பேச்சில் பயத்தில் உடல் நடுக்கமுற்றது.
“இல்லைங்க ஐயா… நாளைக்கு வைச்சுடுறோம்”
“சரி… பார்த்து வையுங்க… கிளறும் போது ரொம்ப ஆழமா கிளறாடாதீங்க… உள்ளே இருக்க பிணம் கிணம் வெளிய வந்திர போகுது” என்று சுசீந்திரன் அசாதாரணமாக சொல்ல, சமீரின் விழிகள் வெளியே வந்து விழுந்துவிடுமளவுக்கு பெரிதானது.
அப்போது அவரின் ஆட்களோ, “அதெல்லாம் ஆழமா கிடக்கும்… வெளியே எல்லாம் வராது… வந்தாலும் திரும்பி உள்ளே போட்டிரலாம்” என்றான்.
‘பிணத்தை போடறதை பணத்தை பேங்க்ல போடற மாறி அசால்ட்டா சொல்றான்… அடப்பாவிங்களா!’ என்று எண்ணி சமீர் வியர்வையில் நனைந்திருக்க
சுசீந்திரன் அவன் முகத்தை பார்த்து, “என்ன தம்பி பயந்துட்டீங்களா?… அரசியலில் இதெல்லாம் சாதாரணம்… அதுவும் எனக்கு இந்த பொய்யெல்லாம் சொன்னா பிடிக்கவே பிடிக்காது… அப்படியே எவனாச்சும் என்கிட்ட கோக்கு மாக்கு வேலை பண்ணா…
சோலியை முடிச்சு அவனை குழி தோண்டி புதைச்சிடுவேன்… அப்புறம் அது மேல செடியை நட்டுடுவோம்… நாடு பசுமையா இருக்கணும் இல்ல” என்று ஈவு இரக்கமே இல்லாமல் சொன்ன சுசீந்திரனை பார்த்து குலை நடுங்கியது சமீருக்கு!
‘அடப்பாவி! எம்புட்டு மரத்தை நட்டு வைச்சிருக்கான்…அடேய் பரி… நீயும் கூடிய சீக்கிரம் இங்க மரமாக போற போல… ஐயோ! துணைக்கு நம்மலயும் கூட்டு சேர்த்துப்பானோ?!’ என்று மைன்ட் வாய்ஸில் பேசி கொண்டிருந்த சமீருக்கு நடந்தது கனவா நினைவா என்றே விளங்கவில்லை.
“டேய்! சமீர்” என்று பரி அவன் தோளை தொடும் போதுதான் அவன் ஏதோ மாயை உலகத்திற்குள் திரும்பி வந்தது போல் பேய் முழி முழித்தான்.
தான் எப்போது அறைக்கு வந்தான் என்பதே தெரியவில்லை சமீருக்கு! அவன் நண்பர்கள் எல்லோரும் சுற்றி அமர்ந்து அவனை ஆராய்ச்சியாக பார்த்து,
“ஒரு வேளை நேசமணி சித்தப்பா தலையில சுத்தியல் விழுந்த மாறி இவன் தலையிலயும் ஏதாச்சும் விழுந்திருக்குமோ?!” என்று தீவிரமாக ஆலோசித்து கொண்டிருந்தனர்.
சமீரை அவர்கள் எல்லோரும் உலுக்கி பின் பலவகையாக ஆட்டி பார்த்தும் அவன் ஒரு ரியாக்ஷன் கூட இல்லாமல் இருந்தான்.
அப்போதும் அவனின் உயிர் (கொல்லி) நண்பன் பரியின் குரல் கேட்கவும்தான் அடித்து பிடித்து பதறி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
4
சந்தேகம்
சமீர் அதிர்ச்சி நிலையிலிருந்து வெளியே வந்து… பரியை பார்த்த அடுத்த நொடி, “போடாங்க ஆஆஅ… நீயும் உன் நாசமான போன பிரெண்ட்ஷிப்பும்” என்று கடுப்பாக சொல்லிவிட்டு,
“நான் இப்பவே ஊருக்கு போறேன்… சரியான கொலைகார குடும்பம்டா இது… பிணத்தை புதைச்சு மரத்தை நடுவாய்ங்களாமே!” என்று தாமாக புலம்பி கொண்டே தன்னுடைய பையில் துணிகளை உள்ளே திணித்தான் சமீர்.
“டேய் சமீர்!” என்று பரி அழைக்க, அவனை கண்டுக்கொள்ளாமல்,
அங்கே தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றிருந்த தன் நண்பர்களின் கூட்டத்தை பார்த்து, “ஒழுங்கா எல்லாம் என் கூடவே கிளம்பிடுங்க… இல்ல இவனோட கொலைகார மாமன் நம்மல எல்லாம் இங்கிருக்க தோப்பில மரமா நட்டுடுவான்…சொல்லிட்டேன்” என்றான் எச்சிரக்கையோடு!
சமீரின் வார்த்தைகளை கேட்டு மற்ற நண்பர்களுக்கும் பீதி கிளம்ப, “சமீர் சொல்றதை பார்த்தா எங்களுக்கும் பயமாத்தான் இருக்கு மச்சான்… நாங்களும் கிளம்புறோம்” என்று அவரவர்கள் தத்தமது பெட்டி பைகளை கைகளில் தூக்கி கொண்டு புறப்பட எத்தனித்தனர்.
பரி உச்சபட்ச கோபத்தோடு சமீரின் பையை பிடுங்கி வீசிவிட்டு, “அட.. ச்சீ த்தூ… இப்ப எதுக்கு ஓவரா சீனை போட்டுட்டு இருக்க” என்க,
“சீனை போடுறேனா… நீ பாட்டுக்கு என்னை தனியா விட்டுட்டு போயிட்ட… உன் மாமன் என்னை அந்த தோப்பு பக்கம் கூட்டிட்டு போய் என்ன பேச்சு பேசுனா தெரியுமா? எனக்கு குலையே நடுங்கி போச்சு… அதுவும் மரமா நட்டிருவேன்னு எல்லாம் மிரட்டிறான் டா… அவ்வ்வ்வ்!
நான் என் வீட்டுக்கு நாலாவது பையன்?” என்று சொல்ல பரி கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்துவிட்டான்.
அப்போது அவன் நண்பர்களில் ஒருவன் சமீரிடம், “நாலாவது பையனா… டே! இந்த டைலாக்ல ஒரே பையன்னுதான் சொல்லி நான் கேள்வி பட்டிருக்கேன்” என்றான்.
“ஏன்… நாலாவது புள்ளயா இருந்தா சாவனுமாடா… எந்த ஊரு நியாயம்டா இது?” என்று சமீர் பரிதாபமாக கேட்க,
பரி சிரித்து கொண்டே, “நீ சொல்றதெல்லாம் கரெக்ட்தான் மச்சி… ஆனா என் மாமன் பேசுனதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே… சும்மா மிரட்டிறான் அந்த ஆளு” என்றான்.
“எனக்கு அப்படி தெரியல… நான் கிளம்பிறேன்” என்று சமீர் மீண்டும் தன் பையை எடுக்க,
“சொல்றது கேளுடா… இன்னும் ரெண்டே நாள்… நம்ம எல்லோரும் ஒன்னாவே கிளம்பலாம்… பேகெல்லாம் ஓரமா வையுங்க” என்று தன் நண்பர்களிடமும் சமீரிடமும் நிதானமாகவே உரைத்தான் பரி.
அவன் நண்பர்கள் எல்லாம் யோசனையாக தயங்கி நிற்க சமீர் தெளிவாக, “உளராதடா… உனக்கு கல்யாணமே நாலு நாள் கழிச்சுதான்… அப்புறம் எப்படிறா நீ ரெண்டு நாளில எங்க கூட வர முடியும்?” என்று கேட்க,
“அதெல்லாம் ஏன் எப்படின்னு கேட்க கூடாது… வருவேன்… அவ்வளவுதான்… எல்லோரும் இங்க இருக்கிற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு கிளம்புவோம்” என்றான்.
“ஜாலியா இருக்கிறதா… அடப்பாவி! எவன் எப்போ என்ன பண்ணுவான்னு தெரியுமா நாங்க எப்படிறா ஜாலியா இருக்கிறது?” என்று சமீர் புலம்பி கொண்டே தலையை பிடித்து தரையில் அமர்ந்து கொள்ள,
பரி தீவிரமான யோசனையோடு அறையை விட்டு வெளியே வந்து சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தான். அவன் பாட்டுக்கு புகையை விட்டு கொண்டிருக்க,
அப்போது கொலுசு சத்தம் ரீங்காரமிட மகிழினி படியேறி வருவதை கவனித்த பரி அவசரமாக தன் சிகரெட்டை பின்னோடு மறைத்து சுவற்றில் தேய்த்துவிட்டு கீழே போட்டுவிட்டான்.
அவள் நேராக அவனை நோக்கித்தான் வந்து கொண்டிருந்ததாள். பரியின் பார்வை அவளை முழுவதுமாக மனதில் நிறைத்து கொள்ள அவளோ நேராக அவனிடம் வந்து நின்று,
“மாமா! உங்களையும் உங்க பிரெண்டசையும் கீழே சாப்பிட கூப்பிட்டாங்க… வாங்க” என்று சொல்லிவிட்டு இறங்க போனாள்.
பரி அவளை அழைக்க எண்ணும் போது அவளாகவே மீண்டும் திரும்பி வந்து நின்று தன் மூக்கை உள்ளுக்காக இழுத்து பார்த்துவிட்டு, “சிகரெட் பிடிச்சிட்டு இருந்தீங்களா?” என்று கேட்க,
“சேச்சே… என் பிரெண்ட் சமீர் புடிச்சிட்டு இருந்தான்” என்று ஒரு அப்பட்டமான பொய்யை அவன் சொல்லி முடிக்கும் போது சமீர் அறை வாசலில் வந்து நின்றிருந்தான்.
‘அடப்பாவி! இப்படி வாய் கூசாம பொய் சொல்லிட்டு இருக்கானே… எனக்கு சிகரெட் புடிக்கிற பழக்கமே இல்லையே டா!’ என்றவன் பொருமி கொண்டு நிற்க, பரி சொன்ன பதிலை கேட்டு அமைதியாக திரும்பி நடந்தாள் மகிழினி!
எதற்காகவும் யாருக்காகவும் தன் பழக்கவழக்கத்தையும் குணத்தையும் விட்டு கொடுக்காத தாமா இப்படி இவளிடம் நடந்து கொள்கிறோம் என்று பரிக்கு தனக்குத்தானே ஆச்சர்யப்பட்டு கொண்டான்.
அவன் இந்த சிந்தனையோடு அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்க சமீர் அங்கே வந்து, “அட ச்சே!… இந்த மாறி மொக்க சீன் எல்லாம் தமிழ் சினிமால நிறைய பார்த்துட்டேன்… ஓவரா பண்ணாதே” என்று நண்பனிடம் கடுப்பாக உரைத்தான்.
“இல்ல மச்சான்… நிஜமாவே இவகிட்ட மட்டும் எனக்கு டிஃப்பெரண்ட் ஃபீல் வருது” என்று பரி உணர்வுகள் பொங்க சொல்ல,
“டே டே டே… உனக்கு அழகான பொண்ணுங்களை பார்த்தா எந்த மாதிரி ஃபீல் வரும்னு எனக்கு நல்லா தெரியும்டா” என்று நண்பனை வாரிய சமீர் மேலும், “டே! உன் காலில் வேணா விழுறேன் மச்சி! உன் கோக்கு மாக்கு வேலையெல்லாம் இந்த பொண்ணுகிட்ட மட்டும் வைச்சுக்காதே… அவங்க அப்பன் உனக்கு பாடை கட்டிறானோ இல்லையோ எனக்கு கட்டிடுவான்” என்றான்.
பரி நண்பன் சொல்வதை கேட்டு மௌனமாக நிற்க அப்போது சமீர் அவனிடம், “சரி சரி… கேட்கணும்னு நினைச்சேன்… அந்த பொண்ணை கூட்டிட்டு போனியே… தனியா என்ன பேசுனே?!” என்று ஆர்வமாக வினவ,
பரி மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிடு… சாப்பிட கூப்பிட்டாங்க… எல்லோரும் கீழே போலாம்” என்று சொல்லிவிட்டு அவன் முன்னே சென்றான்.
‘இவன் எதையோ மறைக்கிறான் போலவே’ என்று சமீர் எண்ணி குழப்பமற்றான். அதேநேரம் நண்பர்களை அழைத்து கொண்டு சமீர் கீழே உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றான். பரி அங்கே ஏற்கனவே ஆஜாராகி இருக்க மாப்பிள்ளை என்பதால் எல்லோரும் அவனுக்கு எந்த குறையுமில்லாமல் உபசரிப்பதில் பரபரப்பாக இருந்தனர்.
அங்கே இருந்த மகிழினியை பார்த்த சமீர் நண்பன் அருகில் அமர்ந்து கொண்டே, “டே ப்ளீஸ் டா… சாப்பிடுற வேலையை மட்டும் பாரு” என்று அறிவுறுத்த, அதற்கு முன்னதாகவே பரி தான் பார்க்க வேண்டிய வேலையில் தீவிரமாக இறங்கியிருந்தான். மகிழினியை பார்த்து ஜொள்ளு விடுவது!
அப்போது ஒற்றுமைக்கு அரத்தமே தெரியாத ஓரகத்திகள் இரண்டு பேரும் முறைத்து கொண்டே உணவுகளை பரிமாற அவர்கள் கூடவே சிலர் வரிசையாக எல்லோர் இலையிலும் பரிமாறி கொண்டு வந்தனர்.
பரி அவர்கள் வைத்த உணவு வகைகளை, ‘போதும் போதும்’ என்று சொன்னவன், மகிழினி அருகில் வரவும் அப்படியே தலைகீழாக மாறி போனான்.
அவள், “போதுமா? போதுமா?” என்று கேட்க இவனோ, “இன்னும் வேண்டும் வேண்டும்” என்று கேட்டு வாங்கி கொண்டான்.
மகிழினி புரியாமல், “உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்க, “ஹம்ம்” என்று மயக்கத்தில் தலையை மட்டும் அசைத்தான்.
அவள் சென்ற பிறகு சமீர் தன் நண்பனின் பின் மண்டையிலேயே போட்டு, “அவ என்ன வைச்சிட்டு போயிருக்கான்னு உன் இலையில பாரு” என்க,
அப்போதே குனிந்து பார்த்தவன், “என்னடா இது இவ்வளவு பீன்ஸ் பொரியல் … இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா?” என்று முகத்தை சுளித்தான் பரி.
“நீதானே இன்னும் வேணும் இன்னும் வேணும்னு கேட்ட… அப்ப நீதான் இதை தின்னாகணும்” என்க,
“என் நண்பன் இருக்கும் போது எனகென்ன கவலை?” என்று அவன் இலையிலிருந்த பீன்ஸ் பொரியலை அப்படியே சமீரின் இலைக்கு இடமாற்றினான்.
“அடப்பாவி டேய்! இதெல்லாம் என் ஜென்மத்தில நான் சாப்பிட்டதில்ல… மட்டன் சுக்கா சிக்கன் டிக்கான்னு வெரைட்டி வெரைட்டியா சாப்பிட்ட என்னை இப்படி வரட்டி மாறி பச்ச பச்சயா சாப்பிட வைக்கிறானே… நல்லா இருப்பியாடா நீ” என்று சாபம் விட்டு கொண்டே சமீர் சாப்பிட பரியோ மகிழினியை நோட்டம் விட்டு கொண்டே சாப்பிட்டான்.
அவ்வப்போது சமீர் வடிவேல் பாணியில் தரையை தொடை டா ரேஞ்சுக்கு, “இலையை பார்த்து சாப்பிடுடா?” என்று சொல்லி சொல்லி கடுப்பாகி நொந்து போயிருந்தான்.
“சாப்பிட்டு முடிச்சாச்சு இல்ல… எழுந்திரு” என்று சமீர் சொல்ல,
“இருடா மகிழினி கையில என்னவோ இருக்கு” என்று எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தான் பரி!
“அது ஊருகாடா?” என்று சமீர் உச்சபட்ச டென்ஷனோடு சொல்ல, “சரி அதையும் கொஞ்சம் தொட்டுக்க்கலாம்” என்று இழுத்தான் பரி!
“ஏன்? அவளை பினாயில் ஒரு லோட்டா எடுத்துட்டு வர சொல்றேன்… அதையும் வாங்கி குடியேன்… சீ எழுந்திருடா” என்று சமீர் கடுப்படிக்க பரியும் எழுந்து கை அலம்பி கொண்டு திரும்பினான்.
அதற்குள் சமீர் அங்கே உணவு பரிமாறி கொண்டிருந்த மகிழினியிடம், “ஒரு நிமிஷம் சிஸ்டர்… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்க, அவள் புரியாமல் என்ன என்பது போல் அவனை பார்த்தாள்.
சமீர் அப்போது, “நீங்க நெக்ஸ்ட் டைம்ல இருந்து சாப்பாடு பரிமாறும் போது இந்த வடை ஸ்வீட் பாயசம் இப்படிஎதாச்சும் பரிமாறுங்க… இந்த பீன்ஸ் கூட்டு இதெல்லாம் வேண்டாம்” என்று அவன் பரிதாபமாக உரைக்க,
“ஏன் ண்ணா?” என்பது போல் மகிழினி குழப்பமாக கேட்டாள்.
“கஷ்டமா இருக்கு… சத்தியமா என்னால முடியல ம்மா” என்று சமீர் வேதனையோடு சொல்லி கொண்டிருக்கும் போதே பரி அவன் தோளை பற்றி இழுத்து கொண்டு வந்தான்.
“என்னடா சொல்லிட்டு இருந்த?”
“என் கஷ்டத்தைதான்… இனிமே உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடவே மாட்டேன்டா நான்!” என்று புலம்பி கொண்டே வந்த நண்பனிடம்,
“அதில்ல டா மச்சான்… என்னவோ நான் பார்த்த பொண்ணுங்களையே இவ கிட்ட மட்டும் ஸ்பெஷலா என்னமோ இருக்கு… அப்படியே மேக்னட் மாறி என்னை கட்டி இழுக்கிறா?” என்று பரி மகிழினியை திரும்பி பார்த்து மயக்கத்தோடு சொல்லி கொண்டு வர,
“இழுக்குறளா… அப்படியே போயிருடா… அவங்க அப்பன் அப்படியே கட்டி உன்னை குழில இறக்கி மண்ணை போட்டு அது மேல செடியை நட்டிருவான் சொல்லிட்டேன்” என்று சமீர் தாங்க முடியாத எரிச்சலோடு சொல்லி முடிக்கும் போது விமலனும் சுசீந்தரனும் ஒன்றாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.
“ஐயோ! காண்டாமிருகம்… அதுவும் டுயுள் கெட் அப்ல” என்று சமீர் பம்மி கொண்டு பரி பின்னோடு போய் ஒளிந்து கொண்டு நின்றான். அப்போது பரியை நெருங்கிய விமலன் ரொம்பவும் இயல்பாக, “சாப்பாடு எல்லாம் நல்லா இருந்துச்சா மாப்பிள்ளை?” என்று உபசரணையாக கேட்க,
“அவன்… என்ன சாப்பாடையா சாப்பிட்டான்” என்று சமீர் பின்னோடு நின்று ரகசியமாக நண்பனை கலாய்த்து கொண்டிருந்தான்.
ஆனால் பரி சொன்னதை காதில் வாங்காமல் ஒரு மழுப்பல் சிரிப்போடு, “நல்லா இருந்துச்சு” என்று விமலனை பார்த்து சொல்லிவிட்டு, “மாமா” என்று சுசீந்தரனை பார்த்து கள்ளத்தனமாக புன்னகையோடு சொல்லி கண்சிமிட்ட,
‘அடப்பாவி… இவன் வம்பை வான்ட்டடா ஆர்டர் பண்ணி வாங்குவான் போல இருக்கே… சமீர் எஸ்கேப்” என்று சொல்லி அப்போதே நழுவி சென்றுவிட்டான் சமீர்!
பரி பேசியது விமலனுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. “சரிங்க தம்பி… சாயந்திரம் கோவிலுக்கு போனோம்… நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என்று விமலன் பரிவாக சொல்ல, “சரிங்க” என்று பரி விமலனை பார்த்துவிட்டு, “மாமா” என்று சுசீந்திரனை பார்த்து அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
விமலன் பரி பேசியதை கூர்ந்து கவனிக்காமல், “சரி வா தம்பி சாப்பிடலாம்” என்று சுசீந்தரனை அழைத்துவிட்டு உள்ளே செல்ல, சுசீந்திரனுக்குத்தான் பரியின் செயல்பாடுகள் ஒன்றும் சரியாகப்படவில்லை. அவன் மனதில் வேறெதோ எண்ணம் வைத்து கொண்டிருக்கிறான் என்று ஆழமாக சந்தேகித்தார்.
5
கொலைவெறி
சுசீந்திரனால் பரியை குறித்து எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை. அவனை பற்றி தம்முடைய ஆட்களை வைத்து அவர் விசாரிக்க சொல்லியிருந்தார். ஆனால் அவருக்கு பெரிதாக அதனாலும் உபயோகமில்லை. அவர் எதிர்ப்பார்த்தளவுக்கு எந்தவித தவறான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனால் அவனின் நடவடிக்கையில் பார்க்கும் போது அவருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே போனது.
அதுவும் மகிழினியை அவன் பார்க்கும் பார்வையே சரியில்லையென்று தோன்றியது. அதை எப்படி தன் தமையனிடம் சொல்வது என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார். அதுவும் அவர்களின் அண்ணன் தம்பி உறவுக்குள் எந்தவித விரிசல்களும் வருவதை சுசீந்திரன் விரும்பவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அதுதான் அவரின் முக்கிய கவலையும் கூட. பரியை சௌந்தரியாவிற்கு பேசி இருக்கும் போது அவன் இப்படி மகிழினியை நோட்டம்விட்டால் அது தமையனின் மகளின் வாழ்விற்கு பிரச்சனை என்பதோடு அல்லாமல் தனக்கும் தமையனுக்குமான உறவையும் சேர்த்தே பாதித்துவிடும் என்று அஞ்சி கொண்டிருந்தார்.
ஆனால் இது குறித்தெல்லாம் பரிக்கு கொஞ்சமும் அக்கறையில்லை. அவனின் எண்ணமும் பார்வையும் முழுவதுமாக மகிழினி மீதுதான்! சமீர் அவனை பலமுறை எச்சிரிக்கை செய்தும் அவன் அடங்கியப்பாடில்லை.
சமீருக்கே தன் நண்பனின் செயல்பாடுகள் இயல்பை விடவும் ரொம்பவும் வித்தியாசமாக இருப்பதாக தோன்றியது. அதுவும் அவனுக்கு திருமணம் பேசி முடித்த சௌந்தரியாவிடம் ஆசையாக அவன் பார்த்து பேசுவதாக கூட தெரியவில்லை. ஆனால் அதேநேரம் அவனே சௌந்தர்யாவிடம் இயல்பாக பேசி சிரிப்பதும் கூட உண்டு. இருப்பினும் அவன் உணர்ச்சி ததும்ப காதலோடு பார்ப்பதெல்லாம் மகிழினியை மட்டும்தான்.
அலுவலகத்தில் கூட பெண்களை அவன் பின்னே சுற்றவிட்டுத்தான் பரிக்கு பழக்கம். அந்த வகையில் அவன் தன் இயல்பு தன்மையிலிருந்து மகிழினி விஷயத்தில் ரொம்பவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறான் என்றே தோன்றியது சமீருக்கு.
அது மட்டுமல்லாது அவர்கள் வீடு முழுக்கவும் கல்யாண கலை கட்ட தொடங்கியிருந்தது. குலதெய்வம் கோவிலில் பத்திரிக்கை வைத்து வழிப்பாடு. உறவினர்களின் வருகை. பந்தக்கால் நடப்பட்டு மாப்பிள்ளை பெண்ணிற்கு நலங்கு என்று எல்லாமே அத்தனை கோலாகலமாக கலாட்டாவாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஆனால் பரி இது எதிலும் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை என்பதை அவன் முகமே காட்டி கொடுத்தது. திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷம். மணமகன் மணமகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் ரொம்பவும் சிறப்பான அழகிய நாட்கள்.
ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை கொஞ்சமும் அனுபவிக்காத நண்பனை கண்டு கோபம் கொள்வதா அல்லது பரிதாபம் கொள்வதா என்று சமீருக்கு புரியவில்லை. இது குறித்து நேரடியாக நண்பனிடம் கேட்டுவிட வேண்டுமென்று முடிவோடு, அன்று இரவு தனியாக அறையின் வாசலில் சிந்தனையில் அமர்ந்திருந்த பரியிடம் சென்றான்.
“டே மச்சி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சமீர் சொல்ல,
“நாளைக்கு கிளம்பிடாலாம் மச்சி… நீ டென்ஷனாகாம போய் தூங்கு” என்றான்.
“கிளம்பறது ஒருபக்கம் இருக்கட்டும்… நீ உன் மனசுல என்னதாண்டா நினைச்சிட்டு இருக்க?” என்றவன் நண்பனிடம் காட்டமாக வினவ,
“என்ன?” என்று பரி புருவத்தை நெறித்தான்.
“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா நீ முதலயே உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி இருக்கணும்… அதை விட்டுட்டு இங்க வந்து கல்யாண பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்டா” என்று சமீர் கோபமாக சொல்ல,
“கொஞ்சம் பொறுமையா பேசுடா” என்று பரி அவனை அடக்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
அதன் பின் பரி வேகமாக சமீரை அறைக்குள் இழுத்துவந்து கதவையடைத்தான். இத்தனை நாள் இல்லாமல் இன்று பரி முகத்தில் கலவரம் குடிகொண்டிருந்ததை பார்க்க சமீருக்கு வியப்பாக இருந்தது.
அறைக்குள் அவர்களின் நண்பர்கள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.
“என்ன பேசணும் உனக்கு… இப்ப சொல்லு” என்று பரி கேட்க,
அவனின் முகபாவனைகளை ஆழ்ந்து பார்த்த சமீர் எள்ளிநகையாடி,
“நீயா மச்சி பயப்படுற… அப்பட்டமா பொண்ணோட தங்கச்சியை எல்லோர் முன்னாடியும் சைட் அடிச்சிட்டு… அதுவும் அவங்க ரவுடி அப்பன் முன்னாடியே” என்று கேட்டு மேலும் சிரித்தான்.
“எனக்கு அவளை பிடிச்சிருக்கு… நான் அவளை பார்த்தேன்… எப்படி பார்த்தாலும் அவளும் எனக்கு மாமன் பொண்ணுதானே” என்றான்.
“சரிதான்டா… அப்போ அவளை கட்டிக்கிறேன்னு எல்லோர் முன்னாடியும் சொல்லிட வேண்டியதுதானே!”
“எதுக்கு அவசரம்? அவ இப்பதான் காலேஜ் சேர போற… படிச்சி முடிக்கட்டும்… அப்புறம் பேசிக்கலாம்… ஆனா எப்படி பார்த்தாலும் நான்தான் அவளை கட்டுவேன் எனக்கு அவதான் பொண்டாட்டி… நான் அந்த விஷயத்துல முடிவா இருக்கேன்” என்று பரி தீர்க்கமாக சொல்ல,
“அப்போ இந்த கல்யாணம்?” என்று சமீர் குழப்பமுற கேட்டான்.
“அது நடக்காது” என்று அலட்சியமாக உரைத்தான் பரி.
“அந்த பொண்ணு பாவம் இல்லையா மச்சி?” இரக்கத்தோடு கேட்ட நண்பனை பார்த்து சூட்சமமாக சிரித்தான் பரி.
“யார் பாவம்… பாவம் இல்லன்னு நாளைக்கு காலையில தெரிஞ்சிரும்… நீ கம்னு படுத்து தூங்கு” பரி சொல்ல சமீர் மெளனமாக நண்பனை பார்த்தான்.
பரி அதற்கு மேல் அந்த விவாதத்தை வளர்க்க விரும்பாமல் தன் பேசியை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே செல்ல,
“எங்கடா போற?” என்று சமீர் கேட்கவும், “ஃபோன்ல சிக்னல் கிடைக்கல ஒரு முக்கியமான கால் பேசிட்டு வந்திடுறேன்… நீ படு” என்றான்.
சமீர் யோசனையோடு தலையணையில் படுத்து கொண்டாலும் அவன் விழிகளை அத்தனை சீக்கிரத்தில் உறக்கம் தழுவவில்லை. நண்பன் வருகைக்காக காத்திருந்து வெகுநேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன் பின் தன்னையறியாமல் உறக்கநிலைக்கு சென்றுவிட்டான்.
ஆனால் அவன் நிம்மதியான தூக்கத்தில் கல்லை போட்டது போல சுசீந்திரன் அவர்ஆட்களோடு வந்து இவனை குண்டுக்கட்டாக தூக்கி போய் பின்னே இருந்த தோப்பில் பெரிய குழியாக வெட்டி மண்ணை அள்ளி போட்டு மூட, அவனுக்கு மூச்சு முட்டியது.
“வேண்டாம்… வேண்டாம்… என்னை விட்டிருங்க… மச்சி என்னை காப்பத்துடா” என்று ஊரையே கூட்டுமளவுக்கு பயங்கரமாக கத்தினான் சமீர்.
“சமீர் சமீர் சமீர்” என்று அவனை போட்டு நாலைந்து கரங்கள் ஒரே மொத்தமாக உலுக்கி எடுக்க, மிரள மிரள விழித்தெழுந்து எல்லோரையும் குழப்பமாக பார்த்தான்.
சமீர் தெளிவற்ற நிலையில் பரியை பார்த்து, “என்னை காப்பத்த வந்துட்டியா மச்சி?” என்று கேட்க,
“இல்ல… உன்னை கொல்ல வந்திருக்கேன்… இவன் மண்டையிலேயே எதையாச்சும் போடுங்கடா… நல்லா தூங்கிட்டிருந்தா காது கிட்ட வந்து கத்தி எழுப்பிவிட்டான்” என்று பரி ஆவேசமாக பேச, அப்போதே கொஞ்சம் தெளிவு நிலைக்கு வந்தான் சமீர்.
அவனை சுற்றி நின்றிருந்த நண்பர்கள் எல்லாம் கொலைவெறியோடு அவனை பார்த்து கொண்டு நின்றனர்.
“சாரி டா… கனவு”என்று சமீர் அசடு வழிய ஒரு புன்னகையை உதிர்க்க,
“இவனை போடுங்கடா” என்று எல்லோரும் சேர்ந்து தலையணையால் சமீரரை மூச்சு திணற திணற அடித்தனர்.
அப்போது அவர்கள் அறை வாசலில் வந்து நின்ற தாமரை, “பரி” என்று படபடப்போடு அழைக்க, அவர்கள் எல்லோரும் தாமரையை திரும்பி நோக்கினர்.
“இருங்க டா அம்மா கூப்பிடுறாங்க… போய் பேசிட்டு வந்திடுறேன்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு பரி தன் தாயின் அருகில் சென்றான். அவர் முகத்தில் அத்தனை படபடப்பு!
அவனை தனியாக அழைத்து சென்ற தாமரை மகனிடம் எப்படி அந்த விஷயத்தை சொல்வது என்று புரியாமல் திணறி திணறி பின் மெல்ல சொல்லி முடித்தார். அதோடு அவர் கண்ணீர் விட்டு அழ, பரி அவர் தோளை தடவி சமாதானம் செய்ய, அவ்வப்போது அவர் மகனின் முகத்தை பார்த்து நடுக்கத்தோடு ஏதோ சொல்லி வேதனையுற்று அஞ்சி கொண்டிருந்தார்.
அங்கே வந்த சமீருக்கு அவர்கள் பேச்சுவார்த்தை வெறும் ஊமை படமாகத்தான் தெரிந்தது. ஒரு வழியாக பரி தன் அம்மாவை சமாதானப்படுத்தி கீழே அனுப்பி வைத்தவன் அங்கே ஒதுங்கி நின்றிருந்த சமீரை பார்த்து,
“போய் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணுங்க… கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் செல்ல போக சமீர் நண்பனின் சட்டையை பிடித்து கொண்டான்.
“என்னடா பண்ண?” என்றவன் ஆக்ரோஷமாக கேட்க,
“நான் ஒன்னும் பண்ணல மச்சான்” என்றான் பரி சாதாரணமாக!
“பொய் சொல்லாதே… நீதான் ஏதோ பண்ணி இருக்க… என்னடா நடந்துச்சு?” என்றவன் மீண்டும் அழுத்தி கேட்க, தன் நண்பனை அறைக்குள் இழுத்து கொண்டு வந்து நிறுத்தி கதவை மூடினான் பரி.
“டே! என்ன நடக்குதுன்னு கேட்கிறேன் இல்ல… சொல்லுடா” என்று சமீர் அழுத்தமாக கேட்க,
“கல்யாண பொண்ணு ஓடி போச்சு… விடிஞ்சதுல இருந்து காணோமா? தேடிட்டு இருக்காங்க” என்றான் பரி.
சமீர் உட்பட எல்லோரும் அதிர்ச்சி நிலையில் உறைந்து நிற்க, பரி மட்டும் கொஞ்சமும் அதிர்ச்சி இல்லாமல் தன் துணிகளை பெட்டிக்குள் எடுத்து வைத்தான்.
அதோடு அவன் தன் நண்பர்களை பார்த்து, “இந்த பிரச்சனை பெருசாகி வெடிக்கிறதுகுள்ள எதாச்சும் காரணம் சொல்லி நம்ம முதல்ல கிளம்பிடணும்” என்று தெளிவாக உரைத்தான்.
“டே” என்று சமீர் எதோ கேட்க எத்தனிக்க, “ப்ளீஸ் மச்சான்… எது கேட்கிறாத இருந்தாலும் நம்ம வண்டில புறப்பட்ட பிறகு கேளு… இப்ப வேண்டாம்” என்று முடித்துவிட்டான் பரி!
அவர்கள் யாராலும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மெளனமாக தங்கள் பொருட்கள் துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் குழப்பம் படர்ந்திருந்தது.
அதேநேரம் விமலன் வீடே களேபரமாக இருந்தது. சுசீந்திரனும் விமலனும் கொலை வெறியோடு நின்றிருந்தனர். சௌந்தர்யாவின் தமையன் அமுதனும் இளமாறனும் அவர்களின் ஆட்களோடு ஆளுக்கொரு காரில் புறப்பட்டனர்.
விமலானோ மனைவி என்றும் பாராமல் மஞ்சுளாவை வெறியோடு தாக்க, சுசீந்திரன்தான் இடையில் புகுந்து தமையனை தடுத்தார்.
“அண்ணியை அடிச்சு என்ன ண்ணே ஆக போகுது… புள்ளை இப்படி பண்ணும்னு நம்ம மட்டும் எதிர்ப்பார்த்தோமா? அதுவும் இத்தனை ஆளுங்க இருந்தும் ஏமாத்திட்டு போயிருக்காளே” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,
விமலன் வெறியோடு, “எவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு… சொந்தக்காரன் மாமன் மச்சான் அங்காளி பாங்களின்னு எல்லாம் வீட்டில கல்யாணத்துக்காக கூடி இருக்காங்களே தம்பி… இப்படி பண்ணிட்டாளே டா… கடைசி வரைக்கும் கமுக்கமா இருந்துட்டு இப்படி கழுத்தை அறுத்துட்டாளே! அவ கிடைச்சா அப்படியே கண்டம் துண்டா வெட்ட சொல்லுங்கடா” என்று வெறியோடு புலம்பி கொண்டிருந்தார் விமலன்!
சுசீந்திரனுக்கும் அதே அளவு கோபமும் வெறியும் இருந்தது. அண்ணன் மகள் திருமணம் என்று ஒரு வாரமாக ஊரையே அழைத்து சாப்பாடு போட்டு ஒரு திருவிழா போலத்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் அவள் இப்படி செய்துவிட்டு போவாள் என்று அவரும் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் சுசீந்திரன் நிதானமான பேர்வழி. எப்படி இந்த பிரச்சனையை சமாளிப்பது என்று நின்று நிதானமாக யோசித்து கொண்டிருந்தார்.
அதுவும் ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான். யாரும் இவர்கள் முன்பு ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். ஆனால் முதுகுக்கு பின்னாடி சென்று நிச்சயம் அசிங்கப்படுத்திவிடுவார்கள். அந்தளவுக்கு அந்த ஊரையே சாதி பெயரை சொல்லி அண்ணன் தம்பிகள் இருவரும் ஆட்டிவைத்திருந்தார்கள். அதுவும் அந்த ஊரில் சாதி மாறி திருமணம் நடந்தால் நிச்சயம் அங்கே ஒரு கொலை நடக்கும்.
அப்படியான அவர்கள் வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சும்மா விடுவார்களா?
ஆனால் எல்லாவற்றையும் விட அந்த சகோதரர்களின் பெரிய பிரச்சனை அவர்களின் தங்கை கணவன் கலிவரதன்தான். இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிந்தால் செத்தான்டா சேகர்!
‘என் கௌரவம் போச்சு’ ‘என் மானம் போச்சு’ என்று பேசியே கொன்றுவிடுவார். அவர்களின் நல்ல நேரம். கலிவரதன் அப்போது அங்கே இல்லை. ஒரு வழக்கு விஷயமாக அவசரமாக சென்னை சென்றிருந்தார். நிச்சயம் அன்று மாலை அவர் திரும்பிவிடுவார். அதற்குள்ளாக சௌந்தர்யாவை கண்டுப்பிடித்து ஆக வேண்டுமென்ற நெருக்கடியில் இருந்தனர் அந்த சகோதரர்கள் இருவரும்!
6
அதிர்ச்சி
மகிழினிக்கு நடப்பதொன்றும் விளங்கவில்லை. பரபரப்பாக சுற்றி கொண்டிருக்கும் எல்லோரையும் என்ன நடந்தது என்று கேட்டு கேட்டு அவள் ஒய்ந்தே போய்விட்டாள். யாரும் எதுவும் சொல்லவில்லை.
‘இரு வரேன்’ ‘தோ வந்திடுறோம்’ ‘ கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?’ ‘நீ அமைதியா உள்ளே போ’ இப்படியான பதில்கள்தான் எல்லோரிடமும் இருந்து வந்தது. அதோடு வீட்டு வாசலையும் யாரும் அவளை தாண்டவிடவில்லை. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று விடிந்ததிலிருந்து ஒன்றும் புரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தாள்.
இன்னும் கொஞ்சம்விட்டால் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. கடுப்பின் உச்சத்திற்கே போனவள் சமையலறையில் முகமெல்லாம் புன்னகையோடு இருந்த தன் அம்மா வசந்தாவை பார்த்து அதிர்ச்சியானாள்.
“என்னம்மா நீ மட்டும் தனியா நின்னு சிரிச்சிட்டு இருக்கு… எல்லா டென்ஷனா இருக்காங்க… என்னதான்ம்மா நடக்குது?” என்று நொந்து போய் அவள் கேட்க,
வசந்தா வெளியே எட்டி பார்த்துவிட்டு மகளை படுக்கையறைக்கு அழைத்து சென்று கதவை மூடினாள்.
“என்னம்மா?” என்று மீண்டும் புரியாமல் மகிழினி கேட்க,
“ஹ்ம்ம்… உன் பெரியப்பா மவ ராத்திரியோட ராத்திரியா இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லன்னு எழுதி வைச்சிட்டு ஓடியே போயிட்டா” என்று சொன்ன நொடி மகிழினி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.
வசந்தா மேலும் வக்கிரமான புன்னகையோடு, “வேணும்… எல்லோருக்கும் நல்லா வேணும்… உங்க அப்பனுக்கும் இது நல்லா வேணும்… அண்ணன் பொண்ணு கல்யாணம்னு அந்த ஆடு ஆடு ஆடினாரு இல்ல… நல்லா எல்லோர் மூஞ்சில கரியை பூசிட்டு போயிட்டா பார்த்தியா” என்று சந்தோஷமாக சொல்லி கொண்டிருக்க, மகிழினி முகம் வெறுப்பை காண்பித்தது.
“என்ன ம்மா நீ… இப்படி பேசுற… பெரியம்மா மேல உனக்கு ஆயிரம் கோபம் வருத்தம் இருந்தாலும் இது சந்தோஷபடுற விஷயமா?” என்று முகம் சுளிக்க,
“சந்தோஷப்படாம… உன் பெரியம்மாதானடி உன்னை பத்தி உங்க அப்பன்கிட்ட தப்பு தப்பா சொல்லி உன்னை காலேஜ் போக விடாம மூலையில உட்கார வைச்சிட்டா… அதுவும் எப்படி… உங்க பொண்ணுக்கு அடக்கம் ஒடுக்கமே இல்ல… இவ கண்டிப்பா எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிதான் போவான்னு உங்க அப்பன்கிட்ட சொல்லி உன்னை மேல படிக்கவிடாம தடுத்தா… விளங்குவாளா
அதான் கடவுள் வைச்சான் இல்ல ஆப்பு … உமைகொட்டான் மாறி இருந்துட்டு கடைசில யார் ஓடி போனது… அவங்க பொண்ணுதானே” என்று ஆவேசம் பொங்க சொல்லி கொண்டிருந்த அம்மாவை பார்த்து என்ன சொல்வதென்றே புரியவில்லை மகிழினிக்கு!
அவர் சொன்னதும் ஒரு வகையில் உண்மைதான். விமலனும் சுசீந்தரனும் காதல் கல்யாணங்களுக்கு எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம். அதன் காரணமாக நிறைய சாபங்களையும் வாங்கி கட்டி கொண்டிருக்கிறார்கள்.
‘ஜாதி ஜாதின்னு வெறி பிடிச்சு சுத்திட்டு இருக்கானுங்க… ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவனுங்க பொண்ணுங்கள எவளாச்சும் ஒருத்தி எவனாச்சும் கீழ் சாதிக்காரனை இழுத்துட்டு ஓடத்தான் போறா’ இந்த வார்த்தைகள் ஒரு வகையில் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் அந்த இரு சகோதரர்களுக்கும் இருந்தது.
அதில் அதிக பயமும் சந்தேகமும் மகிழினி மேல்தான். ஏனெனில் சௌந்தர்யா இயல்பாகவே ரொம்பவும் அமைதியான வீட்டுக்கு அடங்கிய பெண். ஆண்களிடம் அதிகம் பேச கூட மாட்டாள். ஆனால் மகிழினி அப்படியில்லை. ஆண் பெண் பேதமில்லாமல் பள்ளியில் அரட்டை என்று நிறைய நிறைய புகார்கள் சுசீந்திரனுக்கு. அதுவும் வெள்ளந்தியாக அவள் எல்லோரிடமும் பேசுவாள். இதனால் நிறைய அடிகளும் வாங்குவாள். மொத்தத்தில் வீட்டிற்கு அடங்காத பெண் என்ற முத்திரை குத்தப்பட்டது அவள் மீது. அதோடு மகிழினியின் அழகும் சேர்ந்து கொண்டது.
இதனால் சுசீந்திரனுக்கு உள்ளுர மகளை குறித்த அச்சம் தொற்றி கொள்ள, எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை வார்த்தார் மஞ்சுளா.
அவர் மகிழினி பன்னிரெண்டாவது முடித்ததும், “புள்ள சரியில்ல… பார்த்து சூதனமா இருந்துக்கோங்க மச்சினரே!” என்று சுசீந்திரனை அவர் ஏற்றிவிட்டதில்,
பாவம்!!! மகிழினியின் கல்லூரி போகும் கனவு சுக்குநூறாகி போனது. அதோடு அல்லாது எந்த தவறுமே செய்யாமல் மகிழினி வீட்டு வாசலை தாண்ட கூட அனுமதி கிடையாது. அப்படியே போனாலும் கூடவே அடியாட்கள் துணை வேறு.
சௌந்தர்யா மட்டும் இல்லையென்றால் எப்போதோ மகிழினுக்கு ஒரு பையனை பார்த்து திருமணமே முடித்திருப்பார் சுசீந்திரன். நல்ல வேளையாக சௌந்தர்யா இருந்ததால் மகிழினி தப்பி கொண்டுவிட்டாள்.
ஒரு வருடம் ஓடி போனது. ஆனால் வசந்தா கணவனை சும்மா விடவில்லை. சௌந்தர்யாவை பொறியியல் படிக்க வைத்திருப்பதை குத்தி காட்டி கொண்டேயிருந்தார். வீட்டு வேலை செய்பவர் பெண்ணெல்லாம் கூட கல்லூரி சென்று படிக்கும் போது என் மகள் மட்டும் வீட்டில் இருக்க வேண்டுமா என்று கணவனிடம் தினமும் சண்டையிட்டு நினைத்ததை சாதித்துவிட்டார்.
ஆனாலும் சுசீந்திரன் நிறைய கட்டுப்பாடுகள் விதித்துதான் மகிழினிக்கு இந்த வருடம் கல்லூரியில் சேர்ப்பித்தார். அதுவும் டவுனில் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் இளங்கலை படிப்பு!
வசந்தா அந்த கடுப்பில் சௌந்தர்யா ஓடி போனதை எண்ணி சந்தோஷப்பட்டு கொண்டிருக்க, மகிழினியால்தான் இந்த விஷயத்தை நம்பவும் முடியவில்லை. தாங்கவும் முடியவில்லை.
அந்தளவுக்கு அவளும் சௌந்தர்யாவும் நெருக்கம். மாற்றான் தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்ற எண்ணம் இருவருக்கும் இருந்ததில்லை. அப்படியிருக்க எப்படி அக்கா தன்னிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை என்று எண்ணி மனதில் குமிறி கொண்டிருந்தாள் மகிழினி!
சுசீந்திரன் மூளையிலும் இதே சந்தேகம்தான் தற்போது உதித்தது. அவர்களின் அரசியல் பலம் மற்றும் போலீஸ் பலம் என்று எதுவுமே பயன்படவில்லை. நேரம் பிற்பகலை கடந்தும் சௌந்தர்யா எங்கே போனாள்? யாருடன் போனாள் என்று எந்த தகவலும் இல்லை.
அதுதான் சுசீந்திரனுக்கு பெரிய ஆச்சரியம். யாருடைய உதவியும் இல்லாமல் அவள் எப்படி வீட்டிலிருந்து சென்றிருப்பாள் என்று யோசித்த சுசீந்திரன் மிகுந்த சினத்தோடு தன் வீடு நோக்கி வந்தார்.
இன்னோரு புறம் சமீர் எப்போது தப்பித்து ஓடலாம் என்பதிலேயே கண்ணாக இருந்தான்.
“டே எப்படா போறோம்?” என்று நண்பனை கேட்டு ஒரு வழி செய்ய, “இருடா மச்சான்… அவசரப்பட்டு போனா சந்தேகம் வந்துரும்… டைம் பார்த்து எஸ் ஆகணும்” என்று சொல்ல,
“என்னத்த டா பண்ணி தொலைச்சிருக்க?” என்று சமீரின் கேள்விக்கு பரி பதில் சொல்லவில்லை. சில நிமிடங்கள் அந்த அறையின் வாசலில் பதட்டமாக காத்திருந்தவன் சுசீந்திரன் கோபத்தோடு வீட்டிற்குள் நுழைவதை பார்த்தான்.
இதுதான் சரியான வாய்ப்பு என்று முடிவுக்கு வந்தவன், “எல்லா பேகை தூக்கிட்டு கீழே வாங்கு… எப்படி பேசி இங்கிருந்து எஸ் ஆகிறேன்னு மட்டும் பாருங்க” என்று சொல்லிவிட்டு பரி படிகெட்டில் இறங்க, சமீர் மூச்சை இழுத்துவிட்டு கொண்டான்.
எதுவும் பிரச்சனை வராமல் இருந்தால் சரியென்று மனதில் எண்ணி கொண்டு அவனும் அவன் நண்பர்களும் பரியோடு கீழே இறங்கினர்.
அதேநேரம் சுசி வீட்டில் கோபத்தில் சாமியாடி கொண்டிருந்தார்.
“எங்கடி சௌந்தர்யா? யார் கூட டி போனா?” என்று மகளிடம் சுசி கோபமாக பொங்கி கொண்டிருக்க, மகிழினுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பாவை பார்த்து மிரட்சியுற்று, “ஐயோ! சத்தியமா எனக்கு தெரியாது ப்பா” என்று அவள் பின்வாங்கினாள்.
“ஓடி போனது உங்க அண்ணன் பொண்ணு… என் பொண்ணை மிரட்டினா அவளுக்கு என்ன தெரியுமா?” என்று மகளுக்காக முன்னே வந்து நின்ற வசந்தாவை சுசி கோபமாக ஓரம் தள்ள அவர் தரையில் சரிந்தார்.
“ஒட்டி பொறுந்த பிறவி மாறி இல்ல இரண்டு பேரும் சுத்திட்டு இருந்தாங்க… அப்புறம் எப்படி உன் பொண்ணுக்கு தெரியாம இருக்கும்… கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்” என்று மனைவியிடம் ஆக்ரோஷமாக சொன்னவர் மகளிடம் சீற்றமாக திரும்ப,
“எனக்கு தெரியாது ப்பா… அக்கா என்கிட்ட சொல்லல” என்று அழுது கொண்டே மகிழினி சொல்ல சுசீந்திரன் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
“யாரை ஏமாத்த பார்க்கிற… உங்க அக்கா உன்கிட்ட சொல்லாம போயிருப்பாளா? நேத்து நடுராத்திரி கூட நீ எங்கயோ எழுந்து போன… நான் கேட்டதுக்கு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிட்ட… எங்கடி போன?” என்று அவர் மகளை மிரட்ட,
“அவதான் எதுவும் தெரியாதுன்னு சொல்றாளே யா” என்று வசந்தா சூதாரித்து எழுந்து நின்றார்.
“நீ வாயை திறந்து பேசுன… உன்னை கொன்றுவேன்… பார்த்துக்கோ” என்று எரிமலையாக வெடித்தவர் மகளின் புறம் திரும்பி,
“எங்கடி போன… உங்க அக்காவை வழியனுப்ப போனியா?” என்று உக்கிரமாக கேட்டார்.
“ஐயோ! இல்லப்பா” என்று சொன்ன மகிழினியின் முகம் பயத்தில் வெளுத்து போனது.
“ஒழுங்கா கேட்டா சொல்ல மாட்ட” என்று வேகமாக மகளை அடிக்க அவர் கை ஒங்க, “மாமாஆஆஆஅ” என்று பின்னே வந்து சத்தமாக அழைத்தான் பரி.
சுசீந்திரன் திரும்பி பார்த்து அதிர்ந்துவிட பரி உச்சபட்ச கோபத்தோடு, “பெருசா மீசையை வளர்த்து வைசிருக்கீங்க… பாவம் சின்ன பொண்ணுகிட்ட போய் உங்க வீரத்தை காண்பிக்கிறீங்க… அசிங்கா இல்ல உங்களுக்கு?” என்று கேட்க சுசீந்திரன் ரத்தமெல்லாம் கொதித்தது.
சமீர் மிரண்டு, ‘அடப்பாவி… இவன் கானடமிருகத்தை கிட்ட போய் செல்பி எடுக்க பார்க்கிறான்… மவனே இவன் அடி வாங்கிறது இல்லாம் நம்மளையும் சேர்த்து அடி வாங்க வைச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பான் போலவே’ என்று அவன் மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தான்.
சுசீந்திரனோ பரியிடம் பதில் பேச முடியாமல் நின்றார். தங்கை மகனாக போய்விட்டான். அதோடு இப்போதிருக்கும் சூழ்நிலையும் அவருக்கு சாதமாக இல்லை. குற்றவுணர்வோடு என்ன பேசுவதென்று புரியாமல் அவர் நிற்க,
“மகி நைட் பின்னாடி இருந்த அவ முயல் கூண்டைத்தான் பார்க்க போனா… நான் பார்த்தேன்… அது தெரியாம அவளை போய் கை நீட்ட போறீங்க… இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல மாமா” என்று பரி சுசியை பார்த்து நிதானமாக பேசினாலும் அவன் முகத்தில் அத்தனை கோபம் இருந்தது.
‘நம்ம பொண்ணை அடிக்க போனதுக்கு இவன் எதுக்கு இப்படி பொங்கிறான்? அதுவும் அவ முயலை பார்க்க போனது இவளுக்கு எப்படி தெரியுமாம்’ என்று அவர் மனதில் குழம்பி கொண்டு நிற்க,
அப்போது பரியின் பின்னே வந்து சமீர், “டே… நீயே வாக்குமூலம் குடுத்து இப்படி உன் மாமன் கிட்ட சிக்கிரியே டா… ஒழுங்கா எதாச்சும் சொல்லி சமாளிச்சிட்டு வா ஓடிடலாம்” என்று எச்சிரிக்கை செய்ய,
“இப்ப பாரு?” என்று சுதாரித்து கொண்டான் பரி!
பரி தன் தோரணையை மாற்றி கொண்டு, “சௌந்தர்யா இப்படி பண்ணுவான்னு நான் சத்தியமா எதிர்ப்பார்க்கல… என்கிட்ட நல்லா சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாளே… இதுல நீங்கெல்லாம் ஊர் தலைவன்னு சொல்லி சுத்துக்கிட்டு இருக்கீங்க… கேவலம்” என்று அவன் மனப்பாடமாக ஒப்பித்து கொண்டிருக்க,
“டே ஒரேடியா ஓவரா போகாதா டா… உள்ளே வைச்சி உன் மாமன் உன்னை கும்மிட போறான்” என்று சமீர் மீண்டும் பின்னோடு இருந்து எச்சிரிக்கை செய்தான்.
பரி உடனே, “எங்களை குடும்பத்தோட கூட்டிட்டு வந்து அசிங்கப்படுதிட்டீங்க இல்ல… பார்த்துக்கிறேன்… இனிமே இங்க இருந்தா எனக்கு அசிங்கம்… வாங்க டா போகலாம்” என்று நண்பனிடம் திரும்பி கொண்டே பரி பெருமூச்சுவிட,
“அப்பாடா தப்பிச்சோம்” என்று சொல்லி கொண்டான் சமீர்!
வேகமாக எல்லோரும் காரை நோக்கி போக தாமரை வழிமறித்து நிற்க, “டே என்னடா கிளம்புற… உங்க அப்பா வந்தா” என்று சொல்ல,
“அவர் வந்தா இவங்ககிட்ட முட்டிக்கட்டும்… அவர்தான் இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சாரு… நீயும் என் கூட ஒழுங்கா கிளம்பி வா” என்று அம்மாவையும் அழைத்து கொண்டான்.
தாமரைக்கு அப்போதும் தமையன்களை விட்டு கொடுக்க மனம் வரவில்லை. சுசியை வேதனையோடு பார்த்து கொண்டே மகனுடன் செல்ல, பரி காரில் ஏறி புறப்பட தயாரானான்.
சுசியால் எதுவும் பேச முடியவில்லை. மெளனமாக அவர்கள் செல்வதை சுசி பார்க்க, பரி தன் காரை இயக்கிய மாத்திரத்தில் வேகமாக இன்னொரு கார் உள்ளே நுழைந்தது.
“இது யாரு?” என்று சமீர் கடுப்பாக, காரிலிருந்து கொந்தளிப்பாக இறங்கினார் கலிவரதன்.
“ஐயோ! அப்பா” என்று பரி ஜெர்க்காக, கலிவரதன் வேகமாக நுழைந்தார். மகன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்து,
“இறங்கு டா கீழே” என்று மிரட்டவும்,
“இல்ல ப்பா” என்று அவன் தயங்க கார் சாவியை உள்ளே கையை விட்டு எடுத்து கொண்டார்.
“ஒழுங்கா உள்ளே வா டா” என்று அவர் மிரட்டிவிட்டு செல்ல, ‘வர்றவரு ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்து தொலைய கூடாது’ என்று பரி மனம் அங்கலாய்த்துக் கொண்டது.
‘போச்சா போச்சா… ஒழுங்கா அன்னைக்கே கிளம்பி இருப்பேன்… நல்லா வந்து கொலைகார குடும்பத்தில மாட்டினேன்’ சமீர் மைன்ட் வாய்ஸ் புலம்பி தீர்க்க, பரி தன் அம்மா முகத்தை பார்த்தான். அவர் முகத்தில் ஏகபோகமாக பயம்!
“இப்ப என்னடா பண்றது?” என்று மகனின் முகத்தை அச்சத்தோடு அவர் பார்க்க, “சமாளிப்போம் வா” என்று பரி எழுந்து கொண்டே நண்பனை பின்னே திரும்பி பார்த்தான்.
“நாங்க திரும்பியும் அந்த வீட்டுக்குள்ள வரலடா… ஒழுங்கா நீயே போய் சாமாளிசிட்டு வா” என்றான். ஆனால் பரி விடாமல் சமீரின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து கொண்டு சென்றுவிட்டான்.
பரி எச்சிலை விழுங்கி கொண்டு மெல்ல வீட்டிற்குள் நுழைய கலிவரதன் சிகரெட்டை புகைத்து கொண்டு இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தார். சுசீந்திரனின் முகத்திலும் அச்சம் படர, அண்ணனுக்கு தன் செல்பேசியின் மூலம் அழைப்பு விடுத்து கொண்டிருந்தார்.
கலிவரதனுக்கு உறவினர் மூலமாக ஏற்கனவே சௌந்தர்யா ஓடி போன விஷயம் அவர் காதுக்கு போய்விட்டது. அதானால்தான் மாலை வர வேண்டியவர் அடித்து பிடித்து பிற்பகலே வீடு வந்து சேர்ந்தார். பரி ஒரு ஓரமாக சமீரோடு நிற்க,
“என்னடா உங்க அப்பாவை பார்த்து காண்டாமிருகமே பயப்படுது” என்று ரகசியமாக கேட்க, “மதம் பிடிச்ச யானையை பார்த்தா எல்லோரும் பயந்துதானே ஆகணும்… எங்க அப்பாவோட கோபமும் அப்படிதான்… இன்னைக்கு யாரெல்லாம் மிதி வாங்க போராங்களோ… லெட்ஸ் வைட் அன் ஸீ” என்றான்.
“என்னடா கூலாசொல்ற?”
“வேற வழி… இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது… அவர் பேசி முடிக்கட்டும் போகலாம்”
“என்ன எதுக்குடா இழுத்துட்டு வந்த… இங்க நின்னு நான் என்னடா பண்றது?” என்று சமீர் கடுப்பாக கேட்க,
“நீ சண்டையை பாரு… நான் என் ஆளை பார்க்கிறேன்” என்றவன் பயந்தபடி நின்று கொண்டிருந்த மகிழினியை பார்த்து கொண்டேதான் பேசினான்.
“அடப்பாவி! ஊரே பத்திக்கிட்டு எரியுது… உனக்கு ரொமான்ஸ் கேட்குதா?” என்ற சமீரின் வார்த்தையை அவன் காதில் வாங்கவில்லை. அங்கே பேச்சுவார்த்தை படுதீவிரமாக நடந்து கொண்டிருக்க, “என்னடா ஒரே டைலாக்கை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காரு உங்க அப்பா… மானம் போச்சு மரியாதை போச்சுன்னு” என்றான்.
உண்மையிலேயே வரதன் அந்த சகோதரர்களை ஒரு வழி செய்து கொண்டிருந்தார்.
“என் ஒரே பையன் கல்யாணம்… நான் எப்படியெல்லாம் நடத்தி வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… என் பிரெண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு வருவாங்க… நான் எல்லோருக்கும் என்ன பதில் சொல்லுவேன்… அண்ணனும் தம்பியும் சேர்ந்து இப்படி பண்ணிட்டீங்களே?” என்று ஏறு ஏறு என்று அவர்களை ஏறி கொண்டிருக்க,
விமலன் தாங்க முடியாமல், “இப்ப என்ன மச்சான் உங்க பிரச்சனை… இந்த கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதானே… எங்க மகிழினியை உங்க புள்ளைக்கு கட்ட சம்மதமான்னு கேட்டு சொல்லுங்க… இந்த கல்யாணத்தை எப்படி நடந்தனும்னு நினைச்சோமோ அப்படியே நடத்திடலாம்” என்றார்.
சுசீந்திரன் அதிர்ச்சியோடு தமையனை பார்க்க மகிழினிக்கு பேரதிர்ச்சி!
‘கடைசில எல்லோரும் சேர்ந்து நம்ம வாழ்க்கையில கல்லை போட பார்க்கிறாங்களே’ என்றவள் எண்ண, பரி இன்ப அதிர்ச்சியில் நின்றான்.
“அடேங்கப்பா! இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே டா” என்று சமீர் சொல்ல, அப்போது கலிவரதன் தீவிரமாக யோசித்து பார்த்துவிட்டு மகிழினியை திரும்பி பார்த்தார். அவளும் நல்ல சாய்ஸ் என்றே தோன்றியது அவருக்கு!
இன்னும் கேட்டால் சௌந்தர்யாவை விட அவள் அழகு. வயதும் குறைவு. அதோடு மகனின் திருமணம் நடக்க வேண்டுமென்ற எண்ணமே மேலோங்க கலிவரதன் விமலன் சொன்னதை ஏற்று மௌனமாக மகனை திரும்பி பார்த்தார். அவனின் சம்மதத்தை எதிர்ப்பார்த்து!
மகிழினி எதிர்புறத்தில் நின்று பரியிடம் கண்ணசைவால் வேண்டாம் வேண்டாம் என்று தலையாட்ட, அவனுக்கு அவள் சொல்வது புரிந்தாலும் தானாக தேடி வரும் வாய்ப்பை அவன் நழுவ விட விரும்பவில்லை. சம்மதம் என்று தந்தையிடம் தலையசைத்துவிட்டான்.
7
திருமணம்
இத்தனை வேகமாக ஒரு திருமணம் தனக்கு ஏற்பாடாகுமென்று மகிழினி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று கூட அவள் கனவிலும் கூட யோசித்து பார்த்ததில்லை. வேண்டாமென்று சமிஞ்சை செய்தும் பரி சம்மதம் சொன்னது ஒருபுறம் அவளுக்கு அதிர்ச்சியென்றால் அவளிடம் வார்த்தைக்கு கூட யாரும் சம்மதம் கேட்கவில்லை என்பது இன்னொருபுறம் பெருத்த வேதனையாகவும் வலியாகவும் இருந்தது.
சுசீந்திரனின் மனநிலையிலும் ஒரு வகையில் அப்படிதான். அவருக்கு பரியை கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருக்கும் ஒரே மகளுக்கு அவனை போன்ற ஒருவனை மருமகனாக ஏற்க அவர் துளியளவும் விரும்பவில்லை எனினும் அண்ணன் சொன்ன வார்த்தையை தட்ட முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி கொண்டார்.
ஆனால் தன் மனைவி வசந்தா நிச்சயம் இதற்கு ஒத்து கொள்ளவே மாட்டார் என்று எதிர்ப்பார்த்தார். எப்படியாவது அவரை வைத்து இந்த திருமணம் நடக்காமல் செய்த விடலாம் என்ற அவர் எண்ணத்தில் லாரி லாரியாக மண்ணள்ளி போட்டுவிட்டார் வசந்தா!
திருமணதிற்கு சந்தோஷமாக சம்மதம் சொல்லிவிட்டார். பரியின் படிப்பு அழகை பார்த்து தன் ஓரகத்திக்கு இப்படி ஒரு மருமகனா என்று ஏற்கனவே வசந்தாவிற்குள் பொறாமை தீ பற்றி கொண்டு எரிந்தது. இப்போது அந்த அதிர்ஷ்ட காற்று அவர் திசையில் அடிக்கும் போது வேண்டாமென்றா சொல்லுவார்.
அதுவும் சுசீந்திரன் மகளை அடிக்க கை ஓங்கும் போது பரி வந்து மகிழினிக்கு ஆதரவாக பேசியது வசந்தாவிற்கு பரி மீதான நன்மதிப்பை கூட்டியிருந்தது. இதை விட ஒரு மருமகனிடம் வேறு என்ன எதிர்ப்பார்ப்பு இருந்துவிட முடியும் ஒரு மாமியாருக்கு!
ஆனால் சுசீந்திரன் நம்பமுடியாமல் மனைவியிடம் திரும்ப திரும்ப, “உண்மையிலேயே இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா வசந்தா?!” என்றவர் கேட்க,
“ம்ம்கும்… இவங்கெல்லாம் நம்ம சம்மதத்தை கேட்டுதான் எல்லாம் செய்றாங்களாக்கும்” என்று வசந்தா நொடித்து கொண்டார்.
“இல்ல… உனக்கு அண்ணன் சொன்னதுல சம்மதம் இல்லன்னா” என்றவர் மனைவியை அவர் தூண்டிவிட, “எனக்கு சம்மதம்தான்… நீங்க கல்யாண வேலையை பாருங்க” என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.
“அப்போ மகிழினிக்கு” என்று சுசி இழுக்க, “நான் அவ கிட்ட பேசிக்கிறேன் நீங்க ஆகுற வேலையை பாருங்க” என்று சொல்லிவிட்டார். இனி இந்த கல்யாணத்தை தடுப்பது யாராலும் முடியாது.
இன்னொருபுறம் மகிழினியும் இந்த திருமணத்தை நிறுத்த தன்னால் இயன்ற முயற்சியை செய்து பார்த்தாள். “ம்மா… எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று இறைஞ்சிய மகளிடம்,
“நீ இப்ப இந்த கல்யாணத்தை பண்ணிக்கலன்னு வை… உன் பெரியப்பா மவ ஓடி போனதை காரணம் காட்டி உங்க அப்பன் அவசர அவசரமா எவனாச்சும் ரௌடி பயலா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருவாரு… அதனால ஒழுங்கா இந்த கல்யாணத்துக்கு கம்னு ஒத்துக்கோ” என்று வசந்தா மகளை உருட்டி மிரட்டி சம்மதிக்க வைத்துவிட்டார்.
ஆனால் மகிழினிக்கு இதில் முழு மனதாக சம்மதமில்லை. பரியை தமக்கையின் கணவனாக பாவித்துவிட்டு எப்படி அவனுடன் வாழ்க்கை நடத்த முடியும். உள்ளுக்குள் அவள் மனம் ஊமையாக ஒரு போரட்டத்தை நடத்தி கொண்டுதான் இருந்தது. ஆனால் விதியை யாராலும் மாற்றியமைக்க முடியாது. பரியோடுதான் அவள் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டதே!
விமலன் வீட்டில் மஞ்சுளா யார் முகத்திலும் விழிக்க முடியாமல் அவமானத்தில் கூனிகுருகி போனார். மகள் இப்படி செய்வாள் என்று அவர் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. இன்னொருபுறம் சௌந்தர்யாவின் அண்ணன்கள் இரண்டு பேரும் உடன் பிறந்த தங்கை என்றும் யோசிக்காமல் அவளை வெறி கொண்டு தேடி கொண்டிருந்தனர். அவளை கண்டுப்பிடித்த மறுநொடியே கண்டம்துண்டமாக வெட்ட!
இந்த களேபரத்திளும் எந்தவித இடையுறும் இல்லாமல் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பரிக்கு வானத்தில் பறக்கும் உணர்வுதான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் அவன் முகத்தில் மாப்பிள்ளை கலையே வந்திருந்தது. இதில் பரிதாபத்துக்குரிய ஜீவன் சமீர்தான். அவன் ஊருக்கு போகும் திட்டம் மீண்டும் முறியடிக்கப்பட்டது.
‘நம்ம இங்க இருந்து போகறதுக்குள்ள நிச்சயம் ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடக்க போகுது… அவ்வ்வ்வ்’ என்று மனதிற்குள் அஞ்சி நடுங்கி கொண்டிருந்தான்.
அடுத்த நாள் கல்யாணம் என்ற நிலையில் எல்லோரும் உறங்கிவிட இரவு இந்த யோசனையோடு பின்னிருந்த தோப்பை வெறித்து பார்த்து கொண்டிருந்த சமீரிடம், “ஏன் மச்சான்? இப்படி இஞ்சி தின்ன தேவாங்கு மாறி மூஞ்சை வைச்சிருக்க… பார்க்க சகிக்கல… எது நடந்தாலும் என்னை மாதிரி எப்பவும் ஹாப்பியா இருந்து பழகு மச்சி!” என்று சொல்லியபடி நண்பன் தோளில் கை போட்டான் பரி.
“ஏன்டா நீ ஹாப்பியா இருக்க மாட்ட… பழம் நழுவி பாலில விழும்னு கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா உனக்கு இங்க வாயிலேயே விழ போகுதே” என்று சமீர் சொல்ல,
“அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும் மச்சி!” என்று பரி ஆனந்தமாகவும் பெருமிதமாகவும் உரைத்தான்.
“நீ உண்மையிலேயே மச்சக்காரன்தான்… ஆனா அந்த பொண்ணோட நிலைமையை நினைச்சாதான்?” என்று சமீர் மகிழினிக்காக வருத்தப்பட்டான்.
“அடிங்க! எனகென்னடா குறைச்சல்? என்னை கட்டிக்க அவதான் குடுத்து வைச்சிருக்கணும்” என்று பரி கோபம் கலந்த கர்வத்தோடு சொல்ல சமீர் அடக்க முடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டான்.
“இப்ப என்ன சொல்லிட்டாங்ன்னு நீ இப்படி சிரிக்குற?“ என்று பரி கடுப்பாக கேட்க,
“நீ சொன்னது உண்மைன்னா உன்னை கட்டிக்க மாட்டேன்னு ஏன் டா… அந்த மோகினியோட அக்கா ஓடி போகணும்” என்று சமீர் கேட்டுவிட்டான்.
“தெரியாம பேசாதே… அவளா ஓடி போகல… நான்தான் அவளை ஓடி போக வைச்சேன்… காதலிக்கிறது என்ன பெரிய கொலை குத்தமா? ஓவராத்தான் பண்றாங்க… அதான் என் மாமனுங்கள கடைசிவரைக்கும் நம்ப வைச்சு அவங்க கண்ணில எல்லாம் மண்ணை தூவி சௌண்ட்சை நானே அனுப்பி வைச்சேன்” என்று பரி ஆர்வக்கோளாறில் உளறிவிட்டான். சமீர் ஓரளவுக்கு இதை யூகித்ததுதான் என்றாலும் அதை அவன் வாயிலாக சொல்லவும், அவனுக்கு கதிகலங்கியது.
“என்னடா சொல்ற? இது மட்டும் அந்த காண்டமிருகம் பிரதர்ஸுக்கு தெரிஞ்சுது” என்று சமீர் அதிர்ச்சியானான்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்று பரி சொல்லி கொண்டிருக்க படிகெட்டில் ஏதோ ஆள் அரவம் கேட்டது. சமீர் பதறி கொண்டு அமைதியாக, பரி உடனடியாக எட்டி பார்த்தான்.
மகிழினி அதிர்ச்சியில் உறைந்து போய் படியில் நின்றிருந்தாள். பரியிடம் பேச வேண்டாமென்று யாருக்கு தெரியாமல் வந்தவள் அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுவிட்டிருந்தாள். அவள் அதன் காரணமாக அதிர்ச்சியில் நிற்க,
“மகி” என்று பரி அழைப்பில் அவனை எரித்துவிடுமளவுக்கு கோபத்தோடு பார்த்துவிட்டு,
“அப்போ இதெல்லாம் உங்க வேலைதானா?” என்று கேட்டாள்.
“நான் சொல்றதை பொறுமையா கேளு மகி” என்று பரி அவளருகில் வரவும்,
“நீங்க ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்… எங்க அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கு இந்த ஊர்ல எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா? எப்படியெல்லாம் நடிச்சு… ச்சே! நீங்க எங்க குடும்பத்தை அசிங்கப்படுதிட்டீங்க நாங்கதான் உங்க குடும்பத்தை அசிங்கப்படுதிட்டோம்னு டிராமா பண்றீங்களா?… இந்த விஷயத்தை நான் விட போறதில்ல… இப்பவே போய் எங்க அப்பாகிட்ட சொல்ல போறேன்” என்றவள் ஆவேசமாக பேசிவிட்டு விறுவிறுவென படியில் இறங்கி ஓடிவிட்டாள்.
சமீர் அவள் சொல்வதை கேட்டு, “அடப்பாவி! நான் அப்பவே ஊருக்கு போறேன்னு சொன்ன கேட்டியா? இப்ப நான் சொன்னதுதான் நடக்க போகுது… நீ மரமாகிறது இல்லாம என்னையும் சேர்த்து மரமாக்க பார்க்கிறியே… நியாயமாடா?” என்று மானாவாரியாக புலம்ப தொடங்க, “அடேச்சே! உன் புலம்பலை கொஞ்சம் நிறுத்துடா… முதல அவளை தடுக்கலாம்… அவ எதையாச்சும் சொல்லி தொலைச்சிர போறா” என்று சொல்லிவிட்டு பரி படிக்கெட்டில் இறங்க,
“நீ எப்படியோ போ… நான் ஊருக்கு போறேன்” என்று சொல்லி சமீர் அறைக்குள் சென்று தன் பேகில் பொருட்களை மீண்டும் நிரப்ப தொடங்கினான்.
பரி கீழே செல்ல மகிழினி தன் அப்பாவை தேடி கொண்டு போயிருந்தாள். அவளை அங்கே பார்க்க முடியாமல் போக அவன் அவளை தேடி கொண்டிருந்த சமயம், “என்னடா பண்ணிட்டு இருக்க? போய் நேரத்தோட படு… காலையில முகூர்த்தம்” என்று கலிவரதன் பரியை விரட்டிவிட்டார்.
பரி ஒன்றும் செய்ய முடியாமல் மீண்டும் மேலே வர சமீர் தன் பேகோடு கீழே இறங்கவும், “எங்கடா போற?” என்று கேட்டு நண்பனை போக விடாமல் தரதரவென மேலே இழுத்து கொண்டு அறைக்கு வந்து கதவை மூடிவிட்டான்.
“ஏன்டா ஏன்?” என்று சமீர் அவனை கடுப்பாக முறைக்க, “எதுவா இருந்தாலும் இரண்டு பேரும் ஒண்ணா சமாளிப்போம்” என்றான் பரி!
“செய்றதெல்லாம் நீ… ஆனா சமாளிக்க உனக்கு நான் வேணுமா… சத்தியமா நீ நல்லாவே இருக்க மாட்டடா… மோகினி மோகினின்னு நீ அந்த பொண்ணு பின்னாடி திரிஞ்சிக்கிட்டு இருக்கும் போதே நினைச்சேன்… அவதான் உனக்கு ஆப்படிக்க போறான்னு” என்று சொல்ல பரிக்கு உண்மையிலேயே திக் திக்கென்றுதான் இருந்தது.
இருவருமே அந்த இரவு முழுக்க நடுநடுங்கி கொண்டு அமர்ந்திருந்தனர். அப்படியே அமர்ந்து கொண்டே அவர்கள் உறங்கியும் போக கதவு தட்டும் ஓசை கேட்டு, “ஐயோ! காண்டாமிருகம்!” என்று தூக்கத்திலிருந்து எழுந்து கத்திவிட்டான் சமீர்!
பரியும் பதட்டத்தோடு எழுந்து கொண்டு கதவை திறக்க தாமரை நின்றிருந்தார்.
“என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க… கிளம்ப வேண்டாம்” என்றார். பரி பேந்த பேந்த விழித்தான். சமீருக்கு ஒன்றும் புரியவில்லை.
திருமணத்திற்காக வழியேற பேனர்கள் போஸ்டர்கள் கலர் கலர் மின்விளக்குகள் வைத்து கொடி கம்பங்கள் நடப்பட்டு அசத்தலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய விஸ்தரமான திடலில் பிரமாதமாக பூ அலங்காரங்களோடு திரள் திரளாக பலூன்களெல்லாம் பறக்கவிடப்பட்டு ஆடம்பரமாக அந்த திருமண விழா அரங்கேறியது. பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் என்று எல்லோரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க நேரடியாக வந்திருந்தனர். வாசலில் விலையுர்ந்த கார்கள் அணிவகுத்து நின்றன.
அந்த ஊரே அங்கேதான் திரண்டிருந்தது. உறவினர்கள் நண்பர்கள் கூட்டமென்று எல்லோருக்கும் சிறப்பான வரவேற்போடு விருந்து உபாசாரங்களும் பிரமாதப்படுத்தப்பட்டிருந்தன.
அங்கே பெண் மாறியது குறித்து யாரும் நேரடியாக கேள்வி எழுப்பவில்லை. எனினும் அரசல்புரசலாக அந்த பேச்சுக்கள் உறவினர்களுகிடையில் ரகசியமாக நடந்து கொண்டு இருந்தாலும் திருமண ஏற்பாடுகள் எந்தவித தங்குதடையுமின்றி செவ்வனே நடந்து கொண்டுதானிருந்தது.
சிவப்பு நிற கூரை புடவையில் அழகு மிளிர கூந்தலில் வண்ண மலர்களான ஜடைமுழாங்காலை தொட்டு தழுவி கொண்டிருக்க தோளில் பூ மாலைகள் அணிந்து பெண்ணவள் நடந்து வந்து மணமேடையில் பரியின் அருகில் வந்து அமர்ந்தாள். பரி அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
மனதிலிருந்த பயம் விலகி மீண்டும் காதல் உணர்வு பொங்கி கொண்டிருந்தது. பரியும் அவள் அழகிற்கு கொஞ்சமும் குறையவில்லை. வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக கம்பீரத்தோடும் மிடுக்கோடும் அமர்ந்திருந்த பரியை பார்த்த பெண்களின் கண்களெல்லாம் அவன் மீதுதான். எனினும் அவனவள் அவனை ஒரு முறை கூட திரும்பி பார்க்கவில்லை.
புரோகிதர் மந்திரம் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க பெண்ணவளின் கழுத்தில் மங்கலநாண் பூட்ட சிறப்பாக அவர்கள் திருமணம் முடிந்தது. அவளை தோளோடு அணைத்து திருமண சடங்கின் நிறைவாக அவள் நெற்றியில் அவன் திலகம் வைக்கும் போதே அவள் விழிகள் அவனை நேர்கொண்டு நிமிர்ந்து பார்த்தது. எரித்துவிடுமளவுக்கு கோபம் மின்னியது அவள் பார்வையில்.
அதேநேரம் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக ஒரு துளி நீர் அவள் விழிகளிலிருந்து நழுவ அவன் கரம் அவளை விடுவித்ததும் அவசரமாக தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.
அவள் கண்ணீரை பார்த்த பரி கலக்கமுற்றான். அதற்கு பிறகு எந்த சடங்குகளிலும் அவனால் முழு மனதாக ஈடுபட முடியவில்லை. அவளிடம் எப்படியாவது பேசி நடந்த விஷயங்களை குறித்து தெளிவுப்படுதிட வேண்டுமென்று யோசித்து கொண்டிருந்தான்.
ஒரு வழியாக திருமண சடங்குகள் முடித்து மணமக்கள் வீட்டுக்கு அழைத்துவரப்பட மகிழினி தன் அறைக்குள் புகுந்து முகத்தை தொங்கப்போட்டு கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தாள்.
பின்னோடு வந்த பரி கதவை மூடிவிட்டு உள்ளே வர, சத்தம் கேட்டு திரும்பிய மகிழினி, “இப்போ எதுக்கு நீங்க உள்ளே வரீங்க… ஒழுங்கா வெளிய போங்க” என்று கத்த,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மகி” என்றான் பரி நிதானமாக!
“நீங்க எதுவும் பேச வேண்டாம்… வெளியே போங்க” என்றவள் மீண்டும் கத்த,
“சரி எதுவும் பேசல… ஆனா வெளிய போக மாட்டேன்… என்னடி பண்ணுவ?” என்று விஷமமாக புன்னகைத்து கொண்டே அவளை நெருங்கி வந்திருந்தான்.
“நீங்க செஞ்சதெல்லாம் அப்பாகிட்ட நான் இப்பவே சொல்லிடுவேன்” என்று மிரட்டி கொண்டே அவள் எழுந்து கொள்ள,
“அப்பாகிட்ட சொல்றவ நேத்தே சொல்ல வேண்டியதுதானேடி” என்றவன் சொல்லி அவளை நெருங்கி வந்தான். அவள் பதட்டமாகி, “வேண்டாம்… போயிடுங்க” என்று சொல்லி குறுக்கே தன் கரங்களை நிறுத்தி அவனை நெருங்கவிடாமல் தடுத்து கொண்டிருந்தாள். அவள் அவனை தள்ளிவிட முடியாமல் அவதியுற்றவள் பயத்தில், “அம்ம்மாஆஆஆ” என்று கத்த,
“ஏ எ ஏ வாயை மூடுறி… வாயை மூடுறி” என்று அவன் மிரட்டியும் அவள் அவன் சொல்வதை காது கொடுத்து கூட கேட்காமல் தொடர்ச்சியாக கத்தினாள்.
“கத்தின மவளே கிஸ் பண்ணிடுவேன்” என்று சொல்லிக்கொண்டே அவளை படுக்கையில் சரித்துவிட்டு அவன் நெருங்க,
“உஹும்… கத்த மாட்டேன் கத்த மாட்டேன்” என்று தன் வாயில் கை வைத்து மூடி கொண்டாள். அவன் முகம் புன்னகையாக மாறியது. அதோடு அவளை அத்தனை நெருக்கமாக அதுவும் திருமண கோலத்தில் பார்த்து மொத்தமாக தன் வசம் இழந்திருந்தான். காதல் மட்டுமே இருந்த இடத்தில் இப்போது உரிமையும் சேர்ந்து கொண்டதே. அவளிடம் அத்து மீற தவித்தது அவனின் ஆண் மனம்.
துறுதுறுவென்று இருந்த அவளின் மயக்கும் விழிகளில் கட்டுண்டு அவன் கிறக்கமாக அவளையே விழிஎடுக்காமலும் விலகாமலும் பார்த்து கொண்டிருந்தான்.
அதற்குள் தடதடவென்று பலமாக கதவு தட்டும் ஓசை கேட்க, “எந்த இடியட் அது” என்று அவன் கடுப்பாகும் போது, “டே பரி” என்று சமீரின் குரல் கேட்டது. எரிச்சலின் மிகுதியில் அவளை விலகி சென்று அவன் கதவை திறக்க செல்ல அவள் மெல்ல எழுந்தமர்ந்து தப்பிய உணர்வில் மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள்.
பரி கதவை திறந்ததும் சமீர் மகிழினி உள்ளே இருப்பதை பார்த்து, “இருந்தாலும் நீ ரொம்பத்தான் ஃபாஸ்டு மச்சி” என்று கிண்டலாக சிரித்து கொண்டே தலையசைக்க,
“நீ இன்னும் ஊருக்கு கிளம்பலையா?” என்று பரி கடுப்பாக கேட்டான்.
“ஏன்டா கேட்க மாட்ட? ஒவ்வொரு தடவையும் போறவனை போக விடாம தடுத்துட்டு… இப்ப ஏன் கிளம்பலன்னா கேட்குற… எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்… உன்னை போய் பிரெண்டா நினைச்சேன் பாரு” என்று சமீர்அந்த நீண்ட நெடிய வசனத்தை பேசி முடிக்கும் போது பரி அவனை அலட்டி கொள்ளாமல் பார்த்து,
“ஓவரா பேசாதே டா… ஒழுங்கா உன் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டு கிளம்பு… இந்த தடவை உன்னை நான் சத்தியமா தடுக்க மாட்டேன்” என்று அவனை வாசல் வரை தள்ளி கொண்டு வந்து நிறுத்தினான்.
அங்கே அவர்கள் எதிர்ப்பாராதவிதமாக கலிவரதனுக்கும் மகிழினி உறவினர்களுக்கும் பெரிய வாக்குவாதாமே நிகழ்ந்து கொண்டிருந்தது.
போதாகுறைக்கு வசந்தாவின் குரலும் வரதனின் குரலும்தான் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது.
“என்னடா நடக்குது இங்க?” என்று பரி அதிர்ச்சியாக கேட்க,
“பார்த்தா தெரியல… சண்டை” என்றான் சமீர்.
“எதுக்குடா?”
“சடங்கு நடத்திறதுலதான் சண்டை”
“என்ன சடங்கு?”
“முதல் இரவுதான்”
பரி அதிர்ச்சியோடு நண்பனை திரும்பி பார்த்தான்.
“உங்க அப்பா இப்பவே பொண்ணை அனுப்பி வையுங்க போகணும்னு சொல்றாரு… உன் மாமியாரு எல்லா சடங்கும் முடிச்சுதான் அனுப்பி வைப்பேன்னு சொல்றாங்க… ரொம்ப நேரமா இந்த பிரச்சனைதான் போயிட்டு இருக்கு… இன்னும் உன் காண்டாமிருகம் மாமானுங்க வேற இந்த பக்கம் வரல… அவனுங்களும் வந்தா என்ன நடக்குமோ? அதை பத்தி உன்கிட்ட சொல்லலாம்னு ஒரு நல்லெண்ணத்திலதான் நான் கதவை தட்டினா… நீ என்னடான்னா” என்று சமீர் நண்பனை பார்க்க, பரி அவன் குடும்ப சண்டையை பார்த்து தலையடித்து கொண்டான்.
சமீர் அவன் தோளை சமாதானமாக தட்டி, “நீ பிரியாணி சாப்பிடலாம்னு பார்த்த.. இங்க இவைங்க உனக்கு பீன்ஸ் பொரியல் கூட வைக்க மாட்டாங்க போலேயே… வாட் அ கொடுமை?” என்றான்.
பரி நன்பனை கடுப்பாக திரும்பி பார்க்க சமீர், “எனி வே ஆல் தி பெஸ்ட் மச்சி… நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட, அவனின் நண்பர்கள் பட்டாளமும் புறப்பட தயாராக இருந்தது.
“மவனே! கலாய்ச்சிட்டா போற… உன்னை சென்னைக்கு வந்து பார்த்துக்கிறேன்… இருடா” என்று பரி மிரட்டலாக உரைத்தான்.
“இந்த ஜுராசிக் பார்க்ல இருந்து நீ தப்பிச்சு வந்தா கண்டிப்பா பார்க்கலாம்டா” என்று சொல்லி கொண்டே சமீர் வாயிற் கதவை நோக்கி சென்று விட பரியால் அவனை அப்போதைக்கு முறைக்கத்தான் முடிந்தது.
இன்னொரு பக்கம் பிரச்சனை படுதீவிரமாகி கொண்டேயிருக்க பரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
8
முதல் இரவு
விமலனும் சுசீந்திரனும் சௌந்தர்யாவை எங்கு தேடியும் கிடைக்காத கடுப்பில் வீட்டிற்கு வர, அங்கேயோ இப்படி ஒரு சண்டை. இருவருக்குமே அதனை பார்த்து எரிச்சல் தாங்கவில்லை.
மனைவி மீது கோபமான சுசீந்திரன் அவரை தனியாக இழுத்து சென்று, “இப்போ எதுக்கு நீ சண்டை போட்டுட்டு இருக்கவ… பொண்ணை அனுப்பி வைன்னா அனுப்பி வைக்க வேண்டியதுதானே” என்று கூற,
“என்ன இப்படி சொல்றீங்க?கருவேப்பிலை கொத்து மாறி நமக்கு இருக்கிறது ஒன்னே ஒண்னுதென்… அவளுக்கு செய்ய வேண்டியதெல்லாம் திருப்தியா செஞ்சி அனுப்ப வேண்டாமா? அவளுக்கும் செஞ்சி பார்க்கலன்னா அப்புறம் வேறு யாருக்கு?” என்று வசந்தா அழுதபடி தன் கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டார்.
“இப்போ போய்ட்டு இருக்க பிரச்சனையில இதெல்லாம் ரொம்ப தேவையாக்கும்? இந்த அழுகுற வேலையெல்லாம் வேண்டாம்… ஒழுங்கா புள்ளையை அனுப்பிவிடு” என்று அவர் திட்டவட்டமாக சொல்ல,
“உனக்குதான் அந்த புள்ளைய பெத்தனாயா நானு” என்று பட்டென்று கணவனை கேட்டுவிட்டார் வசந்தா.
“ஏய்!” என்று சுசி எகிறி கொண்டு வர, “பின்ன… ஒரே ஒரு பொண்ணு கொஞ்சமாச்சும் கட்டி கொடுத்து அனுப்புறோமேன்னு கவலை இருக்கா உனக்கு… ஹ்ம்ம்… உனக்கு ஏன் இருக்க போகுது? உனக்கு உன் அண்ணன் பசங்க இருந்தா போதும்… அதான் ஒருத்தி உங்க மூஞ்சில எல்லாம் நல்லா கரியை பூசிட்டு போயிட்டாளே!” என்று வசந்தா சொல்லி முடிக்கும் சுசீந்திரன் மனைவியை எல்லோர் முன்னிலையிலும் அடித்துவிட்டார்.
வசந்தா சொன்னது போலதான் ஊரே இவர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தது. அவர்களிடம் காண்பிக்க முடியாத கோபத்தை மனைவியிடம் காட்டிவிட்டார்.
அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஸ்தம்பித்து சுசீந்திரனை பார்க்க, நடந்தவற்றை அனைத்தையும் பின்னிருந்து அமைதியாக பார்த்து கொண்டிருந்த மகிழினி, “அம்மா” என்று பதறி கொண்டு ஓடி வந்தாள்.
அங்கிருந்தவர்கள் எல்லோரும் அந்த காட்சியை பார்த்து மிரட்சியோடு நின்றுவிட சுசீந்திரன் மனைவியிடம், “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன கொன்னுடுவேன் பார்த்துக்கோ” என்று கத்திவிட்டு கலிவரதன் புறம் திரும்பி,
“நீங்க புள்ளையையும் பொண்ணையும் அழைச்சிட்டு போங்க மச்சான்” என்றார்.
கலிவரதனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. சில நொடிகள் யோசனையோடு நின்றவர் பின் மனைவியிடம் கண்ணசைத்து புறப்பட தயாராக சொன்னார்.
பரிக்கும் ஒருவகையில் அது நல்லதென்றேபட்டது. இங்கிருந்து தப்பித்தால் போதுமென்று தன் பெட்டியை அவன் அடுக்க, இன்னொருபுறம் வசந்தா அழுது கொண்டே மகளுக்கு தேவையான பொருட்கள் துணிமணிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.
“எனக்காக ஏன் ம்மா நீங்க அப்பாகிட்ட சண்டை போட்டீங்க… அவர் கோபத்தை பத்தி உங்களுக்கு தெரியாதா?” என்று அவளும் அழுது தேம்பி கொண்டே கேட்க,
“என் பொண்ணுக்கு கண்ணுக்கு நிறைஞ்ச மாறி எல்லாம் செய்யணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?” என்று சொல்லி வேதனையோடு மகளை அணைத்து கொண்டார். அவர் விழியில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
“இதுக்குதான் இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேன்” என்று மகிழினி சொல்ல,
“அடி போடி… இன்னைக்கு இல்லன்னாலும் என்னைகாச்சும் அது நடக்கதானே போகுது… அதுவும் எனக்கு மாப்பிள்ளை பார்த்தா நல்ல மாதிரி தோணுது மகிம்மா” என்று அவர் மகளின் கண்ணீரை துடைக்க,
‘நல்ல மாதிரி… நொள்ள மாதிரி… புளுகு மூட்டை… பொய்… பிராட்’ என்று பரி பற்றி மகிழினி வாயிற்குள் முனகி கொண்டிருந்தாள். ஆனால் வசந்தா மகளின் மனநிலையை கவனியாமல் அவள் மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று அறிவுரை வழங்கி கொண்டிருந்தார்.
கலிவரதன் தம் குடும்பத்தோடு கிளம்ப தயாராக இருக்க மகிழினியை கண்ணீரோடு வசந்தா வழியனுப்ப தாமரை அவரிடம், “நீங்க ஒன்னும் கவலை படாதீங்க மதனி… மகிகுட்டியை நான் என் பொண்ணு போல பார்த்துக்குவேன்” என்று பரிவாக சொல்ல நாத்தனாரின் கரத்தை பற்றி கொண்டு அழுதார் வசந்தா!
“பார்த்துக்கோ தாமரை… ரொம்ப சின்ன பொண்ணு” என்றவர் சொல்ல,
“நான் பார்த்துக்கிறேன் மதனி” என்று மீண்டும் தாமரை அவருக்கு தைரியம் சொல்ல கலிவரதன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, “தாமரை!” என்று கத்தினார்.
தாமரை எல்லோரிடமும் சொல்லிவிட்டு கலிவரதனின் காரில் ஏற, மகிழினி, “போயிட்டு வரேன் அப்பா” என்று கண்ணீரோடு தந்தையின் முகம் பார்த்தாள்.
“ம்… சரி ம்மா” என்று மகளின் தலையை வருடி கொடுத்தார். அப்பாவின் தோளில் சாய்ந்து அழ வேண்டுமென்று அவளுக்குள் இருந்தாலும் சுசீந்திரனின் இறுக்கமான பார்வை எப்போதுமே அவளை நெருங்கவிட்டதில்லை. இப்போதும் அதே நிலைமைதான். ஏக்கத்தோடு தந்தையை பார்த்தவள் பின் ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்லிவிட்டு திரும்பினாள்.
அவளின் பெரியம்மா மஞ்சுளாவிடம் சொல்ல, “மம்ம்ம்ம் சரி சரி” என்று முகத்தை தொங்கபோட்டு கடுப்பாக உரைத்தார். மகள் வாழ வேண்டிய வாழ்க்கையாயிற்றே!
அதை எண்ணி அவர் உள்ளுர பொருமி கொண்டிருக்க மகிழினி மீண்டும் தன் தாய் முகத்தை பார்த்தாள். போ என்றவர் சமிஞ்சை செய்ய, அவள் மனமோ அவள் ஆசையாக வளர்க்கும் முயல் குட்டிகளை பார்க்க ஏங்கியது. ஆனால் பார்க்க அனுமதிப்பார்களா?
மனதிற்குள் அந்த வாயில்லாத ஜீவனை எண்ணி அவள் மருகி கொண்டே செல்ல, பரியும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டான். முக்கியமாக அவன் சுசீந்திரனை பார்த்து, “போயிட்டு வரேன் மாமா!” என்று விளிக்க, அவர் யோசனையாக அவனை பார்த்து தலையாட்டினார்.
முன்னமே அவன் இப்படி ஒருமுறை சொன்னதை எண்ணி அதனை ஒப்பிட்டு பார்த்தவருக்கு பரியின் நடவடிக்கையிலான சந்தேகம் மனதை துளையிட்டு கொண்டிருந்தது.
அதற்கு பிறகு கலிவரதன் தன் காரில் முன்னே செல்ல, பரி மகிழினியோடு பின்னே தன் டஸ்டர் காரில் புறப்பட்டான். மகிழினி முன்னிருக்கையில் அமரவும், தன்னவளுடன் செல்ல போவதில் வானமே வசமான உணர்வு அவனுக்கு. ஊருக்கு புறப்பட்டு வரும் போது கூட இப்படி ஒரு பெண்ணின் மீது காதல் கொள்வோம் என்றெல்லாம் அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
அதுவும் அவளிடம் காதலை தாண்டி ஒரு புதுவிதமான போதையும் ஈர்ப்பையும் உணர்ந்தான். திகட்ட திகட்ட அவளை ரசித்து பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அதுவும் அவன் கேட்காமலே அது நடந்த விட்ட சந்தோஷத்தில் அவனுக்கு தலை கால் புரியவில்லை.
தேவதையாக அவள் சிவப்பு நிற பட்டுடுத்தி கொண்டு அமர்ந்திருக்க அவனின் மனமெல்லாம் அவளிடமே! ஆனால் மகிழினியின் பார்வை அவனை திரும்பி கூட பார்க்காமல் எங்கோ வெறிக்க, அவளிடம் எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தில் பேசிவிட வேண்டுமென்ற என்ற எண்ணத்தோடு,
“மகி” என்று காரை இயக்கி கொண்டே அவள் புறம் திரும்பி அழைத்தான். அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை. வேண்டுமென்றே அவனை அவள் நிராகரிக்க, “மகி… கொஞ்சம் பேசணும்” என்றான்.
அப்போதும் அவன் புறம் அவள் திரும்பவில்லை. எதுவும் பேசவுமில்லை. “மகி” என்றவன் மீண்டும் சத்தமாக அழைக்க,
“எனக்கு உங்ககிட்ட எதுவும் பேச வேண்டாம்” என்றவள் திரும்பி கொண்டே அழுத்தமாக பதிலுரைத்தாள்.
“வாழ்க்கை பூரா என் கூட பேசாமலே இருந்திருவியா டி நீ” என்றவனும் கோபத்தோடு குரலயுயர்த்தினான். அந்த நொடி அவள் அவன் புறம் திரும்ப, காரின் பின்னிருந்து ஏதோ சத்தம் கேட்க அவள் பின்னோடு திரும்பி நோக்கினாள்.
“அங்க என்ன பார்க்கிற… இங்க என் முகத்தை பாரு” என்றவன் சொல்லி கொண்டிருக்கும் போது கார் வேகத்தடையில் மோதி ஏறி இறங்க, மகிழினியின் காலில் ஏதோ தட்டுப்பட்ட உணர்வு!
அதை அவள் குனிந்து எடுக்க, அது ஒரு காலி பியர் பாட்டில். பரியின் முகம் இருளடர்ந்துபோனது. அவள் அதனை கையிலேந்தி கொண்டு அவனை கோபமாக முறைக்க, ‘அறிவு கெட்டவனுங்க… பாட்டிலை கூட தூக்கி போடாம வைச்சிருக்கானுங்க’ என்று முனகி கொண்டே,
“பிரெண்ட்ஸுங்க கூட வரும் போது…” என்று இழுத்துவிட்டு, “அதை என்கிட்ட கொடு மகி… போற வழில தூக்கி போட்டிரலாம்” என்று அதனை அவள் கரத்திலிருந்து பெற்று கொண்டான்.
அதோடு அவன் தன் மனதிற்குள், ‘பரி உனக்கு டைமே சரியில்ல… பேசாம சைலண்ட்டா வந்திரு வீட்டுக்கு போய் பேசிக்கலாம்’ என்று எண்ணி கொண்டு காரை செலுத்துவதில் மும்முரமாக இருக்க, மகிழினி காரின் சீட்டில் சாய்ந்து கொண்டு அப்படியே உறங்கி போனாள்.
உரிமையிருந்தும் நெருங்க முடியாமல் பரியின் மனம் மகிழினியை பார்த்து பார்த்து ஏங்கி கொண்டிருக்க, இருள் சூழுந்த சமயத்தில் அவர்கள் கார் சென்னைக்குள் பிரவேசித்தது. பிரமாண்டமான அந்த வாயில் கதவை தாண்டி கார் உள்ளே நுழைய சில நொடிகளில் தாமரை உறங்கி கொண்டிருந்த மருமகளிடம், “மகி குட்டி” என்று அவளை தட்டி எழுப்பினார்.
அவள் விழிகளை திறந்து மலங்க மலங்க விழித்தாள். அவளை இன்னும் சிறுபிள்ளையாகத்தான் பார்க்க தோன்றியது தாமரைக்கு! ஆதலால் தாமரை அவளை அப்படித்தான் செல்லமாக விளிப்பார்.
“வீடு வந்திருச்சுடா… இறங்கு” என்று தாமரைசொல்ல, அவள் திரும்பி ஓட்டுனர் இருக்கையில் பார்த்தால் பரி அங்கு இல்லை. இறங்கி வந்தவள் அந்த பங்களாவை மேலும் கீழுமாக பார்த்தாள். பெரிய வீடுதான் என்றாலும் அவர்கள் வீடு போன்ற சுற்றிலும் தோட்டமெல்லாம் இல்லையென்று தோன்றியது.
அவற்றை பார்த்து கொண்டே மகிழினி நடந்து வர ஆரத்தி தட்டை கையில் வைத்து கொண்டு தாமரை, “இரும்மா” என்று அவளை நிறுத்தி வைத்துவிட்டு,
“பரி எங்கே போனான்?… பரி பரி” என்றவர் குரல் கொடுக்க, “தோ வந்துட்டேன் ம்மா” என்று பின்புறம் இருந்து வந்தான்.
“அதுக்குள்ள ஏன் கண்ணா உள்ளே போன” என்று அவர் மகனிடம் கேட்க,
“உள்ளே போல… இங்க பின்னாடி… நீங்க இப்ப சுத்துங்க” என்று அவன் வேண்டுமென்றே மகிழினியை இடித்து கொண்டு அவள் அருகில் நின்றான்.
அத்தை முன்னிலையில் முறைக்க கூட முடியாமல் அவள் விலகி நிற்க பார்க்க, அவன் அவள் கரத்தை அழுந்த பற்றி கொண்டான். தாமரை திருஷ்டி கழித்து மூன்று சுற்று முடித்து மகனுக்கும் மருமகளுக்கும் பொட்டு வைத்துவிட்டு,
“வலது காலை வைச்சு உள்ளே போங்க” என்று சொல்லிவிட்டு சென்றார்.
மகிழினி ரொம்பவும் ஆராய்ச்சி செய்து வலது காலை உயர்த்த பரி அவளை அலேக்காக கையில் தூக்கி கொண்டான்.
“என்ன பண்றீங்க?என்னை இறக்கி விடுங்க” என்றவள் படபடக்க,
“முடியாது… என்னை கார்ல வரும் போது எவ்வளவு கடுப்பேத்தின” என்று சொல்லி கொண்டே அவளை வீட்டிக்குள் தூக்கிவர, “இறக்கி விடுங்க” என்று தத்தளித்து கொண்டிருந்தாள் மகிழினி!
“மாட்டேன்” என்று சொல்லி உள்ளே சுழன்று மேலே சென்ற படிகெட்டில் அவளை தூக்கி சென்று தன் அறைக்குள் நுழைய பார்க்க,
“என்னை விடுங்க” என்று அவசரமாக அவன் கரத்திலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ஒரே ஓட்டமாக கீழே இறங்கி வந்துவிட்டாள்.
இதயமெல்லாம் படபடக்க அவள் மூச்சு வாங்க நிற்க, “என்னம்மா மகி?” என்று உள்ளே வந்த தாமரை கேட்க,
“ஒன்னும் இல்ல… அத்தை” என்று மறுப்பாக தலையசைத்தாள். மேலே பரி அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.
“ச்சே” என்று முகத்தை சுளித்து கொண்டு அவள் முகப்பறையில் வந்து நிற்க, கலிவரதன் எதை பற்றியும் கொஞ்சமும் அக்கறையில்லாமல் தொலைக்காட்சி பெட்டிக்குள் மூழ்கியிருந்தார்.
தாமரை அப்போது மருமகள் தோள் மீது கை வைத்து, “உன் பெட்டி எல்லாம் இந்த ரூமுக்குள்ள வைக்க சொல்லி இருக்கேன்… நீ போய் குளிச்சிட்டு பெட் மேல ஒரு புடவை எடுத்து வைச்சிருக்கேன்… அதை கட்டிட்டு வா” என்றார்.
மகிழினி அந்த அறையை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் தன் அத்தையின் புறம் திரும்பி, “அத்தை” என்றவள் அழைக்க, “சொல்லுடா” என்றார்.
“அது… இந்த ஃபர்ஸ்ட் நைட்டெல்லாம் இன்னைக்கே வைப்பீங்களா?” என்றவள் தயங்கி தயங்கி கேட்க, தாமரை கொல்லென்று சிரித்துவிட்டார்.
“இன்னைக்கு வைக்காம” என்றவர் முகம் மலர சொல்ல, “அது இல்ல அத்தை” என்றவள் இழுக்க,
“நீ முதல போய் டிரஸ் மாத்திட்டு வாம்மா” என்றார்.
அவளும் வேறு வழியின்றி அந்த அறைக்குள் சென்று குளித்து முடித்து அவர் எடுத்து வைத்திருந்த மஞ்சள் நிற புடவைக்கு மாறியிருந்தாள். மெலிதான பட்டு ரகம். அவள் நிறத்திற்கு உடல் வாகிற்கு அந்த புடவை பாந்தமாகவும் எடுப்பாகவும் இருந்தது.
தாமரை வேலையாட்கள் மூலமாக பரியின் அறையை தயார் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் முன்னே நின்று செய்து முடிக்க, கலிவரதன் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
“சொந்த காரங்க எல்லாம் கூட்டி செய்யணும்… எல்லா இந்த மனுஷனால” என்று தாமரை புலம்பி கொண்டே அவர்கள் முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு,
“புள்ளைங்கள் ஆசீர்வாதம் செய்யணும்” என்று கணவனைஅழைக்க கடமைக்கென்று அவரும் வந்து நின்று ஆசிர்வாதம் செய்தார். இருவரையும் கடவுளை வணங்க வைத்து அறைக்குள் தாமரை அனுப்ப, மகிழினி முகம் வாடி போனது.
அவள் என்ன சொன்னாலும் அது உபயோகமில்லை. மௌனமாக தன் அத்தை சொன்னவற்றை உள்வாங்கி கொண்டாள். இருப்பினும் மகிழினிக்கு பரியின் எண்ணமே உள்ளுர குளிரெடுத்தது. போதா குறைக்கு சரியாக அந்த நேரம் பார்த்து ஊரிலிருந்து ஃபோன் செய்த வசந்தா, “பார்த்து நடந்துக்கோ மகி” என்று அறிவுரை வழங்க அவளால் எதுவும் பேச முடியவில்லை.
அவள் எந்த அறைக்குள் செல்லாமல் தலைதெறிக்க ஓடி வந்தாலோ இப்போது அந்த அறைக்குள் தனியாக நுழைய அஞ்சி கொண்டு அவள் மெதுவாகவே உள்ளே வர, அந்த அறையின் அலங்காரங்கள் எல்லாம் அவளின் அச்சத்தை மேலும் கூட்டியது.
பரி தன் படுக்கையின் மீது ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தான். அவள் அந்த அறையின் சுவற்றில சாய்ந்தபடி ஒரு ஓரமாக நின்று கொள்ள,
“மாமா கிட்ட வரமாட்டியா மகி” என்றவன் புன்னகை முகமாக கேட்டான்.
“யார் மாமா?” என்றவள் அவனை பல்லை கடித்து கொண்டு முறைக்க,
“நான் உங்க அக்காவை கட்டிலனாலும்… உனக்கு நான் அத்தை பையன்டி…எப்படி பார்த்தாலும் இந்த பரி உனக்கு மாமன்தான்” என்றான்.
“மூஞ்சி… சரியான பிராடு புளுகு மூட்டை… ஏமாத்துகாரன்” என்றவள் சொல்ல அவன் சத்தமாக சிரித்துவிட்டு, “இன்னும் எதாச்சும் மிச்சம் இருக்கா?”” என்று கேட்டு அவன் எழுந்துவர,
“வேண்டாம்… என் கிட்ட மட்டும் வராதீங்க” என்றவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல பரியும் அவளை விடுவதாக இல்லை.
“மகி அங்கேயே நில்லு” என்றவன் அழைப்பதை காதில் வாங்காமல் அவள் அந்த அறையை சுற்ற ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அவள் பரியின் கரங்களில் சிக்கி கொண்டாள். அவளை இடையோடு வளைத்து தன்னருகில் அவன் இழுத்து அணைத்து கொள்ள, “என்னை விடுங்க” என்று அவள் கத்த,
“சரியான லவுட் ஸ்பீக்கர்… வாயை மூடுறி” என்று மிரட்டினான்.
“நீங்க என்னை விடுங்க” என்றவள் தவிக்க அவளை படுக்கையில் இழுத்து தள்ளியவன் அவள் அருகில் நெருக்கமாக படுத்து கொள்ள அவள் பயத்தில் இறுக்கமாக தன் கண்களை மூடி கொண்டாள்.
ஆனால் அவன் அந்த எல்லையை கடக்காமல் அவளை மௌனமாக பார்த்து கொண்டிருக்க, அவள் மிரட்சியோடு மெல்ல விழிகளை திறந்து அவன் முகத்தை ஏறிட்டாள்.
மீண்டும் அவள், “என்னை விடுங்க” என்று அவன் கரத்தை விலக்க போராட,
“மாட்டேன்… யு ஆர் மை க்யூட் டால்… நீ இப்படியே என் பக்கத்தில இருக்கணும்” என்றவன் சொல்ல, அவனை குழப்பமாக பார்த்து கொண்டிருந்தாள்.
அவளை கட்டியணைத்து கொண்டிருந்தானே ஒழிய அவன் அவளிடம் அத்து மீறவில்லை. அவன் பார்வை அவளையே பார்த்து கொண்டிருக்க, “நீ கம்னு தூங்கு… நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்” என்க,
அவள் அவனை சந்தேகமாக பார்க்க, “ப்ராமிஸ் பேபி” என்று சொல்ல அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“நீங்க இப்படியிருந்தா எப்படி எனக்கு தூக்கம் வருமாம்” என்றவள் கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது… இனிமே இப்படிதான்… பழகிக்கோ” என்றவன் அழுத்தமாகசொல்ல, “அதெல்லாம் முடியாது… என்னை விடுங்க” என்று அவளும் பிடிவாதமாக அவனிடமிருந்து பிரிந்து செல்ல முயன்றாள்.
அவன் இன்னும் இறுக்கமாக இழுத்து அணைத்து கொண்டு, “சேட்டை பண்ண… நான் அப்புறம் என் லிமிட்டை க்ராஸ் பண்ணிடுவேன்” என்று எச்சரிக்கை செய்ய, அவள் அவனை முறைத்து பார்த்துவிட்டு அவனிடம் எந்த எதிர்வினையும் காட்டாமல் மௌனமாக இருந்துவிட்டாள்.
“அப்படி” என்றவன் சொல்ல,
“எனக்கு உங்களை பிடிக்கல” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
“பிடிக்கலன்னா… நேத்தே உங்க அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே” என்றவன் கேட்க,
“நிறுத்தியிருப்பேன்… நிறுத்தலாம்னுதான் பார்த்தேன்… ஆனா அண்ணனுங்க அப்பா பேசிட்டு இருந்ததை கேட்டதும் எனக்கு பயம் வந்திருச்சு… நான் எதையாச்சும் சொல்ல போக… அவங்க உங்க மூலமா அக்காவை கண்டுபிடிச்சு எதாச்சும் பண்ணிட்டா… பண்ணிட்டா என்ன…. பண்ணிடுவாங்க
சாகிற வரைக்கும் அப்புறம் நான் நிம்மதியா இருக்க முடியுமா… அதான் சொல்லல” என்று சொல்லி குழந்தை போல் அவள் அழ, “மகி” என்று அவன் அவள் கண்ணீரை துடைக்க வரவும்,
“எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்… நீங்க ஒன்னும் என் கண்ணை துடைக்க வேண்டாம்” என்று அவளே அவள் கண்ணீரை துடைத்து கொண்டாள்.
“மகி… நான் நடந்ததை உன்கிட்டசொல்லணும்” என்றவன் ஆரம்பிக்க,
“நீங்க என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது சரின்னு ஆகாது” என்றாள்.
“சரியா தப்பான்னு நான் சொன்ன பிறகு முடிவெடு மகி” என்றவன் சொல்ல அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு அழுகை அழுகையா வருது… என்னை தூங்க விடுங்க… இப்ப நான் எதையும் கேட்கிற மனநிலையில இல்ல” என்றாள்.
“சரி தூங்கு” என்றவன் எட்டி அந்த அறை விளக்கை அணைத்துவிட அவள் விலகி செல்ல பார்த்தாள். அவன் விடாமல் அவளை இழுத்து தன்னருகில் படுக்க வைத்து கொண்டு, “இந்த டபாய்க்கிற வேலையெல்லாம் வேண்டாம்… நீ இப்படிதான் என் பக்கத்தில் இருக்கணும்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு விழிகளை மூடி கொண்டான்.
அவன் கரத்திற்குள் இருப்பதால் அவள் அவதியுற்று கொண்டிருக்க, அவளுக்கு உறக்கமே வரவில்லை. அவன் உறங்கிவிட்டனா என்று அவன் மூச்சை சோதித்து பார்த்துவிட்டு அவள் கரத்தை அவள் விலக்க எண்ண ரொம்பவும் பிரயத்தனப்பட்டாள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மாறாக இன்னும் இறுக்கமாக அவன் அவளை அணைத்து கொண்டதுதான் மிச்சம்.
“ச்சே” என்று கடுப்பானவள் அதற்கு மேல போராட முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல அவளும் தம் விழிகளை மூடி உறங்கிவிட்டாள். விடிந்து அவள் கண் விழிக்க பரியின் கரம் அவள் மீது இல்லை. அவளின் கரம்தான் அவன் மீதிருந்தது.
பதறி கொண்டு தன் கரத்தை எடுத்துவிட்டு எழுந்தமர்ந்தவள் பரியை எரிச்சலோடு பார்த்தாலும் அவன் மீது இம்முறை ஏனோ கோபம் வரவில்லை.
எழுந்து குளித்துவிட்டு தன் அத்தையை தேடி கொண்டு போக தாமரை சமையலறையில் இருந்தார். “அத்தை” என்றவள் குரல் கொடுக்க,
“எழுந்திட்டியா மகிகுட்டி” என்று சிரித்த முகமாக அவளை வரவேற்று, “இரு கண்ணு… டீ போடறேன்” என்றார். “நான் போட்டுக்கிறேன் அத்தை” என்று அவள் சொல்ல, “அதெல்லாம் முடியாது” என்று மறுத்தார் தாமரை. அவர்களுக்கு இடையில் இப்படி சம்பாஷனை நடந்து கொண்டிருக்க, “தாமரை!” என்று அப்போது அலறினார் கலிவரதன்!
“மாமா ஏன் இப்படி கத்திராரு?” என்று மகி பதட்டம் கொள்ள, “அவருக்கு வேற என்ன வேலை?” என்று சொன்ன தாமரை,
“என்னங்க” என்று கேட்டு கொண்டு அவர் அழைத்து இடத்திற்கு ஓடினார் தாமரை.
“இது என்னது டி? இங்க இது எப்படி வந்துது” என்று அவர் ஆக்ரோஷமாக மனைவியிடம் எகிறி கொண்டிருந்தார்.
மகிழினியும் பின்புற வாயிலை கடந்து என்னது என்று எட்டி பார்த்தாள். முதலில் என்னவென்று புரியாமல் பார்த்தவள் பின் அதனை கண்டு, “ஐ! என் முயல் குட்டி” என்று முகம் மலர்ந்தாள்.
கலிவரதன் மனைவியை புரியாமல் பார்க்க, “மகிக்கு முயல்ன்னா ரொம்ப இஷ்டம்… அதான் அவங்க வீட்டில இருந்து பரி எடுத்துட்டு வந்திருப்பான் போல” என்று சொல்ல,
“ரொம்ப முக்கியம்… வரட்டும் அவனுக்கு இருக்கு” என்று அவர் வெறுப்பாக சொல்லிவிட்டு அகன்றார். தன் அத்தை சொன்னதை காதில் வாங்கி கொண்ட மகிழினியின் விழிகள் ஆச்சரயத்தில் விரிய, இதை எப்போது அவன் எடுத்து வந்திருப்பான் என்று யோசித்து கொண்டிருந்தாள்.
காரில் வரும் போது கேட்ட சத்தத்தை நினைவுப்படுத்தி கொண்டு, “நீங்கதானா அது… என் கூடவே நீங்களும் வந்துட்டீங்களா?” என்று அந்த முயல்களிடம் ஆசையாக பேசினாள்.
பரி அப்போது அவள் பின்னோடு வந்து காதோரம், “அவங்களா ஒன்னும் வரல… என் டாலுக்காக நான்தான் அவங்கள கூட்டிட்டு வந்தேன்…இங்க எந்த காட்டு பூனையும் வராது… உன் முயலுங்க சேஃபா இருக்கலாம்” என்று சொல்லஅவள் அவனை வியப்பாக நோக்கினாள்.
“என் டாலுக்கு ஹப்பியா?” என்றவன் கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள்.
“இந்த மாமாவுக்கு ஒரு தேங்க்ஸ் கூட கிடையாதா?” என்றவன் ஏக்கமாக கேட்க சில நொடிகள் யோசித்துவிட்டு பின் அவன் புறம் திரும்பி போனால் போகிறது என்று, “தேங்க்ஸ்” என்றாள். அப்போதும் அவன் முகத்தை பார்க்காமல் எங்கோ வெறித்து கொண்டு!
“தேங்க்ஸ் மாமான்னு சொன்ன குறைஞ்சா போயிடுவ” என்றவன் கேட்க, அவனை முறைத்து பார்த்துவிட்டு வீம்பாக நின்றாள்.
அப்போது, “பரி” என்று அவன் தந்தையின் அழைப்பு கேட்டு, “வரேன் பா” என்றவன் உள்ளே ஓட அவள் தன் இறுக்கம் தளர்ந்து அவள் முயல்களை பார்த்து மெல்ல இதழ்களை விரித்தாள். அத்தனை நேரம் மனதிலிருந்த சோர்வும் வேதனையும் களைந்து புத்துணர்ச்சி உண்டானது.
அவனோ மீண்டும் திரும்பி வந்து, “என் க்யூட் டால் டி நீ… உன் ஸ்மைல் அதை விட க்யூட்” என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் மின்னல் வேகத்தில் மறைந்தான் .
அவன் சென்றதும் அவசரமாக அவள் கன்னத்தை தேய்த்து கொண்டாலும் அவள் முகம் செவ்வானமாக சிவிந்து அவள் மனநிலையை அப்பட்டமாக காட்டி கொடுத்துவிட்டது. எந்த மாதிரி உணர்வு என்று புரியாமல் அவனின் செய்கையில் அவள் உள்ளம் தடுமாறி நின்றாள்.
9
பிடிவாதம்
அந்த முயல் கூண்டை பார்த்து படுகோபமான கலிவரதன், பரியை நிற்க வைத்து திட்டி தீர்த்துவிட்டார். அவனும் அசறாமல் திட்டு வாங்கி கொண்டிருந்தான். ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல்!
எதிரே இருப்பவர்கள் கடுப்பேற்றும் சூட்சமம் அது! அவன் மௌன நிலையில் இருப்பதை கண்டு ரொம்பவும் எரிச்சலடைந்த கலிவரதன், அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு தலையிலடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.
மகிழினிக்கோ பரி திட்டு வாங்குவதை பார்த்து மனதிற்கு ரொம்பவும் சங்கடமாகி போனது. முயல் குட்டியை எடுத்து வந்ததால்தானே மாமா அவனை கடிந்து கொண்டார் என்ற குற்றவுணர்வு!
அதேநேரம் பரி கொஞ்சமும் அதை பற்றி கவலையில்லாமல் சமையலறையில் நுழைந்து, “ம்மா… ஸ்ட்ராங்கா ஒரு காபி” என்று கேட்க,
தாமரை வருத்தத்தோடு, “இப்ப என்ன பண்ணிட்டன்னு இப்படி உன்னை திட்டிராரு… நேத்துதான் கல்யாணம் ஆன புள்ளை… மருமக வீட்டில இருக்கான்னு கொஞ்சமும் யோசிக்க வேண்டாம்” என்று புலம்பி கொண்டே காபியை போட்டு மகனிடம் கொடுத்துவிட்டு,
“என்னடா கண்ணா! அப்பா பேசணுதுல வருத்தமா?” என்று பரிவாக கேட்டார்.
“அவர் என்ன பேசறன்னு தெரிஞ்சாதானே வருத்தப்பட… நான்தான் அவர் பேசுனத கேட்கவே இல்லையே” என்று பரி தன் காதில் பின்புறம் மாட்டி வைத்திருந்த ஹெட் போனை காட்ட,
“அடப்பாவி! அந்த மனுஷன் பாட்டுக்கு அந்த கத்து கத்திட்டு இருக்காரு” என்று தாமரை மகனை அதிர்ச்சியாக பார்த்தார்.
“அவரை யார் அப்படி கத்த சொன்னது… கோர்ட்ல பேசி பேசி உன் புருஷனுக்கு வாய் ரொம்ப நீளமாயிடுச்சு” என்று அவன் சொல்ல தாமரை,
“டேய்!” என்று மகனின் காதை திருகினார்.
அவன் சிரித்து கொண்டே காபியை குடித்துவிட்டு, “நீயும் பேசாம இதே ஐடியாவை பாஃலோ பண்ணும்மா” என்று சொல்லி கொண்டே சமையலறை விட்டு வெளியே வந்தான்.
“உனக்கு உதைதான் விழ போகுது” என்று தாமரை சொல்ல இதெல்லாம் வெளியே மகிழினி நின்று கேட்டு கொண்டிருந்ததை பரி அறியவில்லை.
மகிழினி படிக்கெட்டில் யோசனையாக நின்று கொண்டிருப்பதை பார்த்து அவன் தன் முகத்தை பாவமாக மாற்றி கொண்டு, “ஏன் மகி… உனக்காக எவ்வளவு திட்டெல்லாம் வாங்குனே… அதுக்கு கம்பன்செட் பண்ற மாதிரி மாமாவுக்கு ஒரு கிஸ் கொடுக்க கூடாதா?” என்று அவள் முகத்தை நெருங்க,
“சீ” என்று அவனை தள்ளிவிட்டவள், “நீங்க எப்படி திட்டு வாங்குனீங்கன்னு அத்தைகிட்ட சொன்னதை நான் கேட்டேன்… சரியான ஃப்ராடு” என்று அவள் முகம் சுணங்கினாள்.
“கேட்டிட்டியா… ச்சே… ஒரு பரிதாப அலையை உருவாக்கி மாமன் உன்னை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பார்த்தா… வட போச்சே! இட்ஸ் ஓகே… நெக்ஸ்ட் டைம் இதை விட பெட்டரா எதாச்சும் ட்ரை பண்றேன் பேபி” என்று சொல்ல,
“மூஞ்சி… நீங்க எப்படி ட்ரை பண்ணாலும் எனக்கு உங்களை பிடிக்காது” என்று அவனை பார்த்து எரிச்சலாக சொல்லிவிட்டு அவள் படியிறங்கி சென்றுவிட, “பார்க்கலாம் பேபி!” என்று சவாலாக சொல்லி கொண்டே அவன் படியேறி சென்றுவிட்டான்.
ஒரு வாரமாக அவர்களின் இரவும் பகலும் இப்படியான செல்ல சண்டைகளில்தான் கழிந்தது. அதுவும் இரவானால் விம்புக்கென்று அவளை இழுத்து அணைத்து கொண்டுதான் படுத்து கொள்வான்.
முதலில் அவளுக்கு அது ரொம்பவும் சிரமமாக இருந்தாலும் நாளாக நாளாக அவன் அணைப்பு அவளின் இறுக்கத்தை தளர்த்தி கொண்டிருந்தது. அவள் பெண்மை மெல்ல மெல்ல அதை ரசிக்க தூண்டியது. ஆனால் அவன் மீதான கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த உணர்வுகளை தள்ளிவைத்து விடுவாள்.
அன்று பரி வேகமாக வீட்டிற்கு வந்து தன் அன்னையிடம் மகிழினி எங்கே என்று கேட்க, “அவ மேல ஃபோன் பேசிட்டு இருக்கா” என்றார்.
பரி தன்னறைக்குள் நுழையவும் மகிழினி தன் பேசியில் பேசி கொண்டே அவனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பி அமர்ந்து கொள்ள, “மகி கிளம்பு… கொஞ்சம் வெளியே போகணும்” என்று சொல்ல,
அவள் அவன் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் பேசியில் தன் உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தாள். அவனும் மகி மகி என்று அழைத்து ஒரு நிலைக்கு மேல் கடுப்பாகி அவள் பேசியை பிடுங்கி அதன் திரையை பார்த்துவிட்டு, “அத்தை நாங்க கொஞ்சம் வெளிய போறோம்… நீங்க அப்புறம் பேசுங்க” என்று அழைப்பை துண்டித்தான்.
“கொஞ்சம் கூட அறிவே இல்லயா உங்களுக்கு”
“ஹ்ம்ம்… எனக்கு இல்ல… உனக்கு இருந்தா கொடு” என்று எள்ளலாக அவன் பதில் சொல்ல, அவள் தலையிலடித்து கொண்டு, “உங்க கிட்ட பேசறதே வேஸ்ட்” என்று சொல்லி அவள் வெளியே செல்ல பார்க்கவும்,
“மகி… டிரஸ் மாத்திட்டு கிளம்பு… வெளியே கிளம்பணும்” என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்து கொண்டான்.
“நான் வரல… என் கையை விடுங்க” என்றவள் சொல்ல, “அப்படியா… அப்புறம் இன்னைக்கு நைட் எதாச்சும் எடாகுடாம நடந்திரும்.. அப்புறம் நீ என்கிட்ட கோவிச்சிக்க கூடாது” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு அவள் கரத்தை விட, “மிரட்டிறீங்களா?” என்று திரும்பி அவனை முறைத்தாள்.
“எப்படி வேணா வைச்சிக்கோ” என்றவன் தோள்களை குலுக்கி விஷமமாக சிரித்துவிட்டு அவன் அறையை விட்டு வெளியே செல்ல, அவளுக்கு கிலி பற்றி கொண்டது. அவன் செய்தாலும் செய்வான் என்று யோசித்துவிட்டு, பின் அவள் உடைமாற்றி கொண்டு அவனோடு கிளம்பினாள்.
ஆனால் அவள் முகத்தை தூக்கிவைத்து கொண்டு அவனுடன் காரில் வரவும் அவன் காரை இயக்கி கொண்டே, “என் டால் இப்படியிருந்தா அழகாவே இல்லயே… கொஞ்சம் ஸ்மைல் பண்ண கூடாதா?” என்று கேட்க,
அவள் இன்னும் கடுப்பாக முகத்தை மாற்றி கொண்டாள். அவன் ஏக்கபெருமூச்செறிந்துவிட்டு இறங்க வேண்டிய இடத்தில் காரை நிறுத்திவிட்டு, “இறங்கு மகி” என்று சொல்ல,
“எங்கே?” என்று கேட்டாள்.
“இறங்கு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பரியும் காரை விட்டு இறங்க அவளும் அவனோடு இறங்கினாள். அது ஒரு கல்லூரி வாயில். அவனை அவள் குழப்பமாக பார்க்க அவன் முன்னே நடந்து சென்று கொண்டே, “வா மகி” என்றான்.
அவளும் உள்ளே செல்ல அப்போது பரி ஒரு அலுவலக அறைக்குள் நுழைந்து, அந்த தலைமை பொறுப்பாளரிடம் அவன் பேசியவற்றை கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள்.
“இந்த ஃபார்ம்ல ஒரு சைன் போடு மகி” என்றவன் சொல்ல அவள் அவனை புரியாமல் பார்க்க, “போடு” என்றான். அவளும் பதிலேதும் பேசாமல் அவற்றை பார்த்துவிட்டு கையெழுத்து போட்டு கொடுத்தாள். அவன் அதன் பின் சென்று கௌண்டரில் பணம் கட்டிவிட்டு திரும்ப அவள் மௌனமாக நின்றாள்.
அவன் திரும்பி வந்து, “காலேஜ் பிடிச்சிருக்கா… இங்க இதுதான் பெஸ்ட்… நம்ம வீட்டுல இருந்து இதுதான் பக்கமும் கூட” என்றவன் சொல்ல,
“என் சர்டிஃபிக்கேட் எல்லாம்” என்று கேட்டாள்.
“உன் பெட்டியில வைச்சிருந்தியே” என்றவன் சொல்ல, “உங்களை யார் என் பெட்டியை எடுக்க சொன்னது?!” என்று அவனை முறைத்தாள்.
“உன்கிட்ட சொல்லிட்டு செஞ்சா… என்னடி கிக்கு இருக்கு… அதான் கேட்காம எடுத்தேன்” என்று சொல்லி அவள் தோளில் கை போடவும் அவனை தள்ளிவிட்டு நகர்ந்து காரில் ஏறி கொண்டாள்.
அவனும் தன்னிருக்கையில் அமர அவள் அவனை முறைத்து பார்த்து, “இதெல்லாம் ரொம்ப ஓவர் டிராமா வா இருக்கு… நான் ஒன்னும் எல் கே ஜி பாப்பா இல்ல… நீங்க எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சதும் ஈஈன்னு பல்லை காட்டிட்டு வர” என்றாள்.
“சரி… என்ன செஞ்சா உனக்கு என்னை பிடிக்கும்னு சொல்லு மகி” என்றவன் இறங்கிய தொனியில் கேட்க,
“போன எங்க குடும்ப மானத்தை திரும்ப கொண்டு வாங்க… பார்ப்போம்… எங்க அப்பாவும் பெரியப்பாவும் உங்க அப்பா முன்னாடி அசிங்கப்பட்டு நின்னாங்களே… அதை மாத்துங்க பார்ப்போம்” என்று அவனிடம் அழுத்தமாக கேட்டாள்.
“நடக்காததெல்லாம் கேட்டா நான் எப்படிறி செய்ய முடியும்” என்றவன் கேட்க,
“முடியாது இல்ல… அப்போ விடுங்க” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள். அவனால் அதற்கு பிறகு அவளிடம் எதுவும் பேச முடியவில்லை. உண்மையிலேயே அவனுக்கு அவளின் பிடிவாதம் மனதை ரொம்பவும் வருத்தியது. ஏமாற்றமாகவும் இருந்தது.
இருவருக்கும் இடையிலான உறவு அத்தனை சுமுகமாக இருக்கவில்லை. இந்த ஏமாற்றத்தில் பரியும் அவளிடம் இயல்பாக பேசவில்லை. இந்நிலையில் அவனின் அலுவலக வேலைகள் வேறு அவனை உள் இழுத்து கொள்ள அவனுக்கு மகிழினியோடு நேரம் கழிக்க முடியவில்லை. அவளும் கல்லூரி போக தொடங்கியிருந்தாள். படிக்கிறேன் பேர் வழியென்று அவனிடம் பேசுவதை தவிர்த்துவிடுவாள்.
இந்த சூழ்நிலையில் வசந்தாவும் சுசீந்திரனும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.
“பசங்கள விருந்துக்கு அழைச்சிட்டு போகலாம்னு” என்று வசந்தா தயங்கி தயங்கி சொல்ல கலிவரதன் தாமரையை முறைத்துவிட்டு,
“நான் அந்த வீட்டு பக்கம் வர மாட்டேன்” என்று வீம்பாக சொல்ல, அங்கேதான் பரியும் மகிழினியும் நின்று கொண்டிருந்தனர்.
மகிழினிக்கு கலிவரதனின் வார்த்தைகள் பரியின் மீதான கோபத்தையே அதிகப்படுத்தியது.
வசந்தாதான் கெஞ்சலாக, “இப்படி சொன்னா எப்படி? எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு… அதுவுமில்லாம என் பொண்ணு என்ன தப்பு செஞ்சா?” என்று கேட்க, கலிவரதன் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசனையாக மேலும் கீழும் பார்த்தார்.
அதன் பின் அவரே, “இரண்டு நாள்தான்…. கூட்டிட்டு போங்க… ஆனா நானும் என் பொண்டாட்டியும் வர மாட்டோம்” என்றார் முடிவாக. தாமரை பெருமூச்செறிந்தார். இந்தளவுக்கு அவர் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்றிருந்தது தாமரைக்கு!
கலிவரதன் பேசி விட்டு உள்ளே சென்றுவிட சுசீந்திரன் பரியிடம், “எங்க கார்லயே நீங்களும் மகிழினியும் வந்துருங்க மாப்பிள்ளை!” என்று மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அவர் அழுத்தம் கொடுக்க, அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு,
“நாங்க பின்னாடி எங்க கார்ல வரோம் மாமா” என்றான்.
மகிழினி தன் வீட்டிற்கு போகும் ஆர்வத்தில் புறப்பட்டு கொண்டிருக்க அவன் விருப்பமே இல்லாமல் கிளம்பி கொண்டிருந்தான்.
அவர்கள் கார் முன்னே செல்ல பரியும் மகிழினியும் பின்னே சென்று கொண்டிருந்தனர். பரி காரை ஒட்டும் போது அவன் கைபேசி அழைக்க அதனை கையிலெடுக்கும் போது தவறி கீழே விழவும் அதனை மகிழினி எடுத்து கொடுத்தாள்.
அதில் ஒளிர்ந்த எண்ணை கவனித்த
பரி, “உங்க அக்காதான்… எடுத்து பேசு” என்றான்.
அவனை கோபமாக பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள். தமக்கையின் மீதிருந்த கோபம் அவளுக்குள் இருந்த ஆற்றாமை எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அவள்,
“நான் மகி பேசுறேன்” என்றாள்.
“மகி” என்று சௌந்தர்யா ஆவல் ததும்ப அழைக்க அவள் குரல் தழுதழுத்தது.
“என் பேரை கூட சொல்லாதே” என்று கோபமாக பொங்க,
“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு மகி” என்று சௌந்தர்யா நிதானமாக எடுத்துரைக்க,
“என்ன சொல்ல போற… நீ செஞ்சதை நியாயப்படுத்த போற… எனக்கு அதை கேட்க வேண்டாம்… என்ன நியாயம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான்… நம்ம குடும்ப கௌரவம் பெரியம்மா பெரியப்பா யாரை பத்தியும் நீ யோசிக்கல… கடைசி நிமஷம் வரைக்கும் இப்படி நம்ப வைச்சு கழுத்தை அறுத்திட்டியே க்கா… சத்தியமா இப்பவும் என்னால நம்ப முடியல நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருப்பேன்னு” என்றவள் பொரிந்து தள்ளினாள்.
பரி கோபமாகி, “என்னடி குடும்ப கௌரவம்… குடும்ப கௌரவம்னு ஓவரா சீனை போட்டுட்டு இருக்க… உங்க ஊர்லயே நீங்க மட்டும்தான் குடும்பமா… உங்க அப்பனும் பெரியப்பனுக்கும் மட்டும்தான் மரியாதை மத்த மண்ணாங்கட்டி எல்லாம் இருக்கா?” என்றவன் காட்டமாக கேட்க,
“வேண்டாம்… இதுக்கு மேல பேசாதீங்க” என்று மகிழினி அவன் புறம் சீற்றமாக திரும்பினாள்.
“உங்க அக்கா விஷயத்துல என்ன நடந்தது முதல தெரிஞ்சிட்டு பேசு” என்றவன் சொல்ல அவள் அவனை மௌனமாக பார்த்தாள்.
“காலேஜ் ஃப்ரஸ்ட் இயர்ல உங்க அக்கா கூட படிச்ச ஸ்டூடன்ட்… பேரு சௌந்தர்… ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பேரு… தெரியாம உங்க அக்கா புக் அவர் கிட்ட போயிடுச்சு… அதை திருப்பி கொடுத்த போது ரெண்டொரு வார்த்தை பேசனது ஒரு குத்தமா? அந்த பையன் கீழ் சாதிங்கற காரணத்துக்காக உங்க அப்பனும் பெரியப்பனும் ஓவர் ரியாக்ட் பண்ணி அந்த பையனோட படிப்பை கெடுத்து குடும்பத்தையே உங்க ஊரை விட்டு துரத்தி விட்டுட்டாங்க… சௌந்தர் சென்னை வந்து காலேஜ் சேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிச்சிருக்காரு…
உங்க அக்காவுக்கு இந்த விஷயத்துல ரொம்ப கில்டி… பேஸ் புக்ல சௌந்தரோட ஐடியை ரெண்டு வருஷமா தேடி புடிச்சு மன்னிப்பு கேட்டிருக்காங்க… முதல சண்டை கோபம் அதுக்கப்புறம் அவங்களையே அறியாம ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க…
அதுக்கப்புறம் ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராதுன்னு ரெண்டு பேரும் ரொம்ப டீசன்ட்டா அவங்க லவ்வை மறந்திறனும்னு முடிவும் பண்ணிட்டாங்க… இதுல வேடிக்கை என்னன்னா சௌந்தர் என் ஆபீஸ்ல என் டீம்லதான் ஜாயின் பண்ணாங்க… ஒரு தடவை அவரோட போன்ல சௌந்தர்யாவோட போட்டோவை பார்த்து யாருன்னு விசாரிச்சேன்… இப்படி இப்படின்னு மேலோட்டமா அவங்க காதல் கதையை பத்தி சொன்னாங்க…
வாழ்க்கை பூரா நான் சௌந்தர்யாவை நினைச்சிட்டு வாழ்ந்திருவேன்னு சொன்ன போது எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு… ரொம்ப இடியாட்டிக்கா இருந்துது… நான் அந்த விஷயத்தை அப்புறம் விட்டுட்டேன்… ஆனா அதே போல ஒரு போட்டோ என் மெயில் ஐடிக்கு வந்த போதுதான் ஷாக்…
அப்புறம்தான் சௌந்தர்யாவை பத்தி தெரியும்… அவங்ககிட்ட போனில் பேசும் போது சௌந்தர்யாவும் சௌந்தர் சொன்னதையே சொன்னாங்க… ஆனா அப்பவும் குடும்பத்தை எதிர்த்து எதுவும் செய்யணும்னு அவங்க ரெண்டு பேருமே நினைக்கல
நான்தான் அவங்கள கன்வின்ஸ் பண்ணி இந்த பிளானுக்கு அக்செப்ட் பண்ண வைச்சேன்… உன் தில்லாலங்கடி அப்பனையும் பெரியப்பனையும் ஏமாத்தி அவங்க ரெண்டு பேரையும் சேஃபா இந்த நாட்டை விட்டே அனுப்பிவிட்டுடேன்… தலையால தண்ணி குடிச்சாலும் உங்க அப்பன் பெரியப்பனால உங்க அக்கா இருக்கிற இடத்தை கண்டுப்பிடிக்கவே முடியாது” என்றவன் தீர்க்கமாக சொல்ல மகிழினி அவன் சொல்வதை அதிர்ச்சியாக கேட்டு கொண்டிருந்தாள்.
“உங்க அப்பனுக்கும் பெரியப்பனுக்கும் இந்த அசிங்கமும் அவமானமும் தேவைதான்” என்று பரி மேலும் சொல்ல,
“போதும்” என்று மகிழினி சொல்லும் போதுதான் தன் கையிலிருந்து பேசியில் சௌந்தர்யா லைனில் இருப்பதை கவனித்தாள்.
மகிழினி மீண்டும் பேசியை காதில் வைத்து, “அக்கா” என்று அழைக்க,
“சாரி மகி” என்றாள் சௌந்தர்யா!
“என்கிட்ட ஏன் இது பத்தி எதுவும் நீ முன்னாடியே சொல்லல?” என்று மகி கண்ணீரோடு கேட்க,
“உனக்கு எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுன்னுதான் நான் சொல்லல மகி… அப்புறம்” என்று தயங்கியவள்,
“பரி என்கிட்ட உன்னை விரும்புறதை பத்தி தனியா பேசுன அன்னைக்கே சொன்னாரு… நான்தான் நீ காலேஜ் இப்பதான் சேர்ந்திருக்க… படிப்பு முடிக்கிற வரைக்கும் வைட் பண்ணுங்கன்னு சொன்னேன்… ஆனா அதுக்குள்ள என்னன்வோ நடந்து போச்சு” என்று சௌந்தர்யா நிறுத்த மகிழினி பரியின் முகத்தை பார்த்தாள்.
“நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தெரியும்… ஆனா எனக்கு வேற வழி தெரியல… பொய்யா ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு பரி சொன்னா மாதிரி கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் பார்ப்போமேன்னு தோணுச்சு” என்று சௌந்தர்யா சொல்வதை எப்படி எடுத்து கொள்வது என்று புரியாமல் மகிழினி மௌனம் காக்க,
“ஆனா இப்ப என்னோட கவலையே பரிதான்… அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா பரியை என்ன வேணா பண்ணுவாங்க… பரி தினமும் எனக்கும் சௌந்தருக்கும் நல்லா இருக்கீங்களான்னு கேட்டு ஒரு மெயிலாச்சும் பண்ணிடுவாரு… ஆனா இரண்டு நாளா மெயில் வரலயா… அதான் நான் பயந்துட்டு கால் பண்ணேன்” என்று சௌந்தர்யா பதட்டத்தோடு சொல்ல மகிழினிக்கு உள்ளுர பதட்டமானது. அதற்கு பிறகு சௌந்தர்யா பேசியது எதுவும் அவள் மூளையை எட்டவில்லை. பரியை பற்றிய சிந்தனைதான் ஓடி கொண்டிருந்தது.
மகிழினி மெளனமாக பேசியை பரியிடம் கொடுத்துவிட்டாள். அவன் பேசி விட்டு அழைப்பை துண்டித்துவிட, மகிழினி ஓர் கனத்த மௌனத்தோடு அமர்ந்திருந்தாள்.
அவளின் அமைதியை கண்ட பரி, “மகி” என்று அழைக்க,
அவள் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
“அக்காகிட்ட பேசுனதுல அப்செட் ஆயிட்டியா மகி” என்று பரி கேட்கவும், “ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசாம வரீங்களா?” என்று சொல்லிவிட்டு முகத்தை தன் கரத்தால் மூடி கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதன் பின் பரி அவளிடம் எதுவும் பேசிக்கொள்வில்லை. அமைதியாக வந்தாலும் அவன் பார்வை மகிழினி மீதுதான் இருந்தது. வீடு வரும் வரை அவள் அப்படியேத்தான் வந்தாள்.
“மகி வீட்டுக்கு வந்தாச்சு” என்று பரி சொல்லவும் அவள் மிரட்சியோடு நிமிர்ந்து பார்க்க, “வாங்க மாப்பிள்ளை வா மகிம்மா” என்று அழைத்துவிட்டு சென்றார் வசந்தா!
மகிழினி யோசனையோடு பரியை பார்த்துவிட்டு காரிலிருந்து இறங்க போக பரி அவள் கரத்தை பிடித்து கொண்டு,
“நான் இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் தப்புன்னு ஒத்துக்கிறேன்… அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கூட கேட்டுக்கிறேன்… ப்ளீஸ் மகி… நான் உன்னை ரொம்ப பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… உன் கூட சந்தோஷமா வாழணும்னு ஆசைபடுறேன்டி” என்று அவன் இறைஞ்சுதலாக சொல்ல,
“கையை விடுங்க… நான் போகணும்” என்று அவன் கரத்தை பிரித்துவிட்டு இறங்கி சென்றுவிட்டாள்.
பரிக்கு கோபமேறியது. “இந்த மாதிரி நான் எவ கிட்டயும் இறங்கி போனதில்ல… ரொம்பத்தான் பண்றா… இதுக்கு மேல நான் என்னத்தான் பண்றது” என்று கடுப்பாகி ஸ்டியரிங்கில் குத்திவிட்டு அப்படியே விரக்தியாக காரிலேயே அமர்ந்து கொண்டான்.
மகிழினி உள்ளே சென்று தன் அறைக்குள்நுழைந்து கொள்ள, “எங்கடி மாப்பிள்ளை?” என்று கேட்ட வசந்தாவிடம், “வருவாரு… நீ எனக்கு ஒரு காபி போட்டுட்டு வர்றியா… தலை வலிக்குது ம்மா” என்றாள்.
“வண்டில வந்த களைப்பா இருக்கும்… இரு போய் எடுத்துட்டு வர்றேன்” என்று வசந்தா சொல்லிவிட்டு செல்ல,
அப்போது மகிழினி மூளைக்குள் சௌந்தர்யா கடைசியாக பரியை பற்றி சொன்னவற்றையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது.
அப்போது வசந்தா காபியோடு வந்துவிட்டு, “எங்கடி மாப்பிள்ளை… காபி குடுக்கலாம்னு போனா ஆளையே காணோம்” என்று விசாரிக்க,
“எங்கம்மா போக போறாரு… இங்கதான் இருப்பாரு” என்று மகிழினி அலட்சியாமாக சொல்ல வசந்தா அவளுக்கு எடுத்துவந்த காபியை கொடுத்தார்.
மகிழினி அதை வாங்கி பருகி கொண்டே, “ஆமா அப்பா எங்கம்மா?” என்று கேட்க,
“வந்ததும் உன் அப்பனும் பெரியப்பனும் என்னவோ பேசிக்கிட்டு இருந்தாங்க… கூட உன் அண்ணனுங்க வேற இருந்தாங்க… அதுவும் ஆளுங்களோட…. இப்ப யாரையும் காணோம்… தோப்பு பக்கம் போயிருப்பாங்க போல… என்னத்தை பண்ணி தொலைக்க போறாங்களோ
நீ அந்த பக்கமெல்லாம் போயிடாதே மகி… மாப்பிள்ளையும் அந்த பக்கம் போக விடாதே” என்று சொல்லும் போது மகிழினி முகம் குழப்பமாக மாறியது.
தான் பருகி கொண்டிருந்த காபியை அவசரமாக வைத்துவிட்டு பதறி கொண்டு அவள் எழுந்து வெளியே சென்றாள். சுற்றும் முற்றும் தேடலாக பார்க்க பரி எங்கேயும் காணவில்லை. அவசரமாக பின்புற வாயிற் வழியாக அவள் தோப்பிற்குள் நுழையும் போதே இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது. இதே இடத்தில் பரியை முதன்முதலாக பார்த்த நினைவு மின்னலென தோன்றி மறைந்தது.
அவள் அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே நடந்துவர, தூரமாக பேச்சு குரல் கேட்டது. அவள் இன்னும் சிறிது தூரம் உள்ளே நடக்க, எதிரே விமலன் சுசீந்திரனும் அவளின் தமையன்களும் திரும்பி நின்றிருந்தனர். அவர்களுடன் நிறைய ஆட்கள் வேறு சுற்றியிருக்க, தான் தேவையில்லாமல் கற்பனை செய்து பயந்து இங்கே வந்துவிட்டோமோ என்று தோன்றியது.
திரும்பி போய்விடலாமா என்று யோசிக்கும் போதுதான் அவள் இதயத்தை உறைய வைக்கும் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து நின்றாள். அவர்களுக்கு இடையில் பரி உடலெல்லாம் இரத்தம் சிதற, “நீங்க என்னை என்ன பண்ணாலும் சரி… சௌந்தர்யா இருக்கிற இடத்தை நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன்” என்றான்.
அப்போது விமலன் வெறியோடு பெரிய கொம்பில் அவனை தாக்க அப்படியே மண்டியிட்டு பரி கீழே சரிய
இந்த காட்சியை பார்த்த நொடி மகிழினி அழுகுரலோடு, “ஐயோ! மாமாஆஆஆஆ” என்று ஓடிச்சென்று அவனை தாங்கி கொண்டாள்.
அவன் வாய் வழியாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் மனித மிருங்கங்கள் போல் அவர்கள் எல்லோரும் காட்சி தர அசூயையாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “மாமா மாமா” என்று பதறியபடி தன் சேலை முந்தானையால் அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.
அந்த களேபரத்திலும் பரி அவளை நிமிர்ந்து பார்த்து, “நல்லவடி நீ… நான் மாமான்னு கூப்பிடுன்னு சொல்லும் போதெல்லாம் விட்டுட்டு இப்ப கூப்பிடுறியாடி… மாமான்னு” என்று கேட்க, அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.
“மாமா” என்று அழுதபடி அவனை அணைத்து கொண்டாள்.
10
தேன்நிலவு
மூன்று மாதத்திற்கு பிறகு… சென்னை விமான நிலையத்தில்!
விமானத்தில் ஏறுவதற்கு வேண்டிய நேரம் மற்றும் வேறு சில விவரங்களை சேகரித்து கொண்டு பரி நடந்து வரவும், “பரி” என்ற சமீரின் அழைப்பு அவன் காதில் விழுந்தது.
அவனை பார்ததும் கோபநிலையை எட்டிய பரி, “மவனே! என் கண் முன்னாடியே வராதன்னு உன் கிட்ட சொன்னேன் இல்ல” என்று முறைக்க,
“டே… என் நிலைமையை புரிஞ்சிக்கோ மச்சான்… உன் மாமனாருக்கு உன் மேல சந்தேகம் வந்து என் வீடு தேடி வந்துட்டார்… ஏற்கனவே அந்த மனுஷன் பார்க்கவே படுபயங்கரமா இருப்பாரு… இதுல என்னை மிரட்டினா நான் என்னடா ஆவேன்… நான் அவ்வளவெல்லாம் ஒர்த்தான பீஸ் இல்ல மச்ச்சான்… எங்க வீட்டுக்கு நான் நாலாவது பையன் வேற” என்று அவன் சொல்லி முடிக்கும் போது கொல்லென்று சிரித்த பரி,
“இன்னும் அந்த டயலாக்கை விடுலயா டா நீ?!” என்று சிரித்து கொண்டே கேட்டான்.
பரி மேலும் “சரி போனா போகுது… அந்த மேட்டரை விட்டு தொலை” என்று முடிக்க சமீர்,
“அப்போ சமாதானமாயிட்ட” என்று நண்பனின் தோளில் தட்டி,
“எப்படியோ உன் காண்டாமிருக மாமனுங்கலையே காண்டாகிட்டு நீ ஜாலியா ஹனிமூன் ட்ரிப் போக போற… உங்க வீட்டு ஜாய் எங்க வீட்டு ஜாய் இல்ல… ஹம்ம் என்ஜாய்தான் போ” என்று சிரித்து கொண்டே வாழ்த்தினான்.
“ஏன் டா… கிளம்பும் போது போயும் போயும் அவனுங்களை போய் ஞாபகப்படுத்துற… மூணு மாசமா என்னை ஒன்னும் இல்லாம பண்ணிட்டானுங்க… இதுல அந்த உருப்படாத டாக்டர் வேற நானும் மகிழினியும் சேரவே கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லி தொலைச்சிட்டான்… ஐயோ! மரணமா இருந்துச்சு” என்று பரி ரொம்பவும் வருத்தப்பட்டு சொல்லி கொண்டிருக்க,
“இவ்வளவு சோகமா மச்சான் உன் வாழ்க்கையில” என்று சமீர் ரொம்பவும் வருத்தப்பட்டான்.
“என்னடா பீலிங்… எனக்குதான்டா பீலிங்கு… எல்லாத்துக்கும் நீதானே டா காரணம் பக்கி… இதுல பீலிங் வேற… பாய் பிரெண்டுன்னா ரம்ஜான் பக்ரிதுக்கு பிரியாணி கொடுப்பான்… நீ என்னடான்னா என்னையே பிரியாணி போட்டியே டா” என்று அவனை கடுப்பாக பார்க்க,
“என்னடா திரும்பி முதல இருந்தா” என்று சமீர் அவனை அதிர்ச்சியாக பார்த்தான்.
“அப்போ ஒழுங்கா கிளம்பிடு” என்று இவ்வாறாக இருவரும் பேசி கொண்டே மகிழினி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வர,
“சரி டா மச்சான்… ஹாப்பி ஜர்னி… ஹாப்பி ஜர்னி சிஸ்டர்” என்று சொல்லிவிட்டு சொல்ல, “சரிங்க அண்ணா ” என்று அவளும் சிரித்த முகமாக தலையாட்டினாள்.
“மகி போலாமா” என்று பரி கேட்கவும் மகிழினியும் அவனோடு நடந்தாள். அதுவும் அவள் பார்க்க முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்திலிருந்தாள்.
அந்த வெள்ளை நிற ஸ்கர்ட், ஹீல், கூலர்ஸ் என்று அவள் நிறத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அந்த உடை வெகுஅழகாகவே பொருந்தியிருந்தது.
அந்த சுற்றுலா பயணத்திற்காக பரி இதை போல பல வகையான நவீன ரக ஆடைகளை அவளுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தந்திருந்தான்.
முதலில் வேண்டாமென்று சொன்னாலும் பின் அவனின் விருப்பத்திற்காக அணிந்து கொண்டாள். பின்னர் அவளுக்கே அது பிடிக்கவும் செய்தது.
பரி முதல் முதலாக ஆசை மனைவியோடு போகும் அந்த பயணத்தை அத்தனை தெளிவாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினான்.
சுவட்ஸர்லேந்து செல்ல ஆயுத்தமாக இருந்த அந்த விமானத்தில் அவர்கள் ஏறி இருவரும் அமர்ந்த பின்னர் அத்தனை காதலோடு அவள் கரம் கோர்த்து கொண்டான் அவளவன்! கனவு போல இருந்தது அவனுக்கு!
இனி வாழ்க்கையே இல்லை. அவ்வளவுதான். எல்லாம் முடிந்து போனது என்று இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை கொல்ல வேண்டும் என்று அத்தனை வெறியிலிருந்த அவளின் தமையன் தந்தைமார்களிடம் தன் உயிரை மீட்டடெடுத்த நவீன சாவித்திரிதான் அவள்!
அதன் பின் அந்த மோகினி அவனின் செல்ல தேவதையாகி போனாள். அவனின் உலகமே அவளாக, அவள் மட்டும்தான் எல்லாம் என்றளவுக்கு அவனின் ஏனைய சந்தோஷமெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
எதையும் அலட்சியமாக மதித்தவனுக்கு அந்த மரணத்தருவாய் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை புரியவைத்தது. அவள் மூலமாக!
முதல் முறை அவளாக அணைக்கும் போது திருப்பி அணைக்க கூட முடியாமல் சக்தி மொத்தமும் வடிந்த நிலையிலிருந்த அந்த கணம்… அவளுடன் நீண்ட நெடிய ஒரு வாழ்க்கையை திகட்ட திகட்ட வாழ வேண்டுமென்று ஆசை அவனுக்குள் உச்சத்தை தொட்டதே!
நடக்குமா நடக்காதா என்பதெல்லாம் தாண்டி அவள் அழகின் மீதிருந்த மயக்கமெல்லாம் முற்றிலும் காதலாக உருமாறி அவனின் உயிருக்குள்ளும் உணர்வுக்குள்ளாகவும் அவள் ஆழமாக இறங்கிய தருணம் அது.
மண்டியிட்டு அணைத்து கொண்டு அவனருகில் அமர்ந்தவள், “மாமா” என்று அழுது கொண்டே உதட்டின் வழியே நிற்காமல் வழிந்து கொண்டிருந்த அவன் குருதியை துடைக்க, அவன் விழிகள் சொருக மயக்கநிலைக்கு சென்று கொண்டிருந்தான்.
மகிழினியின் மாமா என்று விளிப்புதான் அவனை உயிர்ப்போடு வைத்து கொண்டிருந்தது. இருந்தும் அவனின் சர்வநாடியும் மூச்செல்லாம் அடங்கி போனது போல அவன் அவள் மீது சாய்ந்து கிடக்க, அவள் பதறி கொண்டு அவன் கன்னங்களை கையிலேந்தி, “மாமா என்னை பாருங்க மாமா… மாமா” என்று அவள் அழுகையோடு அழைக்க, அவன் தம் விழிகளை திறந்து மெலிதாக புன்னகைத்து தான் இன்னும் இருக்கிறேன் என்பது போல் அவளை பார்த்து தலையசைத்தான்.
அப்படியே அவனை தன் தோள் மீது சாய்த்து அவள் அணைத்து கொண்டாள். எப்போது அந்தளவுக்கு அவன் மீது காதல் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.
அவன் இல்லாமல் போய்விட்டால் என்று சிந்தித்த தருணம்தான் உயிரின் ஆழம் வரை அவனை அவளுக்குள் உணர்த்தியது.
இந்த நிலைமையில் சுசீந்திரன் அதிர்ச்சியில் அத்தனை நேரம் உறைந்துபடி நின்றிருந்தார். ஆனால் இப்போது அவர் கொஞ்சம் சுதாரித்து கொண்டு,
“மகிம்மா அவனை நம்பாதே… துரோகி… நம்ம குடும்பத்தை எல்லோர் முன்னாடியும் சந்தி சிரிக்க வைச்சுட்டான்… ப்ளேன் பண்ணி இவன்தான் நம்ம சௌந்தர்யாவை ஓடி போக வைச்சுருக்கான்” என்றவர் ஆக்ரோஷமாக உரைக்க,
மகிழினி மௌனமாக பரியின் முகத்தை பார்த்தாள். சற்று முன்புதான் இந்த விஷயம் தன் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று அவள் பயந்து கொண்டிருந்தாள். ஆனால் அது இப்படி உடனடியாக நடக்குமென்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
சுசீந்திரன் எரிச்சலோடு, “நீ முதல அவனை விட்டு எழுந்து வா மகி” என்று அதட்டினார்.
அவள் பட்டென, “மாட்டேன்” என்று மறுப்பாக தலையசைக்க விமலன் வெறியோடு, “மகி எழுந்திரு… அவனை கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்” என்று ஆவேசமாகி அருகிலிருந்த ஆட்களின் கையிலிருந்த அரிவாளை வாங்க மகிழினிக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது.
“வேணாம் பெரியப்பா… ப்ளீஸ் பெரியப்பா… அவர் செஞ்சது தப்புதான்… எனக்காக அவரை விட்டிருங்க பெரியப்பா” என்று பரியை மறைத்து கொண்டு அவள் முன்னே வந்து கை கூப்பி அவள் கெஞ்சி கொண்டிருக்க, யார் முகத்திலும் துளி கூட இரக்கமில்லை.
பரிக்கு மகிழினி தனக்காக அவர்களிடம் கெஞ்சுவதையும் அழுவதையும் வலியோடு உணர முடிந்ததே தவிர, அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
சுசீந்திரன் கோபம் பொங்க, “மகி விலகு… அவன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டான்… எல்லாமே அவன் திட்டம்… சௌந்தர்யாவை ஓடி போக வைச்சது… உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது… எல்லாமே அவன் திட்டம்தான்… என்னையும் அண்ணனையம் முட்டாளாக்கினது இல்லாம எங்களை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்திருக்கான்… அவனை கண்டதுண்டாமா வெட்டினாத்தான் எங்க ஆத்திரம் அடங்கும்” என்று வெறியோட சொல்ல,
மகிழினிக்கு அவரின் பேச்சை கேட்டு உள்ளம் கொதிகலனாக மாற
தன் தந்தையை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள், “சரி… அவரை வெட்டிட்டு என்னை என்ன ப்பா பண்ணி போறீங்க?” என்று கேட்டாள்.
“மகி நான் சொல்றது உனக்கு புரியல… அவன் உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்றேன்” என்று சுசீந்திரன் மீண்டும் தெளிவுப்படுத்தினார்.
மகிழினி அவரை முறைத்து பார்த்து, “எனக்கு நல்லா வாயில வந்திறோம் சொல்லிட்டேன்… ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னா எப்படி… அவரு என்ன என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிகிட்டாரா… இல்ல உங்க யாருக்கும் தெரியாம என்னை கடத்திட்டு போய் கட்டாய தாலி கட்டிட்டாரா… சும்மா உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க…
மானம் போச்சு மரியாதை போச்சுன்னு மாமா கத்தினதுக்கு… கொஞ்சம் கூட யோசிக்காம மளிகை கடையில பருப்பை பொட்டலம் போட்டு கட்டி கொடுக்கிற மாதிரி என்னை இவருக்கு கட்டி கொடுத்துட்டு… இப்போ இவரு என்னை ஏமாத்திட்டாருன்னு சொல்றீங்களா… அப்பான்னு பார்க்கிறேன்… எதாச்சும் அசிங்கமா சொல்லிடுவேன்” என்று அவள் பேசிய பேச்சில் சுசீந்திரன் திக்குமுக்காடி போனார். எல்லோருமே வாயடைத்து அவளையே பார்த்தனர்.
அப்போது அமுதன் கோபத்தோடு, “சரிடி… உன் புருஷனை போனா போகுதுன்னு மன்னிச்சுவிட்டுடுறோம்… அவனை சௌந்தர்யா எங்க இருக்கானு சொல்ல சொல்லு” என்று தீவிரமாக கேட்க,
மகிழினி கணவனை சாய்த்தபடி அமர வைத்துவிட்டு எழுந்து நின்று, “சொல்ல முடியாது… என்னடா பண்ணுவ? வெட்டிடுவியா… வெட்டுடா பாப்போம்… என்னை தாண்டி என் புருஷனை வெட்டுடா பார்ப்போம்” என்று இடுப்பில் முந்தானையை சொருகி கொண்டு அவள் நின்ற தோரணையில் அவன் முகம் இருளடர்ந்து போனது.
“என்னடா நிற்கிற…. வெட்டுடா” என்று அவள் மீண்டும் கூச்சலிட சுசீந்திரன் மகளை பேச்சற்று பார்த்து கொண்டிருந்தார்.
விமிலன் கோபமாக, “மகி” என்று கத்தினார்.
அவர் புறம் ஆவேசமாக திரும்பியவள், “எதுக்கு இப்ப கத்திறீங்க… கொஞ்சம் கூட என்னை பத்தி யோசிக்காம என்னை ஒரு வார்த்தைக்கு கூட கேட்காம உங்க கௌரவத்துக்கு காப்பாத்திக்க வேண்டி இவர் கூட எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு… இப்போ மனசாட்சியே இல்லாம என் தாலியை நீங்களே அறுக்க பார்கறீங்களே? மனுஷனா நீங்கெல்லாம்…
மிருகங்க கூட தான் பசிக்கு தன்னோட சொந்த குட்டியை திங்காது… ஆனா நீங்கெல்லாம் உங்க சாதி வெறிக்கு… ச்சே! இந்த குடும்பத்துல புறந்தேன்னு சொல்லிக்கவே நான் அசிங்க படுறேன்” என்று முகம் சுளித்தாள்.
விமலன் கொஞ்சமும் இறங்கி வராமல், “இப்படியெல்லாம் நீ பேசுன நாங்க அவனை விட்டிருவோமா… எங்க மானத்தையே வாங்கிட்டான்” என்று அவர் அரிவாளை ஓங்கி கொண்டு வர,
“பெரியப்பா” என்று அவர் கையை பிடித்து தள்ளினாள். எல்லோருக்குமே அதிர்ச்சி தாங்கவில்லை. அந்த வீட்டின் கடைக்குட்டி. எங்கிருந்து அவளுக்கு அந்தளவுக்கு தைரியம் வந்தது என்று நம்பாமல் பார்த்து கொண்டிருந்தனர்.
இன்னும் அவர்கள் குடும்ப பெண்கள் ஆண்களின் ஆதிக்கதிற்கு கீழ்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் மகிழினியின் செயலில் மொத்தமாக அதிர்ச்சியில் நின்ற சுசீந்திரன் மகளை பார்த்து, “பெரியப்பாகிட்ட எப்படி நடந்துக்குற” என்று காட்டமாக கேட்டார்.
அவள் முறைப்போடு, “நான்தான் பெரியப்பா அண்ணனுங்கன்னு இவங்க மேல எல்லாம் பாசத்தை வைச்சி தொலைச்சிருக்கேன்… நீங்க யாரும் என் மேல பாசம் வைக்கல இல்ல” என்று அவள் கண்களில் நீர் வழிய கேட்க அங்கே கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது.
அவள் பின் சீற்றமாக, “உங்க எல்லோரோட உடம்புல ஓடுற அதே வெறிபிடிச்ச ரத்தம் என் உடம்பலையும் ஓடுது இல்ல… அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்திடுவேனா? ” என்று தீவிரமாக சொல்ல,
“மகி நீ ரொம்ப ஓவரா பேசுற” என்று மகளை சுசீந்திரன் அடக்க பார்த்தார்.
“கரெக்டாதானே ப்பா சொன்னேன்… உங்க உடம்புல ஓடுற இரத்தம்தானே என் உடம்புலயும் ஓடுது” என்று நிறுத்தியவள், “ஓடுதுதானே?!” குத்தும் பார்வையோடு தன் தந்தையை பார்த்து கேட்டாள்.
சுசீந்திரன் அவளின் அந்த வார்த்தையில் உடைந்து தன் கரத்திலிருந்த அரிவாளை தூக்கி போட்டுவிட்டு தன் தமையனிடம் கண்ணசைத்து ஏதோ சொல்ல, அவர்கள் எல்லோரும் வேகமாக அங்கிருந்து அகன்றனர்.
மகிழினி அதன் பின் துவண்டு போய் பரியின் அருகில் அமர அவன் அவளிடம், “ப்ப்ப்ப்ப்பா! சின்ன பொண்ணுன்னு பார்த்தா என்ன பேச்சு பேசறடி நீ… கட்டையை தூக்கிட்டு காட்டு பூனையை துரத்திட்டு வந்த அந்த மோகினியை இன்னைக்குத்தான் நான் திரும்பவும் பார்த்தேன்” என்றவன் அந்த நிலையிலும் முறுவலோடு சொல்ல, “போங்க மாமா” என்று வெட்கப்பட்டவள்,
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா” என்று அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.
‘நான் கிட்ட வரும் போதெல்லாம் தள்ளி தள்ளி விட்டுட்டு… இப்ப வந்து கட்டி கட்டி பிடிக்கிறாளே… இவளை என்ன பண்றது?’ என்றவன் அந்த சூழ்நிலையை அனுபவிக்க முடியாத தவிப்பில் பொறுமியதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
அதன் பின் பரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் உடல் நிலை கவலைக்கிடம்தான். அந்தளவுக்கு அவனை அடித்து விலா எலும்பை உடைத்திருந்தார்கள்.
சென்னையில் கலிவரதன் முன்னிலையில் எதுவும் செய்ய முடியாதென்றுதான் அவர்களை திட்டமிட்டு ஊருக்கு வரவழைத்ததே! அவனிடம் எப்படியாவது உயிர் பயத்தை காட்டி சௌந்தர்யாவின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தார்கள்.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பரி எதற்கும் அசற்வதாக இல்லை. அதன் பின் அவர்களின் மொத்த கோபமும் அவன் மீது பாய்ந்ததில் பரிக்கு கொஞ்சம் சேதாரம் அதிகம்தான். யார் செய்த புண்ணியமோ அந்த நேரம் பார்த்து மகிழினி அங்கே வந்ததால் அவன் தலை தப்பியது.
இருந்தாலும் அதற்கு பிறகுதான் நிறைய தரமான சம்பவங்கள் நடந்தன என்று சொல்ல வேண்டும். ‘வேலில போற ஓணானை எடுத்து எவனாவது வேட்டிக்குள்ள விட்டுப்பானா?’ ஆனால் அந்த காண்டாமிருகம் பிரதர்ஸ் பரியின் மீது கை வைத்து அந்த தவறைத்தான் செய்துவிட்டார்கள்.
பரி செய்த காரியத்தில் கலிவரதனக்கும் கோபம் ஏகபோகமாக வந்ததுதான். விட்டிருந்தால் அவரும் அவனை அடித்து தொங்கவிட்டிருப்பார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவன் அப்படிதான் அடி வாங்கி கிழிந்த கந்தல் துணியாக மருத்துவமனையில் கிடந்தான். தாமரைக்கு தன் பாசமலர்களா இப்படி செய்தார்கள் என்று நம்பவே முடியவில்லை. ஓரே மகனை அந்த நிலையில் பார்த்து நொந்தே போனார்.
கலிவரதனுக்கும் அதே நிலைதான். மகனை அவர் எவ்வளவோ கழுவி கழுவி ஊற்றியிருக்கலாம். ஆனால் ஒரு அடி கூட அடித்ததில்லை.
‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற பீஜியத்தோடு கலிவரதன் மச்சான்களை காய்ச்சி எடுத்துவிட்டார். அவர்கள் மீது என்னென்ன சட்டபிரிவு இருக்கிறதோ அது அனைத்திலும் வழக்கு பதிவு செய்தார்.
பாவம்! அந்த சகோதரர்களுக்கு அதன் பின் நீதிமன்ற வாசலை ஏறி இறங்குவதே முழு நேர வேலையாகி போனது.
முன்னே பின்னே செய்த பாவத்திற்கெல்லாம் சேர்த்து மொத்தமாக அனுபவித்து கொண்டிருந்தனர். மறுபுறம் அரசியல் செல்வக்கெல்லாம் அந்த வழக்கில் ஒன்றும் எடுப்படவில்லை.
சுசீந்திரனக்கு இதெல்லாம் விட பெரிய கொடுமை இத்தனை வருடம் கழித்து வசந்தா, “என் பொண்ணு வாழ்க்கையை அழிக்க பார்த்த இல்ல… உன் கூட செத்தாலும் வாழ மாட்டேன்யா” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு தன் பிறந்தகம் சென்றுவிட்டார்.
பணம், பதவி, அவர் உயிராக காப்பாற்றும் சாதி என்று எது உடன் இருந்தாலும் குடும்பம் என்ற ஒன்று குலைந்து போகும்போது ஒரு மனிதன் மொத்தமாக வீழ்ந்து போகிறான். வாழ்க்கையின் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது சுசீந்திரனக்கு!
அருகிலேயே அண்ணன் வீடு இருந்தாலும் அது அவருக்கானது இல்லையே. தன் குடும்பம் பற்றி யோசிக்காமல் இருந்ததற்கான தண்டனையை அவர் சீரும் சிறப்பாக அனுபவித்து கொண்டிருந்தார்.
பரிக்கோ மருத்துவமனையில் ஆசை மனைவி அருகிலிருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்தான் பெரிதாக இருந்தது.
அதுவும் இப்போதெல்லாம் அவள் இன்னும் அவனுடன் நெருக்கமாகி கொண்டேயிருந்தாள். காதல் இத்தனை அழகா என்று அவனை தினமும் வியப்பில் ஆழ்த்தி கொண்டிருந்தாள். தன்னவள் அருகில் இருந்தும் அந்த அருகாமையை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவஸ்தையிலிருந்தான்.
ஓரளவு இப்போதுதான் உடல் தேறியிருந்தது. மகிழினியை அருகில் அமர்த்தி கொண்டு அன்றுதான் உல்லாசமாக பேசி கொண்டிருந்தான்.
“ஹாஸ்பெட்டில இருந்து டிஸ்சார்ஜ்ஜாகி முழுசா குணமானதும்” என்று சொல்லி அவளை அருகில் இழுக்க,
“அதெல்லாம் இன்னும் முழுசா குணமாகல” என்று சொல்லி கொண்டே உள்ளே வந்த மருத்துவரை பார்த்து பதறி கொண்டு மகிழினி எழுந்து நின்று கொண்டாள்.
“மிஸ்டர். பரி… இப்ப நீங்க இருக்கிற நிலைமை ஒரு த்ரீ மந்த்ஸுக்கு நோ… இட்ஸ் ஹைல்லி டேஞ்சரஸ்” என்று அவர் சொல்ல அவன் புரியாமல் பார்த்தான்.
“நீங்களும் உங்க மனைவியும் இன்னும் மூணு மாசத்துக்கு சேரவே கூடாது” என்று பெரிய வெடிகுண்டாக தூக்கி அவன் தலையில் போட, விதி வலியது.
‘அடப்பாவி டாக்டர்… நாங்க இன்னும் சேரவே இல்லையேயா’ என்று பரியின் மனக்குமறலை அந்த மருத்துவர் கேட்டால்தானே. அவர் ஸ்டிரிக்டாக சொல்லிவிட இதை கேட்ட தாமரை உடனடியாக மகிழினியின் அறையை தரைதளத்திற்கு மாற்றிவிட்டார்.
அதன் பிறகு மூன்று மாதத்திற்கு இரண்டு பேரும் ஒன்றாக நின்று பேசுவதற்கு கூட தாமரை அனுமதிக்கவில்லை. பாவம்! அந்த மூன்று மாதத்திற்கு பரிக்கு நரகம்தான். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஒரு அழகான ஹனிமூனிற்கு திட்டம் தீட்டினான்.
இவர்கள் யாருடைய தொல்லையும் இல்லாமல் பறந்து வெகுதூரம் சென்றுவிட…
திகட்ட திகட்ட தன் மனைவிக்காக மனதில் தேக்கி வைத்திருந்த காதலை காட்ட வேண்டுமென்றிருந்தான்.
அவன் திட்டமிடலுக்கு ஏற்றார் போலவே எல்லாமே நடந்தது. சுவட்சர்லேந்தில் இறங்கியதும் இமிக்ரேஷன் வேலைகளை பரி முடித்து கொண்டு வர, மகிழினி பின்னிருந்து யாரோ கண்களை மூடினர்.
“யாரு?” என்று அவள் திரும்பி பார்த்து ஆச்சர்யத்தோடு, “அக்கா” என்று அணைத்து கொள்ள,
“மகி” என்றவளும் பாசமாக தங்கையை இறுக்கமாக கண்ணீர் நிரம்பிய கண்களோடு அணைத்து கொண்டாள்.
சௌந்தர்யாவின் கணவன் சௌந்தரும் உடன் வந்திருந்தான். அவர்களை பார்த்து மகிழினியில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தம்.
பிரான்ஸிலிருந்தவர்களை மகிழினிக்காக வேண்டி அங்கே வர வைத்திருந்தான் பரி.
“நம்மெல்லாம் ஒண்ணா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்” என்று சொன்ன சௌந்தர்யாவிடம்,
“சாரி சௌண்ட்ஸ்… மீட்டிங் மட்டும்தான் ஒண்ணா… இங்க இருக்கிற வரைக்கும் நீங்க யாரோ நான் யாரோ… உங்க ஹனிமூனை நீங்க என்ஜாய் பண்ணுங்க… என் ஹனிமூனை நானும் என் டாலும் என்ஜாய் பண்றோம்” என்று சொல்ல மகிழினி, “என்ன மாமா?” என்று கணவன் தோளில் அடித்தாள்.
சௌந்தர் சிரித்து கொண்டே, “விடு சௌந்தர்யா… பாவம் சகலைக்கு இன்னும் பீன்ஸ் பொரியல் கூட கிடைக்கல” என்று கலாய்த்தார்.
“அடப்பாவிகளா! இது எப்போ தெரிஞ்சுது… விட்டா இதையும் பேஸ்புக்ல போட்டு டிரெண்ட்டாகி என் மானத்தை வாங்கிடுவீங்க போல” என்று சொல்லி சிரிக்க, அவர்களின் அந்த சந்திப்பு குதூகலமாக கழிந்தது.
ஆனால் அதற்கு பிறகு பரி சொன்னது போல தன் தேன்நிலவின் தனிமையை இனிமையாக மாற்றி கொண்டான்.
மகிழினியை அழைத்து கொண்டு சுவட்சர்லேந்தின் உயரமான பனிமலை பிரதேசமான டூபிரான்ட் பாயின்டுக்கு வந்து சேர்ந்தான்.
ஆல்ஃபஸ் மலையின் உச்சியில் வெண்மையாக பனிக்கட்டிகள் மாவு போல படர்ந்திருக்க, சிலுசிலுவென அந்த காற்று உடலை சிலிர்த்து விறைக்க செய்தது.
“ஐய்ய்ய்ய்யோ! செம செம செம மாமா” என்று அந்த இயற்கையின் அற்புத காட்சியில் ரசித்து லயித்து வியப்போடு கரங்களை தம் கன்னங்களில் வைத்து பார்த்து கொண்டிருந்த மகிழனியின் அழகில் பரி மயங்கியே போனான்.
அந்த வெண்பனி குளிரில் அவள் முகம் செந்தாமரை நிறத்தில் மலர்ந்து அவனை போதை கொள்ள செய்தது. அந்த இடத்தின் அழகை அவள் ரசிக்க அவனோ கிறக்கமாக அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
ஆங்காங்கே பைன் மரங்கள் பனித்தூவல்களை தாங்கி நின்றிருந்த அழகே அழகு!
அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க கண்கள் கோடி வேண்டும்.
‘புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது’ என்று பாடல் காட்சிகள்தான் கண்முன்னே வந்தது.
அந்த அழகினை விழிவிரித்து அவள் ரசித்து கொண்டே, “சூப்பரா இருக்கு இல்ல மாமா” என்று குளிர் பொறுக்கமால் தன் இரு கரங்களை கட்டி கொண்டவளை இழுத்து வன்மையாக அணைத்து கொண்டான்.
“என் டாலுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்று கேட்டவன் அவளை மோகத்தோடு பார்க்க,
“ஹ்ம்ம்” என்று நாணத்தோடு வார்த்தைகளின்றி அவள் தலை தாழ்ந்து கொண்டாள்.
அந்த குளிரில் செர்ரி பழமாக சிவந்த அவள் கன்னத்தில் கதகதப்பாக ஒரு முத்தம் பதித்ததில் இன்னும் வெட்கத்தில் சிவந்தன அவள் முகம்.
அந்த சந்தர்ப்பத்திற்காக ஏங்கி காத்திருந்தவன் சில்லிட்டு போன அவள் இதழ்களில் மீது தம் இதழ்களை அழுத்தி பதித்து உஷ்ணமேற்றி கொண்டே அவளை இடையோடு காற்று கூட புகாமல் இறுக்கி அணைத்து கொண்டான்.
பனிக்கட்டிகளுக்கு இடையில் பெண்ணவள் தன்னவனின் ஸ்பரிசத்தின் தீண்டலில் உருகி கரைய,
ஆள் அரவமே இல்லாத அந்த ஆஃல்ப்ஸ் பனிமலையின் உச்சியில் அவனை தடை செய்யாமல் அவனுக்குள் அழகாக தொலைந்து போனாள் அவனின் மோகினி!
******** நிறைவு********